Saturday, March 26, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 2

உலக அரசியலை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் அமேரிக்காவின் அரசியலை புரிந்துக் கொண்டால் போதும், அதே போன்று அமேரிக்கா டாலரை நாம் புரிந்துக் கொண்டால் உலக பொருளாதாரத்தை புரிந்துக் கொண்டது போல் ஆகும். அந்த அளவிற்கு டாலரின் தாக்கம் உலக பொருளாதார வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் அதிக பங்கு கொண்டதாக இருக்கிறது. இதற்கும் முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் அணுகுமுறைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். அமேரிக்கா அரசியல் முஸ்லீம்களை பொருத்தவரை இரண்டு விதமான அரசியல் பரிமானங்களை கொண்டு செயல் படுத்தப்படுகிறது. ஒன்று உலக பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமான பெட்ரோல், இன்னொன்று உலகத்தின் பல பாகங்களில் பெரும்பான்மையான மக்களின் மனதை ஊடுருவிக் கொண்டிருக்கும் குரானின் கொள்கைகள். இரண்டிற்க்குமே அதாவது, 'மனம் மற்றும் பணம்' என்ற வாழ்வின் இரண்டு அதி முக்கிய தேவைகளுக்கு அடிப்படை காரணியாக இருப்பது இந்த மத்திய ஆசிய என்ற பாலைவன சமவெளிதான்.

இந்த இரண்டையும் வெல்ல வேண்டும் என்ற பன்னெடுங்கால போராட்டத்தின் பின்னனியில் (பல்வேறு அரசியல் கூட்டணிகள் செயல்பட்டாலும், தற்போது) அமேரிக்காவின் 'neocon' அரசியல் கூட்டணியினர் செயல்படுத்தும் அரசியல் திட்டங்களையும், அதன் சாதக பாதகங்களும்தான் இன்றைக்கு முக்கியத்துவம் நிறைந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் போராட்டமாக இருக்கிறது. முதலில் பொருளாதார பொலிட்டிக்ஸை அதாவது பெட்ரோல் பொலிட்டிக்ஸைப் பார்த்துவிட்டு பிறகு புத்தகப் பொலிட்டிக்ஸிற்கு (politics of ideology and mythology) போகலாம்.

அமேரிக்காவின் மிகப் பெரும் பிரச்சனை குறைந்து வரும் டாலரின் மதிப்பும், அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்தான். வருடத்திற்க்கு 5 சதவிகிதமாக அதன் மதிப்பு மற்ற நாடுகளின் கரன்சிக்கு, குறிப்பாக யூரொவிற்கு எதிராக குறைந்துக் கொண்டிருப்பது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று. காரணம் மற்ற கரன்சிகளைப் போல் அமேரிக்கா டாலர், தங்கத்திற்க்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட கரன்சி அல்ல. 1971ம் வருடத்திலிருந்து அமேரிக்கா டாலர் ஒரு 'floating currency' ஆக மாற்றப்பட்டது 'backing out on Bretton Wood Commitment'. அப்போது சுமார் 70 பில்லியன் டாலர் கடனாளியாக இருந்த அமேரிக்கா கையில் வைத்திருந்தது வெறும் 11 பில்லியன் பெருமானமுள்ள தங்கமே.

இன்றைக்கு அமேரிக்காவின் சூப்பர் பவர் அந்தஸ்திற்க்கு மற்றுமொரு காரணம் உலகச் சந்தையில் செய்யப்படும் வர்த்தக பரிமாற்றங்கள், மற்றும் ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கிடையில நடைபெறும் வர்த்தக மாற்றங்கள் யாவும் டாலரை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதே. பெரும்பாலும் உலகளாவிய இந்த வர்த்தக அமைப்பு டாலருக்கு பெரும் மதிப்பு அளிப்பதோடு அதன் பலவீனத்தை மறைப்பதற்க்கும் உதவுகிறது.

எந்த நாட்டினுடைய பொருளாதாரமும் அந்தந்த நாட்டின் பலம் மற்றும் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கணிக்கப்படும். அதே நேரம் அந்த நாட்டினுடைய கரன்சியின் மதிப்பு அந்நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பின் திறனை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். இதுதான் பொதுவான கரன்சி மற்றும் பொருளாதார அடிப்படை விதிமுறைகள்.

அமேரிக்காவின் டாலரை கவனித்தால் அது அதனுடைய சரியான மதிப்பைவிட அதிகமான மதிப்பு கொண்டிருப்பது தெரியவரும். இந்த 'over valued' அமேரிக்கா டாலரின் மதிப்புதான் தற்போது அமேரிக்காவின் மிகப் பெரும் பலமும் மற்றும் பலவீனமும். இது மற்ற நாடுகளில் இருக்கக் கூடிய பொருளாதார சிரமங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பிரச்சனை.

அமேரிக்கா தான் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவைவிட சுமார் 50% அதிகமாக இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வரை வருடத்திற்க்கு சுமார் 500 பில்லியன் டாலர் பற்றாக்குறையில் இருந்துக் கொண்டிருக்கக் கூடிய அமேரிக்க பட்ஜெட் மொத்தமாக கடந்து 25 வருட கால பட்ஜெட்டை கணக்கிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு டிரில்லியன் டாலர்கள் கடனாளியாக இருந்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 1.25 பில்லியன் டாலர் கணக்கில் இது அதிகமாகிக் கொண்டிருப்பது அமேரிக்காவின் மிகப் பெரும் கவலைகளில் ஒன்று.

இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அமேரிக்கா டாலர்கள் இன்னும் ஒரு சக்திவாய்ந்த கரன்சியாக காட்சி அளிப்பதற்க்கு காரணம் மேலே சொன்னதுபோல் உலக வர்த்தக பரிமாற்றங்கள் அமேரிக்க டாலரின் மூலமாக நடைபெறுவதே.

உலகில் நடைபெறும் அந்நிய செலவானி மாற்றங்களில் சுமார் 80 சதவிகிதம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறுகிறது. உலகில் நடைபெறும் ஏற்றுமதிகளில் குறைந்த பட்சம் பாதி ஏற்றுமதி இறக்குமதிகள் டாலர் வழியாகத்தான் நடை பெறுகிறது. சர்வதேச வர்த்தகங்கள் செய்வதர்க்கு வசதியாக ஒவ்வொரு நாடும் அமேரிக்கா டாலரைத்தான் கையிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். இதன் காரணமாக உலக நாடுகளின் மொத்த டாலர் கையிருப்பு சுமார் 68 சதவிகிதமாக அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளில் குவிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமா? IMFன் கடன் வசதிகள், கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறவேண்டும். IMFல் அமேரிக்காவின் பங்கு 51% சதவிகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(இதை எழுதும்போது உலக வங்கியின் கொள்கைகளையும் அதன் வாயிலாக அழியும் ஏழை நாடுகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்று தோன்றினாலும் அதை வேறொரு தலைப்பில் பின்னொரு தருணத்தில் தருகிறேன்.)

இதைவிட இன்னுமொரு முக்கியமான வர்த்தக பரிமாற்றம், அதாவது ஒபெக் நாடுகளின் மற்றும் அதை சாரத எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அனைத்தும் டாலரில்தான் வியாபரம் செய்கின்றன.

இப்படி உலக நாடுகளின் வர்த்தகங்கள் அனைத்தும் டாலர் மூலமாக நடைபெறுவதால் அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள் தனது டாலர் கையிருப்பைப் பற்றி கவலைப்படுவது அன்றாட வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக அவ்வப்போது பொது சந்தையிலிருந்து டாலரை வாங்குவதும் விற்பதும் இந்த மத்திய வங்கிகளின் வழக்கமான தொழிலாகும். ஏனென்றால் உலக நாடுகள் அனைத்தும் தனது கரன்சியின் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிர்பந்தமும் இன்னும் தனது கரன்சி over value கிவிடக் கூடது என்ற அவசியமும்தான். இப்படி உலக நாடுகள் எல்லாம் தனது கரன்சியைக் காப்பற்றிக் கொள்ள போராடும்போது அமேரிக்கா மட்டும் டலர்களை பிரிண்ட் செய்து உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் சலவைக் காயாமல் உறங்க வைத்துவிட்டு கொண்டாட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்புத் தகுதி அமேரிக்காவிற்கு மட்டுமே இருப்பதால் அமேரிக்கா டாலர்கள் over valued கவும், இன்னும் அடிப்படை பலவீனங்கள் பலவும் இருந்தாலும் இன்னும் பலம் நிறைந்த கரன்சியாகவும், பொருளாதார சூப்பர் பவராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

அமேரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப அச்சகங்களுக்கு ஆர்டர் கொடுத்து வேண்டிய டாலர்களை பிரிண்ட் செய்தால் போதும் என்று தினம் தினம் அதிகமாகும் கடன் பிரச்சனைகளை சர்வ சாதரணமாக சமாளித்துக் கொண்டிருக்கிறது. 'சருகிக் கொண்டிருக்கும் அமேரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகின்ற வேலையை எந்தவித செலவுகளும் இல்லாமல் அமேரிக்காவின் டாலர் அச்சகங்கள் கவனித்துக் கொள்ளும்' என்று சொன்ன பென் எஸ். பெர்னான்கியின் வாசகங்களை இங்கே நினைவு கூர விரும்புகின்றேன். (Ben S. Bernanke, a Federal Reserve Board Governor, in his speech on November 21, 2002)

இப்படி தொடர்ந்து டாலர்களை அச்சடித்துக் கொண்டிருந்தால் டாலரின் மதிப்பு மிக விரைவில் சிதைந்துவிடும் என்று பெரும்பாலான பொருளாதார மேதைகளின் அறிவுருத்தலால் அமேரிக்க அரசாங்கம் பிரிண்டிங் பிரசுகளுக்கு ஆர்டர் கொடுப்பதை கடந்த ஒரு சில வருடங்களாக நிறுத்தி வைத்துவிட்டு டாலர்களை முடக்கி வைக்காமல் புழக்கங்களை அதிகப் படுத்த வேண்டுமென்று முடிவெடுத்துள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு டாலர் புழக்கங்கள் அதிகமாகிறதோ அவ்வளவிற்கு அமேரிக்காவின் பொருளாதாரம் பாதுகாப்பு பெற்றதாக இருக்கும் என்பதை சமயோசிதமாக சிந்தித்து முடிவெடுத்து, குறைந்த பட்சம் உலகில் சராசரி மூன்று டிரில்லியன் டாலர்களாவது பொது சந்தைகளில் வர்த்தக பரிமாற்றம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்று தற்போது டாலர் புழக்கங்களை அதிகப் படுத்தி வருகிறது.

உலகப் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் மற்றும் நடத்திச் செல்லவும் கூடிய ஒரு முக்கியமான தலைமையிடத்தை அமேரிக்கா தக்க வைத்துக் கொள்ள அது எடுத்துக் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதாரத் கொள்கைகளும் மற்றும் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக நடந்த கடினமான முயற்சிகளின் வெளிப்பாடுதான் இன்றைய அதன் உயர்விற்க்கு காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இராணுவ மற்றும் அரசியல் உலகிலும் தன்னை இப்படி உயர்வித்துக் கொண்டதன் காரணாமக தற்போது அறிந்தோ அறியாமலோ ஒரு முக்கியமான breaking point நிலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இதன் முதல் பதிவிலே அமேரிக்கா உலக நாடுகளை வழி நடத்திச் செல்லக் கூடிய தகுதி கொண்ட நாடக நான் எழுதியது.

அதுமட்டுமல்லாமல் அமேரிக்கா தற்போது மற்ற நாடுகளிடம் தன்னை நீங்கள் எல்லோரும் பெரியண்ணனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிர்பந்ததை வைக்க விரும்பாமலே தன்னிச்சையாக முடிவெடுத்து உலக நாடுகள் எல்லாவற்றிர்க்கும் எது சிறந்தது, எது சரியானது, நீ எப்படி நடக்க வேண்டும், இன்னும் பத்து வருடத்திற்க்கு பிறகு உனக்கு எது சிறந்தது என்று எனக்குத் தெரியும், நீ நான் சொல்வதைக் கேள், இல்லையென்றால் உன்னை ஒழித்துவிடுவேன் என்றெல்லாம் 'தாதா' வேலையை செய்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தன்னிகரற்று விளங்கிக் கொண்டிருக்கும் இந்த அமேரிக்காவின் பொருளாதார தலைமைக்கும், அதைத் தொடர்ந்து கிடைக்கும் அரசியல் மேம்பாட்டிற்க்கும், கொச்சையாக சொல்வதென்றால் அரசியல் தாதாகிரிக்கும் போட்டியே கிடையாதா?

அடுத்தப் பதிவில் சந்திக்கலாம். (தொடரும்).

Saturday, March 19, 2005

இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்

இஸ்லாம் குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் அவசியமா? என்ற ஒரு கேள்வி இந்த வலைப்பூவிலே வைக்கப்பட்டு அதற்கு அவசியமே என்ற பதில் நேசகுமார் என்பவரால் கொடுக்கப்பட்டது. கேள்வியும் பதிலும் மாற்றார்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதால், மாற்றார்கள் இஸ்லாம் குறித்து விவாதிக்கலாமா என்ற கேள்வி சற்று கனமானதாக தோன்றுகிறது பலருக்கு.

விவாதிக்கலாம், விமர்சனங்களும் செய்யலாம். செய்ய வேண்டும் என்பதே சரியான பதில். இஸ்லாம் என்பது குரானில் சொல்வது போல் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக அருளப்பட்டது. எனவே உலக மக்கள் அனைவரும் அது குறித்து விவாதிப்பதோ, விமர்சனம் செய்வதோ ஒன்றும் தடுக்கப்பட்ட செயல் அல்ல. பெரியாரும் விமர்சிக்கலாம், அண்ணாவும் விமர்சிக்கலாம். பெரியவர்கள் விமர்சித்தால் ஒன்றும் சிறியவர்கள் ஆகிவிட மாட்டார்கள். நேசகுமாரும் விமர்சிக்கலாம், நேசமில்லாதவர்களும் விமர்சிக்கலாம்.

விமர்சனங்கள் வரும்போதுதான் விவாதங்களும் வரும். விவாதங்கள் வரும்போதுதான் தெளிவு பிறக்கும். இஸ்லாம் வளர்ந்ததும், வாழ்வதும், வாழப்போவதும், இன்னும் வளர இருப்பதும் விமர்சனங்களாலும், விவாதங்களாலும்தான்.

இது குறித்த விவாதங்கள் வரும்போதுதான், நேசகுமார் நம்புவது போல், இஸ்லாம் வன்முறையை போதிக்கக் கூடிய அல்லது அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த மதமா அல்லது இஸ்லாத்திற்க்கு எதிரான வன்முறைகளுக்கு மத்தியிலே வளர்ந்த மதமா என்பதை புரிந்துக் கொள்ளமுடியும்.

"(நபியே) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டு மற்றும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டு உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ, அதைக்கொண்டு அவர்களுடன் நீர் விவாதம் செய்வீராக! நிச்சயமாக உமதிரட்சகன், அவனுடைய வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன்; இன்னும் நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன் (16:125) - திருக்குரான்.

ஆகவே விவேகத்தைக் கொண்டும், வேதத்தைக் கொண்டும் வாதடுவதில் எந்த தவறும் இல்லை, அதைத்தான் இறைவனும் விரும்புகிறான். அதைத்தான் நபி அவர்களும் செய்தார்கள். இதில் பயப்படவோ அல்லது இரட்டை வேடம் போடவேண்டிய அவசியமோ இல்லை.

Thursday, March 17, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும்

அமேரிக்காவிற்கு குளிர் காய்ச்சல் வராத நாட்களே கிடையாது என்று சொல்லுமளவிற்கு எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அமேரிக்கா மூக்கை சிந்திக் கொண்டிருப்பதும் மற்ற நாடுகளை நினைத்து கவலையில் நடுங்கிக் கொண்டிருப்பதும் வாடிக்கையாகிப் போய்விட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த காலங்களிலிருந்து அறுபதுகள் வரை தனது அண்டை நாடுகளில் யார் ஆளவேண்டும், எப்படி ஆளவேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. தீடீரென்று வியாட்னாமிற்கு ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய கவலையில் தானும் நடுங்கி உலகத்தில் உள்ள மற்ற வளரும் நாடுகளையும் கவலை கொள்ள வைத்தது. அதன் பிறகு, ஐரோப்பியர்களை எப்படி தன் கைக்குள் வைத்திருப்பதென்ற கவலைக்கு மருந்தாக சோவியத் அரசோடு குளிர் காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருந்தது. சோவியத்தை ஒழித்துக் கட்டிய பிறகு ஐரோப்பியர்களை எப்படி பிரித்து வைப்பதென்ற கவலையில் அவ்வப்போது கவனம் செலுத்தி வந்தது. ஐரோப்பியாவை எவர் ஆண்டாலும் சரி தனது கொள்கைகளுக்கோ அல்லது வியாபாரங்களுக்கோ எதுவும் குறை வந்துவிடக் கூடாது என்று ஒப்பாரி வைக்காத குறையாக பிதற்றல்கள்.

இவைகளை எல்லாம் விட்டு கொஞ்சம் தள்ளி வந்தால் சீனாவை நினைத்து வேறு சொல்ல முடியாத கவலை. ஜப்பானின் பொருளாதார முன்னேற்றமும், அதைத் தொடர்ந்து ஜப்பானிய பொருட்களுடன் உலக நாடுகளில் போராட வேண்டிய நிர்பந்தத்திற்க்கு உள்ளான போதும், அவ்வப்போது கொரியாவை நினைத்தும் பல்வேறு சூழல்களில் ஒரே ராஜ தந்திர பினாத்தல்கள். இருக்கிற உபாதைகள் போதாதென்று ஈரானியர்களின் அணுகுண்டை நோக்கிய முன்னேற்றம் அமேரிக்காவிற்கு சொல்லொன்னா துயரத்தை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒருவழியாக பாகிஸ்தானின் அணுகுண்டு ஜனநாயகவாதிகளின் கையில் இருப்பதைவிட காக்கிச்சட்டைக்காரர்களிடம் இருப்பதே மேல் என்ற கொள்கையை செயல்படுத்தி வரும்போது இந்த ஈரானிய தலைவலி தற்போது அமேரிக்காவை தூங்கவிடாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. இது போதாதென்று ரஷ்யாவின் nuclear fuel deal வேறு. ஈரானின் முல்லாக்களை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடும் அதே நேரம் ஈராக்கில் முல்லாக்களை ஆட்சியில் அமர்த்த வேண்டிய சிக்கலில் சிக்கி நிற்கிறது அமேரிக்கா.

இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அமேரிக்காவின் கொஞ்சம் நஞ்சம் சுய சிந்தனைகளையும் மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டு தனது எல்லா சுமைகளையும் அமேரிக்காவின் தலை மேல் போட்டுவிட்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிற இஸ்ரேல். தொலையட்டும் துக்காடா நாடு, பல காலமாக உலக நாடுகளில் அலைக்கழிக்கப்பட்ட மக்கள் என்று அமேரிக்கா இஸ்ரேலின் அட்டுழியங்களை 'செல்லப் பிள்ளையின்' விளையாட்டுப் போல் சகித்துக் கொள்ளவேண்டிய கவலை வேறு.

மொத்தத்தில் உலகப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தன் தலைமேல் அள்ளிப் போட்டுக் கொண்டு தத்துப் பித்தென்று உலக உருண்டைமேல் களியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிற அமேரிக்கா தற்போது ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அதாவது 'ஜனநாயக வாத்தியார்', உலகத்திற்க்கு ஜனநாயகத்தை கற்றுத் தருவதென்று முடிவெடுத்து முதலாவதாக அரேபிய ஆட்சியாளர்களை எல்லாம் கையில் தடியுடன் மிரட்டி வகுப்பறைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் இப்படி அமேரிக்கா உலக நாடுகளை நினைத்து இத்தனை அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது? சிந்தித்துப் பார்த்தால் அமேரிக்காவின் இந்த உலகளாவிய செயல்கள், அது அரைகுறையாக இருந்தாலும் அல்லது முழுதாக இருந்தாலும், ஒரு தொலைநோக்கு நிறைந்த, மிகவும் புத்திசாலித்தனமான மாபெரும் திட்டத்தின் விளைவுகள் என்பது தெரியவரும்.

கம்யூனசத்தின் வீழ்ச்சியின் போது உருவான 'the new world order' என்ற புதிய உலகை நிர்மானிக்க கூடிய கட்டுமானப் பணிகளை தானாக உருவாக்கி அதற்கான தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. (போட்டி தலைமை எங்கே என்று கேட்கிறீர்களா?) தீவிரவாதத்திற்க்கு எதிரான போராட்டம், ஜனநாயகத்தை திணிக்க வேண்டிய கட்டாயம் என்று பல்வேறு பரினாமங்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் திட்டத்தின் பயணம்தான் இந்த அமேரிக்காவின் உலக அரசியல். தீவிரவாதத்திற்க்கும் ஜனநாயகத்திற்க்கும் எப்படியெல்லாம் அர்த்தங்கள் செய்யமுடியும் என்பதை அமேரிக்காவின் உலக அரசியலைப் பார்க்கும் போதுதான் நமக்கே புரிய வருகிறது.

உலக நாடுகளில் குறிப்பாக தெற்காசியாவும், மத்திய ஆசிய நாடுகளும் பல்லாண்டு காலமாக தீவிரவாத கூட்டங்களால் தினம் தினம் பொதுமக்கள் கொன்று குவிக்கப் பட்டபோது உல்லாசமாக உறங்கிக் கொண்டிருந்த அமேரிக்கா தனது பொருளாதார நலன்களுக்கு பிரச்சனை என்று வந்தவுடன் தீவிரவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு உலக நாடுகளை எல்லாம் தன் பின்னால் வரவேண்டுமென்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. தனது இரும்புக்கர ஆக்கிரமிப்பால் ஈராக்கை வைத்துக் கொண்டு அதில் நடத்திய கண்ணாமூச்சி தேர்தலை மார்தட்டி பெரும் சாதனையாக முழங்கும் அமேரிக்கா, உலகில் பல நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட எத்தனையோ அரசுகளை அந்நாட்டு இராணுவ உதவியுடன் வீழ்த்திய வரலாறுகளையும் மறந்துவிடமுடியாது.

லெபனாலில் மக்கள் சுதந்திரமாக ஒட்டு போடவேண்டும், அது சிரியா வெளியேறினால்தான் சாத்தியம், மத்திய ஆசியாவில் ஜனநாயகத்தை மலர வைக்காமல் ஓய்வதில்லை என்று வாய் கிழிய கத்தும் வெள்ளை மாளிகை 'உலக விரும்பிகள்' பொலிவியாலில் நடக்கும் ஜனநாயகத்திற்க்கு ஆதரவான மக்கள் எழுச்சியைப் பற்றி வாய்மூடி மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சோவியத் வீழ்ச்சியுடன் அணிசேர நாடுகள் இயக்கம் சொல்லாமல் கொல்லாமல் தூக்கி எறியப்பட்டது போல் தற்போது ஐக்கிய நாடுகள் சபையும் அழிந்தொழிய இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னிருந்த அரசியல் சூழ்நிலை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளும் ஏறக்குறைய மற்ற நாடுகளை சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய அரசியல் பொருளாதார சூழலில் இருப்பதை மறுக்க முடியாது.

யாருக்கும் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்ற தற்போதைய உலகச் சூழல் இந்த உலகின் எதிர்கால பயணத்தை இரண்டுவிதாமான பாதைகளில் தொடருவதற்கான ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒன்று ஆக்கப் பூர்வமானது, இன்னொன்று அழிவை நோக்கியது. இரண்டிற்கும் தலைமை தாங்கிச் செல்ல தகுதி படைத்ததாக தற்போது அமேரிக்கா இருந்தாலும், அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையைத்தான் அமேரிக்கா விரும்புகிறது, காரணம், அமேரிக்காவின் உலகப் பார்வையும், உலகின் பெரும்பாலான நாடுகளின் உலகப் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. Unilateral and multilateral என்ற இரண்டு விதமான சிந்தனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைத்தான் அவ்வப்போது அமேரிக்காவின் வலதுசாரி சிந்தனையாளர்கள் வேறொரு பெயரில் 'clash of civilization' என்று உலகை ஏய்க்கும் வேலையயை செய்து வருகிறார்கள். அப்படி செய்வதிலும் சொல்வதிலும் மூலமாக அமேரிக்காவிற்கு அதனுடைய 'new world order' கட்டமைப்புக்கு வலு சேர்க்க முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்த அமேரிக்க சிந்தனையை ஏற்க மறுப்பதும் கீழை நாடுகளை, குறிப்பாக முஸ்லீம் நாடுகளை பிரித்துப் பார்க்கும் சிந்தனையை ஏற்க மறுக்கின்றன. காரணம் கீழை நாடுகளின் கலாச்சாரமும் சிந்தனை பரிமாற்றங்களும் ஐரோப்பாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தவை மேலும் அவைகள் இன்னும் பலன் தரக்கூடியவை என்பதில் அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கைகள் வைத்துள்ளதுதான். ஆனால் அமேரிக்காவின் சிந்தனையை, குறிப்பாக தற்போது ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளை முற்றிலுமாக கவர்ந்திருக்கக் கூடிய ஜையனோசியக் கொள்கைகளைத் தழுவிய 'new world order' தற்போது 'clash of civilization' என்ற பெயரில் தனது திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா உலக பேரரசுகளும் உயர்ந்ததும் வீழ்ந்ததும் இப்படிப்பட்ட மாறுபட்ட சிந்தனைகளின் வளர்ச்சியை பொருத்தே வந்திருக்கின்றன. அதே வேளை, இந்த சிந்தனைகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை கொடுக்கும் வரை அந்த சிந்தனைகளின் எதிர்மறை விளைவுகள் அதன் பின் விளைவுகள் ஒரு பெரும் பிரச்சனையாகத் தெரியாது. ஆனால், பொருளாதார பின்னடைவுகள் உருவாக ஆரம்பித்ததும், அதன் எதிர்மறை விளைவுகள் வெளிப்படையாக தெரியவரும். எதிர்மறை விளைவுகள் முதலில் பொருளாதார வீழ்ச்சி¨யையும் அதைத் தொடர்ந்து ஆதரவு அளித்த கூட்டணிகள் உடைவதின் மூலம் உணரமுடியும். ஆனால், இந்த காலம் கடந்த விழிப்பால் உடனடியாக அந்த சிதைவுகளிலிருந்து மீள்வது என்பது கடினமான ஒன்று மட்டுமல்ல பல சமயங்களில் அது அழிவில் சென்று முடிகிறது. இந்த சூழலில் உலகப் பேரரசுகள் எதைக் கொள்கையாகக் கொண்டு தனது சிந்தனை முறையை அமைத்துக் கொண்டதொ அந்த கொள்கையை உதறி எறிய வேண்டிய நிர்பந்தததிற்கு உள்ளாகின்றன. சிந்தனைகளை உதறி எறிவதென்பது சாதாரண விஷயமல்ல, அப்படி அந்த கொள்கைகளை விட்டு வெளியேறும் போது, அதற்கொரு விலையையும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சோவியத் பேரரசின் வீழ்ச்சியும் அதன் கீழ் இருந்த நாடுகள் சிதறுண்டு போனதையும் எடுத்துக் கொள்ளலாம். அமேரிக்காவும் இப்படி ஒரு சூழலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதா?

(தொடரும்)