Tuesday, December 10, 2013

ஏன் பணக்காரராக வேண்டும்?

பணக்காரராக மாறவில்லை என்றால் ஏழையாகிவிடுவோம். இது பயமுறுத்தும் வார்த்தைகள் அல்ல,  வரவிருக்கும் எதார்த்தத்தை எச்சரிக்கும் வரிகள். பணக்காரராக மாறுவது என்பது ஒற்றை இரவில் ஏற்படக்கூடிய சமாச்சாரம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும், மாறியாக வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. ஆனால் எப்படி?  

எப்படி என்ற ஆய்விற்கு செல்வதற்கு முன் ஏன் ஆகவேண்டும் என்பதை புரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.  இந்திய நடுத்தர மக்களின் வாழ்க்கத்தரமும் அமேரிக்க ஏழை மக்களின் வாழ்க்கைதரமும் ஒன்று என்பது ஓர் ஆச்சர்யமான உண்மை.  இந்திய நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம்தான் அமேரிக்காவில் வாழக்கூடிய ஏழைகளின் நிலை. மேலை நாடுகளுடன் நம்மை ஒப்பிட்டு பார்த்தால் நமது வாழ்க்கைத்தரம் மிகமிகக் குறைவு.  இந்திய வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்தவரை நடுத்தர மக்களின் நிலை ஓரளவு வசதியாகத் தோன்றினாலும்,  பெருகிவரும் உலகப் பொருளாதாரப் போட்டியில் இருக்கும் இந்த சௌகரியத்தையும் இழக்கும் வாய்ப்பு பரவலாக உள்ளது.

அதற்கு முதல் காரணம் 2008ல் நிகழ்ந்த பொருளாதார சரிவிற்கு இன்னும் சரியான தீர்வு நடைமுறைப் படுத்தப்படவில்லை.  இரண்டாவது, அடுத்த நாடுகளை சுரண்டினால்தான் நாம் நிம்மதியாக வாழமுடியும் என்ற மேற்குலகின் நடைமுறையில் எந்த மாற்றங்களும் இல்லை.  மூன்று, இந்தியாவைப் பொறுத்தவரை இயற்கை சீற்றத்திற்கான எச்சரிக்கை சமிக்கைகளை நடைமுறைப் படுத்திய வேகத்திற்கும் விவேகத்திற்கும் தகுந்தார்போல் பொருளாதார சுனாமியிலிருந்து தப்பிப்பதற்கு வேண்டிய எச்சரிக்கை சமிக்கைகளை இன்னும் சரி செய்யாமல் இருப்பது.  நான்காவதாக சமநிலையற்ற பொருளாதாரக் கொள்கைகளால் தள்ளாடும் இந்தியப் பொருளாதாரம், அதாவது அந்நிய முதலீடுகளில் இருக்கும் குளறுபடிகள், நஷ்டத்தில் செயல்பட்டுவரும் அரசு நிறுவனங்களை லாபகரமாக்குவதில் ஏற்படும் தாமதம், விவசாய உற்பத்திகளுக்கு தள்ளுபடி கொடுக்கும் அதே நேரத்தில் உற்பத்திகளை அதிகப்படுத்துவதற்கான யுக்திகளை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள், நலிந்து வரும் ஏழை விவசாயிகளுக்கு தீர்வு கொடுக்க முடியாமல் தள்ளாடும் அலட்சியப் போக்கு போன்ற தெளிவற்ற பொருளாதார கொள்கைகள்.  ஐந்தாவதாக முரன்பாடுள்ள கல்வித் திட்டங்களால் மனிதவள முன்னேற்றத்தில் காணப்படும் சமநிலையற்ற முன்னேற்றம்.  இப்படி இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.    

இந்திய வாழ்க்கைத் தரத்தை விட்டு உலக வாழ்க்கதைத் தரத்தை குறிப்பாக மேலை நாடுகளின் தரத்தை எட்டிப் பிடிக்கவேண்டிய கட்டாயச் சூழலில் நாம் இருக்கிறோம்.  வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல் இந்திய வல்லரசை கனவுகளில்தான் கண்டு மகிழ முடியும் என்பது உண்மையாக இருந்தாலும், இப்போது வல்லரசாக நாம் மாறுவதைவிட நடுத்தர மக்கள் ஏழைகளாகிவிடக் கூடாது என்பதுதான் முதல் நோக்கமாக இருக்க வேண்டும்.  மத்தியதர மக்களின் கைகளில்தான் பொருளாதாரத்தின் வெற்றியும் தோல்வியும் இருக்கிறது.  நடுத்தர மக்களின் ஆவல், உந்துததல் இரண்டும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றிச் செல்லும் காரணிகள்.  இக்காரணிகளை புரிந்துக் கொண்டு செயல்படுத்தப்படும் பொருளாதரக் கொள்கைகள் வெற்றி பெருகின்றன. உதாரணம் சீன மற்றும் ஜப்பானியர்களின் முன்னேற்றம்.  எனவே நடுத்தர மக்களை மேல்மட்டத்திற்கு உயர்த்தி செல்வதும், நடுத்தரத்திலெயே வைத்திருப்பதும் அல்லது ஏழைகளாக மாற்றிவிடுவதும் அரசு செயல்படுத்தும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை பொருத்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் இந்திய நடுத்தர மக்கள் நடுத்தர மக்களாகவே இருக்கவேண்டும் என்பதை விரும்புகின்றனர்.  அவற்றிற்கு இரு காரணங்கள்.  ஒன்று தங்களது உற்பத்திகளை விற்பதற்கு சந்தைகள் வேண்டும், அதில் இந்தியா முதன்மை சந்தையாக உள்ளது.  இரண்டவது, இந்தியாவின் நடுத்தர மனிதவளம் உலக நாடுகளில் குறிப்பாக மேலை நாடுகளுக்கு தேவைப்படுகின்றது.  மேலை நாடுகளில் உள்ள மக்கள் தொகையின் சராசரி வயது ஐம்பதுகளை நெருங்கிவிட்டது.  இந்தியாவில் அது முப்பதுகளில் உள்ளது.  மேலைநாடுகள் வெகு விரைவில் மனிதவளப் பற்றாக்குறைகளில் சிக்கவிருக்கின்றன. அதை நிவர்த்தி செய்ய குறுகிய கால ஓப்பந்தத்தின் மூலம் கீழை நாடுகளிலிருந்து மனித வளங்களை இறக்குமதி செய்யவேண்டும். அதிலும் முதன்மை நிலையில் உள்ளது இந்தியாவின் நடுத்தர வர்க்கம்.  நமது நடுத்தர வர்க்கத்தின் படிப்பறிவு, உத்வேகம், பணத்தின் மீதுள்ள மோகம், நல்ல வாழ்க்கைத்தரம் மேலை நாடுகளில்தான் உள்ளது என்ற நம்பிக்கை என்று பல்வேறு காரணங்கள் கொண்ட இந்திய நடுத்தர மனிதவளத்தை குறிபார்க்க வைத்துள்ளது.

நமது பொருளாதாரப் போட்டி இந்திய எல்லைக்குள் மட்டும் இல்லை. தனது பொருளாதார சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்ள போராடும் மேலை நாடுகள் இச்சூழலில் தங்களுக்கு சாதகமான உலகப் பொருளாதார கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். அவர்களைப் பொருத்தவரை அது நியாயமாகத் தெரிந்தாலும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வேண்டிய காலகட்டத்தில் ஒரு நாட்டின் தவறுகள் மற்ற நாடுகளை பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதால் நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வது உலகப் பொருளாதாரப் போட்டியில் நமக்கு கிடைக்கும் வெற்றியைப் பொருத்தே உள்ளது. சமீபத்திய பொருளாதார சிக்கலில் நாம் சிக்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் கண்டிப்பாக நாம் பாதிக்கப்படுவொம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது.  கடந்த பொருளாதார சீரழிவில் நாம் தப்பித்ததற்கு பெரும் காரணம், உள்நாட்டிலேயெ சுழலும் பொருளாதாரமும், சேமித்ததில் செலவு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கும்.  தற்போது நடுத்தர வர்க்கத்திடம் சேமிப்பதில் இருக்கும் முனைப்பு குறைய ஆரம்பித்துள்ளது. நாளைய வருமானத்தை இன்றைக்கே செலவு செய்யும் ஆடம்பர வாழ்க்கைக்குள் நம்மை நாம் இழந்து வருகின்றோம்.  மேலைநாடுகளின் பொருளாதார இழப்பிற்கு அடிப்படைக் காரணம் நாளைய வருமானத்தையும், அவர்களது அடுத்த சந்ததிகளின் வாழ்வாதாரங்களையும் அடமானம் வைத்து தமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட காரணத்தினால்தான்.  இரும்புத் திரையிட்ட சீனாவில்கூட இப்போது இந்த தள்ளாட்டம் தோன்றியுள்ளது.  அப்படி ஒரு சூழல் இந்தியாவில் உருவானால் ஜனநாயகதின் பெயரால் நமது அரசியல்வாதிகள் தேவையற்ற விரயமான வழிகளில் நமது நேரத்தையும் அறிவையும் செலவிட்டு இன்னும் பல ஆண்டுகள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்லும் வாய்ப்புள்ளது.  என்வே உலகப் பொருளாதாரப் போட்டியில் வெறும் மனிதவளங்களை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி கொள்ள நினைப்பது அறிவார்ந்ததல்ல.  மனிதவளங்களை பெருக்கிக் கொள்ளும் போட்டிகளில் கீழை நாடுகள் பல நம்மை முந்திக் கொள்ளும் வாய்ப்புகள் நிறைய உள்ளதாலும்,   சீனாவின் மனிதவள மேம்பாடு நம்மைவிட பலமடங்கு அதிகமாக உள்ளதாலும் நமது தற்போதைய சாதகமான நிலை எப்போதும் தொடராது. எனவே நாம் எப்போதும் இல்லாத அளவிற்கு பன்மடங்கு நெருக்கடியில் உள்ளோம்.  இதை எந்த அளவு அரசாங்கம் கருத்தில் கொண்டு செயல்படுகிறது என்பது மிகப்பெரும் கேள்விக்குறி.   இந்நெருக்கடியை சமாளிக்க வேண்டுமென்றால் நமது நோக்கம் தெளிவாகவும், உறுதியாகவும் இன்னும் தொலைநோக்குப் பார்வையுடன் இருக்க வேண்டும்.

வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொண்டால்தான் வசதிகளை பெருக்கிக் கொள்ளமுடியும் என்ற உண்மையின் உச்சகட்ட நிலைதான் தற்போது பல மனித சமுதாயங்களையும் நாடுகளையும் ஒன்றுடன் ஒன்று பொருளாதார போட்டியில் ஈடுபட வைத்துள்ளது.  ஒன்றை ஒன்று சார்ந்து வாழவேண்டும் என்ற எதார்த்தமான சூழலை, எதிர்மறையான நோக்கில், தெரிந்தோ தெரியாமலோ நேர்மறையான சிந்தனைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு செல்லும் பொருளாதார செயல்பாடுகள் மலிந்து வருகின்றன.  உதாரணமாக கல்ப் ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டு காரணமாக அவர்களை ஏழை நாடுகளில் மலிந்துகிடக்கும் வெற்றிடங்களை நோக்கி திசை திரும்பியுள்ளார்கள்.  சூடான், வியாட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் விவசாயம் செய்து விளை பொருட்களை தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்துகொள்ளும் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளன.  இப்போட்டி மோதலாக மாறி ஏழை நாடுகளை புதுவகையான காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் வாய்ப்புகள் உள்ளது.    

மேலை நாடுகளில் தோய்ந்துவரும் பொருளாதார நிலையும், அதற்கு மாறாக கீழை நாடுகளில் குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் பெருகிவரும் பொருளாதார நிலை இரண்டும் உலக அரங்கில் ஆச்சர்யாமகத் தெரிந்தாலும்,  நீண்டகால நோக்கில் இது பல்வேறு உள்நாட்டு அரசியல் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. எழுபதுகளில் அமேரிக்காவும், எண்பதுகளில் ஜப்பானும் சந்தித்த அதீத பொருளாதார வளர்ச்சிகளை பின்னுக்குத்தள்ளி ஆண்டிற்கு சராசரி 9 சதவிகித வளர்ச்சியை அடையும் சீனவும், சராசரி 8 சதவ்கிதத்தை எட்டும் இந்தியாவும் அமேரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் சந்தித்த பின்னடவை சந்திக்கக்கூடும்.  இதிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்தியர்களாகிய நாம் நமது பொருளாதார தலையெழுத்தை நமது அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்று வெறுமனே இருக்க முடியாது.  இந்திய இளைஙஞர்கள் சர்வதேச இளைஞர்களுடன் வேலை வாய்ப்பில் போட்டி போடும் ஆற்றல் பெற்றிருந்தாலும் பொருளாதர அறிவில் நாம் பின்தங்கியே உள்ளோம்.  வேலை செய்து சம்பாதிக்கும் திறன் பெற்ற நமது இளைஞர்கள், சம்பாதித்ததை சரியான வழிகளில் முதலீடு செய்யும் ஆற்றல்கள் குறைந்தவர்களாக இருக்கிறோம்.  

உலகத்தின் பரிணாம வளர்ச்சியில் நிறைய விஷயங்கள் எதிர்பாராத அளவிற்கு மாறிப் போனதுமல்லாமல் அதன் பயன்பாடுகள் பெரும்பாலும் மறந்து போய்விட்டன.  வாழ்க்கை என்பது எதார்த்த அனுபவங்களின் உறைவிடமாக இருந்த நிலை மாறி மனித ஆவல்களின் உந்துதலில் விரைந்து பறக்கும் கனவு எந்திரமாக மாறிவிட்டது.  வாழ்க்கைக்கு பணம் தேவை என்ற நிலை மாறி பணம்தான் வாழ்க்கை என்ற நிலை வந்துவிட்டது.  இதுதான் வாழ்க்கை என்ற நிலையை விட்டு,  இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏற்பட்ட ஒரு நல்ல அடிப்படை மாற்றம் தற்போது உலகலாவிய அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.  இப்புரட்சி இருமுனை கத்தியாக நன்மை மற்றும் தீமை என்ற இரண்டையும் தாங்கி பயன்படுத்துபவரின் அறிவிற்கும் நோக்கத்திற்கும் ஏற்றவாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார உலகம் என்பது தற்போது உலகின் எல்லா விஷயங்களையும், ஆன்மீகத்தையும் சேர்த்து தன்னுள்ளே உள்வாங்கிக் கொண்டு விரைந்து பறக்கும் எந்திரமாக செயல்பட்டு வருகிறது.  

எதை நோக்கிய பயணம் இது என்று சாமானியர்கள் அறிந்துக் கொள்ளமுடியாத அள்விற்கு இப்பொருளாதார உலகம் வேகமாக இயங்கிவருகிறது.  மனித சமுதாய பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களா? அல்லது காலப்போக்கில் மனிதர்கள் தங்களின் அடித்தளத்தை மறந்துவிட்டதால் ஏற்பட்ட குளறுபடிகளா என்று ஒருசிலர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஒவ்வெரு தனிமனிதனும் இவ்வேகத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருப்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பதால் இழப்பு ஒதுங்கி நிற்கும் மனிதர்களுக்குத்தான்.  அதே வேளையில் ஓடுகின்ற கூட்டத்துடன் தானும் சேர்ந்து ஒன்றும் புரியாமல் ஓடினாலும் தவறு.  லட்சியம் தவறில்லை, ஆனல் எதை நோக்கி எப்படி அந்த இடத்தை சென்று சேர்வது என்பதில்தான் பிரச்சனை. இது ஏறக்குறைய எல்லா மத்தியதரக் குடும்பங்களில் இருக்கும் குழப்பம்.  இந்த குழப்பங்களை ஒரு சில குழுமங்கள் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கோள்வதும் வாடிக்கையாக நடந்து வருகின்றன.

என் பக்கத்து வீட்டுக்காரனும், என் நண்பணும், என்னுடன் அலுவலகத்தில் ஒன்றாகப் பணி செய்பவரும், என்னுடன் வர்த்தகத்தில் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்களும், எல்லோருமாக சேர்ந்து முன்னேற முடியும். யாரேனும் ஒருவன் முதுகில் ஏறி சவாரி செய்தால்தான் முன்னேறமுடியும் என்ற அவசியம் இல்லை. எப்போது இது சாத்தியமாகும்?

இரண்டு வழிகளில் இது சாத்தியாகமாக வாய்ப்புள்ளது.  ஒன்று வட்டியை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகங்களை மாற்றி லாபம் மற்றும் இழப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வர்த்தக பரிமாற்றக் கொள்கைகள் கொண்டுவரப்பட வேண்டும்.  இது அவ்வளவு எளிதல்ல என்றாலும் இதுதான் நீண்டகால நிரந்தர தீர்வு.  இரண்டாவது நமது கல்வியமைப்பில் மிகப் பெரும் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

இதுவும் சற்றும் கடினம்தான் என்றாலும் பொருளாதார அறிவை நாம் தேடிக்கொள்வது ஒன்றும் கடினமல்ல. ஒவ்வொரு இந்தியனும் குறைந்தபட்ச பொருளாதாரக் கல்வியறிவு பெற்றவர்களாக மாற வேண்டும்.
எப்படி சம்பாதிப்பது என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளும் நாம் சம்பாத்தித்தை எப்படி பன்மடங்காக்குவது என்பதில் சரியான அறிவும் திறமையும் இல்லாத காரணத்தால் வங்கிகளில் பிக்சட் டெபாசிட், நீண்டகால சேமிப்பு என்று நமது சம்பாத்தியத்தை யாருக்கோ வங்கி மூலம் நமக்குத் தெரியாமலே கடன் கொடுத்து பணக்காரர்களை பெரும் பணக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.  இந்நிலை மாறி, நாம் சம்பாதித்தை, நமது பணத்தை நமக்கே முற்றிலும் பலன்தரக் கூடிய பண்மடங்கு லாபம் தரக்கூடிய வழிகளில் முதலீடு செய்யும் வழிகளை ஆரய வேண்டும்.  

எப்படி பணக்காரணக மாறுவது என்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது என்றாலும் அடிப்படையில் ஒன்றை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தவர்களை ஏழையாக்கினால்தான் தான் பணக்காரரக முடியும், வசதிகள் வேண்டுமென்றால் அடுத்தவர்களை ஏமாற்ற வேண்டும் அல்லது நியாயங்களை கொல்லைப் புறத்தில் புதைத்துவிட்டு வாழ்ந்தால்தான் முன்னேற முடியும் என்ற சிந்தனைகள் முற்றாக ஒதுக்கித் தள்ள வேண்டும். அடுத்தவர்களை ஏழைகளாக்கினால்தான் நாம் பணக்காரணாக முடியும் என்ற சிந்தனை ஒங்கிவருவதால் மனித மான்புகளின் சமநிலைகளில் தடுமாற்றம் ஏற்பட்டு எல்லோரும் பிரச்சனைகளை சந்திக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.  சமீபத்திய பொருளாதார சுனாமியே இதற்கு சிறந்த உதாரணம்.

ஒரு சிலர்களின் தவறினால் எல்லோரும் பாதிக்கப்படும் அபாயம் இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.  காரணம் உலகநாடுகள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழவேண்டிய காலச்சூழல்.  இன்னும் எத்தனையோ பொருளாதார சுனாமிகள் எதிர் வர இருக்கும் இத்தருணத்தில் அதிலிருந்து எப்படி நம்மை காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம் என்பதும் மிக முக்கியம்.  எனவே பணக்காரராக வேண்டும் என்பதில் எந்த மாற்றங்களும் இல்லை.  எப்படி, எப்போது, எவ்வளவு விரைவில்?

No comments: