Monday, June 27, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 3

யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாம் - நெருப்புக் கிடங்கு

அசத்தியம் எப்போதெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறதோ அப்போதெல்லாம் சத்தியத்தை நெருப்பிலிட்டு கொளுத்த தயங்கியதில்லை. ஆனால் சத்தியம் அதிகாரத்தில் இருக்கும்போது அசத்தியத்தில் இருப்பவர்களுக்கு தங்களை அந்த தவறான கொள்கைகளிலிர்ந்து விடுவித்துக் கொள்ள எப்போதுமே சந்தர்ப்பம் கொடுக்கத் தயங்கியதில்லை. இதுதான் சத்தியத்தின் பலமும் கருணையும். அசத்தியத்தின் பலம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதுதான்.

ஆப்ரஹாம் கொண்டுவந்த அல்லது சொன்ன அந்த சத்தியம் இறை நம்பிக்கை சம்பந்தப்பட்ட ஒரு ஆழ்ந்த கருத்து. அந்தக் கருத்துக்கள், கொள்கைகள் அசத்தியத்தின் அதிகாரத் தூண்களை அகற்ற வல்லது என்பதை புரிந்த அசத்திய மேதாவிகள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆப்ரஹாமை இல்லாமல் செய்து சத்தியத்தை அழித்துவிட முயற்சித்தனர்.

இந்த மன நிலை இன்றும்கூட அதிகமாக விரவிக்கிடப்பதை எல்லா நிலையிலும் காணலாம். ஆப்ரஹாம் சொன்ன மார்க்கம் ஓரிறை மார்க்கம். இறைவன் தான் படைத்த மக்கள் நல்வழியில் சென்று மறைவதையே விரும்புகிறான். அதை தான் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு இறைத்தூதர் மூலமாகவும் உலக மக்களுக்கு வழிகாட்டியாக அனுப்பிவைத்தான். மனிதர்களுக்கு வழிகாட்டியாக அப்போதிருந்த ஆப்ரஹாம், யூதகுலத்தின் பிதா, அரேபியர்களின் தந்தை, நெருப்பிலிட்டு அழிக்க அந்நகரத்துக் கூட்டம் தயாரானது.

நகரத்தின் பொது மைதானத்தில் மரக்கட்டைகளும், பட்டைகளும், ஓலைகளுமாக கொண்டுவந்து குவிக்கப்பட்டன. ஒரு சிறிய மலைக்குன்றைப் போல் அந்தக் குவியல்கள் பெருகிவந்தது. நகரத்தில் வசிக்கும் ஆண், பெண் மற்றும் சிறுவர்கள் வரை யார் யாருக்கெல்லாம் ஆப்ரஹாமின் மீது வெறுப்பு இருந்ததோ அல்லது யார் யாரெல்லாம் நகரத்தலைவர்களின் விசுவாசிகளாக இருந்தார்களோ அவர்கள் எல்லோரும் ஆப்ரஹாமை நெருப்பிலிட்டு கொளுத்தும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள்.

சத்தியத்தை எடுத்தியம்பும் மனிதனை முதலில் தீர்த்துக் கட்டுவது. பிறகு அந்த மனிதர் கொண்டுவந்த அந்த சத்தியக் கொள்கைகளை அழிப்பது. இதுதான் காலம் காலமாக சத்தியத்தின் எதிரிகள் செயல்படுத்திவரும் கோட்பாடுகள். அப்படி அழிக்க முடியாவிட்டால் அந்தக் கொள்கைகளை சின்னபின்னப் படுத்தி சிதைத்துவிடுவது. அதுவும் இயலாத பட்சத்தில் அந்தக் கொள்கைகள் இந்தக் காலத்திற்கு ஒவ்வாது என்று தட்டிக் கழிப்பது. அதுவும் நடக்காத பட்சத்தில் அந்தக் கொள்கைகளை சொன்ன அல்லது கொண்டுவந்த மனிதரின் தனிமனித வாழ்க்கையை தேடித் துருவி அதில் ஏதேனும் தவறுகளோ அல்லது முரண்பாடுகளோ இருந்தால் அதைக் காரணமாகக் காட்டி அந்தக் கொளைகளை ஒழித்துக் கட்டுவது அல்லது எதிர்ப்பது. அதுவும் முடியவில்லை என்றால் இப்படிப்பட்ட சத்தியக் கொள்கைகளும் கருத்துக்களும் எப்படி வெளியானது என்று ஆராட்சியில் ஈடுபட்டு தானும் வழிமாறி அடுத்தவர்களையும் குழப்பி எப்பாடு பட்டாவது அந்தக் கொள்கைகளை அழித்துவிடுவது என்று பலவிதாமான வன்முறைகள் சத்தியத்திற்கு எதிராக நடத்தப்படுகின்றன. அதில் முதலாவதான சத்தியத்தைச் சொன்னவரை கொன்றுவிடுவது, அதிலும் பொது இடத்தில் நெருப்பிலிட்டு கொலை செய்தால் நாளை வேறு யாரும் 'ஓர் இறைவனை மட்டும் வணங்குங்கள், சிலைகளை வணங்காதீர்கள்' என்று சொல்ல துணிவு வராது என்ற காரணத்திற்காக ஆப்ரஹாமை நெருப்பிலிட்டு கொல்ல மைதானத்திற்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டார்.

பீரங்கி வண்டியைப் போல் மரத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு இழுவண்டி கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. மக்கள் கூட்டம் திரண்டு நின்று ரசித்துக் கொண்டிருந்தது. இழுவண்டியின் மேல் அம்புபோல் அல்லது கிட்டத்தட்ட ஒரு ஏவுகணை போல் பொருத்தப்பட்ட மரக்கட்டையை வெளியில் எடுத்து அதில் ஆப்ரஹாமை படுக்கவைத்து இரும்பு கம்பிகளால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்டார். மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்ய தேரவும் அவரது உறவினர்களும் கண்களில் கண்ணீரும் மனம் முழுக்க கலக்கமாக தனது மைந்தனின் மரணத்தைப் பார்க்க சகிக்காமல் நின்று கொண்டிருந்தனர்.

நகரத்துத் தலைவர்களின் இறுமாந்த பார்வை மக்கள் கூட்டத்தைப் பார்த்து 'இனி யாராவது இப்படிப்பட்ட பிரச்சாரம் செய்ய எத்தனித்தால் இதுதான் தண்டனை, பார்த்துக் கொள்ளுங்கள்' என்பது போல் சுற்றி வந்தது.

நெருப்புக் கிடங்கின் சுவாலைகள் வானத்தைத் தொடும் அளவிற்கு உயரமாக எரிந்துக் கொண்டிருந்தன. தீச்சுவாலைகளின் அனல் கக்கும் வெப்பம் அருகிலிருந்த மனிதக் கூட்டங்களை எல்லாம் எரித்துவிடுமோ எனும் அளவிற்கு தகித்துக் கொண்டிருந்தது.

இழுவண்டியின் மேல் மரக்கட்டையில் இணைத்ட்துக் கட்டப்பட்ட ஆப்ரஹாமின் உடல் மக்களின் பார்வைக்கு நெருப்புக் கிடங்கைச் சுற்றி இழுத்துவரப்பட்டது.

'ஓ ஆப்ரஹமே! இன்னும் உங்களுக்கு சந்தர்ப்பம் இருக்கிறது.. நகரத்து தலைவர்கள் சொல்வதைக் கேட்டு பயந்து நடந்துக் கொள்ளுங்கள், நீங்கள் உயிர் பிழைக்கலாம்' என்று மக்கள் சத்தமிட்டனர்.

'உங்களுக்கு விரோதமாக மக்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு பயந்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்களது அந்தக் கூற்றானது பயம் ஏற்படுத்துவதற்கு பதிலாக நம்பிக்கையைத்தான் அதிகப்படுத்தியது. மேலும் 'அல்லாஹ்வே எங்களுக்கு போதுமானவன், பாதுகாவலில் அவன் மிக்க நல்லவன்'. என்றும் கூறினார்கள். அவர்கள் இறைவனின் அருட்கொடையையும், பேரருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களை எந்தத் தீங்கும் அணுகவில்லை' (1)

இரும்புக் கம்பிகளுடன் இணைக்கப்ட்ட ஆப்ரஹாம் அவர்கள் உறுதியாக தனது பதிலை எடுத்து வைத்தார்கள்' அல்லாஹ்வைத்தவிர வேறு கடவுள் இல்லை, அவனே புகழுக்குரியவன், இவ்வுலகங்களின் அதிபதி, அவனுக்கே எல்லா புகழும் தகும், அவனிடமே அதிகாரங்கள் அனைத்தும், அல்லாஹ்விற்கு இணையாளன் யாரும் இல்லை' என்ற அவரது அழுத்தமான பிரார்த்தனை ஆரவாரங்களையும் மிஞ்சி நின்றது.

இழுவண்டி நெருப்புக் கிடங்கை சுற்றிவந்து நின்றது. ஆபரஹாமின் உறவினர்கள் விழிகளை மூடி பார்க்க சகிக்காதவர்களாக குனிந்து கண்ணீரை செறிந்துக் கொண்டிருந்தனர்.

'நெருப்பிலிட்டு கொளுத்துங்கள்' (2) என்ற நகரத்தலைவரின் சத்தம் ஆங்காரமாக ஆணையிட மக்கள் "ஓ...வென்று' சத்தமிட்டு அமைதியாயினர். இழுவண்டியின் பீரங்கி முனை நெருப்புக் கிடங்கை நோக்கி முன்னிறுத்தப்பட தீச்சுவாலைகளின் சத்தத்தைத் தவிர்த்து வேறு எந்த சத்தமும் இல்லாமல் உலகமே ஸ்தம்பித்ததுபோல் கொடூரத்தின் அமைதி எல்லோரையும் மௌனமாக்கியது.

'ஹஸ்புனல்லாஹா வநிஃமல் வக்கீல் (அந்த வல்ல இறைவனே போதுமானவன்) என்ற ஆப்ரஹாமின் குரல் மட்டும் அத்தீச்சுவாலைகளின் சத்தத்தையும் அங்கு கூடியிருந்த கூட்டத்தின் மக்களையும் கடந்து வான வெளிகளை சென்றடைந்ததுபோல் எதிரொலித்தது.

இழுவண்டியிலிருந்து எரியப்பட்ட ஏவுகணைபோல்..... சத்திய மகனின், அல்லாஹ்வின் தோழன் என்று சிறப்புப் பெற்ற அம்மகான் ஆப்ரஹாமின் உடல் வானவெளியில் பயணம் செய்து சரியாக நெருப்புக் கிடங்கின் மத்தியிலே வந்து விழுந்தது.

'(அவர்கள் இப்ராஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே), "நெருப்பே, இப்ராஹீமிற்கு குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு" என்று நாம் கூறினோம் (3) என்ற மகத்துவம் நிறைந்த மாபெரும் இறைவனின் உதவி அங்கே ஆப்ரஹாமிற்கு வந்து சேர்ந்தது.

ஆப்ரஹாமின் 'நான் நம்பும் அந்த இறைவனின் பாதுகாப்பே எனக்கு போதுமானது' என்ற உறுதி நெருப்புக் கிடங்கின் தீச்சுவாலைகளிலிருந்து அவரைக் காப்பாற்றியாது.

இனி எரிப்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலைக்கு அந்நகரத்தில் எரிபொருள்கள் எல்லாம் காலியாகிப் போயின. ஆப்ரஹாம் மட்டும் எந்தவித தீங்கும் இல்லாமல் அவரை அந்த நெருப்பு ஒன்றும் செய்ய இயலாமல் தானே எரிந்து, தானே சாம்பலாகிப்போனது.

கூடியிருந்தக் கூட்டம் வயடைத்து வார்த்தகளை இழந்ததுமல்லாமல் சத்தியத்தின் பலத்தில், உண்மையின் அழியா நிலையைப் பார்த்து தங்களையும் இழந்து நின்றது. அவமானத்தில் வெட்கித் தலைகுனிந்தது. அசத்தியம் தற்காலிகமாக அந்த இடத்தைவிட்டு எப்போதோ மறைந்து போயிருந்தது.

அவர்கள் ஆப்ரஹாமிற்கு சதி செய்ய நாடினார்கள். நாம் அவர்களையே நஷ்டமடைந்தவர்களாக செய்துவிட்டோம் (4)

அவமானத்தில் மக்கள் எல்லோரும் தலைகுனிந்து நிற்க, ஆப்ரஹாம் இறைவனின் பேரருளுடன் நெருப்புக் கிடங்கைவிட்டு எழுந்து நடந்து வெளிவந்தார். அவரின் உறுதி இன்னும் அதிகமாகியது. அவர் மூலமாக இறைவன் அந்த மக்களுக்கு இன்னுமொரு அதியசத்தை நிகழ்த்தி மக்களை நேர்வழிக்கு வருமாறு இறைவன் மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தை அளித்தான்.

ஆப்ரஹாமும் நம்ரூதும்

ஆப்ரஹாமின் இந்த அதிசயம் நிறைந்த நிகழ்ச்சி பாபிலோனா தேசமெங்கும் காட்டுத்தீப்போல் பரவ பாபிலோன தேசத்தின் அரசன் நம்ரூத் குழப்பத்தில் கொதித்தெழுந்தான்.

என்னைவிட சக்தி நிறைந்த ஒன்று இந்த உலகில் உள்ளதா என்ற அவனது சீற்றம் ஆப்ரஹாமின் தனது ஏக இறைவனின் பிரச்சாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவியாக அமைந்தது.

அரசன் நம்ரூதுடனான ஆப்ரஹாமின் சந்திப்பு தயாரானது. அரசவைக் கூட்டமும் அமைச்சர்கள் பெருமக்களும் இன்னும் அத்தேசத்தின் முக்கிய பிரமுகர்களுமாக அந்த நாள் அரசவையின் வைபோக நாளைப்போல் விவாதத்திற்கு தயாரானது.

நம்ரூதுடனான விவாதம் ஆரம்பித்தது. ஆப்ரஹாமின் கேள்விகளுக்கு நம்ரூத் பதிலளிக்கத் தொடங்கினான். விவாதம் சிலைகளில் தொடங்கி, தனி மனித சக்திகளிலிருந்து அதிகாரம் வரை சென்று முடிவாக நம்ரூத் தன்னைவிட சக்தி நிறைந்தது இந்த உலகில் கிடையாது என்று கர்ச்சித்தான். ஆட்சியும் அதிகாரமும் கொடுத்த இறைவனை புறக்கணித்து தானே சிறந்தவன், உயர்ந்தவன் என்ற நம்ரூதின் வாதம் அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருந்ததே தவிர்த்து, தான் நிலையற்றவன், மரணம் தனக்கும் உண்டு என்பதை முற்றிலும் மறந்ததாகவே இருந்தது.

'எவன் உயிர் கொடுக்கவும், மரணத்தை அளிக்கவும் செய்கிறானோ அவனே என்னுடைய இரட்சகன் (இறைவன்)' (5) என்று ஆப்ரஹாம் சொல்ல நம்ரூத் எக்காளமிட்டு சிரித்தவாறு 'நானும் உயிர்ப்பிக்கச் செய்வேன், மரணிக்கவும் வைப்பேன்' என்று சத்தமிட்டான் (6).

அத்தோடு நில்லாமல், 'யாரங்கே' என்று சத்தமிட்டு அழைக்க அரசவைக் காவலர்கள் வந்து நின்றார்கள். 'இரண்டு மனிதர்களை இங்கே அழைத்து வாருங்கள்' என்று நம்ரூத் கட்டளையிட.. இரண்டு அப்பாவி மனிதர்களை காவலர்கள் அரசவை மண்டபத்தின் நடுக்கூடத்திற்கு இழுத்து வந்தார்கள்.

'இதில் ஒரு மனிதனின் கழுத்தைச் சீவி கொல்லுங்கள்' என்ற நம்ரூதின் அகங்கார சத்தம் ஒரு அப்பாவி மனிதனின் உயிரைக் குடித்தது. 'இங்கே நிற்கும் அந்த இன்னொரு மனிதனை திருப்பி அனுப்பி விடுங்கள்' என்று கத்திய குரூரத்தின் உருவமான நம்ரூத் ஆப்ரஹாமின் பக்கம் திரும்பி, பார்தீரா.. நான் தான் உன் இறைவன், உனது இரட்சகன்.. நான் மரணத்தையும் கொடுப்பேன், உயிரையும் கொடுப்பேன்' என்று அறிவிற்கு சம்பந்தமில்லாத கொடுங்கோலனாக வாதம் செய்தான்.

அமைதியாக நம்ரூதைப் பார்த்த ஆப்ரஹாம்..'அப்படியென்றால் 'நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்கிலிருந்து (உதிக்கச் செய்து) கொண்டு வருகிறான். அதை நீ மேற்கிலிருந்து கொண்டுவா' என்றார் (7)

ஏக இறைவனை நிராகரித்த நம்ரூத் திகைப்பில் வாயடைத்துப் போய் நின்றான்.

(தொடரும்)

1. திருக் குரான் (3:173 -174)

2. திருக் குரான் (21:68)

3. திருக் குரான் (21:69 - 70)

4. திருக் குரான் (21:70)

5. திருக் குரான் (2:258)

6. திருக் குரான் (2:258)

7. திருக் குரான் (2:258)

Tuesday, June 21, 2005

அத்வானியின் அக்கினி பிரவேசம்

அதிகாரம் இல்லாத அரசியல்வாதிக்கு அக்கம் பக்கம் எல்லாம் இருட்டாகத்தான் தெரியும் என்பதற்கிணங்க இன்றைய எதிர்க் கட்சியான பா.ஜா.கா. வின் தலைவர்கள் எல்லாம் இருட்டில் யார் மீது கரியை பூசுகிறோம் என்று தெரியாமல் ஒருவரை மாற்றி ஒருவர் அவர்களின் மேலேயே பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

The Hawk என்று ஆங்கிலத்தில் பெருமையுடன் அழைக்கப்படும் பா.ஜா.கா.வின் தலைவர் அத்வானி தற்போது ஒரு அக்கினி பிரவேசம் செய்து கொண்டிருக்கிறார். சீதையின் மேல் பிறர் கலங்கம் சொன்ன போது ராமன் தன் மனைவியை அக்கினியில் குளித்து வர அனுமதித்ததுபோல் தற்போது அத்வானி அவர்கள் ஜின்னாவை பற்றி பேசியதற்காக அக்கினி பிரவேசம் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அத்வானி ஓர் ராம பக்தர் அல்லவா? ராம ராஜ்யத்தை நிறுவத் துடிக்கும் அவரின் வாழ்க்கையில் ராமருக்கு நேர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்.

செக்குலரிசம் என்றாலே ஒரு அருவருக்கத்தக்க வார்த்தை என்று காங்கிரசிலிருந்து கம்யூனிஸ்ட்கள் வரை செக்குலரிசம் பேசிய எல்லோரையும் திட்டித் தீர்த்து வைத்த இந்த பரிவாரக் கும்பல்கள் இப்போது திடீரென்று செக்குலரிசம் என்றால் ஏதோ ஒரு புனிதமிக்க வார்த்தையைப் போன்று அதை எப்படி அத்வானி 'ஜின்னாவை ஒரு செக்குலரிஸ்ட்' என்று அழைக்கலாம் என்று பிடி பிடி என்று அத்வானியை நிம்மதியாக தூங்கவிடாமல் செய்துவருகிறார்கள்.

உண்மையிலேயே அத்வானி ஜின்னாவைப் பற்றி சிறப்பாக பேசிய காரணத்தால் இந்த அக்கினி பிரவேசம் செய்து தன்னை ஒரு இந்துத்துவ தலைவர்தான், தான் அப்படி பேசியது தவறுதான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா அல்லது தனது அரசியல் வாழ்க்கையில் தான் 'நம்பர் இரண்டு' என்ற அந்த பிரமையை களைக்க வேண்டி பாகிஸ்தான் விஜயத்தில் ஜின்னா பற்றிய பேசி அதை ஒரு சந்தர்ப்பமாக வைத்து அக்கினி பிரவேசம் செய்தாரா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அத்வானி அவர்கள் இரண்டு அக்கினிபிரவேசங்களை செய்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

தற்போதைய அரசியல் சூழ்நிலையும் இன்னும் நான்கு வருடத்திற்கு பிறகு அமையப்போகிற அரசியல் எதிர்பார்ப்பையும் வைத்து பார்க்கும்போது அத்வானி அவர்கள் தன்னைச் சுற்றி ஒரு புதிய அரசியல் வியூகத்தை அமைக்க வேண்டியதுள்ளதை புரிந்துக் கொள்ள முடியும். சில நேரங்களில் அரசியல் விளையாட்டுக்கள் புரியாததாக தோன்றலாம் அல்லது புரியாத விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த விளையாட்டைத் தொடங்கிய அந்த அரசியல்வாதிக்கு அதிலும் அத்வானி போன்ற பழுத்த ஒரு ராஜ தந்திரிக்கு நன்றாகவே புரியும், புரிந்துதான் இந்த விளையாட்டைத் தொடங்கியுள்ளார்.

பிரதமர் அத்வானி

அத்வானியின் உழைப்பில் யார் யாரோ அரசியல் செல்வாக்கை சுவைக்கும்போது (வாஜ்பேய் அவர்களையும் சேர்த்துதான்) இன்றைய பா.ஜா.காவின் உயற்விற்கு பெரிதும் காரணமாக இருந்த அத்வானி பிரதமராக வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு? அவர் நினைத்ததில் தவறில்லை. ஆனால் தற்போதைய இந்திய அரசியல் அதவானியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம். நான்கு வருடம் கழித்து இருக்கும் இந்திய அரசியலில் ராமரை மட்டும் நம்பி ஓட்டு வாங்குவதென்பது நடக்கக் கூடிய காரியம் இல்லை. ராமர் என்றால் யார் என்று இளைஞர் பட்டாள ஓட்டர்கள் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு பாப் கலாச்சாரமும் மேலைநாட்டு 'மாடர்ன் வாழ்க்கையும் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது'. அத்வானி அவர்கள் எல்லா தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மாடரேட் அரசியல்வாதியாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார். இதை அவர் இப்போது செய்யாவிட்டால் இனி எப்போதும் செய்ய முடியாது. தனது அரசியல் பாதையில் முக்கியமான திருப்பத்தில் நின்றுக் கொண்டிருக்கும் அத்வானியின் அரசியல் வியூகம் ஆச்சர்ய தர்மேந்திரா, அசோக் சிங்கால் மற்றும் தொகாடிய போன்றவர்களுக்கு வேண்டுமானல் பிடிக்காமல் இருக்கலாம்.

சரஸ்பூர் ராமர் கோவிலின் சுவாமி அகிலேஷ்தாஸ்ஜி வாக்கு சேகரிக்கப் போனால் எத்தனை ஓட்டுகள் கிடைக்கும் என்று அத்வானிக்கு தெரியும். அதனால்தான் சுவாமி அகிலேஷ்தாஸ்ஜி அத்வானியை ஒரு 'விலைமாதை விட கேவலமானவர்' (1) என்றும் பேசினாலும் அத்வானி கண்டு கொள்ளமல் இருக்கிறார். இந்த விலைமாது உவமையை துவங்கி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் அவர்கள்தான். (பா.ஜா.கா.வின் மூக்கணாங்கயிறு கையைவிட்டு போய்விடுமோ என்ற கவலை அவருக்கு).

'அடுத்தமுறை ரத யாத்திரையை அத்வானி அவர்கள் இஸ்லாமாபத்திலிருந்து தொடங்கட்டும்' (2) என்று கூக்குரலிட்ட ஆச்சார்ய தர்மேந்திராவின் அரசியல் செல்வாக்கும் சொல்வாக்கும் அத்வானியை பிரதமராக்கிவிடமுடியுமா?

இந்துத்துவ பரிவாரத்தின் பலமே ஆளாளுக்கு ஒன்று பேசி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வதே. அதில் அவர்கள் கைவந்தவர்கள். அதைப் போன்றதொரு குழப்பத்தை இப்போது தனது பரிவாரக் குடும்பங்களில் உருவாக்கி தன்னை ஒரு தன்னிகரற்ற தலைவராக காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார் அத்வானி. வாஜ்பெய் அவர்களைப்போல் நேரத்திற்கு ஒன்று பேசிவிட்டு அதை தானே விழுங்கும் கலையும் வேண்டும், அதே நேரம் தான் சர்தார் பட்டேலைப் போல் ஒரு இரும்பு மனிதர் என்ற பெயரும் வேண்டும் என்று தான் வகுத்துள்ள இந்த அரசியல் வியூகத்தில் முதலில் தனது வீட்டை சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் அத்வானி.

அவர் அதில் வெற்றி பெறுவாரா அல்லது தான் விதைத்த விதையின் விளையே வலையாக மாறி அதில் தன் நீண்டகால அரசியல் கனவான பிரதமர் பதவியை இழக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் மக்களையும் நாட்டைப் பற்றியும் யாருக்கும் கவலையில்லை.


References:

1. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1148217,curpg-2.cms

2. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1148217,curpg-1.cms

Monday, June 20, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 2

யூத குலத்தின் தொடக்கம் - சிலை தகர்ப்பு

சூரியன் வானத்தை தழுவி வேகு நேரமாகிவிட்டது என்பதை உணர்த்தும் வண்ணமாக உச்சிவானத்தின் மேல் நின்று உலகை எரித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

நகரம் நடு இரவைப் போல் வெறிச்சோடிக் கிடந்தது. மக்கள் நேற்றிரவு நடந்து முடிந்த திருவிழாவில் ஆடிப்பாடிக் களைத்தவர்களாக இன்னும் உறக்கத்தில் இருந்தார்கள். ஆங்காங்கே சில வீட்டு மிருகங்கள் கேட்பாரற்று தெருக்களில் உலாவிக் கொண்டிருக்க திடீரென 'அய்யோ இந்த அநியாயத்தை கேட்க யாருமில்லையா' என்ற ஆங்காரமான சத்தம் நகரத்தின் அமைதியைக் குலைத்தது.

தெருக்களில் அலறியவாறு ஒடிய அந்த நடுத்தரவயது மனிதனின் சத்தம் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆண் பெண் குழந்தைகள் எல்லோரையும் ஏதோ இடி விழுந்ததுபோல் எழுப்பிவிட்டது. அந்த மனிதன் ஓடிய தெருக்களில் எல்லாம் மனிதர்கள் வெகுவேகமாக விழுந்தடித்து வெளியேறி வந்தனர். எதிரிகள் படை எடுத்து வந்து விட்டனரோ என்று மக்கள் இங்கும் அங்கும் அஞ்சிக் கொண்டிருக்க 'கோவிலில் இருந்த நமது கடவுள்கள் எல்லோரையும் அடித்து நொருக்கிவிட்டார்கள். எல்லா சிலைகளும் உடைந்து கிடக்கிறது... எல்லோரும் ஓடி வாருங்கள்' என்று அழைத்த சத்தம் நகரத்தின் எல்லா திக்கிலும் எதிரொலிக்க, மக்கள் பீதியடைந்தவர்களாக கோவிலை நோக்கி ஓடினார்கள்.

மக்கள் கலங்கியவர்களாக இது என்ன சோதனை. கடவுள்களை யார் உடைத்தது. இப்படியும் நடக்குமா? என்று ஒன்றும் புரியாமல் கோவிலை நோக்கி செல்ல மக்கள் கூட்டம் கடலலை போல் கோவிலைச் சுற்றி வட்டமிட்டது.

நகரத்தின் தலைவர்களும் புரோகிதர்களும் ஒன்றும் புரியாமல் கோபத்துடனும், தெய்வ குற்றம் நிகழ்ந்துவிட்டதே, இது என்ன சோதனையோ என்று கலங்கி ஒருவரோடு ஒருவர் பேச நா இல்லாமல் இங்கும் அங்கும் பார்த்தவாறு உடைந்து கிடக்கும் சிலைகளையும் அந்த கடவுள்களுக்கு இரவிலே படைக்கப்பட்ட சிதறிக் கிடக்கும் உணவுகளையும் பார்த்தாவாறு வேர்த்து விறுவிறுத்து நின்று கொண்டிருந்தார்கள்.

கண்களில் நீர் பெருக உடைந்து கிடக்கும் ஒவ்வொரு கடவுள் சிலைகளையும் பார்த்தவாறு உள்ளே நடந்து வந்து கொண்டிருந்த முதியவர், நகரத்தலைவர் உடைந்த சிலைகளுக்கு மத்தியிலே ஒரு பெரிய சிலை மட்டும் எந்தவித அப்பழுக்கும் இல்லாமல் அமைதியாக சுத்தமாக இருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்து போய் நின்றார். அவரது திகைப்புக்கு காரணம் அந்த சிலை உடையாமல் இருந்ததை நினைத்து அல்ல, மாறாக அந்த சிலையின் கை ஒன்றில் ஒரு கோடாலி தொங்கிக் கொண்டிருந்ததே.

'இது... இது ... என்ன விந்தை.. பார்த்தீர்களா' என்றவாறு மற்றவர்களை அழைக்க மற்ற தலைவர்களும் புரோகிதர்களும் கையில் கோடாலியுடன் வீற்றிருக்கும் சிலையைப் பார்த்து ஒரு நிமிடம் வாயடைத்து போய் நின்றார்கள். இந்த பெரிய கடவுள் சிறிய கடவுள்களை (சிலைகளை) உடைத்துவிட்டதோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு அந்த பெரிய சிலை வீரமான தோற்றத்துடன் புதிய அவதாரம் எடுத்து இருப்பதைப் பார்த்து பதைத்துப் போய் நின்றார்கள்.

'தலைவரே.. இது என்ன விந்தை.. இங்கே என்ன நடக்கிறது' என்றவாறு நெருங்கிய ஒருவர்.. கண்ணீர் மல்க அப்பெரிய சிலையின் காலடியில் மண்டியிட்டவாறு கைகட்டி அழ ஆரம்பித்தார்.

'இல்லை... இது ஏதோ ஒரு மனித செயல்தான்.. யாரோ இப்படி செய்திருக்கிறார்கள்.. யாரங்கே' என்று தலைவர் சத்தமிட அவரது ஏவாலள்கள் வேகமாக அவர் முன்னால் வந்து நின்றார்கள். இருநூறு வயதிற்கு மேல் இருந்த அத்தலைவரின் கர்ச்சனைக் குரல் அங்கிருந்த எல்லோரையும் அமைதியாகச் செய்தது.

'நமது கடவுள்களுக்கு இப்படி ஒரு பாதகச் செயலை யார் செய்தது? அப்படி செய்தவர் நிச்சயம் ஒரு அநியாயக்காரராகத்தான் இருக்கமுடியும் (1)' கூட்டமாக சத்தமிட்டார்கள்.

'அய்யா... இது நிச்சயமாக.. அந்த இளைஞனின் செயல்தான்.. ஆப்ரஹாமின் செயல்தான்... அவர்தான் எப்போது பார்த்தாலும் நமது கடவுள்களுக்கு எதிராக பேசிக்கொண்டு திரிந்தார். அதுமட்டுமல்ல.. இச்சிலைகளை உடைக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தார்'(2) என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல, எல்லோரும் தேரா இருக்கும் பக்கம் பார்த்தார்கள்.

'ஆம்.. அவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும்' என்று இன்னொருவரும் அதை ஆமோதித்தார்.

'ஆனாலும் நமது கடவுள்களை இப்படி பாதுகாப்பு இல்லாமல் விட்டு சென்றது நமது தவறுதான்' என்று கூட்டத்தில் இன்னொருவர் சொல்ல.. மக்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்க்கத் தொடங்கினர். கடவுளுக்குப் பாதுகாப்பா.. கடவுளிடம் நாம்தானே தினம் தினம் பாதுகாப்பு கேட்கிறோம், நேற்றிரவு நடந்த திருவிழாவில் கூட புரோகிதர்கள் எவ்வளவு நேரம் கடவுள் வாழிபாடு செய்து இந்நகரமும் மக்களும் சுகமாக வாழ வேண்டும் என்று பிரார்தித்தார்கள், இது என்ன இங்கே கடவுளே இப்படி பாதுகாப்பற்று உடைக்கப்பட்டுள்ளாரே என்று மக்கள் தங்களுக்குள்ளே தர்க்கம் செய்யத் தொடங்கினர்.

'நிறுத்துங்கள் உங்களின் பேச்சை...' தலைவரின் சத்ததில் மக்கள் எல்லோரும் அமைதியாக தலை குனிய நின்றார்கள்.

'கொண்டு வாருங்கள் அந்த ஆப்ரஹாமை. இந்த மக்கள் கூட்டத்தின் முன்னால் நாம் அவரை விசாரிப்போம். இந்த மக்கள் அனைவரும் சாட்சிகளாக இருக்கட்டும்'(3) என்று தலைவர் ஆனையிட நகரத்தின் காவலாளிகள் தலைவரின் முன்னால் மண்டியிட்டு வணங்கியவர்களாய் புறப்பட எத்தனிக்கும்போது

'அதற்கு அவசியமில்லை, நான் இங்குதான் இருக்கிறேன்' என்ற ஆப்ரஹாமின் குரல் வந்த திக்கை நோக்கி மக்களின் பார்வை சென்றது.

இந்த சூழலைத்தான் ஆப்ரஹாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மக்கள் எல்லோரும் ஒன்று கூட்டப்பட வேண்டும், அவர்களின் அறியாமையை அவர்களுக்கு உணர வைக்க வேண்டும். கடவுள் என்று நினைத்து வணங்கிக் கொண்டிருக்கும் இந்த கற்சிலைகள் இந்த மனிதர்களுக்கு நன்மையோ அல்லது தீமையோ செய்ய சக்தியற்றவை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களின் அறிவுப்பாதை திறக்கப்பட வேண்டும். அவர்களின் சிந்தனைகளில் மாற்றம் வர வேண்டும். இப்படிப்பட்ட சிலை வணக்கங்களினால் தான் மக்களின் கடவுள் சிந்தனைகள் அறியாமையில் இருக்கின்றது. இறைவணக்க வழிபாடுகளை பாழ்படுத்திவரும் அடிப்படை அம்சமே இப்படிப்பட்ட சிலை வணக்கங்களால்தான். அதை களைந்தாக வேண்டும் என்ற ஆபரஹாமின் வைராக்கியம் அவரை மக்கள் கூட்டத்தின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.

'ஆப்ரஹாமே...எங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தான? (4) கூட்டம் ஏகோபித்தக் குரலுடன் கேட்டது.

'மக்களே, அந்தப் பெரியதுதான் (கடவுள்) இவ்வாறு செய்தது. நீங்கள் அந்த பெரியதையே கேளுங்கள்' அவர்கள் பேசக்கூடியவர்களாக இருந்தால் அவர்களையே கேளுங்கள்.(5) என்று ஆப்ரஹாம் பதில் சொல்ல கூட்டத்தினரும் தலைவர்களும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மக்களின் முகங்களில் கவலையும் வெட்கமும் மாறி மாறித் தோன்ற அவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. 'நிச்சயமாக நீங்கள்தான் இவைகளை வணங்கி அக்கிரமம் செய்துவிட்டீர்கள் (6). கடவுள் என்றும், சக்தி நிறைந்தது என்றும் இத்தனை நாட்களாக நாம் இவைகளை வணங்கி வந்தது எத்தனை தவறு என்று ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தி பேசிக்கொள்ள கூட்டதில் சலசலப்பு அதிகமாக, தலைவர் சத்தமிட்டு எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி ஆனையிட்டார்.

வெட்கத்தில் தங்களின் முகத்தை தரையில் பார்த்தவர்களாய் நின்று கொண்டிருந்த மற்ற பிரமுகர்கள் சிறிது நேரத்தில் 'ஆப்ரஹாம்... இவைகள் பேசமாட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் (7) அப்படி இருக்கும் போது அவைகளிடம் எப்படி நாங்கள் கேட்கமுடியும் என்று சத்தமிட்டார்கள்

ஆப்ரஹாமுடன் செய்யப்படும் விவாதத்தில் முக்கியமான, சாதகமான ஒரு வாதம் கிடைத்ததுபோல் 'அதுதானே, இது என்ன கேள்வி, அச்சிலைகள் எப்படி பேசும்' என்று மக்களும் தலைவருக்கு அனுசரனையாக பேசி வைத்தனர்.

'(அப்படியானால்), உங்களுக்கு கொஞ்சமும் நன்மை செய்யாத, உங்களுக்கு தீமை செய்யாத இறைவன் அல்லாத ஒன்றை (இந்த சிலைகளை) வணங்குகின்றீர்களா (8) என்று ஆப்ரஹாம் திருப்பிக் கேட்டார்.

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டன சூழலில் நம்பிக்கை சம்பந்தப்பட்ட பிரச்சனையில் ஆப்ரஹாமின் வாதமும் அதில் இருக்கும் உண்மையும் கூட்டத்தை திகைக்க வைத்தது. என்ன பதில் எப்படி சொல்வதென்று தெரியாமல் மக்கள் தலைவர்களையும் புரோகிதர்களையும் பார்க்க அவர்கள் தரையில் தலையை கவிழ்த்தவர்களாக நின்று கொண்டிருந்தனர்.

'ச்சே.. உங்களுக்கும் அல்லாஹ் (இறைவன்) அல்லாத இவைகளும் நாசம்தான். நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா' (9) என்ற ஆப்ரஹாமின் கேள்வி கூடியிருந்த மக்களை திரும்பவும் வாயடைக்கச் செய்தது.

'நீங்கள் உங்களின் கைகளால் உருவாக்கிய (செதுக்கியவைகளை) இந்த சிலைகளையா வணங்குகின்றீர்கள்?' (10) என்ற தொடர் கேள்வியினால் உந்தப்பட்டவர்கள் ஆப்ரஹாமை நோக்கி அவர் பக்கமாக நடக்க ஆரம்பித்தார்கள். கூட்டம் ஆப்ரஹாமின் பக்கம் அவரின் வாதத்தில் உண்மையிருப்பதை உணர்ந்து செல்லத் தொடங்கியது தலைவர்களுக்கும் புரோகிதர்களுக்கும் பீதியை அளித்தது.

'உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான் (11) நீங்களும் நானும் அந்த இறைவனின் படைப்புகள், அப்படியிருக்கும்போது உங்களது கைகளால் நீங்கள் உருவாக்கிய ஒன்றை எவ்வாறு நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள்' என்ற ஆப்ரஹாமின் வார்த்தகள் அங்கிருந்த மக்களின் சிந்தனைகளை தூண்டிவிட அதைப் பார்த்துக் கொண்டிருந்த அச்சமுதாயத்தின் தலைவர்களும் புரோகிதர்களும் அவசர அவசரமாக ஆப்ரஹாமின் அருகில் நெருங்கிய அந்தக் கூட்டத்தின் முன்னால் நுழைந்து கையசைத்து தடுத்தார்கள். மக்கள் கூட்டம் சற்று நிதானித்து தலைவர்களின் அவசர வருகையால் தடுக்கப்பட்டு நின்றார்கள்.

'மக்களே..ஆப்ரஹாம் உங்களிடம் குழப்பத்தை உண்டாக்க நினைக்கிறார். நாம் இத்தனை காலம் சத்தியமென்று நம்பி நமது மூதாதையர்கள் முதல் இன்றுவரை வாழ்ந்து வணங்கி வந்த வாழ்க்கையை குற்றம் என்று சொல்கிறார். இவருக்கென்ன தெரியும்?. நமது பெற்றோர்களும், மூதாதையர்களும் என்ன அறிவற்றவர்களா? நமது காலச்சாரமும், பண்பாடும் தொன்று தொட்டது. இம்மனிதரின் பேச்சைக் கேட்காதீர்கள். தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் தேவையற்ற பேச்சுக்களை பேசிக் கொண்டிருக்கிறார். புரியாத விஷயங்களைச் சொல்லி நம்மை திசை திருப்ப முயற்சிக்கிறார்' என்ற தலவரின் பேச்சு மக்களை ஆப்ரஹாமை விட்டு தள்ளிச் செல்ல வைத்தது.

'(மக்களே) நீங்கள் ஏதும் செய்பவர்களாக இருந்தால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள். (அதன் மூலம்) உங்கள் (வணக்கதிற்குரிய) தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்' (12) தலவர்களின் ஒருமித்த இந்த ஆனை வேகமாக உரைக்கப் பட்டது.

'இவரை நெருப்பிலிட்டு கொளுத்துவதின் மூலம் சிலைகளை உடைத்த தெய்வ குற்றத்திற்கு அது தண்டனையாக இருக்கட்டும்'

எப்போதெல்லாம் அதிகார வர்க்கத்தின் தவறுகள் வெளிக்கொணரப் படுகிறதோ அல்லது பொதுமக்களை சத்தியத்தின் பாதையில் அழைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகாரவர்க்கத்தின் திமிரும், தனது உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குரூரமும் தான் செய்வது தவறுதான் என்றாலும் அதை மறைத்து சூழ்நிலையை தனக்கு சாதாகமாக்க முயற்சிக்கும்.
அதிகாரச் செருக்கு தான் செய்யும் தவறுகளை புரிய வைக்காது. மாறாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உண்மையைச் சொன்னவர்களை அல்லது செய்பவர்களை சமுதாயத்திலிருந்து அப்புறப்படுத்துவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட செயல்கள் அன்றைக்கும் நிகழ்ந்தது, இன்றைக்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் சிந்தனைப் போக்கு கொண்ட தலைவர்களின் இந்த முடிவினால் ஆப்ரஹாமிற்கு வழங்கிய அந்த தீர்ப்பு அங்கே கூடியிருந்த தலைவர்களாலும், புரோகிதர்களாலும், கடைசியாக மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆப்ரஹாமுடனான வாதத்தில் தங்களிடன் நியாயமும் இல்ல, பதில்களும் இல்லை என்றாலும் விட்டுக் கொடுக்க முடியாத சுயநல மற்றும் அதிகார திமிர் சத்தியத்தைப் போதிப்பவனை, உண்மையை சொல்பவனை, பொது நலம் நாடுபவர்களை சமாதிக் கட்டும் முயற்சியில் இறங்கியது.

'இவருக்காக ஒரு கிடங்கை உருவாக்குங்கள். பின்னர் அதில் நெருப்பை உர்வாக்கி அதில் அவரை தூக்கி எறியுங்கள் (13)' என்ற அம்மக்களின் கூக்குரல் நகரின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்தது.

குறிப்பு: யூத குலத்தின் பிதவாகவும், முஸ்லீம்களின் பிதாவகவும் இரு வேறு ஆன்மீக தோற்றத்தின் அடிப்படையான ஆப்ராஹாமின் (இப்ராஹீம் (அலை) அவர்களின் ஆரம்பகால வரலாற்றையும் அதில் அவர் எவ்வாறு, எந்தக் கொள்கைகளுக்காக போராடினார் என்பதை அறிந்துக் கொள்வது அவசியமாகிறது. இதன் மூலம் இஸ்ரேலிய வரலாற்றின் அடிப்படையை சரியாக புரிந்துக் கொள்ள முடியும். இந்த அடிப்படையைப் புரிந்துக் கொள்வது பிற்காலத்தில் இஸ்ரேல் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் தாக்கத்தை சரியாக அறிந்துக் கொள்ள உதவும்.

ஆப்ரஹாமை யூத குலத்தின் பிதாவாக ஆதியாகாமம் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள போதிலும் அவருடைய ஆரம்பகால வரலாற்றைப் பற்றி அதிகமாக அதில் அறியமுடியவதில்லை. ஆனால் அவரின் ஆரம்பகால வரலாற்றை திருக் குரான் ஓரளவு விவரிக்கிறது.


(தொடரும்)

1. திருக் குரான் (21:59)

2. திருக் குரான் (21:60 & 21:57)

3. திருக் குரான் (21:61)

4. திருக் குரான் (21:62)

5. திருக் குரான் (21:63)

6. திருக் குரான் (21:64)

7. திருக் குரான் (21:65)

8. திருக் குரான் (21:66)

9. திருக் குரான் (21:67)

10. திருக் குரான் (37:95)

11. திருக் குரான் (37:96)

12. திருக் குரான் (21:68)

13. திருக் குரான் (37:97)

Monday, June 13, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 1

யூத குலத்தின் தொடக்கம்

ஊரெல்லாம் திருவிழா கோலம். ஆண்களும் பெண்களும் ஆடிப்பாடி கொண்டாட்டமாய் தெருவெங்கும் சுற்றித் திரிந்தார்கள். சிறுவர்கள், மரக்கட்டைகளில் செதுக்கிய பொம்மைகளுக்கு கருப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை என்ற வர்ணங்களை பூசி மெழுகி கைகளில் வைத்துக் கொண்டு ஆடிப்பாடி தெருக்களில் வலம் வந்துக் கொண்டிருந்தார்கள். குடில்களின் வாசலில் வைத்திருந்த பாறைக் கற்களுக்கு அவரவர் விருப்பம்போல் அதற்கு வர்ணங்கள் அடித்து தத்ததமது வழிபாட்டு கடவுள்களை காட்சியாக வைத்து மகிழ்ந்துக் கொண்டிருந்தார்கள். அதைச் சுற்றி பெரியவர்களும், முதியவர்களுமாக நின்று கொண்டு தமது புரதான கலாச்சாரப் பெருமைகளைச் சொல்லியும் அந்த பாறைகளை (கற்களை) அவர்கள் எவ்வாறு எங்கிருந்து கொண்டு வந்தார்கள், அவைகளை எவரெவர் ஆசீர்வதித்தார்கள் என்றெல்லாம் அதன் சரித்திரங்களை இளைஞர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தார்கள்.

தேரா என்ற பெயர் கொண்ட நடுத்தர வயது மனிதர் ஒருவர், மேனியில் சுற்றிய துணியை மண்ணில் விழாதவாறு இடது கையில் பிடித்தவாறு யாரையோ தேடியவராய் நடந்து வந்துக் கொண்டிருந்தார்.

'அதோ அஜர் வந்துக் கொண்டிருக்கிறாரே' என்று ஒரு முதியவர் வந்து கொண்டிருக்கும் தேராவைப் பார்த்துச் சொல்ல தெருவின் மத்தியில் ஒரு பாறையைச் சுற்றி நின்ற அனைவரும் தேராவைப் பார்த்தவாறு மண்டியிட்டு மரியாதைச் செய்தார்கள்.

தேரா அந்த மக்கள் வாழ் பகுதியில் பெரும் மரியாதைக்குரிய புரோகிதர்களில் ஒருவராக இருந்தார். அப்பகுதியில் இருக்கும் கடவுள்கள் அனைவரையும் பிரதிஷ்டை செய்வது முதல் அவ்வப்போது அந்த கடவுள்களுக்கு செய்யக்கூடிய பெரிய விசெஷங்கள் அனைத்தையும் செய்யக்கூடியவர்களில் அவரும் ஒருவர். அவரது பெயர் தேரா என்று இருந்தாலும் அவரை அவர் அதிகம் விரும்பக்கூடிய 'அஜர்' என்னும் கடவுளின் பெயர் கொண்டுதான் அப்பகுதி மக்கள் அழைப்பது வழக்கம். (1)

தேரா, மண்டியிட்டு இருந்த அவர்களின் மரியாதையை கையசைத்து ஏற்றுக் கொண்டவுடன் மண்டியிட்டவர்கள் அனைவரும் எழுந்து அவர் அருகில் சென்று அவரின் கையை ஒருவர் பின் ஒருவராக பிடித்து மணிக்கட்டில் முத்தம் பதித்தார்கள்.

'எங்கே இந்த வழியாக.. திருவிழாக் கூடும் இடத்திற்கு மக்கள் புறப்பட்டுவிட்டார்கள். நீங்கள் யாரையோ தேடுவதைப் போல் தெரிகிறதே' என்று ஒரு பெரியவர் தயங்கி தயங்கி மரியாதையுடன் நிலத்தை நோக்கியவாறு கேட்டார்.

சற்று நேரம் அங்கிருந்தவர்களின் முகங்களை நோக்கிவிட்டு 'எனது மகன் ஆப்ரஹாம் (2) எங்கு சென்றார் என்று தெரியவில்லை அதுதான் தேடிக்கொண்டு வருகிறேன்.' என்று சொல்லிவிட்டு தான் புறப்படுகிறேன் என்று கைகளால் அவர்களுக்கு மரியாதை செய்துவிட்டு நகர்ந்தார்.

'கொஞ்ச நாட்களாகவே அஜரை கவனீத்தீர்களா, மன நிம்மதியில்லாமல் இருக்கிறார்' என்று கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் சொல்ல இன்னொரு இளைஞன் 'ஆம்.. ஆப்ரஹாம்தான் அதற்கு காரணம். நாம் செய்கின்ற கடவுள் சடங்குகள் எதையும் அவர் செய்வதுமில்லை.. அதுமட்டுமல்லாமல்.. நாம் கடவுள் என்று வணங்குகின்ற சிலைகளை அவர் வணங்கவும் மறுக்கிறார்'

இவர்களின் இந்த உரையாடல் பாபிலோனா என்ற இந்தப் பகுதியில் இப்போதெல்லாம் அடிக்கடி பேசப்படுகிற மிகப்பெரும் விஷயம். காரணம் தேராவும் அவர்களது முன்னோர்களும் பாபிலோனா பகுதியில் செல்வாக்கு வாயந்த ஒரு பெரும் குடும்பம். அதுமட்டுமல்லாமல் வழிவழியாக பாதுகாக்கப்பட்டு வருகிற கடவுட் சடங்குகள், புராதான பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் இந்த குடும்பமே பாபிலோனா மக்களுக்கு எடுத்துக்காட்டுகள், மற்றும் வழிகாட்டிகள்.

ஒரு முறை ஆப்ரஹாம் தனது தந்தையைப் பார்த்து.. 'நீங்கள் ஏன் இந்த கற்சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த சிலைகள் எதுவும் உங்களைப் பார்க்கவோ அல்லது நீங்கள் சொல்வதை கேட்கவோ சக்தியற்றவை, எனக்கு இது தொடர்பான சில ஞானம் கிடைத்துள்ளது.. நீங்கள் நான் சொல்வதை கேளுங்கள் தந்தையே' (3) என்று தேரவை அழைக்க அவர் பொல்லாத கோபம் கொண்டு மகனிடம் 'நீ என்னை விட்டு சில காலம் போய்விடு, இல்லையென்றால் நான் உன்னை கல்லால் அடித்துக் கொல்வேன்' (4) என்று சத்தமிட்டார்.

ஆப்ரஹாம் தனது தந்தையிடம் 'கடவுள் உங்களை மன்னிக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். உங்கள் மீது சாந்தியும் சமதானமும் நிலவட்டும்' (5) என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்

இந்த தந்தை மகன் உரையாடல் இப்போதெல்லாம் அதிகமாக கோபத்திலும் மன உளைச்சலிலும் சென்று முடிய இவர்களின் இந்த நிலை பாபிலோனா பகுதியில் எல்லோருக்கும் ஆச்சர்யத்தையும் ஏதோ ஒரு பெரும் பிரச்சனையில் இது சென்று முடியப்போவதாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். அத்தோடு நில்லாமல், தேராவின் பேரப் பிள்ளையான (ஹரனின் மைந்தன்) லூத் (6) ஆப்ரஹாமுடன் சேர்ந்துக் கொள்ளவே தேரவிற்கு சொல்லமுடியாத வேதனை. மகனும் லூத்தும் ஒரு பக்கம், தேராவின் சமூக அந்தஸ்தும், தான் இத்தனை காலமாக மதித்தும் வணங்கியும் வந்த இறைக் கொள்கையும் இன்னொரு பக்கமுமாக பெரும் கவலைக்குள்ளனார்.

ஆப்ரஹாம் தனது தந்தையை மட்டும் மாறச்சொல்லவில்லை. பாபிலோனாவில் வசிக்கும் அத்தனை மக்களையும் அவர்களின் கடவுட்கொள்கையிலிருந்து மாறுமாறு அழைக்கவே தேரவிற்கு தினம் தினம் பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆப்ரஹாம் மக்களிடம் தனது ஞானத்தை எடுத்து வைத்து, கற்சிலைகளை வணங்காதீர்கள் என்ற பிரச்சாரம் பாபிலோனாவில் பெரும் பூகம்பத்தை கிளப்பிவிட இந்த வேலையில்தான் இந்த வருடாந்திர திருவிழாக் காலம் வந்தது. மக்கள் எல்லோரும் ஊருக்கு வெளியில் இருக்கும் திடலில் ஒன்று கூடி பூஜைகளும், பலிகளும், மதுப்பானைகளுமாக இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் கடவுளை வணங்கமுடியுமோ அவ்வாறெல்லாம் வழிபட ஒன்று கூடலானார்கள்.

ஒருவழியாக மகனைத் தேடிப்பிடித்து ஆப்ரஹாம் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தார் தேரா.

அங்கே ஆப்ரஹாமை சூழ்ந்தவாறு மக்கள் கூட்டம் அவரிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள்.

'ஓ மக்களே நீங்கள் எதை வணங்குகிறீர்கள்' - ஆப்ரஹாம்

'நாங்கள் இந்த சிலைகளை பக்தியுடன் வணங்கி வருகிறோம்' என்றனர் மக்கள்.

'அப்படியானல், நீங்கள் அழைக்கும் போது அது உங்களின் வார்த்தைகளை கேட்க சக்தி பெற்றதா? அல்லது அது உங்களுக்கு ஏதேனும் நன்மைகளோ அல்லது தீமைகளோ செய்ய சக்தி பெற்றதா' - ஆப்ரஹாம்

'இல்லை ஆப்ரஹாம். அந்த சிலைகளுக்கு அப்படி எந்த சக்தியும் இல்லை. ஆனால் எங்களின் மூதாதையர்களும் அந்த சிலைகளைத்தானே வணங்கினார்கள்?' மக்கள் பதிலளித்தார்கள்.

'அப்படியா.. தெரிந்துக் கொள்ளுங்கள் நீங்களும் உங்களின் மூதாதையர்களும் எதை வணங்கினீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் வணங்கக் கூடிய இந்த கற்சிலைகள் எனக்கு ஒன்றுமில்லாதவைகள், எதிரிகள் (7)' என்று ஆப்ரஹாம் அம்மக்களின் அறியாமையை விளக்கிக் கொண்டிருந்தார்.

மக்கள் கூட்டம் ஆப்ரஹாமின் கூற்றில் குழப்பமடைந்தவர்களாய் சிலரும், பலர் ஆப்ரஹாமை நிந்தித்தும் கலைந்து சென்றனர்.

தேரா ஆப்ரஹாமின் அருகில் நெருங்கி வரவே. ஆப்ரஹாம் தந்தையில் அருகில் வேகமாக வந்து அவரின் வலது கையை தூக்கி முத்தமிட்டவராய் மரியாதை செலுத்தினார்.

சிறிது நேர அமைதிக்குப் பின் ஆப்ரஹாம் மகனிடம் பேச ஆரம்பித்தார். பேச்சு வழக்கம் போலவே இறை வணக்க கொள்கைக்குள் செல்லவே.. தேரா சற்று நிதானத்துடன்..

'ஆப்ரஹாம்.. வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த திருவிழாவிற்கு நீ வந்து கலந்து கொள்ள வேண்டும்' என்று அழைத்தார்.

ஆப்ரஹாம் சற்று நேரம் அமைதியாய் இருந்துவிட்டு வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்தவாறு,

'தந்தையே.. நான் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன். நீங்கள் சென்று வாருங்கள்' (8) என்று சொல்லியவாறு வேறு பக்கம் பார்வைகளை திருப்பிக் கொண்டார்.

தேரா கனத்த மனதுடன் நடக்கத் தொடங்கினார்.

நகரம் முழுவதும் வெறிச்சோடிப் போனது. அங்கங்கே ஒரு சில மிருகங்கள் மட்டும் உலாவிக் கொண்டிருக்க மக்கள் கூட்டம் முழுவதும் ஊருக்கு வெளியே திருவிழா வைபோகத்தில் இருந்தனர்.

ஆப்ரஹாம்.. கையில் ஒரு கோடலியை எடுத்துக் கொண்டு, நகரத்தின் நடுவில் இருக்கும் பெரிய கோவிலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தார். அவரின் முகத்தில் ஒருவிதமான உற்சாகமும், ஒரு தெளிவான சிந்தனையும் இருக்க அவரின் தோளில் இருந்த கோடாலி நிலவின் வெளிச்சத்தில் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது.

(தொடரும்)

1. தேரா என்பது பைபிள் மூலமாக அறியப்படுகிற பெயர். அஜர் என்பது திருக் குரான் மூலமாக அறியப்படுகிற பெயர். அஜர் எனும் புனைப்பெயர் அவர் அதிகமாக விரும்பும் கடவுளின் பெயரால் அழைக்கப்படுவதாக இப்ன் ஜரீர் எனும் வரலாற்று ஆசிரியரால் அறியப்படுகிறது (Stories of the Prophets authored by Ibn Kathir, Page 125)

2. ஆப்ரஹாம் என்று பைபிளிலும், பழைய ஏற்பாட்டிலும் அழைக்கப்படுபவர், திருக் குரானில் இப்ராஹீம் என்று அழைக்கப்படுகிறார். இவர் நபியாக அங்கீகரிப்பட்டவுடன் நடக்கும் நிகழ்ச்சிகளே இங்கு மேலே சொல்லப்படுபவைகள்.

3. திருக் குரான் (19:41-45)

4 & 5. திருக் குரான் (19:46-48)

6. இறைத்தூதர் லூத் (ஆப்ரஹாமின் சகோதரன் மகன்)

7. திருக் குரான் (26: 69-83)

8. திருக் குரான் (37: 88-89)

Saturday, June 04, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - முன்னுரை

'ராபினை நாங்கள்தான் கொலை செய்தோம்.. இப்போது ஷரோனையும் கொலை செய்வோம்' என்ற வரிகள் இஸ்ரேலில் குடியேறிய (Settlers) கூட்டத்தினர் வசிக்கும் பகுதிகளில் எல்லோரையும் கவர்ந்து கொண்டிருந்தது. (1). இஸ்ரேல் நாட்டினுள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து குடியேறியவர்கள், பாலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் சமதான ஒப்பந்தந்தை எதிர்த்து தங்களது கோபங்களை இவ்வாறு தாம் வாழ்ந்து வரும் பகுதிகளின் சுவர்களில் எழுதி எச்சரிக்கை செய்து வருகின்றனர். ராபினை கொன்றவன் இந்த பகுதியைச் சார்ந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதனால் இந்த யூதர்களின் எச்சரிப்பும் எரிச்சலும்?

இஸ்ரேலிய பத்திரிக்கையாளர் ஒருமுறை இவ்வாறு கூறினார். 'பாலஸ்தீனர்களின் பிரச்சனை இல்லை என்றால், இஸ்ரேல் இந்நேரம் ஒரு சிவில்வாரைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கும்'. ஏன் அந்தப் பத்திரிக்கையாளர் அவ்வாறு கூறினார்?

வாழ்வதற்கு தனக்கென்று ஒரு பூமி வேண்டும், அதுவும் தங்களது இதயங்களில் எந்நேரமும் தகித்துக் கொண்டிருக்கும் ஜெருசெலத்தின் அருகில் வேண்டும் என்று வந்தவர்கள். அதாவது பாலஸ்தீனத்தில் ஒரு கானி இடம் போதும் என்று ஆசைப்பட்டு, திட்டமிட்டு, இனி இந்த கிறிஸ்துவ நாடுகளின் ஆட்சியாளர்களிடம் சித்திரவதைப் படுவதைவிட ஒரு குடிசையிலாவது வாழ்ந்துவிட்டு போகலாம் என்று வந்தேறிய இஸ்ரேலிய மக்கள் தற்போது மண்ணிற்கு சொந்தக்காரர்களான பாலஸ்தீனர்களிடம் ஒட்டும் கூடாது, உறவும் கூடாது என்று சமாதான பேச்சு வார்த்தைக்கு குறுக்கே நிற்பதன் காரணம் என்ன?

இஸ்ரேலியர்கள் எங்கு சென்று வசித்தாலும் பிரச்சனைக்கு உள்ளக்கப்படுகிறார்களா? அல்லது பிரச்சனைகளை உருவாக்குகிறார்களா? வரலாறு என்ன சொல்கிறது?

நான் எழுதப் போவது இந்த உலகின் உன்னத உயற்விற்கும், அதே சமயம் மோசமான வீழ்ச்சிகளுக்கும் காரணமாக அமைந்த யூத சமுதாயத்தின் வரலாறுதான். நான் எழுத இருக்கும் யூத சமுதாயத்தின் வரலாறு அவர்களுடைய வேதமான 'பழைய ஏற்பாடு' அதாவது 'தோரா' என்று அழைக்கபடும் யூதர்களின் வேதத்திலிருந்தும், அடுத்து 'பைபிள்' அதாவது 'இஞ்ஜீல்' என்று அழைக்க்கப்ட்ட வேதத்திலிருந்தும். அது மட்டுமல்லாமல் வேறு பல ஆரய்ச்சி நூல்களிலிருந்தும் இறுதியாக இஸ்லாமிய இறுதி வேதமான 'திருக் குரானிலிருந்தும்' திரட்டப்பட்டவைகள். எத்தனையோ பேர் இந்த வரலாற்றை எழுதியிருக்கிறார்கள், அவர்களில் கடைவரிசையில் நிற்கக் கூடியவனாகிய நான் இந்த வரலாற்றை எஞ்சியிருக்கக் கூடிய வேத புத்தகங்களின் வழியாக என்னால் இயன்ற அளவிற்கு தொகுத்து எனது பார்வைகளுடன் வழங்க இருக்கிறேன். இம்முயற்சி தொடங்கியது கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு முன்பாக. ஆனால் இதை முதல் முறையாக எழுத்து வடிவமாக்கி பிறர் படிப்பதற்கு ஏற்றார் போல் அமைத்துக் கொடுக்க இருக்கிறேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஓர் முக்கியமான அரசியல் மாற்றத்திற்கான வித்திடப்பட்டது. அது உலக வரலாற்றிற்கு புதியதொரு பரிமானத்தை கொடுத்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன் இருந்த உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் ஒரு சமுதாயம் எந்த அளவிற்கு இந்த உலகின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்துக் கொள்ளமுடியும். அவ்வாறு அந்த பின்னோக்கிய வரலாற்றை தெரிந்துக் கொள்வதன் மூலம் இனி வரும் எதிர்காலத்தையும் அதில் நடக்க இருக்கின்ற மாறுதல்களையும் ஓரளவு அனுமானிக்க உதவும்.


இந்த உலகின் எல்ல நிலைகளிலும் பின்னி பினைந்த ஒரு ஒப்பற்ற சமுதாயமாக இருந்து வந்திருக்கிற யூத சமுதாயம் இவ்வுலகிற்கு ஏற்படுத்திய உயர்வுகளும், வீழ்ச்சிகளும் வேறு எந்த சமுதாயத்தினராலும் ஈடு செய்ய முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் பன்முக பங்களிப்புகள் வரலாற்றில் எங்கு நோக்கினாலும் சிதறிக் கிடக்கின்றன.

வரலாறு என்பது படிப்பினை பெறுவதற்கே. அதிலிருந்து நாம் கற்றுக் கொள்வதன் மூலம் நமது முன்னோர்கள் செய்த தவறுகளை செய்யாமல் நம்மையும் நமக்கு பின்னால் வரும் சமூகத்தையும் காப்பாற்ற முடியும்.

யூத - முஸ்லீம் - கிறிஸ்துவ போராட்டங்கள் என்பது காலம் காலமாக நடந்துவரும் நிகழ்வுகள். இந்நிகழ்வுகள் கடவுள் ஏற்புடையவர்களுக்கும், அல்லது மறுப்பாளர்களுக்கும் இன்னும் யாராக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. வரலாற்று பிண்ணனிகளைப் பார்த்தால் சில நேரங்களில் இந்த போராட்டங்கள் உலகை பலமாக உலுக்கியிருக்கின்றன. முழங்கால் வரை இரத்த ஆறுகளை ஓட வைத்திருக்கின்றன. கடவுளின் பெயர் சொல்லி ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திய அந்த வாழ்க்கை முறைகளை படிக்கும்போது.. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இந்த மனித குலத்திற்கு அவசியமா? என்று கேட்கத் தோன்றும்.

'அநியாயம் செய்யக் கூடிய ஒரு சமூகத்திற்கு எதிராக இன்னொரு சமூகத்தைக் கொண்டு நாம் தடுக்கிறோம்' என்று இறைவன் திருக்குரானில் சொல்வது போல் இவ்வுலகில் இருக்கக் கூடிய சமூகங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு கால கட்டத்தில் அநியாயம் செய்யக் கூடிய சமூகமாக இருந்திருக்கின்றன அல்லது இருக்கின்றன. நியாயத்திற்காக போராடத் தொடங்கிய எத்தனையோ கூட்டங்கள் பிற்காலத்தில் தான் தொடங்கிய அந்த பாதையை மறந்துவிட்டு அறிந்தோ அறியாமலோ அநியாயம் செய்யக் கூடிய கூட்டமாக, சமூகமாக மாறியிருக்கின்றது. இதில் எந்த சமுதாயமும் விதிவிலக்கல்ல.

ஆகவே 'வரலாற்றில் சில ஏடுகள்' என்ற இந்த படைப்பு வரலாற்று நோக்கில் வழங்கப்படும் ஒரு படைப்பே தவிர்த்து எனது விருப்பு வெறுப்புகளை சுமந்து வரும் படைப்பாக இருக்காது.

'இந்த மூன்று பிரிவினர்கள்தான் இவ்வுலகத்தின் வாரிசுகளாவார்கள்: யார் இந்த இஸ்ரேலிய (பாலஸ்தீனத்தில்) மண்ணில் வாழ்கின்றார்களோ அவர்களும்; யார் தனது மகவுகளை கொண்டு (கடவுளின் விதிகளை) சட்டங்களை படிக்க வைக்கிறார்களோ அவர்களும்: யார் சப்பாத் தினங்களை ஒட்டி திராட்சை பழ ரசங்களைக் கொண்டு சம்பிரதாய வழிபாடல்களை மறுபடியும் திரும்பத் திரும்ப செய்து ஆசிர்வதிக்கப்படுகின்றனரோ அவர்களும்' (தல்மூத் பி'சாச்சிம் 113, பகுதி 1)

யூதர்களின் இந்த வேத வரிகள் எவ்வாறு இஸ்ரேலியர்களை மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் ஒன்று சேர்க்கிறது என்றும் இந்த உலகின் rightful citizen நாம்தான் என்பதில் எவ்வாறு அவர்கள் இறுமாந்து இருக்கிறார்கள் என்பதையும் இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

(இந்தத் தொடர் எத்தனை இருக்கும் என்னால் தற்போது சொல்ல இயலவில்லை. இந்த வரலாற்று தொடர் சம்பந்தாமாக உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்கிறேன்.)

1) Uri Avenery - Buying Off the Settlers, Arab News June 2, 2005

Friday, June 03, 2005

முதல் தியாகம்


நிசப்தமான நடுப்பகல் நேரம். உடலின் நீரையெல்லாம் உரிஞ்சும் சுட்டெரிக்கும் வெயில. எங்கு பார்த்தாலும் வெப்ப சலனங்கள், மணல்வெளிகள் தங்கத்தில் உருக்கப்பட்ட தடாகம் போல் தகித்துக் கொண்டிருந்தது. பனு மக்ஸும் கூட்டத்தினருக்கு சொந்தமான சில ஒட்டகங்கள் மலைப்பகுதியின் அடிவாரத்தில் கற்களை உணவுகளாக சுவைத்துக் கொண்டிருந்தன. பாலையின் அனல் பறக்கும் வெயிலுக்குச் சொந்தமான இப்பகுதி குரைஷி இனத்தின் வலிமைமிக்க ஒரு பிரிவான மக்ஸூம் குலத்தினருக்கு சொந்தமானது.

வீல் ... என்ற ஒரு பெண்ணின் அலறல் அந்த நிசப்தத்தை கொடூரமாக கலைத்தது.  அதைத் தொடர்ந்து ஒரு ஆணின் அழுகுரலும் சேர பாலையின் அந்த மலையடிவாரம்  திடீரென ஒரு பதை பதைக்கும் இடமாக மாறியது.  ஒட்டகங்கள் தலையை திருப்பி சத்தம் வரும் இடத்தை நோக்கி பார்த்தன. 'இது தினமும் கேட்கும் சத்தம்தான்' என்று நினைத்தனவோ என்னவோ சிறிது நேரத்தில் ஒட்டகங்கள் தலையை தொங்கவிட்டு தங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தன.

மீண்டும், மீண்டும் அந்த பெண்ணின் அலறலும் ஆணின் அழுகையும் மணல்வெளியில் முட்டி மோதி காணமல் போக,  சில ஆண்களின் கேளிக்கை சிரிப்புகள் கொஞ்சம்  கொஞ்சமாக அதிகமாகியது. ஒரு புறத்தில் மரண அவலத்தில் கதறும் ஆண் பெண் குரல்கள்.  இன்னொரு புறத்தில் அவர்களின் கதறல்களை ரசித்துச் சிரிக்கும் ஆண்களின் கூட்டம்.

சாட்டை அடியின் விளாசல்களில் எழுந்த சத்தங்களின் மத்தியில் ஒரு ஆணின் தளர்ந்த அழுகுரல் வலியால் சத்தமிட, அலறிய பெண்ணின் குரல் அடிக்காதீர்கள்... அவரை அடிக்காதீர்கள்.. என்று சத்தமிட்டது.  ஆனால், அந்த சாட்டையடி சத்தங்கள் நிற்காமல் தொடர, அழும் அந்த ஆண், பெண் குரல்களை பின்னுக்குத் தள்ளின அங்கிருந்து வந்த ஆண்களின் கேளிக்கை சிரிப்புகள்.

தூரத்தில் இரு இளைஞர்கள் தங்கள் தலைகளில் கை வைத்தவர்களாக கண்களில் தாரை தாரையாக நீர் சொரிய அழுது கொண்டிருந்தார்கள். ஏன் இந்த அழுகை என்று  கேட்க யாருமில்லை. பலைவனத்தின் மணல்களும், மலைகளின் பாறைகளும்தான் கேட்க வேண்டும்.  யாருமற்ற, நாதியற்றவர்களாக இளைஞர்கள் இருவரும் இங்கே அழுவதும், தூரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சித்திரவதை செய்யப்படுவதும் அதை மலைகளும், பாறைகளும், மணல் வெளிகளும் வெறும் வாய் மூடி மௌனமாக கேட்பதுமாக நாழிகைகள் நகர்ந்தன. ஒரு நாளல்ல, இரு நாளல்ல. இந்த அவலம் தொடர்ந்து பல நாட்களாக நடந்துக் கொண்டிருக்கிறது.

சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி சாய்ந்துக் கொண்டிருந்தான். இரு இளைஞர்களும் அழுகை வந்த திக்கை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். அப்துல்லாஹ் மற்றும் அம்மார் என்ற இருவரும் தளர்ந்த நடையுடன் கேளிக்கையும் கும்மாளமுமாக சிரித்துக் கொண்டிருக்கும் கூடாரத்தை தயங்கியபடி நெருங்கினார்கள். வரும் இருவரையும் பார்த்தவுடன் அந்த கூட்டத்தினர் இன்னும் சத்தமிட்டு சிரித்து வரவேற்றனர்.

'
அழைத்து செல்லுங்கள். அடிமைகளுக்கு பிறந்த அடிமைகளே' சத்தமிட்டனர்.

'
நாளை இந்த இரு கிழங்களும் உயிரோடு கண் விழித்தால் வழக்கம் போல் திரும்பவும் அழைத்து வரவேண்டும்.. புரிகிறதா..' என்று முழக்கமிட.. இரு இளைஞர்களும் தலையசைத்து ஆமோதித்தவாறு.. மணலில் கிடத்தி இருந்த அந்த இருவரையும் நோக்கி நடந்தார்கள்.

எக்காளமிட்டு சிரித்த அந்த கூட்டம் அபூ ஹுதைஃபா இப்ன் முகீரா என்பவரின் வாரிசுகள். அபூ ஹுதைஃபா என்பவர் இஸ்லாத்தையும் முஹம்மதுவையும் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கு முக்கிய தலைவர்களில் ஒருவரான அபூஜஹ்லின் பெரிய தந்தையாவார்.
அப்துல்லாவும் அம்மாரும் அழுத வண்ணம் மணலில் கிடத்தியிருந்த தனது பெற்றோரின் அருகில் வந்து நின்றார்கள்.  கொதி மணலில் மார்பில் பாரமாக வைக்கப்பட்டிருந்த சுடும் பாறையை தள்ளிவிட்டார்கள் இருவரும். உடலெல்ல்லாம் சாட்டையால் அடிபட்டு ரத்தம் சொறிய கிடந்த தனது தந்தை யாசிர் பின் மாலிக்கை அழுதபடி தூக்கிப் பிடித்து அமர வைத்தார்கள்.  அவரின் உடலெல்லாம்.. இரும்புக் கம்பியால் பழுக்கக் காய்ச்சி சூடு போடப் படடதுபோல் தோல்கள் பிய்ந்து தொங்கின.  மேனி முழுவதும் இரத்தம் ஒழுகி... சின்ன பின்னப்படுதப்பட்ட உடலாக இருந்தார் யாசிர்.

இரும்புக் கவசத்தை தலையில் அணிவித்து சுடுமணலில் கிடத்தப்பட்டிருந்த தனது தாய் சுமையாவின் சுட்டெரிக்கும் கவசங்களை அப்புறப்படுத்திவிட்டு அவரையும் தூக்கி அமரவைக்கவே... அம்மாரல் இனிமேலும் அடக்கி வைக்கமுடியாத அழுகை சத்தமாக பீறிட்டு வந்தது. காய்ந்து பழுத்துப் போன முகம். இரத்தம் கலந்த கண்ணீருடன் அழுது புடைத்திருக்கு அன்னையின் கன்னங்கள். முத்தமிட்டு கொஞ்சி மகிழ்ந்த தாயின் கோரமான முகத்தைப் பார்த்து சொல்லன்னா துயருடன் சத்தமிட்டு அழுதார்கள் இரு மகன்களும்.

அடிமைகளுக்கு அழும் உரிமை கூட கிடையாதே என்று அம்மாரும் அப்துல்லாவும்.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான்.. இப்படி மக்ஸூம் கூட்டதினரின் சித்திரவதைகளை அனுபவிக்கப் போகிறோம் என்று தாய் தந்தையரின் இரத்தங்களை துடைத்தவாறு கதறினர்.

சொல்ல முடியாத சித்திரவதைகளை அனுபவித்து வரும் இந்த இரு தள்ளாத வயதினரின் குற்றம்தான் என்ன?  ஏன் அவர்களது இரு மகன்களும் தன் பெற்றோர்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஒன்றும் செய்ய முடியாதவர்களாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்ககின்றனர்?

ஏக இறைவனை.. கடவுளாகவும்.. முஹம்மது (சல்) அவர்களை இறைத்தூதராகவும் இஸ்லாத்தை வாழ்வுமுறையாக ஏற்றுக் கொண்டதுதான் அவர்களது குற்றம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அடிமையில்லை என்ற கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அடிமை வாழ்க்கையிலிருந்து வெளியேற முனைந்ததுதான் அவர்களின் குற்றம். இவை எல்லாவற்றையும் கடந்து சிந்திக்கும் உரிமைகூட இல்லாத ஒரு அடிமை குடும்பத்திற்கு சீரிய கொள்கைகளா? வெகுண்டெழுந்த இறை நிராகரிப்பாளர்கள் கேட்க நாதியற்றவர்களை கொடுரமாக தண்டித்தால்தான் நபியை பின்பற்ற நினைக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கையாக இருக்கும் என்ற கொடூர சிந்தனையில் விளைந்ததுதான் யாசிர் குடும்பத்தின் இந்த அவல நிலை.

'
மகன்களே.. நிச்சயமாக.. ஒரு நாள்.. நீங்கள் இருவரும் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள். இறைத்தூதர் முஹம்மது கொண்டுவந்த அந்த செய்தி உண்மையானது.. இறைவன் பெரியவன். இறைவன் இந்த கொடுமைகளுக்கு பகரமாக உங்களின் எதிர் காலத்தை நன்மையாக்கி வைப்பான். இந்த அடிமைச் சங்கிலியிலிருந்து உங்களுக்கு உரிமைக் கிடைத்துவிடும்' என்று பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லியவாறு.. தனது குடிலை நோக்கி நால்வரும் நடக்கத் தொடங்கினர்.

சுமையா பிந்த் ஹயாட் என்ற அந்த பெண்மணி அபூ ஹுதைஃபாவிடம் அடிமையாக வேலை செய்து கொண்டிருந்தார்.   ஏமன் நாட்டிலிருந்து காணமல் பொன தன் சகொதரனைத் தேடி மக்கா வந்த யாசிர் அங்கெயே தங்கிவிடவே அபூ ஹுதைஃபா யாசிரை சுமையாவிற்கு கணவனாக மணம் முடித்து இருவரையும் தனக்கு அடிமையாக வைத்துக் கொண்டார்.  யாசிரும் சுமையாவும் ஏமன் நாட்டைச் சேர்ந்த மதாயிஷ் எனும் வலுவற்ற ஓர் கீழ்நிலை குலத்தை சேர்ர்ந்தவர்கள். மற்ற குலத்தினர் இவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவதும், அவர்களின் ஆண் பெண்களை பிடித்துச் சென்று அடிமைகளாக சந்தைகளில் விற்றுவிடுவதும் வழக்கமாக இருந்தது. அவ்வாறு அடிமையாக விற்கப்பட்டவள்தான் சுமையா பிந்த் ஹயாட்.
அடிமையாக இருந்த சுமையாவை மணமுடித்த காரணத்தால் யாசிர் பின் மாலிக்கும் அபு ஹுதைஃபவிடம் அடிமையாக மாறிப் போனார். இருவருக்கும் பிறந்தவர்கள்தான் அப்துல்லாஹ் மற்றும் அம்மார் எனும் ஆண்மக்கள். அபு ஹுதைஃபாவின் மரணத்திற்குப்பின் யாசிரும், சுமையாவும் அபு ஹுதைஃபாவின் வாரிசுகளுக்கு அடிமையாக பணி செய்து கொண்டிருந்தனர்.
அம்மாரும் இறைத்தூதர் முஹம்மதுவும் நண்பர்கள். இறைத்தூதர் கொண்டு வந்த ஓரிறை மற்றும் இஸ்லாத்தில் அடிமை வாழ்க்கை இல்லை என்ற கொள்கைகளை அறிந்து யாசிரின் குடும்பம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது. அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற யார்தான் விரும்ப மாட்டார்கள்?

முகம்மதின் 'தூதுத்தவத்தை ஏற்றுக் கொண்டு... லாயிலாஹா.. இல்லல்லாஹ்' வணங்குவதற்கு உரியவன்.. அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்று மொழிந்த ஒரே காரணத்திற்காக தினம் தினம் உயிர் போகும் சித்திரவதை அனுபவித்து வந்தார்கள் யாசிரும் சுமையாவும்.  அடிமைகளுக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமைகள் எதுவும் இல்லாத நிலையில், அதுவும் முஹம்மதின் கொள்கையை வேரருக்கும் வேளையில், யாசிர் குடும்பத்தின் செயல் மக்ஸூம் கூட்டத்தினருக்கு பெருத்த அவமானத்தை உருவாக்கிவிட்டது. யாசிரும் சுமையாவும் புதிய இறைக் கொள்கையை கைவிடச் சொல்லி கொடுமைப் படுத்தப் பட்டார்கள். ஆனால், உயிரே போனாலும் சரி, எங்களின் இறை நம்பிக்கையை கைவிட மாட்டோம் என்று உறுதியாக மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருந்தனர்.

இஸ்லாம் மீண்டும் இம்மண்ணில் முளையிடத் தொடங்கிய காலம்.  நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்து ஏறக்குறைய ஐந்து வருடம்.  இக்காலச் சூழலில் வெளிப்படையாக தன்னை முஸ்லீம் என்று அறிவிப்பு செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே.  ஒரு சிலர் ரகசியமாகவும் வேறு சிலர் வெளிப்படையாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லீம்களாக மாறிக் கொண்டிருந்த காலம். முஹம்மது நபியவர்கள் தொடங்கி முஸ்லீம்களாக மாறிய அனைவரும் இறை மறுப்பாளர்கள் மற்றும் சிலைவணங்கும் கூட்டத்தினரால் பல்வேறு இன்னல்களும், சித்திரவதைகளும் அனுபவித்துக் கொண்டிருந்த காலச் சூழல். இறைத்தூதரின் உயிருக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த மோசமான நிலை. தன்னையும் தன்னை பின்பற்றுபவர்களையும் காப்பாற்ற கடினமாக போரடிக் கொண்டிருக்கும் வேளையில் யாசிர் குடும்பத்தின் அவலத்தை நினைத்து இறைவனிடம் கையேந்தி அழுதார்கள் நபியவர்கள்.

தினமும் இதே நிலைதான். யாசிரும் சுமையாவும் படும் சித்திரவதைகளுக்கு முடிவேயில்லாமல் போனது. அவ்வழியெ வந்த முஹ்ம்மது (சல்) அவர்கள் அந்த கொடுமையைத் தடுக்க முடியாமலும் பனு மக்ஸூம் கூட்டத்தினரை தட்டி கேட்க முடியாமலும், கண்ணீர் விட்டவாறு.. 'யாசிரின் குடும்பத்தினரே... பொறுமையுடன் இருங்கள்.. உங்களுக்கு சுவர்க்கம் வாக்களிக்கப் பட்டிருக்கிறது' என்று சொல்லவும், அவர்களுக்காக பிரார்த்தனை மட்டுமே செய்ய முடிந்தவர்களாக இருந்தார்கள்.
என்ன ஒரு கையறு நிலை என்ன ஒரு பலவீனமானச் சூழல். இறைவன் ஒருவனே, அவன் மட்டுமெ வணக்கத்திற்குரியவன் என்ற ஒரு சத்தியம் எப்படியெல்லாம் நசுக்கப்படுகிறது. யாசிர் குடும்பத்தினரின் மீதான கொடுமைகள் கொஞ்சம்  கொஞ்சமாக அதிமாகி, கேட்க ஆளில்லை என்பதால் அவர்களது பிள்ளைகள் அப்துல்லவும் அம்மாரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

மற்றொருமுறை முஹம்மது நபியவர்கள் அவர்களின் கொடுமைகளை கண்ணுற்றபோது  'யாசிரின் குடும்பத்தினரே, பொறுமையுடன் இருங்கள்' என்று கூறிவிட்டு.. 'இறைவா.. யாசிரின் குடும்ப்பத்தினருக்கு மன்னிப்பு வழங்குவாயாக' என்று பிரார்த்தித்து அழுதார்கள்.
நபியவர்களே தனது உயிரை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில் யாசிர் சுமையா போன்ற சாமனியர்களுக்கு பெரும்பாதகமான சூழலாக இருந்தது. அபூ ஜஹல், அபூ லஹப் போன்ற குரைஷி தலைவர்கள்.. முகம்மதை நேரடியாக தாக்க இயலாத காரணத்தால்.. அவரின் கொள்கைகளை பின் பற்றுபவர்களை கொடுமையாக தாக்கி வந்தார்கள்.  நபியை பின்பற்றி நடப்பவர்களை கொடுமைப் படுத்துதல், கொலை செய்தல் போன்ற செயல்களால் முகம்மதின் உறுதியை குலைக்க எண்ணி படுபாதக செயல்களில் ஈடுபட்டார்கள்.

ஒரு நாள்... மாலை நேரத்தில் யாசிர், சுமையா, அப்துல்லாஹ் மற்றும் அம்மாரின் வருகைக்காக காத்திருந்தான் குரைஷிகளின் தலைவன், முகம்மது நபிகளாரின் எதிரி அபூஜஹல்.

பகல் முழுவதும் துன்பங்களை சகித்து இரவிலாவது நிம்மதியாக இருக்கலாம் என்று வீட்டிற்கு வந்த சுமையா, வாசலில் அபூஜஹல் காத்திருப்பதைக் கண்டு கலங்கி தன் இரு மக்களின் கைகளை பிடித்தவாறு.. தள்ளாடி நின்றாள்.

ஓரிறை கொள்கைப்பிடிப்பும் முகம்மது அவர்களின் மேல் இருந்த உண்மையான அபிமானமும் அவர் சொன்ன செய்திகளில்... ஏக இறைவனின்.. உன்னதமான இறைச் செய்தியை சுவைத்த அனுபவமும் சுமையாவிற்கு.. போதுமான உளத்திறனை கொடுத்தது. தான் ஏற்றுக் கொண்ட இந்த கொள்கையால் நிச்சயம் ஒரு நாள் இந்த பூமியில் பெருத்த மாற்றம் வர இருக்கிறது.. இந்த கொடுமைகளிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும்.. இந்த பூமி விடுபட இருக்கிறது. காலம் காலமாக அனுபவித்து வந்த அவமானங்கள், கேவலமான வாழ்க்கை முறைகள், ஒழுக்கக் கேடுகள் எல்லாவற்றிலிமிருந்தும் விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற சத்தியப்பிடிப்பு அவரை இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியிலலும் இன்னும் உயிர் வாழ வைத்தது. அது மட்டுமல்லாமல்.. தனது இந்த நம்பிக்கையால்.. நிச்சயம் தனது இரு ஆண் மகவுகளும் இந்த அடிமைச் சங்கிலியிலிருந்து விரைவில் விடுபடுவார்கள் என்ற ஆழ்ந்த எதிர்பார்ப்பும் நிறையவே இருந்தது. விழிகளில் நீரும், உதடுகளில் பிரார்த்தனையுமாக வீட்டை நெருங்கினார்கள் நால்வரும்.

இப்பாதுகாப்பற்ற சூழலில் மக்ஸூம் கூட்டதினரையும் அவர்களது உறவினர்களையும் காணும் போதெல்லாம் சுமையாவின் உள்ளம் மட்டுமல்ல உடலும் நடுங்கியது. தனது வீட்டு வாசலில் அபூஜஹல் நிற்பதை கண்ட சுமையாவின் முதல் பயம் பகல் முழுவதும் கொடுமைகளை அனுபவித்து விட்டு இப்போதுதான் திரும்பி வரும் வேளையில் தனது பிள்ளைகளை அந்த பாதகன் இன்னும் அதிக கொடுமைப் படுத்துவானோ என்ற பீதி அவளைப் பற்றிக் கொண்டது.

'
வா.. சுமையா.. அடிமையான உனக்கு.. எத்தனை தைரியமிருந்தால் நீ... இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வாய்' என்று கோபத்துடன் அந்த பெண்மணியை தாக்கத் தொடங்கினான்.

அன்னை தாக்கப்படுவதை அப்துல்லாவும், அம்மாரும் தடுக்க முயன்றும், அபூ ஜஹல் தனது ஈட்டியால் இருவரையும் திருப்பித் தாக்கினான். கண்மூடித்தனமான அபூ ஜஹலின் தாக்குதலை அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. போராடும் திறனும் உடல் பலுவும் அவர்களிடத்தில் இல்லையென்றாலும் இரு மகன்மகளும் அபூ ஜஹலை விடுவதாக இல்லை.

மிகுந்த போராட்டதிற்குப்பின் அபூ ஜஹல் தனது ஈட்டியால் அடிவயிற்றில் பெண்குறியில் குத்த சுமையா நடுத்தெருவில் சாய்ந்தாள். உயிருடன் வாழும் அடிமைகளுக்கே பரிந்து கேட்க ஆளில்லா சமூகத்தில் உயிரற்ற சுமையாவிற்கு யார் வந்து நிற்கப் போகிறார்கள்? எக்காளமிட்டு முழங்கிய அபூ ஜஹலின் வீரதீர பராக்கிரமத்தை பார்த்து கைகொட்டி ஆர்ப்பரித்த கூட்டத்தின் மத்தியில் சுமையா என்ற சொர்க்கத்தின் ஆன்மா கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டிருந்தது. இஸ்லாமிய சமூக கட்டமைப்பின் அடித்தளமான ஓரிறைக் கொள்கையை மனதில் தூக்கி சுமந்த ஓர் உன்னதப் பெண் இதுநாள்வரை தனது உறுதியை தன் குருதியின் மூலம் உலகிற்கு எடுத்துரைத்த ஓர் அடிமைத்தாய் இறுதியாக கண்ணுயர்ந்தாள். இஸ்லாமிய தியாகங்களின் அடித்தளத்தில் தன்னுயிரை கொடுத்த முதல் பெண் சுமையா என்ற வீரமங்கை.
சத்தியம் சிந்திய ரத்தங்களின் முதல் அத்தியாயம் மக்காவின் தெருவில் சுமையா என்ற ஒரு பெண்ணால் தொடங்கிவைக்கப் படுகிறது
(தொடரும்)

குறிப்புகள்:
1)       கணவர் யாசிரும் சில நாட்களில் பனு மக்ஸூம் கூட்டத்தினரின் சித்திரவதைகள் தாங்கமுடியாமல் மரணமடைகிறார்.
2)       அப்துல்லாவும், அம்மாரும் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்கள்.
3)       அப்துல்லாஹ் அபூஜஹலால் கொல்லப்படுகிறார். .
4)       பனு மக்ஸூம் கூட்டத்தாரின் சித்திரவதைகள் தாங்க முடியாமல் அம்மார் இஸ்லாத்தை விட்டுவிடுவதாகவும், நபியவர்களை வெறுப்பதாகவும் சொல்லி அவர்களிடமிருந்து தப்பித்து வெளியேறுகிறார்.
5)       நடந்ததை நபியவர்களிடம் சொல்லி அம்மார் அழும்போது இறக்கப்பட்ட குர்ஆன் வசனம் 16:106 (எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதிக் கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர)
6)       நபியவர்கள் அம்மார் மற்றும் இன்னும் சில நண்பர்களை எதியோப்பியா அரசரிடம் புகலிடம் கேட்டு அனுப்பி வைக்கிறார்கள்.
7)       கலீபா உமர் (ரலி) காலத்தில் அம்மார் இப்ன் யாசிர் ஈராக்கின் கவர்னராக நியமிக்கப் படுகிறார்.
8)       அம்மார் தனது 90வது வயதில் சிரியாவில் நடந்த சிஃபின் யுத்தத்தில் வீர மரணம் அடைகிறார்கள்.
ஒரு குடும்பமே இஸ்லாத்திற்க்காக தம் இன்னுயிரை தியாகம் செய்த வரலாறு முஸ்லீம்களால் ஒருபோதும் மறக்கமுடியாது.