Thursday, April 10, 2014

காற்றுடன் என் கலந்துரையாடல்.

காற்றுடன் உரையாடுவது ஒரு அலாதியான இன்பம்.  அதிலும் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது நடக்கும் உரையாடல் அறிவிற்கு அமுதூட்டுவதுபோல் இருக்கும்.  காரணம் அது ஓரு அர்த்தமுள்ள உரையாடலாக இருப்பதனால்.  பலருக்கு இது பயித்தியக் காரத்தனமாக தோன்றலாம்.  ஆனல் உரையாடிப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அதில் தோய்ந்து கிடக்கும் அறிவார்ந்த சவால்களும் அதில் முக்கி எழும் விவரிக்கமுடியாத அனுபவங்களும்.

காற்று சுவாசத்திற்கு தேவைப்படும் வேதியியல் பொருள் என்பதோடு நமக்கும் காற்றிற்கும் இருக்கும் தொடர்பை நாம் முடித்துக் கொள்கின்றோம்.  காற்றின் பல்வேறு தன்மைகளையும், அதன் பயன்பாட்டையும் புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். காற்று இரத்த நாளங்களுக்குத் தேவைப்படும் அருமருந்து.  தூய்மையான காற்று மூளைக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் அரிய இயற்கை படைப்பு.  குளிர்ந்த காற்று உடலின் மேற்பரப்பில் உள்ள தோல்களின் துவாரங்களில் ஊடுருவதால் உடல் உடனடியாக அதிக வெப்பத்திலிருந்து மீட்சி பெறுகிறது.

ஆனால், வேதியியலையும் தாண்டி காற்றில் பரவிக் கிடக்கும் அற்புதங்களை காற்றுடன் பேசிப் பழகும்போதுதான் ரசிக்க முடியும்.  காற்றில் முடிவின்றி கலந்து நிற்கும் எண்ண அலைகளும், அதில் பவனிவரும் எண்ணற்ற சிந்தனை துகள்களும் பலருக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம்.  அவ்வாறு காற்றில் மரணமின்றி கலந்து நிற்கும் அவ்வலைகளை அவ்வப்போது நமது மனம் தொட்டுப் பார்ப்பதை நாம் அதிகமாக புரிந்துக் கொள்வதில்லை.  அவ்வாறு பரவி நிற்கும் அறிவலைகளை அறிந்துக் கொள்ள நமது மூளையிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள், அவற்றின் அதிர்வெண்கள்,  அவைகள்  சங்கமிக்கும் அபூர்வம், இவை எல்லாம் மனிதர்கள் காற்றுடன் கலந்துரையாடும் போது கிடைக்கும் அற்புதமான அறிவுப் பொக்கிஷங்கள்.
இறைவன் மனிதனை களிமண்ணில் படைத்து, அதில் காற்றின் மூலமாக சுவாசத்தை உருவாக்கி, அதனுள் ஆன்மாவை உள்ளடக்கினான் என்று குரானின் வேத வசனங்கள் அறிவிக்கின்றன.  எனவே காற்றுடன் நமக்கு இருக்கும் தொடர்பு நமக்குள்ளே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நமது ஆன்மாவின் தொடர்பு.  

இன்றைக்கு நாம் பார்க்கின்ற தொலைக் காட்சி நிகழ்வுகள், கைபேசி தொடர்புகள், வானொலி சப்தங்கள் எல்லாம் காற்றின் மூலமாகத்தான் நமது பார்வைக்கும் செவிக்கும் எட்டுகின்றன.  இவ்வாறு காற்றில் சங்கமித்திருக்கும் பல ஒலி மற்று, ஒளிகள், பல்வேறு அதிர்வலைகளாக ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களுக்குள் முடக்கப்பட்டு அழியாமல் வலம் வந்து கொண்டிருக்கின்றன.  அவைகள் மறைவதுமில்லை, அழிவதுமில்லை என்பது எனது கருத்து.

தற்போதைய அறிவியல் சாதனங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவெண்களை அதிலும் நேரடி ஒளி அல்லது ஒலி பரப்பின் அலைவெண்களை மட்டும் பதிவு செய்யவும் மற்றும் அலை பரப்பவும் செய்ய முடிகின்றன. அறிவியலின் அறிவு உயருகின்ற காலத்தில் காற்றில் பதிவாகியுள்ள ஒலி, ஒளி மற்றும் நமது எண்ண அலைகள் சேகரிக்கப்படும் நாள் வரும். அந்நாளில் நமது இறந்தகால எண்ண அலைகள், ஒலி மற்றும் ஒளிவலைகளை ஒன்று சேர்க்க முடியும். தற்போது ஒலிவலைகளில் ஏகப்பட்ட சத்தங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பிரிக்கமுடியாத சப்தங்களாக மட்டும் இருக்கின்றன. அவைகளை பிரித்தெடுக்கும் அறிவியல் சாதனம் கண்டுபிடிக்கப்படவில்லை.
மனித மூளையில் பொதிந்துள்ள அற்புத சக்தி மூலம், காற்றில் பரவிக்கிடக்கும் எண்ண அலைகளை ஒன்று சேர்க்கும் வாய்ப்புள்ளது.  அவைகளை பிரித்துணரும் தன்மையும் மூளையில் உள்ளது.  ஆனால், அவைகளை சரியான விதத்தில் புரிந்துக் கொள்ளவும், தொடர்ந்து ஒன்று சேர்க்கும் வித்தைகளை நாம் மூளைக்கு கற்றுக் கொடுத்தால் அண்டத்தில் பரவிக்கிடக்கும் பல அறிவுப் பொக்கிஷங்களை பிரித்துணரும் வாய்ப்பு கிடைக்கலாம்.

நாம் எல்லோரும் அறிந்திருப்பது போல், மூளையின் மூன்றில் ஒரு பங்கை மட்டுமெ நாம் பயன்படுத்துகின்றோம்.  முழுதாக பயன்படுத்தியவர்களை ஞானிகள் என்றும் கடவுளின் தூதர்கள் என்றும் உலகம் கொண்டாடுகின்றது.  அவர்கள் எவ்வாறு அறிவலைகளை காற்றின் மூலமாக உள்வாங்கிக் கொண்டனர் என்பதை சரியான வழியில் ஆராய்ச்சி செய்து பார்த்தால் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள பல அன்றாடத் ஆன்மீகத் தொடர்புகளை கண்டுபிடிக்கலாம்.  

வரும் காலத்தில் நபிகள் நாயகம் அவர்கள் தொழுகையிலும் இன்னும் பிற இடங்களிலெல்லாம் ஓதிக்காட்டிய குரானின் வசனங்களை, அவரது குரல் மூலமாக கேட்கும் காலமும் வரலாம்.

காற்றுடன் நான் அவ்வப்போது நிகழ்த்தும் உரையாடல்கள் என்னை உத்வேகப்படுத்துகின்றன.  எனது நம்பிக்கைகளை அதிகமாக்குகின்றது. சுய விமர்சனங்கள் என்னை யார் என்று தெளிவாக அறிமுகப்படுத்துகின்றது.  இவை யாவும் காற்றை மதித்து அதனுடன் கொஞ்சம் நேரத்தை செலவிட்டுப் பார்த்தால்தான் முடியும்.  அதை ஓரு பயித்தியக்காரத்தனமாக நினைத்தால் இழப்பு நமக்குத்தான்.  சிறிது நேரமாவது காற்றுடன் உரையாடிப் பாருங்கள், அதன் அனுபவம் விசித்திரமானது மட்டுமல்ல, பயனுள்ளதும் கூட.

No comments: