Saturday, April 13, 2019

முச்சந்தியில் தமிழகம் - 2019 பாராளுமன்ற தேர்தல்

இரண்டு பெரும் அரசியல் தலைவர்கள் இல்லாத ஒரு தேர்தலை தமிழகம் தற்போது களம் கண்டு வருகிறது.

அம்மாவின் உண்மையான வழி தோன்றல்கள் யார் என்ற போட்டியை முன்வைத்து இரட்டையர்கள் ஒருபுறமும், ஒற்றை மனிதனாய் பட்டுக்கோட்டையார் மறுபுறமுமாக களத்தில் இறங்கியுள்ளனர்.  என்றாவது ஒரு நாள் இரண்டு கூட்டமும் ஒன்றாக சேர்ந்து இசைபாடும் நிலை வரலாம் என்று இரு கூட்டமும் ஒருவரை ஒருவர் அதிகம் வசை பாடாமல் களத்தில் தங்களின் செல்வாக்கை உரசிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்றிரண்டு தொகுதிகளில் அமமுக வென்றால் அது அவர்களுக்கு போனஸ். அதிமுக வெறும் ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டும் வென்றால் அது அவர்களுக்கு பெரும் இழுக்கு. எனவே இந்த இரு பிரிவுகளும் விரைவில் ஒன்றாக சேரும் வாய்ப்புகள் பலமாகவே இருக்கின்றன.  இங்கே கொள்கை என்றால் அது அதிகாரத்தை எப்படி எப்போதும் கையில் வைத்துக் கொண்டிருப்பது என்ற ஒன்றே தவிர அதைத்தாண்டி இரு கூட்டத்தினருக்கும் தமிழகத்தின் மேல் அப்படி ஒன்றும் பெரும் காதலில்லை.

மறு பக்கத்தில் அண்ணவால் முடுக்கிவிடப்பட்டு, கலைஞரால் தொடர்ந்து செப்பனிடப்பட்ட திமுக, தானியங்கி விசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு யார் தலைவரானாலும் தானியங்கி விசையில் செல்லும் காரணத்தால் ஒரு பெரிய வித்தியாசம் தற்போது தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இந்த தானியங்கி விசை முடிவுக்கு வரும்போது தற்போதைய தலைமையின் திறன் வெளிவர ஆரம்பிக்கும். அப்படி ஓர் முச்சந்தியில் திமுக தற்போது இல்லை.  காரணம், மோடி மற்றும் இரட்டையர்களிடம் சிக்கித் தவிக்கும் தமிழகத்தின் அரசு செயல்பாடுகளின் மூலம் எழுந்த எதிர்ப்பலையில் திமுக கரை சேரும் வாய்ப்பிருப்பதால் ஸ்டாலின் பிழைத்துக் கொள்வார்.

ஆனால், இரண்டு கருப்பு குதிரைகள் களத்தில் ஒரு மாற்று அரசியலை முன்னிருத்தி மக்களை திராவிட ஊறுகாயை சுவைத்தது போதுமென்று  உசுப்பிக் கொண்டிருக்கின்றனர்.  சீமான் தனது தமிழின ஆவேசப் பேச்சால் தமிழர்களுக்கே உரித்தான உணர்வு அரசியலை சீண்டிக் கொண்டிருக்கின்றார்.  கமல் தனது அழுத்தாமன பேச்சால் தமிழர்களின் அறிவுச் சாலையை அகலப்படுத்தப் பார்கின்றார். இருவருக்கும் தமிழகத்தின் தற்போதைய அரசியலைப் பற்றிய நியாயமான கோபம் இருந்தாலும் அவர்களின் கோபத்தை புரிந்துக் கொண்டு இருவரின் பின்னாலும் தமிழக மக்கள் அரசியல் பயணம் செய்ய தாயாராகின்றார்களா என்பது இந்த தேர்தலின் மூலம் தெரியவரும்.

தமிழகத்தில் புதிய நான்கு தலைமைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஸ்டாலின், தினகரன், சீமான் மற்றும் கமல். இந்த நால்வரும் குறைந்தபட்சம் அடுத்த பத்து வருடத்திற்கு தமிழகத்தின் அரசியல் சதுரங்கத்தில் முன்னின்று விளையாடும் பெருமக்களாக இருப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

வைகோ, விஜயகாந்த், திருமா இவர்களின் வாக்கு வங்கிகளை உடைக்கும் பட்சத்தில் இளைஞர்களையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் சீமான். பெண்கள், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பிஜெபி, காங்கிரஸ் இவர்களின் வாக்கு வாங்கிகளில் ஒரு பகுதி மற்றும் இளைஞர்களின் மறு பகுதியை ஈர்த்துக் கொண்டிருக்கிறார் கமல்.

காங்கிரசும், பிஜேபியும் வட இந்திய அரசியலை முன்னிலைபடுத்தி அரசியல் செய்யும் காரணத்தால் தென்னிந்தியாவில் பெரும் செல்வாக்கை ஒருபோதும் அவர்களால் பெற முடியாது. யாருடைய முதுகிலாவது சாவாரி செய்துதான் தமிழகத்தில் அவர்களால் பயணம் செய்ய முடியும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார். அப்படியே வந்தாலும் அவரால் போராட முடியாது. வைகோ, அன்புமணி, திருமா போன்றவர்கள் மூன்றாம் நிலை அரசியல்வாதிகளாகவே இருப்பார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. முச்சந்தியில் நின்ற தமிழக அரசியல் தற்போது மாற்றத்தை நோக்கி மெதுவாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே.

மத இனவாத அரசியலுக்குள் இந்தியா முழுமையாக நுழைந்த இந்த மோசமான நேரத்தில் இந்தியாவை மாற்று அரசியலுக்கு இழுத்துச் செல்லும் முக்கிய பங்கு தென்னகத்திற்கு குறிப்பாக தமிழகத்து இருக்கின்றது. காரணம் தலைவர்களால் இல்லை, தமிழகத்தின் தொன்மையான கலாசாரம் மற்றும் பண்பாடுகளால்.  தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளுடன் மாறுபடும் எந்த கட்சியும் அல்லது தலைவர்களும் தமிழகத்திலிருந்து புறந்தள்ளப் படுவார்கள். இதுதான் உண்மை.

நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?

நான் ஒரு இந்திய குடிமகன், மதத்தால் இஸ்லாம், இனத்தால் தமிழன். வாக்களிக்கும் உரிமை பெற்றவன். ஆனால் நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
கடந்த ஐந்து வருடத்தில் என் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக இந்த அரசாங்கம் என்ன மாற்றங்களை அல்லது உதவிகளை செய்துள்ளது? எனது படிப்பை எந்தவித அரசு பொருளாதார உதவியுமில்லாமல் படித்தேன். வேலையில்லாமல் தெருக்களில் அலைந்து, எனது சுய முயற்சியால் தொழில் தொடங்கியபோதும் எந்தவித அரசு உதவியும் எனக்கில்லைசெய்த தொழிலுக்கு வரி செலுத்தினேன். வருமானம் போதவில்லை என்று வெளிநாட்டில் வேலைக்குச் சென்றேன். அங்கிருந்து அந்நிய செலாவனியை இந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தேன். என் குடும்பத்துடன் சேர்ந்து அரசும் பயன்பெற்றது..  ஆனால் இந்த அரசால் எனக்கென்ன பயன்நான் ஏன் வாக்களிக்க வேண்டும்
எனது வருமானத்திற்கு வரி செலுத்துகின்றேன். எனது கணக்குகளை வங்கி மூலமாக பண பரிமாற்றம் செய்கின்றென். எனது வாகனத்திற்கு சாலை வரி முதல தினமும் நான் பயன்படுத்தும் எரிபொருளுக்கும் வரி செலுத்துகின்றேன். அரசால் எனக்கென்ன பலன்? என்னிடமிருந்து கிடைத்த (சொற்ப தொகையாகானலும்) வருமானத்தில் நான் வாக்களித்து ஆட்சியில் அமர்ந்தவர்கள் என்னை அடிமையைப்போல் பார்க்கின்றார்கள். நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
எனது வருமானத்திற்கு கணக்கு கேட்கும் அரசு, எனக்கு கிடைத்த வருமானத்தை எப்படிப் பெற்றேன், எங்கெ செலவு செய்தேன் என்று ஆதரங்களை சமர்ப்பிக்க சொல்லும் அரசு, என் மூலம் கிடைத்த வருமானத்தை எப்படி செலவு செய்தோம் என்று எனக்கு கணக்கு காட்ட மறுக்கிறது? நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் நான் அவர்களுக்கு எனது தொகுதியில் எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்று மேடையில் முழங்கி எனக்கு என் மதத்தை ஞாபகப்படுத்தும் அமைச்சர் பொதுவான ஒரு தலைவராக இருப்பார் என்று எப்படி நான் நம்புவதுநான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
மோடி அவர்களே! உங்கள் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினால், நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது நடந்து 2ஜி ஊழலை மறந்துவிட்டீர்களா என்று எதிர் கேள்வி கேட்டு குற்றத்தை மறுக்காமல் குதர்க்கம் பேசும் அரசியல்வாதிகளை நம்பி நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
தேசத்தை காக்க கோடான கோடி ராணுவ வீரர்கள் தம் ஆருயிர் குடும்பத்தைத் துறந்து வெயிலிலும் பனியிலும் பணி செய்வதோடல்லாமல் தம் இன்னுயிரையும் இழக்கும்போது என்னைத்தவிர இந்த நாட்டை பாதுகாக்க திறன் பெற்றவர்கள் யாருமில்லை நான் ஒருவன் மட்டுமே 130 கோடி மக்களை காப்பாற்றும் திறமை பெற்றவன் என்று மறைமுகமாக மக்கள் அனைவரையும் திறமையற்றவர்கள் என்று ஒரு அரசியில்வாதி கூக்குரலிடும்போது நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
இன்னும் எத்தனையோ கேள்விகள் பதிலில்லாமல் அலைமோதுகின்ற நேரத்தில் என் மனதின் இன்னொரு மூலையிலிருந்து ஒரு குரல் நீ வாக்களிக்க வேண்டும் என்று ஓங்கி சத்தமிடுகிறது.
அபூபக்கர் (ரலி) அவர்களின் கைபிடித்து மதீனாவின் மக்கள்உங்களை நாங்கள் கலீபாவாக ஏற்றுக் கொள்கின்றொம் என்று உறுதி அளித்தபோது அந்த கால கட்டத்தில் அதுதான் ஜனநாயகத்தின் வாக்களிக்கும் முறை. இயந்திரத்தின் மூலமாக விரும்பியவரை தேர்ந்தெடுத்தல் இக்காலத்தின் இன்றைய ஜனநாயக முறை. என்வே எனது ஜனநாயகக் கடமையான வாக்களிப்பை நான் செய்ய வேண்டும். இல்லையென்றால் எனது கடமையில் நான் தவறியவனாகின்றேன். என்னைப் படைத்த இறைவனின் முன்னால் நான் குற்றவாளியாக நிற்க வேண்டும் என்பதால் நான் வாக்களிக்க வேண்டும். 
என்னுடைய ஒரு ஓட்டின் மூலம் இந்தியாவின் தலையெழுத்தே மாறும் என்று ஒவ்வொரு இந்தியனும் நினைக்க வேண்டும் என்பதற்காக நான் வாக்களிக்க வேண்டும்.
டீ விற்றவரின் மகன் பிரதமராக வந்த நாட்டில் ஒரு செருப்புத் தொழிலாளியின் மகனும் பிரதமராக வருவதற்கு வாய்ப்புள்ள ஜனநாயக மரபை காப்பாற்ற நான் வாக்களிக்க வேண்டும்.  

வாக்களிப்போம் வாருங்கள்!!!

Wednesday, April 03, 2019

பாராளுமன்ற தேர்தல் 2019

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
இந்தியாவின் ஆட்சிப்பாதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றது. ‘மக்கள் எவ்வழியொ மன்னன் அவ்வழிஎன்பதை மாற்றிமன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழிஇருக்க வேண்டும் என்ற அசாத்திய கொள்கைகளுடன் களம் காணும் பி.ஜெ.பி கட்சி ஒருபுறமும், பி.ஜே.பி கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மதவாத, ஜாதிய மற்றும் ஏற்றத்தாழ்வின் வெறுப்பிலும் வன்முறையிலும் நாடு  சிதைந்துவிடும் என்ற ஒரு காரணத்தை மட்டும் (இதுவரை) முன்னிருத்தி காங்கிரஸ் மறுபுறத்திலும், மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டால் இந்தியா ஒருபோதும் வளர்ச்சி அடையாது என்று ஒரு சில மாநில கட்சிகள் இன்னொரு புறம் என்று மூன்று அணிகளாக களமிறங்கி உள்ளன.
புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று கற்காலத்தை நோக்கி நாட்டை நகர்த்திக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி ஒருபக்கம். ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் எதுவுமில்லாமல் மோடி எதிர்ப்பை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு செயல்படும் ராகுல்காந்தி மறுபக்கம், மாநில கட்சிகளின் கூட்டமைப்புதான் மத்தியில் ஆட்சி செய்ய வேண்டும் என்று சொல்லும் வேளையில் ஒருவருக்கொருவர் போதுமான புரிதல்கள் இல்லாத மாநில கட்சித் தலைவர்கள் இன்னொரு பக்கமுமாக மக்களை நோக்கி முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவர்கள் எல்லோருக்கும் மன்னராக வேண்டுமென்ற ஆசைகள். அதற்கு அவர்கள் நம்பியிருக்கும் பாதை மதவாத மற்றும் ஜாதிவாத பிரிவினைகள் மட்டுமே தவிர வேறொன்றும் இல்லை. இந்தியர்கள் எல்லோரும் பாகுபாடில்லாமல் ஒன்றுபட்ட வளர்ச்சி காணுவதே நோக்கம் என்று முழங்கிய மோடி அவர்களின் இந்தியர்கள் என்ற வரையறைக்குள் முஸ்லீம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இடமில்லைஊழல்வாதிகள் என்று ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு ஆளுனரிடமும், கோர்ட்டிலும் புகார் கொடுத்தவர்கள் இப்போது ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு நம்மை மூடர் கூட்டமாக பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். கொள்கைகள், திட்டங்கள், வளர்ச்சிகள் மற்றும் ஊழலற்ற ஆட்சி என்ற கோணிபைக்குள் மத, இன, மொழி, ஜாதி, இலவசங்கள் என்ற போதைப் பொருட்களுடன் நம்முன்னே பணிவுடன் பவனி வந்து கொண்டிருக்கும் இவர்களின் கண்களுக்கு தெரிவதெல்லாம்இந்திய மக்கள் ஒரு மூடர்கள்’.  ஏன் இப்படி அவமதிக்கப் படுகின்றோம்? ஏன் நமது அறிவையும் புரிதல்களையும் பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அசிங்கப்படுத்துகின்றார்கள்
நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்க்கும் அறிவை இழந்ததால். இது என்னுடைய நாடு என்ற உரிமையை மறந்ததால். நமது வேர்வைகளையும் ரத்தத்தையும் உறிஞ்சி அதையே காசு பணமாக மாற்றி நம்மிடமே அதை இலவசமாக தருகிறார்கள் என்பதை புரிதல் இல்லாத காரணத்தால். என்னுடை ஒவ்வொரு வாக்கும் எனது மற்றும் என் சந்ததிகளின் எதிர்காலத்தை செதுக்கும் உளிகள் என்பதை மறந்த காரணத்தால். வாக்குகளை சரியாக பயன்படுத்தாததால் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாமல் முட்டளாக வாழ்ந்து கொண்டிருக்கும் காரணத்தால்.  
இந்தியாவிற்கு இப்போது சுதந்திரம் கொடுக்காதே. அதை அனுபவிக்கும் தகுதியும் திறனும் அவர்களுக்கு இன்னும் வரவில்லை என்று 1940களில் சொன்ன வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் நகைத்துக் கொண்டிருக்கின்றனஇப்படியே போனால் வாக்களிக்கும் உரிமையையும் எதிர்கால ஆட்சியாளர்கள் நம்மிடமிருந்து பறிக்கும்நாள் வெகுதூரத்தில் இல்லை. காரணம் அனுபவிக்கத் தெரியாதவனிடம் ஒரு உன்னதமான விஷயம் இருந்து என்ன பலன் என்று இறைவனும் முடிவு செய்துவிடுவான். இன்னும் சொல்லப் போனால் முட்டள்களை இறைவன் ஒருபோதும் காப்பாற்ற மாட்டான். உண்மையிலேயே நாம் முட்டாள்களா?
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும்அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர், எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர் (அல் குரான் 3:110)
நல்லவன் என்று எப்போது ஒருவன் அடையாளம் காட்டப்படுகின்றான்? அவன் தன்னை நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதா? நிச்சயமாக இல்லை. நல்லவைகளை தன் செயல்மூலம் பிறருக்கு செய்து காட்டும்போதுதான் ஒருவன் நல்லவன் என்று சமுதாயத்தில் அறியப்படுகின்றான். நம்மிடையே நிறைய நல்லவர்கள் இருக்கின்றார்கள்ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தன் சிந்தனையில் மட்டுமே நல்லவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள், செயல்களில் இல்லை. ஏன்?
  1. தன்னுடைய சிந்தனைகளை மட்டும் தூய்மையாக வைத்துக் கொண்டிருந்தால் போதும் என்று ஒரு கூட்டம்
  2. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று இன்னொரு கூட்டம், எனக்கென்ன என்று ஒதுங்கி போகும் இன்னுமொரு பிரிவு
  3. தன்மீதே நம்பிக்கை இல்லாமல் உலாவரும் இன்னொரு கூட்டம்
  4. யாராவது செய்யட்டும் அல்லது செய்வார்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும் மற்றொரு கூட்டம்
  5. சொந்தப் பிரச்ச்னைகளையே சமாளிக்கவே முடியவில்லை எப்படி அடுத்தவர்களுக்கு உதவுவது என்று ஒரு கூட்டம்
இப்படி பல காரணங்களுடன் நல்லவர்கள் எல்லாம் நாடு நாசமாவதைப் பற்றி கவலையில்லாமல் வாழ்கிறார்கள்இவர்கள் சொல்லக்கூடிய மேற்கூறிய காரணங்கள் அனைத்தும் மனிதவாழ்வின் அடிப்படை குணாதிசயங்களுடன் ஒத்துப் போகாத முரன்பாடுகள்சுயநல சிந்தனைகளின் ஆதிக்கத்தால் எழுந்த பலகீனமான வாழ்க்கை முறையும், அதனுள் சிக்கிக்கொண்டு அடிமைகளாக வாழ்வதின் வெளிப்பாடுகள். மொத்தத்தில் மனித அழிவிற்கான வித்துக்களை நல்லவர்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னையும் ஊரையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களால்தான் விதைக்கப்படுகின்றன
நாம் ஒவ்வொருவரும் நமது அழிவிற்கான பாதையை நமக்குத் தெரியாமலே அகலப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றோம். அழியும் ஒவ்வொரு நொடியும் அழிவின் பாதையில் நம்மை அழைத்துச் செல்கின்றன என்று தெரியாமலே பழக்க வழக்க சுழற்சிக்குள் அடிமையாகி அதன் ஓட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலும் அப்படி ஓர் அனிச்சை சுழற்சியில் உள்வாங்கப்பட்டு நம்மை நாமே அழித்துக் கொள்ள நமது விரல்களை (வாக்குகளை) நாம் பயன்படுத்த இருக்கின்றோமா
மனிதர்களின் வாழ்வும், முறையும், உள்ளும், புறமும் மற்ற படைப்பினங்களோடு பின்னிப் பிணைந்த ஒரு வாழ்க்கை அமைப்பு. இந்த கட்டமைப்பிலிருந்து யாரும் விலக்கல்லமுற்றும் துறந்த ஞானிகள்கூட மனித சமுதாயத்திற்குள் தன்னை இணைத்துக்கொண்டு வாழாமல் கடைத்தேறல் கிடையாது. தனிமனித முக்தியோ அல்லது பிறவிகளின் முடிவோ அல்லது சொர்க்கமோ, நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஒரு மனிதன் தனித்து வெற்றி பெறமுடியாது, அது சாத்தியமில்லை. காரணம் மனிதனின் உடல்கூறுகளும் மனக்கூறுகளும் மற்ற மனிதர்களுடன் மற்றும் படைப்புகளுடன் பிணைக்கப்பட்ட வாழ்க்கை முறையை கொண்டு படைக்கப்பட்டுள்ளன
இன்னும் விளக்கமாக எழுத வேண்டுமென்றால் எல்லா உயிரினங்களும் ஒரே காற்றைத்தான் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உன் நாசிக்குள் சுற்றிவந்த காற்றுதான் என் நாசிக்குள்ளும் உலா வருகின்றது. எனவே நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற சிந்தனையே தவறானதுஎப்போதெல்லாம் ஒரு நல்லவன் எனக்கென்ன என்று ஒதுங்கிப் போகின்றானோ அப்போதெல்லாம் அந்த இடத்தை ஒரு கெட்டவன் ஆக்கிரமித்துக் கொள்கின்றான். ஆகவே எனக்கென்னவென்று நான் இருந்தால் என்னை மட்டுமல்ல என் அண்டைவீட்டாரையும் பாதிக்க செய்யக்கூடியவன்தான் என்னை ஆள்பவனாக பதவிக்கு வருவான்
இறைவன் மனிதனை தனது பிரதிநிதியாக கருதுகின்றான். இவ்வுலகில் உள்ள அனைத்தையும் மனிதனின் ஆதிக்கத்தின் கீழ் கொடுத்து நம்முடைய பொறுப்பையும் பொதுநலத்தையும் ஒவ்வொரு நொடியும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். இந்த உலகத்தின் இயக்கமும், பாதையும், முடிவும் நம் கைகளில் இல்லையென்றாலும் இறைவன் நம்மை கருவாக பயன்படுத்திதான் இயக்கிக் கொண்டிருக்கின்றான்அதையே சோதனையாகவும் செய்துகொண்டிருக்கின்றான். இல்லையென்றால் நமக்கு அறிவையும், ஆற்றலையும் மற்ற படைப்பினங்களை ஆதிக்கம் செலுத்தும் உரிமையையும் ஏன் இறைவன் நமக்கு வழங்க வேண்டும்? நன்மைகளை ஏவுவதும் தீமைகளை தடுப்பதும் ஒவ்வொரு மனிதனின் கடமை. அவைகளை செய்யத் தயங்கும்போது நமக்கு நாமே அழிவைத் தேடிக் கொள்கின்றோம். அப்படிப்பட்ட அழிவின் ஒருபகுதியாக வரவிருக்கின்ற பாரளுமன்ற தேர்தலை நாம் மாற்றிக் கொள்ள போகின்றோமா? அல்லது நன்மைகளை ஏவி தீமைகளை தடுத்து நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தை காப்பாற்ற போகின்றோமா?
நம் கைகளால் நமக்கு நானே அழிவைத் தேடிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் நமக்குத் தேவை அறிதல், தெளிதல், உணர்த்துதல், ஒன்றுபடல் என்ற நான்கும்.
ஏன் தேர்தல்? எதற்காக நாம் வாக்களிக்க வேண்டும்? வெற்றிபெறுபவர்களின் அதிகார எல்லைகள் என்னென்ன? அவர்களின் செயல்பாடுகள், பலன்கள் மற்றும் செயல்படவில்லை என்றால் என்னென்ன பாதகங்கள்? வெற்றி பெற்றவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்புகள் எப்படியிருக்க வேண்டும்? என் இந்த நான்கையும் சரியாக பயன்படுத்தினால் என் வீடு, என் தெரு, என் கிராமம், என் சமுதாயம், என் மாநிலம், என் நாடு அனைத்தும் என் சுமூகமான வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் தேவையான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும்நமது சுதந்திரத்தை நாம் பூரணமாக அனுபவிக்க முடியும்
அதன் முதல்கட்டமாக இந்த தேர்தலில் பொய்களையும், கற்பனைகளையும் வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் பாசிச சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகாவும் அதிமுகாவும் தங்களின் சுயநலத்திற்காக எப்போது எப்படி வேண்டுமானலும் பாசிச சக்திகளிடம் உறவாடும் தன்மை கொண்டவைகள்இரண்டு கட்சிகளுமே தமிழகத்தின் சாபக் கேடுகள்இரண்டுமே தோற்கடிக்கப்பட வேண்டும். ஆனால், பிரச்சனை இந்தியாவை யார் ஆள்வதென்பதெ! எனவே, முதலில் வெளியில் இருந்து வரும் பாசிச சக்திகளையும், அவைகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் நம் இன மத மொழி சகோதரர்களை தோற்கடிக்க வேண்டும். முதலில் வெளியிலிருந்து வரும் பாம்புகளை அழிப்போம். பிறகு நம் வீட்டினுள் இருக்கும் எலிகளை அழிப்போம். ஆகவே, பி.ஜெ.பி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிக்கக்கூடிய தகுதியும் பலமும் பொருந்திய வேட்பாளர்களுக்கு வாக்களிப்ப்தெ சிறந்தது
அதனடிப்படையில் காயிதே மில்லத் முதன்மைக் குழுவின் முடிவை ஒவ்வொரு முஸ்லீமும் தனது தொகுதியில் செயல்படுத்த வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்

அதே வேளையில் மாற்று மதத்தை சேர்ந்த நம் சகோதாரர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நல்ல்வர்களுக்கு வாக்களியுங்கள். அவர்களை தோற்கவிடாதீர்கள், அவர்கள் எந்த கட்சிகளில் இருந்தாலும் சரி. உங்கள் சாதிக்காரர், மதத்தைச் சேர்ந்தவர் என்று கெட்டவர்களுக்கு வாக்களித்துவிடாதீர்கள். பெட்ரோல் விலை சாதிப் பார்த்து ஏறுவதில்லை. இந்திய ரூபாயின் மதிப்பு இனம் பார்த்து குறைவதில்லை. விவசாயிகளின் விளைச்சல்களுக்கு அரசு மதம் பார்த்து விலை நிர்ணயிப்பதில்லை. வாக்களுக்கும்போது சாதி மதம் பார்க்காதீர்கள். வேட்பாளர்களின் தரம் பாருங்கள், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின், தலைவர்களின் குணம் பாருங்கள். நல்ல வேட்பாளர்தான், ஆனால் கட்சி சரியில்லை என்றால் அந்த வேட்பாளரை ஒதுக்கி வைத்த்துவிட்டு பாசிசத்திற்கு எதிராக வாக்களியுங்கள்