Saturday, April 16, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 5

'ஹிப்போகிரஸி' என்ற வர்த்தை ஒரு காலத்தில் தீண்டத்தகாத வார்தையாக, அவமானக் குறியாக அறியப்பட்டது. அந்த வார்த்தையைக் கொண்டு யாரையாவது குற்றப்படுத்திப் பேசினால் பேசப்பட்ட மனிதர் அவமானப்பட்டதைப் போல் உணர்வார். ஆனால் இன்றைய அரசியல் உலகில் அந்த வார்த்தையைச் சொல்லி யாரையாவது பேசினால் அது அவரின் அரசியல் உயர்வைக் குறிப்பதைப் போல் பெருமைப் பட்டுக் கொள்ளும் அவல நிலைமையைத்தான் நாம் பார்க்கிறோம்.

அமேரிக்காவின் ஜார்ஜ் புஷ்ஷிலிருந்து இஸ்ரேலின் ஷரோன் வரை, ஒரு சூரியனுக்கு கீழ் இருக்கக் கூடிய எல்லா நாட்டின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும், ஆள்பவர்களும் ஹிப்போகிரஸிகளாகத்தான் மாறிப் போய்விட்டார்கள். வெட்கமில்லாத, கண்ணியமில்லாத அரசியல் தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வாழக்கூடிய நம்மிடத்திலும் இந்த 'ஹிப்போகிரஸி' இப்போது ஒரு பெருமைக்குரிய விஷயமாகிவிட்டதில் எந்தவித விந்தையும் இல்லை. எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற எண்ணம்தான் இபோதெல்லாம் மேலோங்கிவிட்டதே தவிர்த்து செல்லுகின்ற பாதை சரியாக இருக்க வேண்டும் என்ற அறச் சிந்தனையே அற்று போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு ஹிப்போகிரஸி (நயவஞ்சகன்) எழுதிய 'The Case for Democracy; The Power of Freedom to Overcome Tyranny and Terror' என்ற நூலைப் படித்துவிட்டு அமேரிக்காவின் ஜார்ஜ் புஷ் கண்ணீர் விடாத குறையாக ஜனநாயகத்தின் மேல் அளவு கடந்த பிரியம் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா? நாடன் ஷரன்ஸ்கி என்ற அந்த ஹிப்போகிரஸி எழுதிய நூலை அக்கு வேறு ணி வேறாக படித்து புரிந்துவிட்டு தற்போது கர்த்தருக்கு அடுத்த படியாக ஜனநாயகத்தைத்தான் தனது கடவுளாக ஏற்றுக் கொண்டு விட்டாரோ என்று நினைக்குமளவிற்கு ஜனநாயகப் பயித்தியம் பிடித்து விட்டது. அத்தோடு விடவில்லை, இந்த புத்தகத்தை 'is part of my DNA' என்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார் ஜார்ஜ் புஷ் (Rupert Cornwell - The Guardian).

அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று கேட்கலாம். அதில் என்ன இருக்கிறது என்பதற்கு முன்னால் அதை எழுதியவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. இந்த நாடன் ஷரன்ஸ்கி 19 வருடங்களுக்கு முன்பாக சோவியத் நாட்டைச் சேர்ந்த ஒரு யூத அரசியல் கைதி. 1986ம் வருடம் சோவியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி இந்த அரசியல் கைதி சோவியத் வெகு காலமாக கேட்டுக் கொண்டிருந்த ஒரு ரஷ்ய ஒற்றனுக்கு மாற்றாக (Prisoner Exchange) விடுதலை செய்யப்பட்ட ஒரு 'மனித உரிமைவாதி'. நாடன் ஷரன்ஸ்கி தற்போது இஸ்ரேலில் ஷரோனின் அமைச்சராக இருக்கிறார். அவருடைய புத்தகத்தில் அவர் சொல்லிய மிக முக்கியமான கருத்துக்களில் இரண்டை மட்டும் இங்கே கொடுக்க விரும்புகிறேன். காரணம் அந்த இரண்டு கருத்துக்கள்தான் அமேரிக்காவின் வெளியுறவு கொள்கையின் மிக முக்கியமான தூண்களாக தற்போது காட்டப்படுகிறது? (அவரை நான் ஏன் ஹிப்போகிரஸி என்று சொல்கிறேன் என்று இந்தப் பதிவிலே இன்னொரு இடத்திலே சொல்கிறேன்) அவர் சொல்லிய கருத்தில் தலையாயது இதுதான். (1) ஒன்று இந்த உலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப் படுகிறது. ஒன்று நல்லவர்கள் கூட்டம் இன்னொன்று தீயவர்கள் கூட்டம். (இதற்கு மத்தியில் யாரும் கிடையாது, அமேரிக்காவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் இருக்கக் கூடாது. இதைத்தான் அதிபர் புஷ் அவர்கள் 'either with us or against us' என்ற புகழ் பெற்ற வார்த்தைகளை ஆப்கான் யுத்தத்தின் போது முழங்கியது. (எவன் நல்லவன் எவன் கெட்டவன் என்ற குழப்பமிருந்தாலும் ஏதேனும் ஒரு கூட்டத்தில் சேர்ந்துக் கொள்ள வேண்டும்).

(2) ஜனநாயகவாதிகள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்ள மாட்டார்கள், காரணம் சுதந்திரச் சிந்தனையும் விடுதலை உணர்வும் கொண்ட மக்கள் தனது எண்ணங்களை வெளிப்படையாக தெரிவிப்பதால் கோடுங்கோல் ஆட்சியாளர்களை (சதாம் ஹ¤சைன் போன்றவர்களை) தன்னிஷ்டத்திற்கு செயல்பட அனுமதிக்க மாட்டார்கள். அதாவது மக்கள் சுதந்திரமாக செயல்படும்போது அவர்களுடைய உண்மையான விருப்பங்கள் வெளிப்படும், அந்த வெளிப்பாடுகள் கொடுங்கோல் ஆட்சி ஏற்படாமல் இருக்க வழி அமைக்கும்.

இப்படியெல்லாம் மக்கள் உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் குரல் கொடுக்கும் மிகப்பெரும் மனித உரிமையாளனாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு ரஷ்யாவின் சிறையில் இருக்கும் போது எழுதிய தனது சிந்தனைகளை புத்தகமாக வெளியிட்டு இஸ்ரேலில் தஞ்சம் புகுந்து அரசியலில் ஈடுபட ஆரம்பித்தவுடன் எங்கே போயிற்று இந்த மனித உரிமை முழக்கங்கள்?

இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை ஆரம்ப காலங்களில் எதிர்த்தவர்தான் இந்த நாடன் ஷரன்ஸ்கி. பிற்காலத்தில் அரசியலில் தனது சொந்த நலன்களை கருதி பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டார். அது மட்டுமல்ல இஸ்ரேலின் அரசு சார்ந்த நிறுவனங்கள் இவரை பிடித்து வாங்கு வாங்கு என்று அடி முதல் நுனி வரை துவட்டி எடுக்க பாலஸ்தீனர்கள் பற்றி பேசுவதையே நிறுத்திக் கொண்டார். இவர்களேல்லாம் எந்தவிதாமான ஜனநாயகவாதிகள்?

இவரின் இஸ்ரேல் வாழ்க்கையையும் அதில் அவர் வழங்கிய நேர்முக கருத்துக்கள், பேச்சுகள், பொதுவாழ்க்கையில் அவர் செய்யும் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சேகரித்து வரும் டாக்டர் இஸ்ரேல் ஷகாங் என்பவர் (இவர் சிறுவராக இருந்தபோது ஒரு காலத்தில் நாஜிக்களின் முகாம்களில் வதைக்கப் பட்டவர். இவர் founder of Israeli League for Civil and Human Rights) சொன்னதை நினைவு கூற விரும்புகிறேன். 'மனித உரிமைகளை இனத்திற்கும் நாட்டிற்கும் தகுந்தார்போல் நிர்ணயிக்கக் கூடிய இவரின் (நாடன் ஷரன்ஸ்கி) இந்த பாங்கு இவரின் முந்தைய மனித உரிமை முழக்கங்களை சந்தேகிக்க வைக்கிறது'. (Dr. James Zogby, Arab News, April 4, 05)

அமேரிக்காவின் NBC தொலைக்காட்சி நிறுவனத்தில் டாக்டர் ஜேம்ஸ் ஜொகபியும், நாடன் ஷரன்ஸ்கியும் ஒருமுறை சந்தித்துக் கொண்ட போது ஜேம்ஸ் இவரின் தற்போதைய நிலைபாட்டைப் பற்றி கேட்டபோது வார்த்தைகளை மென்று முழுங்கி கடைசியாக ஜெம்ஸிற்கு 'Palestine threat' பற்றி சரியாக புரியவில்லை என்று மழுப்பிவிட்டார் (Arab News April 4, 05). தொடர்ந்து ஜேம்ஸ் இது விஷயமாக பேசியபோது தலையை வேறு எங்கோ திருப்பிக் கொண்டு பதிலளிக்கவும் மறுத்து விட்டார்.

ஒரு யூதன் எங்கேனும் பாதிக்கப்பட்டால் அது மனித உரிமை மீறல்கள், அதே நேரம் ஒரு முஸ்லீம் பாதிக்கப்பட்டால் அதைக் கண்டு கொள்ளக் கூடாது - இதுதான் இந்த ஹிப்போகிரஸி நாடன் ஷரன்ஸ்கியின் மனித உரிமை சம்பந்தப்பட்ட கொள்கைகள். ஏன் இப்படி? அதிகாரம் வேண்டும், அரசியலில் முன்னேற வேண்டும். தான் ஒரு காலத்தில் சொன்ன தத்துவங்களையும், கொள்கைகளையும் தானே தின்று முழுங்கலாம், தவறில்லை, ஆனால் அரசியல் படிக்கட்டுகளில் முன்னேறியாக வேண்டும். இதற்குப் பெயர்தான் நயவஞ்சகம். இந்த நயவஞ்சகன் எழுதிய நூலை உயர்வாக சொல்லிக் கொண்டிருக்கும் இன்னொரு நயவஞ்சகன் ஜார்ஜ் புஷ். தான் சிறையில் வாடிய போது எழுந்த இந்த சுதந்திர சிந்தனைகள் விடுதலையானவுடன் வெறும் புத்தகத்தில் எழுதி விற்பதற்குத்தான் பயன்படும் என்பதை சொல்லாமல் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார் இந்த நாடன் ஷரன்ஸ்கி. 'Tyranny and Terror' என்பதை தனது சிறைக்காலங்களில் அனுபவித்த இந்த மேதை தினம் தினம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் அவதிப்படும் பாலஸ்தீனர்களைப்பற்றி கவலைப்படாத இந்த மனிதரை நயவஞ்சகன் (ஹிப்போகிரஸி) என்று சொல்வதில் எந்த தவறும் கிடையாது.

ஒரு சாதாரண மனிதன் எழுதிய இந்த புத்தகம் அதிபர் புஷ்ஷின் சிந்தனையை இவ்வளவு அதிகமாக கவர்ந்திருக்கிறதென்றால் என்ன காரணம்? ஏன் இப்படி ஜனநாயகத்தைப் பற்றி அதிபர் புஷ்ஷைவிட ஷரன்ஸ்கியின் ஜனநாயக விளக்கம் சுமார் 200 வருடகால அமேரிக்கா சுதந்திர விரும்பிகளுக்கு புதுமையாக இருக்க வேண்டும்?

ஒரே வாக்கியத்தில் சொல்லி விடாலாம். 'உலகை ஆள்வது அமேரிக்கா.. அமேரிக்காவை ஆள்வது இஸ்ரேல்..' அமேரிக்கவின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளும், செயல்களும் எப்படி ஜயனோசியக் கொள்கைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொண்டால் அமேரிக்காவின் மூன்றாவது லட்சியமான அரபு நாடுகளை இஸ்ரேலுடைய ஆதிக்கத்தின் கொண்டுவரும் திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இஸ்ரேலிய முதலாளிகளின், அரசியல் மாஸ்டர்களின் பிடிக்குள் இருக்கும் அமேரிக்கா இஸ்ரேலுக்காக, குறிப்பாக ஜயனோசியக் கூட்டங்களுக்குக்காக பணி செய்ய வேண்டிய நிர்பந்தமும் அவர்களின் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் தற்போது தலையாய கடமையாக இருக்கிறது.

(தொடரும்)

No comments: