Tuesday, February 08, 2005

மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும் - 2

அன்பிலும் அரவணைப்பிலும் இயக்கப்பட வேண்டிய இந்த உலகம், மாறாக வெறுப்பையும் எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் துவேஷ உணர்வுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு மனித உறவுகளை சின்னா பின்னாமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியை பிடிக்காததால்தான் எதிர்கட்சிக்கு ஓட்டு கிடைக்கிறதே தவிர எதிர்கட்சியின் மேல் இருக்கும் காதலினால் அல்ல. யாரையேனும் வெறுக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரு கூட்டமே கூடி ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறது. அன்பு, பரிவு, பாசம் என்று பேசினால் டிவி சீரியலில் கூட பார்ப்பதற்கு ரசிகர்கள் இல்லை. வெறுப்பின் அடிப்படையில் மனித உறவுகள் கூடுவதும் பிரிவதும் மனித இயல்பு. ஆனால் இந்த மனித இயல்பை, இயற்கை உந்துதலை தனிமனித அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அல்லது அதிகாரத்தை கைப்பற்றவும் அன்றைய மன்னர்கள் முதல் இன்றைய உலக அரசியல் வியாபாரிகள் வரை காலம் காலமாக பயன்படுத்தி வந்ததுதான் இந்த உலகின் துர்பாக்கிய நிலை.

இஸ்ரேலின் ஷரோனிலிருந்து, அமேரிக்காவின் புஷ் மற்றும் இந்தியாவின் அத்வானி வரை இந்த politics of hate அவர்களின் அரசியல் உயர்விற்காக மிக நன்றாக பயன்படுத்தப் பட்டுள்ளது. வெறுப்பின் அடிப்படையில் பல நாடுகளும் ஆட்சிகளும் உருவாகியிருப்பது தெள்ளத்தெளிவான உண்மை. இந்தியாவை பிடிக்காததால் பாகிஸ்தான் உருவானது. பாகிஸ்தானைப் பிடிக்காமல் பங்களாதேஷ் உருவானது. இப்படி எத்தனையோ வரலாறுகள் நம் முன்னால் உள்ளன. வரலாறு என்பது படிப்பினை பெறுவதற்கே ஒழிய, வெறும் படித்துவிட்டு மறக்கப் படுவதற்கல்ல. நாம் வரலாற்றை உதாசீனப் படுத்தும் போதெல்லாம், வரலாற்றில் செய்த தவறுகளை திரும்பவும் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Politics of hate தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால் அதற்கு ஒரு பொதுவான இலக்கு நிர்ணயிக்கவேண்டும், அந்த இலக்கு யார் என்றோ அல்லது எது என்றோ அவ்வப்போது அடையாளம் காட்டப்படவேண்டும். அப்போதுதான் அரசியல் வியாபாரிகளின் சரக்கு ஒழுங்காக விலை போகும். இன்றைக்கு உலக அரங்கில் பொதுவான ஒரு இலக்காக அடையாளம் காட்டப்பட்டு நிற்பது இஸ்லாமும் முஸ்லீம்களும். அதற்கு மாற்றார்கள் சொல்லக்கூடிய அல்லது பயன் படுத்தக் கூடிய காரணங்களில் தலையாயது 'பயங்கரவாதம்'. இந்தப் பெயர்க் காரணம் சூழலுக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே இருக்கும். இன்னும் சில வருடங்களில் மாற்றப்படும், அதற்கான அறிகுறிகள் இப்போதே வரத் தொடங்கிவிட்டன.

உலகின் எல்லா நாடுகளிலும் வெறுப்பிற்கும் மற்றும் தனக்குள்ளேயும் பிளவுபட்டு நிற்கக் கூடிய முஸ்லீம்களைப் பற்றி மாற்றாருக்கு என்ன போதிக்கப் பட்டதோ அல்லது போதிக்கப்படுகிறதொ அதை இங்கு வரலாற்றுப் பார்வையில் பார்ப்பது அவசியமாகிறது. காரணம் மாற்றாரின் தவறான புரிதலுக்கு இப்படிப்பட்ட போதனைகளே அடிப்படை காரணமாக அமைகிறது. முஸ்லீம்களின் தற்கால நிலையை இரண்டுவிதாமாக பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று இந்திய முஸ்லீம்களின் நிலை, இன்னொன்று உலக முஸ்லீம்களின் நிலை.

இந்திய முஸ்லீம்களின் அடையாளமும், உலக முஸ்லீம்களின் அடையாளமும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் தோன்றினாலும், இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்திய முஸ்லீம்கள் தான் பிறந்த மண்ணின் கலாச்சாரங்களினாலும், சிந்தனை முறைகளினாலும் மிகவும் வேறுபட்டவர்கள். அவர்கள் முஸ்லீம்களாக மாறிய காலம் தொடங்கி, இன்று வரை குரான் மற்றும் நபிகளின் வாழ்க்கை முறையை மட்டுமே ஏற்றுக் கொண்டார்களே தவிர்த்து அரேபியர்களின் குணாதிசயங்களையோ அல்லது கலாச்சாரங்களையோ பின் பற்றுபவர்களாக இல்லை. அதே நேரம், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லீம்களின் பங்கு வேறு எந்த முஸ்லீம்களுக்கும் குறைவானதல்ல. அதனால்தான் உலக அரங்கில் முஸ்லிம் அறிஞர் பெருமக்களுக்கு உலக அளவில் பெரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.

இந்திய முஸ்லீம்களைப் பற்றிய தவறான போதனைகளைப் முதலில் பார்த்துவிட்டு உலக முஸ்லீம்களைப் பற்றிய கண்ணோட்டத்திற்கு பிறகு செல்லலாம்.

மாற்றார்களில் பெரும் பகுதியினருக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டிருப்பதும் மற்றும் பிரச்சாரம் செய்யப்படுவதெல்லாம் முஸ்லீம்கள் அன்னியர்கள், அவர்கள் இந்த நாட்டை சூறையாட வந்தவர்கள், கத்தி முனையில் லட்சோப லட்ச இந்துக்களை முஸ்லீம்களாக மதம் மாற்றியவர்கள். ஓரு ண் நான்கு பெண்களை திருமணம் செய்துகொண்டு நிறைய பிள்ளைகளை பெறுபவர்கள். முஸ்லீம் இனம் பெருக வேண்டுமென்பதெ அதன் நோக்கம். இதே நிலை தொடர்ந்தால், இன்னும் குறைந்த வருட காலத்தில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மையினராகி, முஸ்லீம்கள் பெரும்பான்மையினராகிவிடுவார்கள். இந்திய மண்ணில் வாழ்ந்துகொண்டு, வேறு எந்த மண்ணையோ புனித இடமாக மதிக்கக் கூடியவர்கள் என்றெல்லாம் தூற்றப்படுகிறது.

இது போதததென்று, எழுதப்படாத சட்டங்கள், அறிவிக்கப்பாடத போலீஸ் நடவடிக்கைகள் என்று இன்னொருபுறம் முஸ்லீம்கள் சமூக எதிரிகளாக சித்தரிக்கப்பட்டார்கள். மாற்றார்களின் குற்றங்களை 'a bad apple in basket' என்று தத்துவார்த்த விளக்கங்களுடன் வெளியிடும் பத்திரிக்கைகளும், அவர்கள் மதத்தலைவர்களாக இருந்த போதிலும், அவர்களின் குற்றங்களை தனிப்பட்ட மனிதரின் குற்றங்களாக பார்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கும் மாற்றார்கள், அந்த குற்றவாளிகள் முஸ்லீம்களாக இருந்தால் மொத்த சமுதாயமே குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டன. அதற்கு முஸ்லீம்களின் குரானும், மத போதனைகளும் காரணம் என்று விளக்கமளிக்க ஏகப்பட்ட மாற்று மத முஸ்லீம் அறிஞர் பெருமக்கள்.

நமது முன்னாள் பிரதமர், பல முஸ்லீம் தலைவர்களால் மதிக்கப்பட்டவர், குறிப்பாக பத்வா ஸ்பெஷலிஸ்ட் டெல்லி ஷாஹி இமாம் அவர்களால் சமீபத்திய தேர்தல் நேரத்தில் புகழப்பட்டவர், காஷ்மீர் பிரச்சனையை தீர்த்துவைக்க தகுதி படைத்தவர் என்றெல்லாம் பேசப்பட்ட வாஜ்பாய் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய், முஸ்லீம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் பிரச்சனைகள் உருவாக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று முழங்கினார்.

இந்தியா என்று அழகிய ஒரு பெயர் சூட்டி உலகிற்கு, ஒன்றுபட்ட ஒரு நிலத்தை, நாட்டை, அறிமுகப் படுத்திய 1000 வருடத்திற்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட முஸ்லீம்கள் அன்னியர்களாக தினம் தினம் அடையாளம் காட்டப்பட்டு நிற்கிறார்கள்.

ஓவ்வொரு முஸ்லீமும், காலையில் எழுந்தது முதல், இரவில் தூங்கச் செல்லும்வரை தன்னை ஒரு இந்திய குடிமகன், தேச பக்தன் என்று மாற்றார்கள் எப்படியெல்லாம் விருப்பப் படுகிறார்களோ அப்படியெல்லாம் அவர்களை திருப்திபடுத்த வேண்டியுள்ளது. முஸ்லீமுடைய நிறுவனத்தில் முஸ்லீம்கள் மட்டும் வேலை பார்த்தால், அந்த நிறுவனத்தின் முதலாளி ஒரு இனவாதி. அதே நேரம் ஒரு மாற்றாருடைய நிறுவனத்தில் வெறும் மாற்றார்கள் மட்டும் வேலைப்பார்த்தால் அந்த முதலாளி ஒரு பொதுவாதி.

அன்றிலிருந்து இன்று வரை முஸ்லீமகளைப் பற்றி பேசப்படுகிற பொய் பிரச்சாரத்தில் மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுவது முஸ்லீம்கள் இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்கள் அல்லது அபகரிக்க வந்தவர்கள். Common Akbar, ஆப்கானிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் வந்த மன்னர்கள் இந்த நாட்டை அபகரிக்க வந்ததல்லாமல் வேறு எதற்காக வந்தார்கள்? அவர்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கலாம். ஆனால் வரலாறு என்ன சொல்கிறது, அன்றைக்கு வந்த முஸ்லீம் மன்னர்கள் எல்லோருக்குமே இங்கிருந்த ஆட்சியாளர்கள் இடம் கொடுத்த கதையை, ஆவனங்கள் மற்றும் சான்றுகளோடு விளக்குகின்றன. முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்த மன்னில் நுழைந்தபோது, இது சிறு சிறு ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. இன்றைகு இந்தியா என்று சொல்லப்படுகிற இந்த நிலம் ஒன்றுபட்ட ஒரு நாடக இருந்தது இல்லை.

தன் எதிரியை வீழ்த்த எப்படி அண்டை நாட்டு படையை உதவிக்கு அழைப்பது அன்றைய மன்னர்களின் வழக்காமாக இருந்ததோ அதே காரணம்தான் ஆப்கானிய மற்றும் மத்திய ஆசிய முஸ்லீம் மன்னர்கள் பாரத மண்ணிற்கு வருவதற்கு காரணமாக இருந்தது. தன் எதிரி மன்னன் ஒரு இந்து என்று நன்றாக தெரிந்தும், அவனை ஒரு முஸ்லீம் மன்னனின் துணையுடன் தோற்கடிப்பதும் அல்லது அந்த நாட்டை அபகரித்துக் கொள்வதும் அன்றைக்கு மிகச் சாதாரணமாக நடைப் பெற்று வந்தது.

முகலாய மன்னர்களின் படைத்தலைவர்கள் எல்லோருமே, இந்து ராஜ புத்திரர்களே. போர் வீரர்களில் பெரும்பாலோரும் அவர்களே. அக்பர் மாற்றார்களை வெற்றி கொள்ளவேண்டுமென்று ஆலயங்களின் பூஜை செய்தவர்களில் பெரும்பாலோர் இந்து பண்டிதர்களே.

ஜெய்ப்பூர் மகாராஜாவின் மகளைத்தானே அக்பருக்கு மணமுடிக்கப்பட்டது. அதே ஜெய்ப்பூர் மகாராஜாதான் பல போர்களின் அக்பரின் படையை தலைமை தாங்கிச் சென்றது. அன்றைக்கு ஏன் மதம் அவர்களுக்கு மத்தியில் குறுக்கே நிற்கவில்லை? அக்பரின் மதம் என்ன என்று அன்றைக்கு எந்த ராஜ புத்திர மன்னனும் பார்க்கவில்லை, மாறாக அவனை வெறும் மன்னனாகத்தான் பார்த்தார்கள். (1)

அக்பருக்கு வேண்டுமானால் மதம் அவசியமில்லாமல் இருந்திருக்கலாம், காரணம் ஆட்சி அதிகாரம் வேண்டும். ஆனால் பாரதத்தின் புனிதம் பாழ்படுத்த காரணாமாயிருந்த பாபரின் மகன் ராஜ புத்திரர்களுக்கு ஏன் அவசியமானான்?. அன்றைய அதிகார அவசியங்களுக்கு தேவைப்படாத மதம், இன்றைக்கு ஏன் அவசியமாகிறது? யாருக்காக?

(தொடரும்)

References:
(1). http://www.royalfamilyjaipur.com/j_rul.htm

No comments: