Monday, August 15, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 10

இஸ்ரேலியர்களின் வரலாறு - ஜேக்கப்பின் இறுதி வாழ்க்கை மற்றும் ஜோசப்.

ஜேக்கப் இதற்கிடையில் தனது சகோதரன் இசாயுவை சந்திக்கிறார். இசாயு தனது பழைய பகைமையை மறந்து ஜேக்கப்பை தழுவிக் கொள்கிறார். ஜேக்கப்புடன் இருக்கும் பிள்ளைகளையும் பெண்களையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு இவர்களெல்லாம் யார் என்று கேட்க, ஜேக்கப் அவர்கள் அனைவரையும் சகோதரனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர்கள் எல்லோரும் ஜேக்கப்பின் மனைவி உட்பட இசாயுவிற்கு தலை வணங்குகின்றனர். அத்துடன் இசாயுவிற்காக தான் கொண்டுவந்த நூற்றுக் கணக்கான கால்நடைகளை அன்பளிப்பாக அளிக்கிறார்.

இசாயு சிறிது நாட்களில் பாலஸ்தீனுக்கு திரும்பிச் செல்ல ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கன் ஆன் தேசத்திற்குட்பட்ட ஷெச்சம் என்ற இடத்திற்கு வந்து சேருகிறார். ஷெச்சம் என்பது அங்கிருந்த ஒரு பெரிய மனிதனின் பெயராகும். அவரது பெயரில்தான் அந்த ஊர் அழைக்கப்படுகிறது. ஷெச்சனின் தந்தை ஹாமொர் என்பவரிடமிருந்து நூறு ஆடுகளை பரிவர்த்தனை செய்து கொண்டு பகரமாக கொஞ்சம் நிலத்தை பெற்றுக் கொள்கிறார் ஜேக்கப். தான் வாங்கிய இடத்தில் தங்குவதற்காக ஒரு தற்காலிக இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்கிறார். அந்த இடம்தான் ஜேக்கப் பல வருடங்களுக்கு முன்னதாக ஒரு பாறையில் அடையாளம் செய்து வைத்து சென்ற இடமாகும். அந்த இடத்தில்தான் அவர் உறங்கும் போதுதான் இந்த பூமி உனக்குச் சொந்தமானது என்று கனவில் தெரிய வந்த இறைவனால் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.(1)

எனவே, அந்த இடத்தில் தற்போது இறைவழிபாட்டிற்காக ஒரு ஆலயத்தை கட்டுகிறார் ஜேக்கப். அந்த ஆலயம்தான் பைத்துல் முக்கந்துஸ் என்று பெயர் பெருகிறது. அந்த இடத்தின் தற்போதைய பெயர் ஜெருசலம் என்பதாகும்.

ஜேக்கப் அவர்களால் எழுப்பப்பட்ட அந்த ஆலயம் பிற்காலத்தில் டேவிடுடைய மகனான சாலமன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டு இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் அங்கே தங்கியிருக்கும் போது ஜேக்கப்பின் மகளான டினாவுடன் ஷெச்சம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இந்தச் செய்தி ஜேக்கப் மற்றும் அவரது ஆண் மக்களுக்கு தெரியவருகிறது. பிறகு ஹாமொர் தனது மகனுக்காக டினவை பெண் கேட்டு ஜேக்கப்பிடம் வருகிறார். அப்போது டினாவின் சகோதரர்கள் அனைவரும் டினாவை ஹாமொரின் மகன் ஷெச்சத்திற்கு தர முடியாது, காரணம் ஷெச்சத்தில் வாழும் ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்யாதவர்கள், அவர்களுக்கு பெண் கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுகின்றனர். ஹாமொர் பிடிவாதம் செய்யவே, ஷெச்சத்தில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் விருத்த சேதனம் முதலில் செய்து கொள்ளுங்கள், பிறகு ஷெச்சதிற்கு தங்களின் சகோதரி டினாவை மணமுடித்து வைக்கிறோம் என்று சொல்ல ஹாமொர் சம்மதிக்கிறார். ஷெச்சத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்து கொள்கின்றனர்.

அவ்வாறு அவர்கள் விருத்த சேதனம் செய்த மூன்றாவது நாளில் அவர்கள் எல்லோரும் வலியால் படுக்கையில் இருக்கும்போது ஜேக்கப்பின் இரண்டு மகன்கள் அவர்கள் அனைவரையும் தனது வாளுக்கு இரையாக்கி கொன்று முடிக்கின்றனர். ஷெச்சத்தில் இருந்த அத்தனை ஆண்களையும் கொன்றதோடு நில்லாமல் அந்த ஊரை கொள்ளையடித்து ஆடு மாடுகள் இன்னும் என்னென்ன உள்ளனவோ அவையனைத்தையுன் அபகரித்துக் கொள்கின்றனர்.(2)

புனித நகரத்தில் (ஜெருசலத்தில்) வரலாற்றுப் பூர்வமான முதல் இரத்தக் களங்கள் உருவாகின. ஆண்கள் எல்லோரும் கொன்று குவிக்கப்பட்டு பெண்கள் மட்டும் உயிருடன் விட்டு வைக்கப்படுகின்றனர். நகரம் கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்திவிடப்படுகிறது.

இதற்கு பிறகு ராச்சல் பிள்ளைப் பேறு உண்டாகி ஜேக்கப்பிற்கு 12வது பிள்ளையாக பெஞ்சமின் என்பவரை பெற்றெடுக்கிறார். பிரசவத்தின் போது ராச்சல் மரணமடைகிறார். ஜேக்கப் ரச்சலை எப்ஃராத் என்னுமிடத்தில் அடக்கம் செய்து அந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வைக்கிறார். அப்படி வைக்கப்பட்ட கல் இன்றுவரை ராச்சல் அடக்கஸ்தலம் என்று அறியப்படுகிறது. எப்ஃராத் என்ற அந்த இடத்தின் தற்போதைய பெயர் பெத்லஹம் என்பதாகும்.

ஜேக்கப் பிறகு தனது குடும்பத்துடன் தனது தந்தை இஸ்ஹாக்கிடம் வந்தடைகிறார். பெரும் நோய் வாய்ப்பட்டிருந்த இஸ்ஹாக் சிறிது காலத்தில் மரணமடைந்து விடுகிறார். இஸ்ஹாக் மரணமடையும் போது அவரது வயது 180 என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன (3)

ஜேக்கப்பின் 12 மகன்களில் ஜோசப் தந்தையைப் போல் குணாதிசயம் கொண்டவராக வளர்ந்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் ஜேக்கப்பிடம் இருந்த அந்த புனிதத் தன்மை பொருந்திய மனிதராக இளைஞராக வளர்ந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மற்ற சகோதரர்களைப் பொல் அல்லாமல் தந்தை ஜேக்கப்பிடம் அதிக நேரம் இருப்பதும் அவருடைய இறைப்பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்வதுமாக வாழ்கிறார். இதனால் ஜேக்கப் மற்ற பிள்ளைகளை விட ஜோசப்பை அதிகமாக நேசிக்கிறார்.

ஏற்கனவே ஜேக்கப்பை அதிகமாக அவரது தாயார் நேசித்த போதும் இசாயுவை தந்தை இஸ்ஹாக் அதிகமாக நேசித்த காரணத்தால் எழுந்த குழப்பம் தீர்வுக்கு வந்த போது தற்போது ஜேக்கப்புடைய பிள்ளைகளின் மத்தியில் இப்போது இந்த புதிய குழப்பம் ஆரம்பமாகியது.

தந்தை ஜேக்கப் தனது சகோதரன் ஜோசப்பை மட்டும் அதிகம் நேசிக்க காரணமென்ன என்று துப்பறியத் தொடங்கினர் மற்ற சகோதரர்கள். அப்போது ஜோசப்பிற்கு உறக்கத்தில் கனவு ஒன்று தோன்றுகிறது. அக்கனவில் ஜோசப் பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும் மற்றும் சந்திரனையும் காண்கிறார். அவை அனைத்தும் ஜோசப்பின் முன்னால் மண்டியிட்டு வணங்குகின்றன. இதை ஜோசப் தனது தந்தை ஜேக்கப்பிடம் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட ஜோசப் இந்த கனவைப் பற்றியோ அல்லது தன்னிடம் இதை சொன்னதைப் பற்றியோ வேறு யாரிடமும், சொல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார். காரணம் இந்த கனவின் மூலம் ஜோசப் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட தூதராகும் அறிகுரி தோன்றுவதாக ஜேக்கப் எண்ணுகிறார்(4). ஜேக்கப் மகனுக்கு 'இறைவன் உன்னை இறைத்தூதராக தேர்ந்தெடுப்பான். உனக்கு கனவுகளின் விளக்கங்களை கற்றுக் கொடுத்து அவனது அருளை உன் மீது அதிகமாக்கி வைப்பான்' என்று அறிவிக்கின்றார். தூதாரானால் அல்லது ஜோசப் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மற்ற சகோதரர்கள் பொறாமை கொள்வார்கள், அதனால் ஜோசப்பை அவர்கள் கொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று தந்தை ஜேக்கப் பயம் கொள்கிறார்.

தூதர் என்ற அந்தஸ்தும் கௌரமும் அப்போது மிகவும் உன்னதமானது. அது தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு சகோதரரும் விரும்புவதும், அப்படி அது தனக்குக் கிடைக்காமல் போனால் கிடைக்கப் பெற்ற சகோதரனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தில் பகைமையாக உருவானது.

வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி 11 நட்சத்திரங்கள் ஜோசப்பின் சகோதரர்கள் என்றும் சூரியன் தந்தையாகவும் சந்திரன் தாயாகவும் ஜோசப்பின் முன்னல் வணங்கி நிற்கின்றனர் என்று ஜோசப்பின் கனவிற்கு விளக்கமளிக்கின்றனர். பைபிளில் இந்தக் கனவை ஜோசப் தனது தந்தை மற்றும் சகோதரர்களுக்கு தெரிவித்ததாக அறிவிப்பு உள்ளது(5).

இதனால் சகோதரர்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனை உருவாகிறது. ஜோசப்பின் காரணத்தால் தங்களுக்கு தனது பெற்றோர்களிடத்தில் அதிக பாசம் இல்லை செல்வாக்கு இல்லை என்று பொறாமை கொள்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் ஜோசப்தான் அவரை கொன்றுவிடலாமா ஆலோசனை செய்கின்றனர். தூதராக தேர்ந்தெடுக்கப்படுவது இறைவனின் உரிமைக்கு உட்பட்ட செயல் என்ற நிலை மாறி, தந்தை யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரே தூதராகும் அந்தஸ்தைப் பெற்றவர் என்ற எண்ணம் சகோதரர்களுக்கு மத்தியில் உருவாகிறது. இதற்கு காரணம் ஜேக்கபிற்கு தந்தை இஸ்ஹாக்கின் மூலம் கிடைத்த ஆசீர்வாதமே காரணம் என்ற தவறான சிந்தனையே.

அதில் ஒரு சில சகோதரர்கள், கொல்ல வேண்டாம் ஜோசப் இன்னும் சிறுவனாகத்தான் இருக்கின்றார், ஆதலால் எங்காவது காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடலாம் என்று மாற்று ஆலோசனை வழங்குகின்றனர். காட்டிற்கு அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் எறிந்துவிடலாம். எதேனும் வர்த்தகக் கூட்டம் கிணற்றில் இருக்கும் ஜோசப்பை பார்த்து அழைத்து சென்றுவிடுவார்கள். வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள்ளட்டும், ஆனால் நம்மிடத்தில் திரும்ப வரக்கூடது, எதற்காக ஒரு கொலையைச் செய்ய வேண்டும், அதிலும் அவர் நமது சகோதரர், எப்படியாவது ஜோசப்பை தங்களின் வாழ்விலிருந்து தூரமாக்கிவிட வேண்டும் முடிவு செய்கின்றனர். ஆனால், அவர்களின் பிரச்சனை எப்போதும் தந்தையுடனேயே இருக்கும் ஜோசப்பை எப்படி தனியாக அழைத்துச் செல்வது.. என்ன காரணத்தைச் சொல்லி தூரமாக கூட்டி செல்வது.. அப்படி எதையாவது சொன்னாலும் தந்தை நம்மை நம்பி ஜோசப்பை அனுப்பி வைப்பாரா என்றெல்லாம் ஆலோசனை செய்யலாயினர்.

இறுதியாக சகோதரர்கள் அனைவரும் ஜோசப்பை காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடுவது என்று முடிவெடுத்து தந்தை ஜேக்கப்பிடம் அனுமதி கேட்கச் சென்றனர். தந்தையோ அனுமதி தர மறுக்கிறார். காட்டில் ஒநாய் ஏதேனும் சிறுவன் ஜோசப்பை கொன்று தின்றுவிடும் என்று மறுக்கிறார். ஆயினும் சகோதரர்கள், பயப்பட வேண்டாம் நாங்கள் என்ன அப்படி பலமில்லாதவர்களா, நிச்சயம் ஒநாயிடம் எங்களின் சகோதரனை பலி கொடுத்துவிட மாட்டோம், எங்களுடன் வரட்டும், அவர் விளையாட வாய்ப்பு கொடுங்கள் என்று வாதம் செய்து தந்தையை சம்மதிக்க வைக்கின்றனர் (6).

அவர்கள் ஜோசப்பை அழைத்துக் கொண்டு காட்டிற்கு செல்கின்றனர். அங்கே வேண்டுமென்றே அவரை பின்னால் விட்டுவிட்டு முன்னால் தூரமாகச் செல்கின்றனர். பிறகு ஜோசப்பை அங்கிருக்கும் ஒரு பெரும் கிணற்றின் அருகில் நிற்க வைத்து அவருடைய சட்டையை மட்டும் கழட்டிக் கொண்டு அவரை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். பிறகு ஆடு ஒன்றை அறுத்து அதன் இரத்தத்தில் ஜோசப்பின் சட்டையை நனைத்து எடுத்து தந்தை ஜேக்கப்பிடம் எடுத்துச் சென்று அழுகின்றனர்.

எதிர்பாராமல் ஜோசப்பை அவர்கள் தனியாக விட்டுச் சென்றபோது ஒநாய் ஒன்று அவரை கொன்று தின்றுவிட்டது என்று அழுது செய்தியைச் சொல்கின்றனர்.(7)

ஜேக்கப் அவர்களின் செய்தியை நம்ப மறுக்கிறார். அவர்கள் காட்டிய ஜோசப்பின் சட்டை கிழியாமல் இருப்பதால் இது மற்ற மகன்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று வருத்தம் கொள்கிறார். இழந்த மகனுக்காகவும் அவர் திரும்ப கிடைக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்தித்துப் பொருமையைத் தேடுகிறார்(8). இந்த சரித்திரத் திருப்பம் இஸ்ரேலிகளை ஒரு புதிய இடத்திற்கு பயணம் செய்ய வைக்க இருப்பதை இறைவனே முற்றிலும் அறிந்தவனாக இருக்கிறான்.

இஸ்ரேலிகள், எப்போதெல்லம் இறைவனின் பக்கம் இருக்கின்றார்களோ அப்போதெல்லாம் அவர்கள் இறைவனின் பாதுகாப்பு பெற்றவர்களாகவும் உலகில் சுகமாக வாழ்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் இது போன்ற பொறாமையாலும், ஏமாற்றம் செய்வதாலும் அவர்கள் இறை ஆணையை புறக்கணித்து வாழும் போது பிரச்சனைக்கு உள்ளவதும் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இடத்தைவிட்டு வெளியேற்றப்படுவதுமாக அவர்களது வாழ்க்கை உருமாறி உள்ளதை இனி வரும் வரலாறு தெளிவாக தெரிவிக்கிறது. ஜேக்கபின் மகன்களில் ஜோசப் மட்டுமே இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப் படுகிறார். மற்ற மகன்களில் பெரும்பாலோர் சத்தியத்தின் பாதையில் இருந்தார்களா அல்லது தவறிப் போனார்களா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு பின்னால் வரும் வரலாற்றைப் பார்க்கும்போது அவர்கள் நேர்வழியிலிருந்து தவறியவர்களாகத்தான் இருக்குமோ என்ற ஐயம் வருகிறது. இறைவனே போதுமானவன்.

கிணற்றில் எரியப்பட்ட ஜோசப் அவ்வழியாக வரும் வர்த்தக் கூட்டம் தண்ணீர் இறைக்க எத்தனிக்கும் போது இச்சிறுவரைப் பார்த்து அவரை காப்பற்றுகின்றனர். அத்துடன் அவரை மறைவாக எடுத்துச் சென்று சொற்ப காசுகளுக்கு வேறொருவருக்கு விற்று விடுகின்றனர். ஜோசப்பை வாங்கிய ஒரு எகிப்திய மனிதர் ஜோசப்பை தனது மனைவியிடம் அழைத்துச் சென்று இச்சிறுவனை தனது மகனாக தத்து எடுத்துக் கொள்ளலாம், இவரை நன்றாக கவனித்துக் கொள் என்று தனது குடும்பத்தில் வளர்ப்பு மகனாக எடுத்துக் கொள்கிறார்(9)

பைபிளின் கூற்றுப்படி ஜோசப்பின் சகோதரர்கள் ஜோசப்பை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். ஆனால் அவ்வழியே வரும் வர்த்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஜோசப்பை கிணற்றிலிருந்து வெளியே எடுத்து, ஜோசப்பை அந்த வர்த்தக் கூட்டத்திற்கு 20 ஷெக்கல் பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று விடுகின்றனர்(10).

ஜோசப்பை விலைக்கு வாங்கிய அந்த மனிதர், எகிப்து நாட்டின் அதிபதியான பரோனிடம் நிதி அமைச்சரக பணியாற்றும் ஒரு பெரும் மனிதர்.

(தொடரும்)


1. Genesis (33)

2. Genesis (34)

3. Stories of the Prophets (page 225) by Ibn Khathir

4. Holy Quran (12:4-6)

5. Genesis (37)

6. Holy Quran (12:11-14)

7 & 8. Holy Quran (12:15-18)

9. Holy Quran (12:19-22)

10. Genesis (37)

வரலாற்றில் சில ஏடுகள் - 9

யூத குலத்தின் தொடக்கம் - ஜேக்கப்பின் ஹரன் வாழ்க்கை, திருமணம் மற்றும் மல்யுத்தம்.

இஸ்ஹாக்கின் வாழ்க்கையிலும் சரி அதைத் தொடர்ந்து வந்த ஜேக்கப்பின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களின் ஓரிறைக் கொள்கையின் செயல்பாட்டை அறிய முடியவில்லை. திருக் குரானிலும் அவர்களது வாழ்க்கைத் தொடர்பான அதிக குறிப்புகள் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை பொதுவாகவே வெறும் குடும்ப வாழ்க்கையாகவும் சகோதரர்களுக்குள் எழும் பூசல்களை விவரிக்கக் கூடிய வரலாறாகவே அறியமுடிகிறது.

முந்தைய நபிமார்கள் வரலாற்றிலிருந்து திருக் குரான் பெரும்பாலும் தேவையான செய்திகளை மட்டுமே சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஜேக்கப் போன்ற பல இறைத்தூதர்களின் பெயரையும் அவர்கள் இறைப்பணி செய்தவர்களாக இருந்தார்கள் என்று மட்டுமே சொல்வதுடன் அவர்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லாத காரணத்தால் பைபிளுடன் சேர்ந்து திருக் குரானிலிருந்து மேற்கோள்கள் எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை.

திருக் குரான் வரலாற்றைச் சொல்லும்போது அதை தெளிவாகவும், அழகாகவும் தேவையற்றச் செய்திகள் இல்லாமல் படிப்பினைகளை மட்டுமே அரிதியிட்டு வழங்குகிறது. ஆனால் அதே செய்திகள் பைபிளிலும், தோராவிலும் (பழைய ஏற்பாட்டிலும்) சொல்லப்படும்போது அது கிட்டத்தட்ட பல இடைச் செருகல்களுக்கு உட்பட்டு, மனித கையாடல்கள் செய்யப்பட்ட ஒரு சரித்திர புத்தகம் போல் இருக்கிறதே தவிர்த்து வேத புத்தகம் போல் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

இறைவனும் திருக் குரானில் 'வரலாறுகளில் மிக அழகியதை நாம் உமக்கு கூறுகின்றோம்'(1) என்று மனித குலத்திற்கு தேவையானதை மட்டும் முந்தைய இறைத்தூதர்களின் வரலாறுகளையும் மற்றும் இன்னும் பிற பல வரலாற்றுச் செய்திகளையும் கருத்துக்களுக்கு உட்பட்டே வழங்குகிறான்.

ஜேக்கப் தனது தாய் மாமனான லபான் வாழும் ஹரன் வந்தடைகிறார். அங்கே லபானிடமிருந்த ஆடு மாடுகளை மேய்ப்பவராகவும் அதைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுத்தப் படுகிறார். 4000ம் வருடங்களுக்கு முன்பு சிறந்த பொருளாதாரம் என்பது கால் நடைகள் மட்டுமே. விவசாயத்தைவிட கால் நடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம்.

ஜேக்கப் அங்கு வாழ்ந்து வரும்போது லபானின் இரண்டாவது மகளான ராச்சல் மீது காதல் கொள்கிறார். ராச்சல் தன் சகோதரி மூத்தவள் லியாவை விட அழகிலும் அறிவிலும் சிறந்தவாரக இருக்கவே ஜேக்கப் ராச்சலை விரும்புகிறார். ராச்சலை தனக்கு திருமணம் செய்துதர லபானிடம் வேண்டுகிறார். ராச்சலை மணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் தன்னிடம் ஏழு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று லபான் கட்டளை இட ஜேக்கப் ஏற்றுக் கொள்கிறார். ஏழு வருடங்கள் கழித்து லபான் தனது மகளை திருமணம் செய்துவிக்கிறார். முதலிரவும் நடந்து முடிகிறது. ஆனால் காலையில்தான் ஜேக்கபிற்கு புரிகிறது தன்னுடன் முதலிரவில் இருந்தது ராச்சல் அல்ல லபானின் முதல் மகள் லியாஹ் என்று. இதனால் சோகமடைந்த ஜேக்கப் லபானிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றியதை முறையிடுகிறார். மூத்தவள் இருக்க இளையவளை திருமணம் செய்து தருவது எங்கள் பரம்பரையில் வழக்கமில்லை என்று காரணம் கூறுகிறார். தன்னிடம் இன்னும் ஏழு வருடங்கள் தொடர்ந்து வேலை செய்தால் ராச்சலை திருமணம் செய்து தருவதாக லபான் வாக்களிக்க ஜேக்கப் இன்னும் ஏழு வருடங்கள் அங்கேயே தங்கி வேலை செய்கிறார்.

ஏழு வருடங்கள் கழிந்தபின் ராச்சலையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலக் கட்டங்களில் ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இருந்தது. ஆனால் மோசஸ் (மூசா நபி) இறைத்தூதர் மூலமாக இறைவன் அருளிய தோர என்று அழைக்கப்படும் (தவுரா) வேதத்தின் படி ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்வது கூடாது என்று தடுக்கப்படுகிறது. ஒருவள் மரணமடைந்து விட்டால் மற்றொருவளை திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் ஒருத்தி உயிருடன் இருக்கும்போது இன்னொருத்தியை திருமணம் செய்யக்கூடாது. திருக் குரானிலும் அதே சட்டம் சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இதன் பிறகு லபான் தனது மூத்த மகள் லியாவிற்காக ஜில்பா என்பவளையும், ராச்சலுக்காக பில்ஹா என்பவளையும் அடிமைகளாக ஜேக்கபிற்கு அன்பளிப்பாக வழங்குகிறார்.(2) நீண்ட காலமாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த முதல் மனைவி லியாவின் மூலமாக முதன்முறையாக குழந்தை பிறக்கிறது. இதனால் பொறாமை அடைந்த ராச்சல் தன் மூலமாகவும் பிள்ளை பிறக்காததால் தனது அடிமையான பில்ஹாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து பில்ஹா குழந்தை உண்டாகிறார். இதை அறிந்த லியாஹ் தன் பங்கிற்கு தனது அடிமையான ஜில்பாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து அவளும் குழந்தை பெற்றெடுக்கிறாள். பிறகு ராச்சலும் குழந்தைப் பெற்றெடுக்கிறார். இவ்வாறு ஜேக்கப் தனது நான்கு மனைவிகள் மூலமாக 12 பிள்ளைகளுக்கு தந்தையாகிறார்.(3) இந்த 12 பிள்ளைகளும் பிற்காலத்தில் 12 யூத கோத்திரங்களாக பல்கி பிரிந்து செல்கின்றனர்.

12 பிள்ளைகளில் குறிப்பிடத்தக்கவர்கள் ராச்சல் ஈன்றெடுத்த ஜொசப் (யூசுப்) மற்றும் பெஞ்சமின் இருவருமாகின்றனர்.

ஏறக்குறைய இருபது வருடங்கள் ஹரனிலேயே வாழ்ந்து வந்த ஜேக்கப் தனது தந்தையிடம் திரும்ப நினைக்கிறார். லபானிடம் தனது மனைவியரிடமும் அதைத் தெரிவித்து லபானிடமிருந்து சில குறிப்பிட்ட ஆடு மாடுகள் மற்றும் இன்னுமுள்ள கால்நடைகளைப் பெற்றுக் கொண்டு பாலஸ்தீனை நோக்கி திரும்ப ஆயத்தம் செய்கிறார்.

தான் பெற்றுக் கொண்ட கால்நடைகளை அதிகமாக்க வேண்டி ஜேக்கப் சில வழிகளை கையாள்கிறார். தனக்கு பங்காக கிடைத்த அந்த கால்நடைகளை பிரித்து அவைகளை தனித்து மூன்று நாட்கள் நடந்து செல்லக்கூடிய தொலைவிற்கு வெறு இடங்களுக்கு மேய்ச்சலுக்காக நடத்திச் செல்கிறார். அங்கே போப்லார் (Poplar), அல்மாண்ட் (Almond) மற்றும் பிளான் (Plane) மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி அவைகளின் பட்டைகளை உரித்து அக்கிளைகளை கால்நடைகள் நீரருந்தும் தண்ணீர் கிடங்குகளில் போட்டு வைக்கிறார். கால்நடைகள் வெயில் நேரங்களில் தாகத்துடன் அங்கு நீர் அருந்தியவுடன் அவைகள் உடலுறவு கொள்கின்றன. அவைகளின் மூலம் அந்த கால்நடைகள் உடனுக்குடன் கருத்தரிக்கின்றன. இதனால் ஜேக்கப்பிடமிருந்த கால்நடைகள் குறைந்த காலத்தில் அதிகமாக பெருகின என்று பைபிள் கூறுகிறது. (4)

(கால்நடை அபிவிருத்திச் செய்யக்கூடியவர்கள் இந்த முறையை கையாண்டு பார்ப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இந்த மரங்களின் தமிழ்ப் பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை).

தனது தமையன் இசாயுவை சமாளிக்க வேண்டி அதில் சில கால்நடைகளை அவருக்கு பரிசாகவும் எடுத்துச் செல்கிறார். அதில் நூற்றுக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களுமாக தனக்கு முன்னால் அனுப்பி வைக்கிறார். அத்துடன் இந்த கால்நடைகளை நடத்திச் செல்லக்கூடிய அடிமைகள் இசாயுவை சந்திக்க நேர்ந்தால் 'இவை அனைத்தும் உங்களின் (இசாயுவின்) அடிமையான ஜேக்கபிற்கு சொந்தமானது. இவை அனைத்தையும் அவர் உங்களுக்காக (இசாயுவிற்காக) அன்பளிப்பாக கொடுக்கச் சொன்னார்' என்று சொல்ல வேண்டுமென்ற கட்டளையுடன் அனுப்பி வைத்தார்.

ஜேக்கப் இரவில் பயணம் செய்வதும் பகலில் இசாயுவிற்காக பயந்து மறைந்துக் கொள்வதுமாக இரண்டு தினங்களை பயணத்தில் கழிக்கிறார். தனக்கு முன்னால் அனுப்பிய கால்நடைகளை இசாயு பெற்றுக் கொண்டார் என்று தெரிந்தால் ஒழிய தான் பகலில் பயணம் செய்வதில்லை என்று இரவில் பதுங்கி பதுங்கி பாலஸ்தீன் நோக்கி பயணம் செய்கிறார்.

அதிகாலை நேரத்தில் அவர் பயணம் செய்யும்போது ஓரிடத்தில் அவர் ஒரு மனிதருடன் மல்யுத்தம் செய்ய நேரிடுகிறது. மல்யுத்தம் காலைவரை தொடர்கிறது. அம்மனிதனால் ஜேக்கப்பை தோற்கடிக்க முடியவில்லை. முடிவில் ஜேக்கப் மல்யுத்தத்தில் வெற்றி பெருகிறார்.

மல்யுத்தம் முடிந்தவுடன் அம்மனிதர் ஜேக்கப்பைப் பார்த்து நீ ஒரு வழிப்போக்கனைப் போல் தெரிகிறாயே, உனது பெயர் என்ன என்று கேட்க, ஜேக்கப் தனது பெயரை அவரிடம் சொல்கிறார். உடனே அம்மனிதர், ஜேக்கப்பைப் பார்த்து, உனது பெயர் ஜேக்கப் அல்ல இன்றிலிருந்து உனது பெயர் இஸ்ரவேல் என்று அறிவித்து தான் ஒரு மனிதன் அல்ல, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வானவர் என்று அறிவித்து மறைந்து விடுகிறார். அன்று முதல் ஜேக்கப் இஸ்ரவேல் என்றே அறியப்படுவதுடன் அவரது 12 பிள்ளகளும் இஸ்ரவேலர்கள் என்றே அழைக்கப் படுகின்றனர். (5)

வில்லியம் நெய்ல் என்பவர் எழுதிய One Volume Bible Commentry யில் பக்கம் 59ல் ஜேக்கப் தேவதூதருடன் போரிட்டதாக சொல்லாமல் இறைவனுடனே போரிட்டதாக எழுதுகிறார். கடவுள் பூமிக்கு மனித ரூபம் எடுத்து வந்து ஜேக்கப்புடன் மல்யுத்தம் செய்ததாகச் சொல்கிறார். ஏறக்குறைய கடவுளையே தோற்கடித்ததாகவும் எழுதுகிறார். அதன் காரணமாகத்தான் ஜேக்கப்பிற்கு இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஜேக்கப் இறைவனையே மல்யுத்ததில் தோற்கடித்தாரா அல்லது இறைவனின் தேவதூதனை தோற்கடித்தாரா என்ற ஆராட்சிக்கு செல்ல விரும்பவில்லை. மல்யுத்தத்தின் மூலம் இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததுடன் நிறுத்திக் கொண்டு, இதன் பிறகு இந்த வரலாற்றுக் கட்டுரையை 'யூதர்களின் வரலாறு' என்ற தலைப்பிலிருந்து இனி 'இஸ்ரேலியர்களின் வரலாறு' என்று மாற்றித் தொடர்கின்றேன்.

(தொடரும்)

1. Holy Quran (12:3)

2. Genesis (29)

3. Stories of Prophets (Page 221) by Ibn Khathir

4. Genesis (30)

5. Genesis (32)

வரலாற்றில் சில ஏடுகள் - 8

யூத குலத்தின் விசித்திரமான ஆரம்பம்

யூத குலத்தின் தொடக்கமே ஒரு அமர்க்களமான தொடக்கமாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. ஆப்ரஹாமின் இரண்டாவது மகனான இஸ்ஹாக்கின் மகன் ஜேக்கப் அவர்களின் பிள்ளைகள்தான் பல கோத்திரங்களாக பிரிந்து யூதர்கள் என்று உலகிற்கு அறிமுகமாகின்றார்கள். உலகம் அறியப்படுகிற இந்த ஜேக்கப்பின் துவக்கம் அதாவது கடவுளுக்கு நெருங்கியவராக அல்லது கடவுளின் அருள் முற்றிலும் பெற்றவராக அல்லது கடவுளின் அருளிற்கு பாத்திரமானவராக அவர் மாறுவதற்கு அவரது தந்தை இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே காரணாமாயிருந்ததாக ஆதியாகாமம் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கின் பரிந்துரையின் பெயரால்தான் ஜேக்கப் கடவுளின் அருளுக்கும் இன்னும் இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார் என்பது விந்தையாக உள்ளது.

இஸ்ஹாக் தள்ளாத வயதை எட்டிய காலத்தில் தனது ஆசீர்வாதத்தை தனது மூத்த மகன் இசாயுவிற்கு தர விரும்பினார். அவ்வாறு தனது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் தான் மிகவும் நேசிக்கும் தலை மகன் இசாயுவிற்கு தருவதன் மூலம் இசாயு இறைவனின் அங்கீகாரம் பெற்ற மனிதராக, இறைத் தூதராக, தனக்கு (இஸ்ஹாக்கிற்கு) சமூகத்தில் இருந்த அதே கௌரவத்தை பெற்றவராக, தனக்குப் பிறகு தனது கொள்கைகளை சரிவர நடத்திச் செல்லவும் சமூகத்தை தலைமைத் தாங்கிச் செல்லவும் இசாயுவால் இயலும் என்று இஸ்ஹாக் விரும்பினார். ஆகவே தன்னிடம் இது நாள் வரை இருந்த அந்த புனிதத் தன்மையை தனது மூத்த மகனுக்கு அளிக்க விரும்பினார். ஆனால் அவரது கண் பார்வையோ மங்கிப் போயிருந்தது (1).

ஆகவே, இஸ்ஹாக் தனது மூத்த மகன் இசாயுவை அழைத்து 'மகனே இசாயு, நீ வேட்டையாடுவதில் வல்லவன். ஆகவே எனக்காக ஒரு காட்டு விலங்கை வேட்டையாடி நல்ல ருசியான உணவாக சமைத்து கொண்டுவா. அதை நான் உண்டு முடித்து எனது ஆசீர்வாதத்தை உனக்கு அளிக்க விரும்புகிறேன்' என்று சொல்லி இசாயுவை வேட்டையாட அனுப்பி வைத்தார் இஸ்ஹாக். இதை மறைவாக நின்று செவியுற்ற ரெபெக்கா, இஸ்ஹாக்கின் மனைவி, அதிர்ந்து போய், இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் தான் அதிகம் நேசிக்கும் இரண்டாவது மகனான ஜேக்கப்பிற்கே கிடைக்க வேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினார்.

மகன் ஜேக்கப்பை அழைத்து தாய் ரெபெக்கா, 'மகனே ஜேக்கப், உனது வயதான தகப்பனார் தனது ஆசீர்வாதத்தை இசாயுவிற்கு தர விரும்புகிறார். நீ உடனே இரண்டுவிதமான ஆடுகளை பிடித்து அறுத்துக் கொண்டுவா. நான் அவைகளை சமைத்து நல்ல உணவாக்கி உன்னிடம் தருகிறேன். நீ அதை உனது தந்தை இஸ்ஹாக்கிற்கு பரிமாறி அவரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்' என்று ஜேக்கப்பை தயார் செய்தார் (சதிகார) தாய். (இது ஆதியாகாமத்தில் பதியப்பட்டுள்ள வேத மொழிகளே. ஆனால் இந்த சதி இப்படி அரங்கேறியிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை).

ஜேக்கப் உணவுடன் தந்தையிடம் செல்ல, இஸ்ஹாக்கின் மங்கிய பார்வையின் காரணமாக வந்தவரிடம் 'யார் நீ?' என்று கேட்க, ஜேக்கப் 'உங்களின் மகன்' என்று சொல்கிறார். இஸ்ஹாக் அருகில் வந்து ஜேக்கபின் கைகளைத் தொட்டுப் பார்த்து 'குரல் ஜேக்கப்பைப் போல் இருக்கிறது, ஆனால் கைகளோ இசாயு போல் இருக்கிறது' என்று கூறிவிட்டு ஜேக்கப் பரிமாறிய உணவை இஸ்ஹாக் உண்ணுகிறார்.

உணவு உண்டு முடித்து, தனக்கு முன்னால் அமர்ந்திருப்பது இசாயு என்பதை அறியாமல் ஜேக்கப்பிற்கு தனது ஆசீர்வதத்தை அளிக்கிறார். 'நீ மற்றெவரையும் விட சிறப்பானவனாக இருப்பாய். உனது சகோதரர்களைவிட நீயே வல்லமை பெற்றவனாக இருப்பாய்' என்று ஆசீர்வதிக்கிறார்.(2)

யூத குலத்தின் பிதா தனது தந்தையை ஏமாற்றி அவரின் ஆசீர்வாதம் பெறுவதாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. என்ன ஒரு விசித்திரமான யூத குலத்தின் தொடக்கம். ஆரம்பமே பிறரை ஏமாற்றுவதில் தொடங்கும் சரித்திரமாக அமையப் பெற்றுள்ளது. இதன் மூலம் யூத குலத்தில் பிறந்தவர்களுக்கு சொல்லப்படும் படிப்பினைதான் என்ன? ஆண்டவனையே ஏமாற்றலாம் என்பதா? அல்லது ஏமாற்று வேலை செய்வதில் தவறில்லை என்பதா? ஆண்டவனையே ஏமாற்றலாம் அதில் தவறில்லை என்றால் இந்த உலகில் வேறு யாரை வேண்டுமானலும் ஏமாற்றலாம் அதில் குற்றமில்லை!

இஸ்ஹாக்கின் தகப்பனாரான ஆப்ரஹாம் தனது இளவயது முதல் மரணம் அடையும் வரை பல சிரமங்களும், வேதனைகளும் அடைந்து இன்னும் சொல்லப்போனால் தனது இளவயதில் நெருப்பிலே தூக்கி எறியப்பட்டார். இப்படி பல கொடூரமான நிலைகளிலும் அவர் மனிதர்களை தவறான பாதையில் விட்டு ஏக இறைவனின் பக்கம் அழைத்தவராகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். தியாகங்கள் பல செய்து தனது குடும்பத்தையும் தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் ஓரிறை பக்கம் கொண்டுவந்து தனது சந்ததியை உருவாக்கினார். அத்தோடு நில்லாமல் ஓரிறைவனை வணங்கும் கூட்டமாக தனது சமூகத்தையும் மாற்றி அமைத்தார். அவ்வாறு வாழ்நாள் முழுவதும் கஷ்டமடைந்த அவருக்கு இறைவனைத் தவிர்த்து வேறு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. அவ்விறைவனின் உதவி கூட பல்வேறு இறைச் சோதனைகளுக்குப் பின்னரே அவருக்குக் கிடைத்தது. ஆதியாகாமத்தில் ஜேக்க்ப் தனது தந்தை இஸ்ஹாக்கை ஏமாற்றுவதன் மூலம் அவ்விறைவனின் அருளைப் பெற்றவராகிரார் என்ற இந்த சரித்திர வேதத்தின் கூற்று ஏற்றுக் கொள்ள இயலாததாகத்தான் என்னைப் போன்றவர்களுக்கு தெரிகிறது. நிச்சயம் ஜேக்கப் என்ற இறைத்தூதர் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்பதே (இந்தக் கட்டுரையை எழுதியவன் என்ற முறையில்) எனது கருத்து.

ஆப்ரஹாம் இஸ்மாயிலையும் இஸ்ஹாக்கையும் வளர்த்தபோது இறைவனின் உதவி அவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர்களது செயல்களை இறைவனின் பக்கமே பணி செய்ததாக இருக்குமாறு அமைத்தாரே தவிர்த்து தனது ஆசீர்வாதத்தால் மட்டுமே தனது பிள்ளைகளின் வாழ்வில் இறைவனின் அருளை கொண்டுவரவில்லை. மாறாக அவர்களது செயல்களில் ஓரிறைவனின் கொள்கையை நிலைக்கச் செய்து அவர்களின் வாழ்க்கை மற்றும் நடைமுறை வழியாக இறைவனின் ஆசீர்வாத்தைதை பெற வைத்தார். இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கைவிட இறைவனின் தோழர் என்று அழைக்கப்பட்ட ஆப்ரஹாம் தனது தந்தைக்கு ஓரிறை சிந்தனை வரவேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்ய முடிந்ததே தவிர்த்து தனது தந்தை நாளை இறைவனின் முன்னால் குற்றவாளியாக நிற்பதை தடுக்கும் சக்தியற்றவராக இருந்தார். ஆனால் அவரது மகனோ தனது ஆசீர்வாதத்தின் மூலம் அவரது மகனான ஜேக்கப்பிற்கு இறைவனின் தூதர் பதவியை அடையச் செய்தார் எனும் ஆதியாகாமத்தின் வரிகள் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

ஆனால் இஸ்ஹாக்கின் மைந்தனான ஜேக்கப்பிற்கு இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் அதாவது தன் மூலமாக தனது மகனுக்கு இறைவனின் அருளை நிலைநிறுத்தச் செய்ய அவரின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானதாக இருந்ததாக பைபிளின் ஆதியாகாமம் அறிவிப்பதுதான் விந்தையாக இருக்கிறது.

இறைவனின் அருளுக்கு முற்றிலும் பாத்திரமான ஒருவரின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தால் ஒரு மனிதன் இறைவனின் அருளுக்கு தகுதியானவனாக மாறலாம் என்று ஆதியாகமத்தின் மூலம் அறிய முடிகிறது?

ஜேக்கப்பின் வாழ்க்கையைப் பற்றி திருக் குரானில் அதிகமான விளக்கங்கள் இல்லாத காரணத்தால் ஆதியாகாமத்தின் இந்த கூற்றினை சரி பார்க்க இயலாமல் போகிறது. அதே நேரம் ஆதியாகாமத்தில் உள்ளதை உள்ளபடி கூறுவதன் மூலமே இந்த யூத குலத்தின் சரித்திரத்தை வேதங்களின் வழியாக கொடுக்க முடியும். அவை அறிவிற்கு ஏற்றுக் கொள்ள இயலாமல் போனாலும் இருக்கின்ற வேதங்களின் வழியாகத்தான் இந்த வரலாற்றைச் சொல்ல முடியும்.

(எனது கருத்துப்படி ஆதியாகாமத்தில் சொல்லப்படுகின்ற இந்த சரித்திரக் கதை மனிதர்களால் பிற்காலத்தில் பைபிளில் செய்யப்பட்ட இடைச்செருகலாக இருக்கலாம். கரணம் திருக் குரானில் ஜேக்கப் ஒரு இறைத்தூதராக யாகூப் என்ற பெயரில் சொல்லப்படுகிறது. அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இறைவனே போதுமானவன், அவனே முற்றிலும் அறிந்தவன். அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவரது தகப்பனாரான இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானது என்ற ஆதியாகாமத்தின் கூற்று ஏற்புடையதாகத் தெரியவில்லை. நல்லது, இப்போது சரித்திரத்திற்கு வருகிறேன்.)

ஜேக்கப் இவ்வாறு தனது தந்தையின் ஆசீர்வாததைப் பெற்று வெளியேறியவுடன் இசாயு தன் தந்தையிடம் வருகிறார். ஆனால் எல்லாம் முடிந்து போயிற்று. தனது தந்தையின் மூலம் நிகழ்ந்ததை அறிந்து வேதனைப் படுகிறார். தந்தை இஸ்ஹாக்கும் தனது மூத்த மகன், மிகவும் நேசித்த மகன் இசாயுவிற்காக கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.(3)

இதனால் கோபமடைந்த இசாயு தமையன் ஜேக்கப்பை கொலை செய்யப்போவதாக கோபத்துடன் ஜேக்கப்பைத் தேடி புறப்படுகிறார். இதை அறிந்த ரெபெக்கா மகன் ஜேக்கப்பை அழைத்து ஹரனில் வசித்துக் கொண்டிருக்கும் தனது சகோதரன் லபானிடத்தில் சென்று தஞ்சம் பெற்றுக் கொள்ளுமாறு அனுப்பி விடுகிறார்.

இசாயு தான் இழந்து போன இந்த நிலையை எண்ணி வருத்தமுற்று தனது பெரிய தந்தை இஸ்மாயிலின் இடத்திற்கு சிறிது காலம் சென்றுவிடுகிறார். அங்கே இஸ்மாயிலின் மகளை திருமணம் முடித்து வாழ்ந்ததாக(4) வரலாறு மூலம் அறியமுடிகிறது.

ஜேக்கப் ஹரன் செல்லும் வழியில் இரவில் ஓரிடத்தில் உறக்கம் கொள்ளும் போது இறைவன் கனவில் தோன்றி, 'நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் சந்ததியினருக்கும் தருவதாக' வாக்களிக்கிறார்(5). இது இறைவனால் ஜேக்கப்பிற்கு அளிக்கப்பட்ட முதலாவது வாக்குறுதி, ஆதியாகாமத்தின் படி. (இதைத் தொடர்ந்து மோசஸுக்கும் இறைவன் வாக்களிக்கிறார். அதில் அந்த இடம் கொஞ்சம் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. அதை பிறகு பார்ப்போம்.)

இந்தக் குறிப்பிட்ட வேத வசனத்தின் மூலமாகத்தான் இஸ்ரேலியர்கள் 'பாலஸ்தீனத்தை கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமி' என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த குறிப்பிட்ட வசனத்தின், வேதத்தின் வரிகளை தங்கள் இஷ்டம் போல் மாற்றி, பின் குறிப்பு இன்னும் விளக்கங்கள் என்ற பெயரில் காலம் காலமாக இடைச்செருகல்கள் செய்து வரலாற்று மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பதையும் இக்கட்டுரையின் பிரிதொரு பகுதியில் அறியத்தருகிறேன்.

உறக்கம் கலைந்து எழுந்த ஜேக்கப் மிகவும் மகிழ்ந்து தான் உறங்கிய இடத்தில் சில அடையாளங்களை ஏற்படுத்துகிறார். பிற்காலத்தில் அதே இடத்தில்தான் மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் ஆலயத்தை எழுப்புகிறார். இந்த ஆலயம்தான் தற்போது மூன்று (யூத, கிறிஸ்துவ, முஸ்லீம்) மதத்தினராலும் ஜெருசலத்தில் சொந்தம் கொண்டாடப்படுகிற ஆலயமாகா திகழ்கிறது.

(தொடரும்)

1. Genesis (27:1)

2 & 3. Gnesis (21:1-38)

4. Songs (84: 5-6)

5. Genesis (28:13)

Wednesday, August 10, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 7

யூத குலத்தின் தொடக்கம் - இஸ்ஹாக்கின் பிறப்பும் ஆப்ரஹாமின் மறைவும்
ஆப்ரஹாமின் இல்லத்திற்கு அவருக்கு அறிமுகமில்லாத ஒரு சிலர் வருகை தந்தனர். அவர்களை விருந்தினர்களாக வரவேற்று, ஒரு கொழுத்த கன்றுக் குட்டியை உணவாக்கி அவர்களை உபசரிக்கிறார் ஆப்ரஹாம். ஆனால் வந்தவர்கள் அந்த உணவை உண்ணாமல் அல்லது அவர்களது கைகள் உணவுகளை நாடிச் செல்லாமல் இருக்க ஆப்ரஹாம் அதிர்ச்சியுற்று, வந்தவர்களின் மேல் பயம் கொள்கிறார். இதை கண்ணுற்ற விருந்தினர்கள், 'பயப்பட வேண்டாம், நாங்கள் உங்களுக்கு ஓர் நற்செய்தி கொண்டு வந்துள்ளோம்' என்று அறிவித்து, ஆப்ரஹாமிற்கும் சாரவிற்கும் ஒரு ஆண்மகவு பிறக்கும் என்று அறிவித்தார்கள் (1)

இதே செய்தி பைபிளில்(2) இடம் பெற்றுள்ளது. ஆனால் அதில் விருந்தினர்கள் (தேவ தூதர்கள்) உண்ணுவதைப் போல் நடித்தார்கள். அவர்களுக்கு முன்னால் இருந்த அந்த உணவு மறைந்த்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. தேசங்களும் ராஜாக்களும் அந்த மகனிலிருந்து உருவாகுவார்கள் (3) என்றும் கூறுகின்றது.

இதைக் கேட்ட ஆப்ரஹாமும் சாரவும் திகைத்து நின்றனர். இந்த வயதான காலத்தில் அதிலும் 100 வயதைத் தாண்டிய ஆப்ரஹாமும் 90 வயதை நெருங்கிய சாராவும் எப்படி பிள்ளைப் பேறு பெறமுடியும் என்று ஆச்சர்யப்பட்டனர்.

நல்லவர்களில் வழிகாட்டியாக இஸ்ஹாக் இருப்பார் என்று இறைவன் ஆப்ரஹாமிற்கு நற்செய்தி கூறினான். ஆப்ரஹாமின் மீதும் இஸ்ஹாக்கின் மீதும் இறைவனின் அருள் நிலைத்திருக்கும். அவர்களின் சந்ததியிலிருந்து நல்லவர்களும் தீங்கிழைத்துக் கொள்வோரும் இருப்பார்கள் என்று தெரிவித்தார்கள் (4)

இறைவனின் இந்த வாக்கு ஆப்ரஹாமிற்கு மகிழ்வை தந்தது. ஆனால் அதன் இறுதியில் அமைந்த 'சில வழிகேடர்களும் இருப்பார்கள்' என்ற வார்த்தை பிற்காலத்தில் வர இருக்கும் குழப்பத்திற்கு எச்சரிக்கைச் செய்யப்பட்டதைப் போல் இருந்தது. வழிகேட்டில் இருந்தவர்கள், தங்களுக்கு தங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்கள், காலப்போக்கில் பிறரை வழி கெடுப்பவர்களாக மாறியதோரு நில்லாமல் தான் வந்த வழியை மறந்தவர்களாகவும் ஆனார்கள் என்பதை இந்த வரலாற்றின் வளர்ச்சியில் பார்க்கலாம்.

ஒரே குடும்பம், ஒரே சிந்தனை, ஒரே வணக்கம், ஒரே கடவுள் என்று ஆப்ரஹாமின் குடும்பம் இறைச்சேவையில் தங்களை முழுதாக இணைத்துக் கொண்டு தான் வசித்த மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மனிதர்களை ஓர் இறைவன் பக்கம் அழைத்தவர்களாக வாழ்ந்தார்கள். நல்லதை ஏவுவதும் தீமையைத் தடுப்பதுமாக வாழ்ந்த ஆப்ரஹாமின் குடும்பத்திலிருந்தே இறைவன் இறைத் தூதர்களை தான் வாக்களித்தவாறு உலகிற்கு அனுப்பி வைத்தான். ஒருவரைத் தொடர்ந்து இன்னொருவராக இறைவன் ஒருவனே என்ற கொள்கையைச் சுமந்து இறைப்பணி செய்தவர்களாக ஆப்ரஹாமின் வம்சம் பெருகத் தொடங்கியது.

ஆப்ரஹாமும் அவரது குடும்பத்தினரும் அவர்களது சந்ததியினரும் இறைவனின் பாதையில் தங்களை வழிநடத்திச் செல்லும்வரை அவர்களுக்கு இறைவனின் பாதுகாப்பு முற்றிலும் இருந்தது. அவ்வாறு இல்லாதபோது அவர்களின் இறைவனின் பாதுகாப்பு வளையத்திற்குள் இல்லாமல் போனது மட்டுமல்லாமல் அவர்கள் உலகில் அலைக்கழிக்கப்பட்ட அவலம் யூதர்களின் வரலாற்றில் நிறைந்து கிடக்கிறது. அதனைத்தான் மேற்கூறிய திருக் குரானின் இறைவசனத்தில் அவர்களின் சந்ததியினரில் வழி கெட்டுப் போனவர்களும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

(யூதர்கள் என்று பிற்காலத்தில் அறியப்படுகிறவர்களின் தோற்றுவாயான ஆப்ரஹாமின் வரலாற்றையும், யூதர்களின் பிதா என்று அழைக்கப்படுகிற இஸ்ஹாக்கின் வரலாற்றையும் அறியாமல் யூதர்களின் வரலாற்றை முழுமையாக தெரிந்ததாகச் சொல்ல முடியாது. இவ்விருவரும் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார்கள் என்பதை முழுமையாக ஆய்ந்து நோக்கினால் இன்றைக்கு பிரிந்துக் கிடக்கிற உலகச் சமுதாயத்தின் அடிப்படை எங்கிருந்து தோன்றியது என்பதையும் உணரமுடியும். யூதர்கள் முதல் கிறிஸ்துவர்கள் வழியாக இன்னும் இன்று பெருகி இருக்கின்ற முஸ்லீம்கள் வரை எல்லா மக்களும் ஒரே பிரிவிலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதை புரிந்துக் கொள்வது அவசியமாகிறது. ஆனால் இதில் உள்ள ஒரு சில பிரிவினர் இந்த மூலத்தை உதாசீனப்படுத்துவதன் மூலம் தனித்துவம் என்று தேவையற்றை இடைச் செருகல்களையும் கொள்கைகளையும் உருவாக்கி தங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், இவ்வுலகின் அதிபதிகள் இன்னும் வாழத் தகுதியுள்ளவர்கள், மற்றவர்கள் எல்லோரும் இவர்களுக்கு அடிபணிந்தே நடக்க வேண்டும் என்ற மனித விரோதக் கொள்கைகளை செயல்படுத்த விரும்புகின்றனர். அவ்வாறு செய்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இறை பாதையை விட்டு விலகிச் சென்றவர்களே!

ஒரு ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும்தான் இந்த உலக மக்கள் பல்கிப் பெருகி பல்வேறு கோத்திரங்களாகவும், குலங்களாகவும் இன்னும் பல சமுதாயங்களாகவும், நாடுகளாகவும் வளர்ந்திருப்பதை வரலாறுகள் மூலம் தெரிந்துக் கொள்வது மனித வர்க்கத்தின் அடிப்படை அம்சமாகும். அதற்கு ஆப்ரஹாமின் வரலாற்றை முழுமையாகத் தெரிந்துக் கொள்வது மிக மிக அவசியம்).

இக்காலக்கட்டத்தில் ஆப்ரஹாம் திரும்பவும் பக்காவிற்கு வருகை தந்து தனது இரண்டாவது மனைவியான ஹாஜிராவுடன் சிறிது காலம் வாழ்கிறார். அங்கே அவரும் அவரது மூத்த புதல்வன் இஸ்மாயிலுடன் சேர்ந்து பக்காவில் இறைவனின் ஆணைக்கிணங்க கஃபா எனும் ஆலயத்தை புதுப்பித்து அதை உலகில் மனிதர்களுக்கான முதல் ஆலயமாக வணங்குமிடமாக செய்கின்றார்கள்.(5)

இந்த ஆலயம் இவ்வுலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து அதாவது இந்த பூமியும் சொர்க்கமும் படைக்கப்பட்ட தினத்திலிருந்தே உருவாக்கப்பட்டது என்றும், இந்த உலகம் உள்ளலவும் இது அவ்வாறே இருக்கும் என்றும் கூறப்படுகிறது (6)

பெரும்பாலோர், இன்னும் முஸ்லீம்கள் கூட கஃபா என்பது இறுதித் தூதர் முஹம்மது நபி (சல்) அவர்களால் கட்டப்பட்டது என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கஃபா என்பது ஆப்ரஹாம் நபியவர்களால் புதுப்பிக்கப்பட்டது என்ற செய்தி கூட ஒரு சிலருக்கு அதிசயமாக இருக்கின்றது.

கஃபா புதுப்பிக்கப்பட்டு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழிந்தபின்பு ஜெருசலத்தில் இஸ்ஹாக்கின் மகன் ஜேக்கப் (யாகூப்) இறைத்தூதரால் மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் இன்னுமொரு இறை ஆலயம் எழுப்பப்படுகிறது.(7) பைபிளிலும் இந்த அக்ஸாவின் ஆலயம் ஜேக்கப் எனும் இறைத்தூதரால் கட்டப்பட்டது என்று சொல்ல்ப்படுகிறது.

இஸ்லாம் என்பது முஹம்மது நபி (சல்) அவர்களால் இந்த உலகிற்கு கொண்டுவரப்பட்ட மார்க்கம் என்ற தவறான சிந்தனை உள்ளவர்கள் இந்த மார்க்கம் ஆப்ரஹாம் நபியவர்களால் புதுப்பிக்கப்பட்ட மார்க்கம் என்பதை அவரது வரலாற்றைப் படிப்பவர்களுக்கு புரியலாம்.

ஆப்ரஹாமின் மனைவி சாரா தனது 127வது வயதில் மரணமடைந்ததாக பைபிள் மூலம் அறியமுடிகிறது. சாராவின் மரணத்திற்கு பிறகு ஆப்ரஹாம் கண்டூர எனும் மற்றொரு பெண்ணை மணமுடித்தாகவும் அவர்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. (8) அது மட்டுமல்லாமல் ஹாஜூன் எனும் இன்னொரு மனைவி மூலம் அவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்ததாகவும் அதே வரலாற்றுக் குறிப்பு மூலம் அறிய முடிகிறது. (9)

ஆப்ரஹாம் தனது 175வது வயதில் நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார். அவரை அவரது முதல் இரண்டு புதல்வர்கள் இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக் இருவரும் சேர்ந்து ஹிப்ரோன் எனும் இடத்தில் அவரது முதல் மனைவி சாராவின் அடக்கத்தலத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்விக்கின்றனர். அதே இடத்தில்தான் இஸ்ஹாக் மற்றும் அவரது மகன் ஜேக்கப் அவர்கள் மரணடைந்தவுடன் அடக்கம் செய்யப்பட்டதாவும், அந்த அடக்கத்தலங்களை சாலமன் (சுலைமான்) நபியவர்கள் புதுப்பித்துக் கட்டியாதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது. அவர்களின் அந்த அடக்கத் தலங்கள் தற்போது 'கலீல் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.

ஆப்ரஹாமின் மறைவிற்குபின் இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப்பற்றி அதிகமான குறிப்புகள் இல்லை. இஸ்ஹாக் தனது நாற்பதாவது வயதில் பிதுயில் என்பவரின் மகளான ரெபெக்கா (Rebekah) அல்லது ரிஃப்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.(10) அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன என்றும் அல்லது இரு குழந்தைகள் பிறக்கின்றன என்றும் பைபிள் மூலம் தெரிய வருகிறது.(11)

முதல் மகனின் பெயர் இசாயு (அரபு வழக்கில் அல்-அய்ஸ்), இரண்டாவது மகனின் பெயர் ஜேக்கப் (அரபு வழக்கில் யாகூப்). இசாயுவின் சந்ததியினர் ரோமர்கள் என்றும் ஜேக்கபின் சந்ததியினர் யூதர்கள் என்றும் வரலாற்றின் மூலம் சொல்லப்படுகிறது.

இஸ்ஹாக் தனது மூத்த புதல்வனான இசாயுவை அதிகம் நேசித்ததாகவும் அவரது மனைவி ரெபக்கா இரண்டாவது மகனான ஜேக்கபை அதிகம் நேசித்ததாகவும் பைபிள் சொல்கிறது. இந்த அதீத நேசத்தின் காரணமாக பிற்காலத்தில் குறிப்பிடத்தக்க மோசடி ஒன்று நடந்ததாக பைபிள் கூறுகிறது. அது என்னவென்று அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்)

1. திருக் குரான் (11:69-73)

2. ஆதியாகாமம் (18)

3. ஆதியாகாமம் (17)

4. திருக் குரான் (37:111-112)

5. திருக் குரான் (3:96-97)

6. முஸ்லீம் ஹதீத் தொகுப்பு

7. புகாரி ஹதீத் தொகுப்பு (ஆபூ தர்)

8. Stories of the Prohpets (Ibn Kathir P. 180)

9. அத்தாரிஃப் வல் ஆலம் (அப்துல் காசிம் அல் சுஹைலி)

10. Stories of the Prohpets (Ibn Kathir P. 180)

11. Genesis 24 (Bible)

Sunday, August 07, 2005

அணு அயூதம் - பாதுகாப்பா? பிரச்சனையா?

ஹிரோஷிமாவில் அணு ஆயுதத்தால் நேர்ந்த மரணக்குவியல்களை நினைத்து உலகம் வருத்தம் தெரிவிக்கும் இந்த நேரத்தில் இன்னொரு ஹிரோஷிமா ஏற்படாமல் தடுக்க என்ன செய்கிறது?

ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அணு ஆயுத நாடுகளும் மற்றும் அணு ஆயுத தொழில் நுட்பம் கொண்ட நாடுகளும் எந்த அளவு அனுசரிக்கின்றன என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அணு ஆயுதம் என்பது ஏதோ ஒருசில தனிச் சிறப்புகளை உருவாக்கித்தரும் ஒரு ஆயுதமாக நினைத்து அமேரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீன மற்றும் ரஷ்யா நாடுகள் அதை பெருமையாக நினைத்து சேமித்து வைத்தன. இப்பொது அந்த தொழில் நுட்பத்தை தங்களது பொருளாதார முன்னேற்றங்களுக்காக பயன்படுத்த துவங்கியிருப்பது அணு ஆயூதத்தை வேகமாக பரவச் செய்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

'அணு ஆயுதம் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும், நான் மிகவும் பொறுப்பானவன், நான் அதை அநியாயத்திற்கு பயன்படுத்த மாட்டேன். நான் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றெல்லம் உலகத்திற்கு விரிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நாடுகள், அணு ஆயுதத்தை அடையத்துடிக்கும் நாடுகளைப் பார்த்து, 'உனக்கு இதை வைத்துக் கொள்ளத் தெரியாது, நீ பொறுப்பற்றவன், உன்னிடம் இதைப் பாதுகாக்கும் அறிவு இல்லை.. நீ அயோக்கியன் என்று பேசுவதே' இந்த அணு ஆயுதப் பரவலுக்கு அடிப்படைக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

அணு ஆயுதம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? எனக்கும் அதை உருவாக்கத் தெரியும்.. நீ யார் எனக்கு புத்திமதி சொல்ல என்று ஒரு சில நாடுகள் அணு ஆயுதத்தை எப்படி அடைவது என்ற முயற்சியில் இறங்கியுள்ளன.

அணு ஆயுதம் இருந்தால் அதைக் காட்டி பயமுறுத்தி பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருசில நாடுகள் கிறுக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டும் செயல்படுகின்றன, உதாரணத்திற்கு வட கொரியாவைச் சொல்லலாம். உடைந்து போன சோவியத் யூனியனில் இருந்த நாடுகளிடம் அவரவர்கள் பங்கிற்கு கிடைத்த அணு ஆயுதங்களை எல்லம் விலை கொடுத்து வாங்கிய அமேரிக்கா அவைகளில் சிலவற்றை அழித்து மீதியை தனது கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்தக் கொள்கையை எப்படியாவது தனக்கு சாதகமாக்கி சில அரசியல் நலன்களை அடையத் திட்டமிடுகிறது வட கொரியா.

இன்னும் சில நாடுகள், தன்னிடம் அணு ஆயுதம் இருந்தால் அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தன்னை தாக்காது என்று அணு ஆயுதத்தை எப்படிப் பட்டாவது அடைந்துவிட வேண்டும் என்று போராடுகின்றன. உதாரணம் ஈரான். மத்தியக் கிழக்கு நாடுகளில் நாலா பக்கத்திலும் அமேரிக்கா ராணுவத் தளங்களை அமைத்து ஈரனிற்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளதை உடைக்க ஒரே வழி அணு ஆயூதம்தான் என்று ஈரான் அதை அடைந்துவிடத் துடிக்கிறது.

என்ன காரணமாக இருந்தாலும் அணு ஆயுதம் இப்போது பரவலாகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 1950களில் பிரிட்டன் யாருக்கும் தெரியாமல் அணு ஆயுதம் தயார் செய்வதற்கான 20 டன் கன நீரை இஸ்ரேலுக்கு விற்றது தற்போதுதான் தெரியவந்துள்ளது. எந்த நாடு யாருக்கு இந்த அணு ஆயுதம் தொடர்பான தகவல்களையும், சாதனங்களையும், தொழில் நுட்பத்தையும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது என்பது அமேரிக்காவிற்கு தெரிய வந்தாலும் தனது அராஜக நிலையின் காரணமாக அமேரிக்காவின் பிரசங்கத்தை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.

அமேரிக்காவைப் பொறுத்தவரை அணு ஆயுதம் என்பது தற்போது ஒரு பாதுகாப்பாகத் தெரியவில்லை. உலகில் இருக்கும் துக்கடா நாடுகள் முதல் பெரிய நாடுகள் வரை எல்லோரிடத்திலும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிற காரணத்தால் பொழுது விடிந்து பொழுது போனால் எவன் எங்கு என்னப் பிரச்சனை செய்வானோ என்று பயம். போகிற போக்கில் அமேரிக்க உலகமெங்கும் 'எமர்ஜென்சி' பிரகடனம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கேட்டால் இது 'பிரிஎம்டிவ் ஆக்ஷன் (pre-emptive action) என்ற தத்துவத்தை சொன்னாலும் கேட்பதற்கு இப்போது எந்த நாட்டிற்கும் திராணியில்லை. கூடவே இங்கிலாந்தும் சேர்ந்து ஜால்ரா அடிக்கும். அணு ஆயுதம் அமேரிக்காவிற்கு பாதுகாப்பு என்பதைவிட பிரச்சனையாகத்தான் தெரிகிறது.

ஈரானைப் பொறுத்தவரை அணு ஆயுதம் அந்த நாட்டிற்கு பாதுகாப்பாகத் தெரிகிறது. யார் கண்டது, அதுவே அந்த நாட்டிற்கு இன்னுமொரு போரை உருவாக்கி வைத்தாலும் வைக்கலாம். இந்தியாவைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதாக அமைந்துள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது ஒரு 'வேஸ்ட்' என்றுதான் தெரிகிறது. வல்லரசு நாடுகள் எதுவம் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

எது எப்படியாயினும் இந்த அணு ஆயுதம் உலகிற்கு பிரச்சனையே. இதை ஒழித்துக் கட்டி நம்மை நிம்மதியாக வாழவிடுவார்களா இந்த அரசியல் மேதாவிகள்? ஹிரோஷிமாவில் நடந்தது வேறு எங்கும் நடக்காமல் இருக்க பிரார்த்தனை செய்வதைத் தவிர்த்து நம்மால் வேறு என்ன செய்யமுடியும்?

Wednesday, August 03, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 6

யூத குலத்தின் தொடக்கம் - பக்கா (மக்கா)

இதுநாள்வரை அறிந்திராத ஒரு புதிய இடத்திற்கு ஆப்ரஹாம் தன் மனைவி ஹாஜிரா மற்றும் மகன் இஸ்மாயிலுடன் பயணம் தொடர்ந்தார். (இப்னு கதிர் எனும் சரித்திர வல்லுனர் இஸ்மாயில் பால்குடி மாறாத பாலகனாக இருந்தபோதுதான் ஹாஜிராவும் ஆப்ரஹாமும் 'பக்கா' என்று அழைக்கப்படும் வரண்ட சமவெளிக்குப் பயணம் செய்தார்கள் என்று எழுதுகிறார். இஸ்மாயிலின் வயது என்ன என்று சரியான குறிப்பு இல்லை. ஆதியகாகம் இஸ்மாயிலுக்கு 13 வயது இருக்கும்போது பக்கா சென்றார் என்று அறிவிக்கிறது).

அவர்கள் இந்த புது இடமான பக்காவிற்கு வரக்காரணம் சாராவைவிட்டு ஹாஜிரா தூரமாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் தனது மகன் இஸ்மாயிலுக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற மனக்கவலையால் உந்தப்பட்டதாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. அதாவது இஸ்மாயில் இளமைப்பருவம் அடையும்வரை அவர்கள் பாலதீன் தேசத்தைவிட்டு தள்ளி இருப்பதே நல்லதென்ற முடிவுடன் பக்காவை வந்தடைகின்றனர் ஆப்ரஹாமின் குடும்பத்தினர்.

பக்கா என்ற இந்த இடம்தான் பிற்காலத்தின் மக்காவென்று பெயர் மாற்றமடைந்து ஆன்மீகத் தேடலுக்கு ஒரு புதிய பரிமானத்தையும் பரினாமத்தையும் அளிக்கும் இடமாக மாறுகின்றது. மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக அந்த இறைவனால் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆலயமாக திகழ்கிறது. (1) அக்காலத்தில் வர்த்தகர்கள் கடந்து செல்லும் ஒரு பாதைதானே தவிர்த்து இந்த வரண்ட பூமியில் அப்போது எந்த மக்களும் வாழ்ந்திருக்கவில்லை அல்லது வாழ்வதற்கேற்ற எந்த சூழலும் இல்லை.

மலை முகடுகளின் மத்தியில், வாழ்வதற்கு தேவையான ஆதாரங்களற்ற பூமியின் உச்சத்தில் நின்ற ஒற்றை மரத்தின் நிழலை நாடி கால்நடையாக வந்து சேர்ந்தார்கள் கணவனும், மனைவியும் மற்றும் அவர்களது பால்குடி மாறாத பச்சிளம் மகனும். வாழ்க்கையில் தேடல் என்பது சில நேரங்களில் சுகமானதாகத் தெரியும். ஆனால் பல நேரங்களில் இந்த தேடல் புரியாத பல வட்டங்களில் சுழலும்போது அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் விவரிக்கமுடியாத அளவிற்கு வேதனை நிறைந்ததாக இருக்கும். அப்படி ஓர் வேதனையின் பிடிகளில் சிக்கி இருந்தனர் அந்த தம்பதியினர். நாள் கணக்கில் நடந்து வந்த பயணத்தின் இறுதியாக காட்சியளித்தது அந்த மலைமுகடுகளுக்கு மத்தியில் வரண்டு நின்ற அந்தப் பகுதி. பச்சை நிறம் என்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு புல் பூண்டுகள் இல்லாத தண்ணீருக்கான எந்தவித ஆதாரமுமற்ற வரண்ட பூமியில் சிறிது இளைப்பாறிவிட்டு ஆப்ரஹாம் புறப்படத் தயாரானார்.

அன்பு மனைவியையும், அருமை குழந்தையையும் அங்கேயே விட்டுவிட்டு வந்த வழியே திரும்ப நடந்தார் ஆப்ரஹாம்! கணவன் தன்னை விட்டு செல்வதை அறிந்த ஹாஜிரா ‘எங்களை விட்டு எங்கே செல்கிறீர்கள்?’ என்று பின்னால் தொடர்ந்தவாறு வந்து கேட்க, பதில் சொல்லாதவராக முன்னால் நடந்து கொண்டிருந்தார் ஆப்ரஹாம். பலமுறை கேட்டும் பதில் வராததால் ‘இது இறைவனின் கட்டளையா?’ கண்ணீர் மல்க கேட்டார் மனைவி. ‘ஆம்’ என்ற பதிலை கூறிவிட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் ஆப்ரஹாம். ‘அப்படியானால் அல்லாஹ் எங்களை கைவிட மாட்டான்’ என்று சொல்லிவிட்டு மரத்தடியின் கீழ் அமர்ந்திருந்த தன் மகவை நோக்கி திரும்பி நடந்தார் ஹாஜிரா.

கணவன் தன் மனைவியையும் அன்புடனும் பாசத்துடனும் தூக்கி வளர்த்துக் கொஞ்சி மகிழ்ந்த, அதிலும் இனி பிள்ளைப் பாக்கியமே இல்லை என்று தளர்ந்துப் போன வயதில் வாழ்க்கையில் மகிழ்வூட்ட வந்த இளம் மகனையும் தனியே விட்டுவிட்டு கண்ணீர் மல்க திரும்பி நடந்துக் கொண்டிருந்தார்.

கையில் உள்ள தோல்பையில் சிறிது தண்ணீரும், கண்கள் முழுக்க கண்ணீரும், நெஞ்சம் முழுக்க இனி எப்படி வாழப்போகிறோம் என்ற கவலையுடனும் தூரத்தில் நடந்து செல்லும் கணவன் ஆப்ரஹாமைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தார் ஹாஜிரா எனும் மங்கை. தாயின் கையைப் பிடித்தவாறு வந்த வழி திரும்பிச் செல்லும் தந்தையையும் தவித்து நிற்கும் அன்னையையும் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தார் இஸ்மாயில் எனும் பாலகன்.

தியாகத்தின் முதல் கட்டம் தொடங்கியது. தந்தையைப் பிரிந்து நின்றார் தனையன். கணவனைப் பிரிந்து நின்றார் மனைவி. ஏன் இப்படி ஒர் பிரிவு... யாருக்காக... இந்த ஒரு நிலை. எல்லாம் கேள்விக் குறியாய் நிற்கும் இவ்வேளையில் யார் இவர்களுக்கு ஆதாரம்?

கணவன், மனைவி, பிள்ளைகள் இன்னும் என்னென்ன உறவுகள் உள்ளதோ அவை யாவும் இவ்வுலகில் ஏற்படும் பிணைப்புகள். வாழ்க்கையை நடத்திச் செல்ல தேவையான உறவு அம்சங்கள். எப்படி அந்த பிணைப்புகள் ஏற்பட்டதோ அப்படியே அவை யாவும் ஒரு நாளில் உதிர்த்து போகும் என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கும் இந்த சரித்திர நிகழ்ச்சி ஒன்றே ஒன்றை மட்டும் முழுமையாக சந்தேகமின்றி தாங்கி நின்றது... அதாவது இறைவன் என்ற ஓர் உன்னத மாபெரும் சக்தி ஒன்று மட்டுமே மனிதனை எந்த இக்கட்டிலும் வழிகாட்ட வல்லது. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு மட்டுமே நித்தியமானது அதுமட்டுமல்லாமல் இறைவனே போதுமானவன் என்பதை உணர்த்தி நின்றது இந்த முதல் தியாகம்.

ஆன்மீக வட்டத்தின் மையத்தை உலகிற்கு எடுத்துக் காட்டப்போகும் தியாகத்தின் ஆரம்பம் அவர்களை அறியாமலே அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி இதுநாள்வரை காத்து அருள் செய்து கொண்டிருந்த அல்லாஹ்வின் பக்கம் அவர்களை ஈர்த்தது. இறைவனே போதுமானவன், இனி வருவதை எதிர் கொள்வோம் என்று தாயும் மகனும் ஆப்ரஹாம் திரும்பிச் செல்வதை விழிகள் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நெடுதூரம் நடந்து வந்த ஆப்ரஹாம் தன் மனைவியும், குழந்தையும் பார்வையிலிருந்து மறைந்தவுடன், இருகரம் ஏந்தி கண்கள் நீர் பொழிய படைத்த இறைவனிடம் பிரார்த்தித்தார். தன் மனைவியும் மகனும் வளமற்ற இந்த இறைவனின் வீட்டின் அருகாமையில் விட்டுச் செல்கின்றேன் அவர்களுக்கு இறைவா நீயே பாதுகாப்பு.. இவ்வழியே செல்லும் மனிதர்களின் உள்ளங்களில் கருணையை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவ வழி செய் இறைவா என்று பிரார்த்தித்தார்கள்.(2)

இஸ்லாத்தின், ஏக இறைவனின் சிறப்புமிக்க ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம், மண்ணில் வாழ் மனிதர்களுக்கு மீண்டும் ஓர் வழிகாட்டுதலுக்கான ஆரம்பம் ஆதரவற்ற மண்ணில் அமைதியாக அமர்ந்திருந்தது.

பக்காவில் தாயும் மகனும் தாகத்தால் தவித்தனர். சிறுவன் இஸ்மாயிலின் தாகம் கொஞ்சம் கொஞ்சமாய் அழுகையாக மாறி பின்பு கதறலாக உருவெடுக்க ஹாஜிரா செய்வதறியாது தவித்தார். கண்ணுக் கெட்டிய தூரம் வரை தண்ணீருக்கான அறிகுரியோ அல்லது யாரவது வழிப் போக்கர்களின் வருகையோ தெரியாமல் இருக்க, இரு மலைக் குன்றுகளுக்கு மத்தியில் மகனின் தாகம் போக்க மாறி மாறி அலைந்து தேடலானர் தாய் ஹாஜிரா. இரு பக்கத்திலும் இருந்த குன்றின் மீதேறி ஏதேனும் தெரிகிறதா அல்லது யாராவது வருகிறார்களா என்று மாறி மாறி ஓடலானர். சிறுவன் இஸ்மாயிலோ உயிர்போகும் அளவிற்குக் கதறிக் கொண்டிருந்தார்.

(இவ்வாறு தான் அலைந்து ஓடியதை ஹாஜிரா பிற்காலத்தில் தனது கணவர் ஆப்ரஹமிடம் தெரிவிக்க அந்த இரு மலைகளான சபா மற்றும் மர்வா என்ற இரண்டுக்கும் இடையில் ஏழு முறை நடப்பது என்பதை ஹஜ்ஜின் ஒரு கிரியையாக ஆப்ரஹாம் அவர்கள் நிலை நிறுத்தினார்கள். ஹஜ் செய்யும் முஸ்லீம்கள் அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறு செய்துவருகின்றனர்).

அப்போது இறைவன் ஹாஜிராவை அழைத்து வானவர் மூலமாக அச்செய்தியை அறிவித்தான். 'ஹாகரே உன்னை துயருத்துவது எது? பயப்படாதே' என்று அறிவித்து இஸ்மாயில் இருக்கும் இடத்தில், அவரின் பாதம் இருந்த இடத்தில் ஒரு நீரூற்று உருவானது (3). 'இறைவன் பிள்ளையின் குரலை கேட்டான்' என்ற அறிவிப்பும் ஹாஜிராவை வந்தடைந்தது.

அந்த நீரூற்றுதான் ஜம்ஜம் என்ற பெயருடன் இன்றுவரை குறைவில்லாமல் கஃபாவின் அருகில் சுரந்துக் கொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் அதை புனித நீராக பருகுவதும் மக்காவிலிருந்து தங்கள் நாட்டிற்கு திரும்பும்போது தங்களால் முடிந்த அளவிற்கு அதை எடுத்துச் சென்று மக்கா வர இயலாதவர்களுக்கு வழங்குவதும் வழக்கத்தில் உள்ளது.

இந்த ஜம்ஜம் நீரூற்றைப் பற்றி பழைய ஏற்பாடு என்று அறியப்படும் யூதர்களின் வேதத்தில் ஆதியாகமத்திலும் சங்கீதத்திலும் (4) அறிவிப்பு செய்யப்ப்ட்டுள்ளது. அந்த நீரூற்றுதான் ஹாஜிராவிற்கும் மற்றும் இஸ்மாயிலுக்கும் வாழ்வாதாரமாகியது. இந்த நீரூற்றிலிருந்து வரும் தண்ணீரை பாதுகாத்து வழிப் போக்கர்களுக்கு விநியோகம் செய்து அதிலிருந்து தங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவைகளை பகரமாக பெற்றுக் கொண்டார்கள். இந்த நீருற்று இஸ்மாயிலின் காலத்திற்கு பிறகு அவர்களின் வழி வந்த பரம்பரையினரால் உரிமைக் கொண்டாடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நீரூற்றுக்காக பிற்காலத்தில் போர்கள் கூட நடந்திருக்கின்றன. ஒரு சில ஆண்டுகளுக்கு இந்த போரின் காரணத்தால் இந்த நீரூற்றை யாருக்கும் தெரியாமல் மூடி வைத்திருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

இதன் பிறகு இஸ்மாயிலின் நபித்துவமும், தந்தையைப் போல் மக்களை ஏக இறைவனின் பக்கம் அழைக்கும் பணி செய்வதும், அதைத் தொடர்ந்து பக்காவில் தந்தை ஆப்ரஹாமுடன் பிற்காலத்தில் ஒன்று சேர்ந்து கஃபா எனும் ஆலயத்தை கட்டி எழுப்புவதுமாக இஸ்மாயிலின் வாழ்க்கை வேறொரு பாதையில் செல்கிறது. இஸ்மாயிலின் சந்ததியினரே அரபுகள் என்று அழைக்கப்படும் கூட்டமாக பிற்காலத்தில் பிறந்து வளர்ந்து வருகிறது.

இஸ்மாயிலை தொடர்ந்து அவரது சமூகத்தில் எந்த இறைத்தூதரும் வரவில்லை என்றும் வரலாற்றில் அறியப்படுகிறது. இஸ்மாயிலின் பக்கா வாழ்க்கை இங்கே அவசியமில்லாதாதால் இதை இத்துடன் நிறுத்திவிட்டு யூதர்களின் பிதாவான இஸ்ஹாக் என்று அறியப்படும் ஆப்ரஹாமின் இரண்டாவது மகன் பிறந்த வரலாற்றையும் அதைத் தொடர்ந்து வந்த யூத குலத்தைப் பற்றி இனி பார்க்கலாம்.

திருக் குரானில் இஸ்ஹாக் மற்றும் இஸ்மாயில் தொடர்பான வேறு சரித்திரக் குறிப்புகள் காணக்கிடைக்காததால் அவர்களுக்கு மத்தியிலே என்ன தொடர்பு இருந்தது என்று திருக் குரான் வாயிலாக சொல்ல இயலவில்லை. ஆனால், ஆதியாகாமத்தில் இஸ்மாயிலின் மகளை இஸ்ஹாக்கின் (மூத்த) மகன் (இசாயு) மணந்துக் கொண்டதாக செய்தி அறியப்படுகிறது.(4)

(தொடரும்)

1. திருக் குரான் (3:96)

2. திருக் குரான் (14: 37)

3. ஆதியாகாமம் (21:17-20)

4. சங்கீதம் (84: 5-6)

5. முஹம்மத் (பக்கம் 5, ஆசிரியர் மார்டின் லிங்ஸ்)

Monday, July 04, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 5

யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாமின் பயணம்

மனித வரலாற்றின் விசித்திரமே மனித மனங்களின் 'நேரிடை அனுபவத் தேடல்தான்'. ஒவ்வொரு மனிதனும் நன்மை எது, தீமை எது என்பதைத் தெரிந்திருந்தாலும் பெரும்பாலான மனிதர்கள் அத்தீமையைச் செய்வதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை பெறாத வரை அவர்கள் அதை தெரிந்ததாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவ்வாறு நேரிடை அனுபவத்தேடலில் இருப்பவர்களில் சிலர் பிறரது அனுபவத்தை தனக்கு கிடைத்த அனுபவமாக எண்ணி செயல்படுவார்கள். பிறரது அனுபவங்களை படிப்பினையாக ஏற்றுக் கொண்டு செயல்படுபவர்கள் மிகவும் குறைவாக இருந்தாலும், அக்குறைவானவர்களே இந்த உலகத்தின் தலை எழுத்தை மாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் தலை எழுத்தை மாற்றியவர்களில் பலர் நல்வழியை நோக்கியும் சிலர் தீய வழியை நோக்கியும் இந்த உலக ஓட்டத்தை திசை திருப்பி இருக்கின்றார்கள்.

இவ்வுலக ஓட்டத்தை நல் வழியில் திருப்பிய பெரும் மனிதர்களில் ஆப்ரஹாம் என்ற தச்சுத் தொழிலாளியும் ஒருவர். அவர் இறைவனின் திருத்தூதராக இருந்து இவ்வுலக தலை எழுத்தை மாற்றிய பெரும் மனிதர்களில் ஒருவர். அவருக்கு இறைவன் போதுமான வழிகாட்டுதல்களை கொடுத்து அவரது அனுபவத்தேடல்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தான். அந்த இறைவனின் துணையுடன் அவர் செய்த செயல்களில் மிக முக்கியமானது மறைந்து அல்லது மறந்து போன ஆன்மீகத் தொடரை, மையத்தை கண்டுபிடித்தது. அதுமட்டுமல்லாமல் அதைப் புதுப்பித்து உலக ஆன்மீகத் தேடலில் ஒரு அழியாத தடத்தினை ஏற்படுத்தினார். எந்த இறைத்தூதருக்கும் இல்லாத ஒரு சிறப்பு ஆப்ரஹாமிற்கு இறைவனால் வழங்கப்பட்டது. அதுதான் இறைவனின் (அல்லாவின்) நண்பர். கலீலுல்லாஹ் என்று அரபி வார்த்தையில் சொல்லப்படக்கூடிய சொல்லின் பொருள் இறைவனின் தோழர் என்பதே.

தோழன் என்று சொல்லும்போது நாமெல்லாம் நன்றாக புரிந்துக் கொள்ளமுடியும் அதன் மகத்துவத்தையும் அதன் பலனையும். நண்பர்களிடம் பரிமாறிக் கொள்ளும் எத்தனையோ விஷயங்களை பெற்ற தாயிடமோ அல்லது நம்பி வந்த மனைவியிடம் கூட பரிமாறிக் கொள்ளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் 1426 வருடங்களுக்கு முன்பாக இவ்வுலகின் தலைவிதியை மாற்றி அமைத்த முகம்மது (சல்) அவர்கள் இதை சாதித்தது தனது தோழர்களின் உதவியால்தான். அந்த வகையிலே இறைவனின் தோழராக இருந்து இந்த உலக மக்களின் ஆன்மீகத் தேடலுக்கு ஒரு புதுப் புரட்சிக்கு வித்திட்டவர் இந்த ஆப்ரஹாம்.

மனித வாழ்க்கை இரண்டுவிதமான ஆதாரங்களுக்காக அல்லது ஆதாரங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஒன்று வாழ்வதற்கான ஆதாரம் - பொருள். இன்னொன்று வாழ வேண்டியதற்கான காரணம் - ஆன்மீகம். அதில் பொருள் தேடல் - மனிதர்கள் இவ்வுலகில் வாழ்வதற்கான அடிப்படை. ஆன்மிகத் தேடல் - வாழ வேண்டியதற்கான காரணம். ஆன்மீகத் தேடலும், பொருள் தேடலும் ஒன்றாக ஒன்றை ஒன்று சார்ந்து பயணிக்கும்போது அது அதன் இலக்கை எளிதாகவும் எளிமையாகவும் அடைந்துவிடுகிறது. அப்படியில்லாமல் பொருள் தேடலும், ஆன்மீகத் தேடலும் ஒன்றை ஒன்று மறந்து பயணிக்கும்போது வாழ்க்கை எளிமையில் இருந்து மாறி இடர்களில் சென்று சேர்கிறது. காலப்போக்கில் இரண்டும் வெவ்வேறு பாதையில், வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரம்பிக்கின்றன. அவ்வாறு வெவ்வேறு திசையில் செல்லும் இந்தப் பயணம் ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்திற்குபின் ஒன்றை ஒன்று முற்றிலும் அறியாமல், ஒன்றாகத் தொடங்கிய அந்த பதிவுகள்கூட மாறி இரண்டும் இரண்டுவிதமான வாழ்க்கைக் கோட்பாடுகளாக அறியப்படுகிறது.

இந்த இரண்டுவிதமான வாழ்க்கைக் கோட்பாடுகள் இன்னும் சில படிகள் மேலே சென்று ஒன்றை ஒன்று அழிக்கவும் முற்படுகின்றன. இந்த வினைகள், எத்தனையோ ஆண்டாண்டு காலமாக சுழற்சி முறைகளில் மாறி மாறி மனித வரலாற்றில் அறியப்பட்டு வந்தாலும் மனிதனின் அனுபவத்தேடலுக்கே உரிய விசித்திர குணாதியசத்தால் இது மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் மாறி மாறி நடந்து கொண்டே வருகிறது.

இவ்வாறு பொருள் தேடலும், ஆன்மீகத் தேடலும் முற்றிலுமாக ஒன்றை ஒன்று அறியாமல் ஒன்றை ஒன்று அழிக்க முயற்சித்த அந்த கால கட்டத்தில்தான் ஆப்ரஹாம் அவர்கள் இறைவனின் தூதராக தோன்றுகிறார். இரு தேடல்களின் ஆரம்ப விழுதுகளைத் தேடி அதைப் புதுப்பிக்கின்றார். உலகின் ஆன்மீகத் தேடலுக்கான ஒருமித்த அந்த இலக்கை உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்துகிறார். இவை யாவும் அவர் முன் கூட்டியே அறிந்து அல்லது தானாக திட்டமிட்டு செய்தாரா? நிச்சயமாக இல்லை. இறைவனின், படைத்தவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.

ஆப்ரஹாமின் இந்த மாபெரும் ஆன்மீக புரட்சிக்கு அவருக்கு தேவைப்பட்டது 'தேடல்' என்ற 'புலம் பெயருதல்'. அதில் அவருக்கு உதவியாக அவரது மனைவியர்களான சாரவும், ஹாஜிராவும் மற்றும் லூத்தும் இருந்தார்கள். இந்த காலத்தில் இருப்பது போல் நவீன தகவல் தொடர்போ அல்லது செய்திகளை பரிமாறிக் கொள்ளவோ எந்தவித வாய்ப்பும் இல்லாத கிட்டத்தட்ட 5000 வருடத்திற்கு மேற்பட்ட கால கட்டத்தில் லூத்தும் ஆப்ரஹாமும் தனித்தனியே இறைவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு வெவ்வேறு நாடுகளில் தங்களது இறைப்பணியை செய்து வந்தனர். பிற்காலத்தில் அவர்கள் ஒருவரை எப்போது சந்தித்தனர் அல்லது இல்லையா என்ற விபரங்கள் வரலாறுகளில் தெளிவாக இல்லை.

ஆப்ரஹாமின் புலம் பெயருதல் ஒரு புதிய தியாகத்தை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு அவரை உள்ளாக்கியது.

ஹாஜிரா.. கருத்தரிந்து ஒரு ஆண்மகவை ஈன்றெடுத்தார். ஆப்ரஹாமிற்கு முதல் வாரிசு இந்த உலகில் உருவானது. ஆண்மகவிற்கு இஸ்மாயில் (இஷ்மாயில்) என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போது ஆப்ரஹாமிற்கு சுமாராக 86 வயது என்று மதிப்பிடப்படுகிறது. இந்த இஸ்மாயிலின் வம்சம்தான் பிற்காலத்தின் அரபு குலமாக அரேபிய தேசம் என்ற பெயர் தாங்கி மத்திய கிழக்குப் பகுதியில் அறியப்படுகிறது.

இஸ்மாயிலின் பிறப்பு ஏற்கனவே புகைச்சலில் இருந்த சாரா - ஹாஜிரா உறவில் இன்னும் விரிசல்களை அதிகமாக்கியது. தினம் தினம் இவ்விருவரின் பிரச்சனைகள் அதிகமாக ஆப்ரஹாமிற்கு இது ஒரு கவலைக்குரிய விஷயமாகிப்போனது. ஆப்ரஹாம் வணங்கியும் வாழ்ந்தும் வந்த ஜெருசலத்தின் இறை ஆலயத்தில் அவருடைய வாழ்க்கைக்கு எதிர்காலத்திற்கு வழி தேட முற்பட்டார். சாரா ஹாஜிராவின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி தேடலானர். இந்நிலையில் ஆப்ரஹாமிற்கு இறைவன் மீண்டும் ஒரு நற்செய்தி வழங்குகின்றான். சாராவிற்கு ஒரு குழந்தையை அளிப்பதாக வாக்களிக்கின்றான். அந்த குழந்தைக்கு இஸ்ஹாக் (ஐசக்) என்று பெயரிடுமாறு நற்செய்தி அளிக்கின்றான்.

இச்சூழலில் இஸ்மாயிலின் வளர்ப்பும் வாழ்க்கையும் தந்தையின் அரவனைப்பில் சிறப்பாக இருந்தது. ஆனால் ஆப்ரஹாமின் வாழ்க்கையில் ஒருப் பெரிய திருப்பத்திற்கான காரணமாக அமைந்தது குழந்தை இஸ்மாயிலின் வாழ்க்கை. சாரா உடலாலும், மனதாலும் பெரும் நோய்க்குள்ளானார். ஹாஜிராவை தனது இல்லத்திலிருந்து மட்டுமல்லாமல் ஆப்ரஹாமின் வாழ்க்கையிலிருந்தே அகற்ற விரும்பினார். தனக்கு இரண்டாவது மகன் பிறக்க இருக்கும் மகிழ்ச்சியில் ஆப்ரஹாம் இருந்தாலும், தனது மூத்த மகன் பெற்றிருந்த உன்னத நிலையை இழந்துவிடுவானோ என்று அஞ்சினார்.

ஒரு நாள் சாரா ஹாஜிரா பிரச்சனை உச்சத்தை எட்டவே.. சாரா ஆப்ரஹாமிடம் ஹாஜிராவையும், இஸ்மாயிலையும் இந்த வீட்டை விட்டு மல்லாமல் இந்த நாட்டைவிட்டே தூரமாக்க வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கை வைக்கவே, ஆப்ரஹாம் மிகப்பெரும் கவலைக்குள்ளானர். சாராவிடமிருந்த ஆழ்ந்த அன்பின் காரணமாகவும் மற்றும் ஆரம்பகால கஷ்டங்களில் சாராவின் ஒத்துழைப்பு மற்றும் பங்கை நினைக்கும்போது ஆப்ரஹாமல் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினார்.

மிக நீண்ட ஆலோசனைக்கும், பிரார்த்தனைக்குப் பிறகு தனது இரண்டாவது மனைவி ஹாஜிராவையும் அன்பிற்கினிய பாலகன், குழந்தை இஸ்மாயிலையும் அழைத்துக் கொண்டு கன் ஆனிலிருந்து (பாலஸ்தீனிலிருந்து) அறியப்படாத ஒரு இடத்தை நோக்கி பயணப்பட்டார்.

இது நாள்வரை தானும் தனது மனைவியருமாக நடத்தி வந்த புலம் பெயருதல் இப்போது தனது இரண்டாவது மனைவி ஹாஜிரா மற்றும் அன்பு மகன் இஸ்மாயிலுக்காக அவர்களை எங்காவது சாராவின் தொடர்பில்லாத ஒரு இடத்தில் விட்டுவிடுவதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு கனத்த மனதுடன் பயணம் தொடர்ந்தார்.

பெரும் தியாகத்தின் அடித்தளம் ஒன்று எழுப்பப்பட்டது.

(தொடரும்)

Sunday, July 03, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 4

யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாமின் பயணம்

ஆப்ரஹாமின் ஆரம்பகால வரலாற்றில் அவரும் அவருடைய சகோதரனின் மகன் லூத்தும் மற்றும் ஆப்ரஹாமின் மனைவி சாரவைத் தவிர்த்து ஏக இறைவனை மட்டும் வணங்குபவர்களாக வேறு யாரும் இருக்கவில்லை என்றே அறியப்படுகிறது. அக்காலச் சூழலில் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பதில் சந்தேகமேயில்லை. மனிதர்களை மனிதர்களே சித்திரவதை செய்து கொன்று முடிப்பதில் அவர்களுக்கு ஒரு பெரும் காரியமாக அது இருந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்குக்கூட இந்த நிலையை காண்கிறோம். சிறிய பெரிய பிரச்சனைகளுக்கெல்லாம் ஒருவரை ஒருவர் கொல்வதென்பது சாதாரண காரியம். அந்த வகையிலே ஆப்ரஹாம், அவரது மனைவி மற்றும் லூத் அவர்களின் வாழ்க்கை பாபிலோனாவின், நம்ரூத்தின் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தில் ஒரு மிகப் பெரும் பிரச்சனையாகவே இருந்தது. நம்ரூத் ஆப்ரஹாமுடன் செய்த வாததத்தில் தோல்வியடைந்ததிலிருந்து அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் கிடைத்துவந்த மாதாந்திர உணவுப் பொருட்களை நிறுத்திவிட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.

தேரா இனிமேல் பாபிலோனா நாட்டில் வாழ்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தவராக தனது மகன் ஆப்ரஹாம், லூத், ஆப்ரஹாமின் மனைவி சாரவுடன் அந்த நிலத்தைவிட்டு குடி பெயர்ந்து சிரியாவை நோக்கி புறப்பட்டதாக மற்றொரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அவர்களுடைய நோக்கம் கன்ஆன் (பாலஸ்தீன தேசம்) என்ற இடத்திற்கு எப்படியாவது சென்றுவிடவேண்டும் என்று விரும்பினார்கள்.

அவர்கள் போகும் வழியில் ஹரன் என்னும் இடத்தில் சில காலம் தங்கியிருந்தார்கள். அவ்வாறு தங்கியிருக்கும்போது ஆப்ரஹாமின் தந்தை தேரா தனது 250ம் வருடத்தில் மரணம் எய்தினார். ஆனால் ஆதியாகாமத்தில் தேரா இறக்கும்போது அவரது வயத்ய் 205 வருடங்கள் என்று சொல்கிறது. சிறிது காலத்தில் லூத் ஆப்ரஹாமின் வேண்டுகோளிற்கு இணங்க ஜோர்டனைச் சேர்ந்த சோடோம் என்ற நகரத்திற்கு பிரிந்து சென்றுவிடுகிறார். அந்நகரத்தில் மக்களை ஓரிறைவன் பக்கம் அழைக்க லூத் தனது தூதுத்துவப் பணிக்கு அனுப்பபடுகிறார். ஆப்ரஹாமும் அவரது மனைவி சாரா மட்டும் தனித்து சிரியாவிற்கு உட்பட்ட டமாஸ்கஸ் என்னும் நகரத்தில் சில ஆண்டுகள் வசித்ததாக வரலாறு சொல்கிறது.

டமாஸ்கஸ் நகரத்தில் வாழ்ந்த மக்கள் வடதுருவத்தில் தோன்றும் ஏழு நட்சத்திரங்களை வணங்கி வாழக் கூடிய மக்களாக இருந்தார்கள். இன்றைக்குக் கூட டமாஸ்கஸ் நகரத்தில் இருக்கக்கூடிய புராதான அரண்மனைக் கட்டிடங்களில் உள்ள வாசல்கள் ஏழுகளாகவும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயரால் நிர்மானிக்கப்பட்டதாக இருப்பதையும் காணலாம்.

ஹாகர் எனும் ஹாஜிரா

ஆப்ரஹாமின் இந்த நீண்ட பயணத்தில், நாடோடி வாழ்க்கையில் சிரியாவை கடந்து போகும் வழியில் ஒரு கொடூர அரசன் ஆட்சி செய்யும் இடத்தை (எகிப்து) கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது அந்நகரத்து மக்களில் ஒருசிலர் அம்மன்னனிடம் ஆப்ரஹாம் என்ற ஒரு நாடோடி இந்த நாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவருடன் ஓர் அழகான மங்கை இருப்பதாகவும் சொல்ல அம்மன்னன் ஆப்ரஹாமை தன்னிடம் அழைத்துவர ஆணையிடுகிறான்.

ஆப்ரஹாமை அழைத்து அவருடன் வந்த அந்தப் பெண் யார் என்று கேட்க ஆப்ரஹாம் சாரவை தனது மனைவி என்பதை மறைத்து சாராவை தனது சகோதரி என்று அறிவித்துவிடுகிறார். காரணம் அம்மன்னனிடமிருந்து சாராவிற்கு ஏதேனும் துன்பம் ஏற்படலாம், அல்லது சாரவை அவனுடன் உடலுறவு கொள்ளக் கேட்கலாம் என்ற காரணத்தினால் சாராவை தனது சகோதரி என்று சொல்லிவிடுகிறார். (1)

அக்காலச் சூழலில் மனைவி என்பவளுக்கான சமூக உரிமைகள் எப்படியிருந்தன், அம்மனைவியர்களை பிறருடன் உடலுறவு கொள்ள அனுமதிப்பதிலும் அல்லது அனுமதிக்க நிர்பந்திக்கப்படுவதிலும் உள்ள பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் என்னென்ன என்று சரியாகத் தெரியாதால் ஆப்ரஹாமின் இந்த 'சகோதரி' என்ற கூற்றிற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஒருவனின் சகோதரி என்பவளை அவளுடைய அனுமதியுடன் அல்லது அவளது தகப்பன், சகோதரன் அல்லது அவளது பொருப்பாளிகளின் அனுமதி பெற்றுதான் உறவு வைத்துக் கொள்ளவேண்டுமா என்பதும் தெரியவில்லை. பொதுவாகவே வரலாறுகளில் அக்கால கலாச்சாரங்களைப் பார்க்கும்போது உடலுறவு மற்றும் வீட்டு வேலைகளுக்கு அல்லாமல் பெண்களுக்கு வேறு எந்த வேலைகளும் இல்லை. ஆண்களை மகிழ்வூட்டவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்பதில் அக்கால மக்களுக்கிடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாத அளவிற்கு பெண் வர்க்கங்களை அதற்கு மட்டுமே மதிப்பளித்தும் பயன்படுத்தியும் வந்துள்ளார்கள்.

அந்த மன்னன் சாராவை தன்னிடம் ஓரிரவு தங்குமாறு அனுப்பிவைக்க ஆப்ரஹாமிற்கு கட்டளையிடுகிறான். ஆப்ரஹாம் திரும்பி வந்து சாராவிடம் விஷயத்தைச் சொல்லி, 'சாரா, இந்த இடத்தில் உன்னையும் என்னையும் தவிர்த்து வேறு எந்த நம்பிக்கையாளரும் இல்லை. இந்த கொடுங்கோல் மன்னனிடம் உன்னை என் சகோதரி என்று சொல்லி வந்திருக்கிறேன். அவன் உன்னை ஓரிரவு அவனுடன் தங்குமாறு அழைக்கிறான். இறைவன் நமக்குத் துணையிருப்பான்' இறைவனை வணங்கிக் கொண்டிரு, நானும் நீ திரும்பி வரும் வரை வணக்கத்திலேயே இருப்பேன். என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

இப்படிப்பட்ட சூழல் நாம் படிப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ சாதாரணமாகத் தெரியலாம் அல்லது அதற்காக ஓரளவு வருத்தப்படலாம். நாடோடியாக நாடு விட்டு நாடு சென்று கொண்டிருக்கும் ஒரு கணவன் மனைவிக்கு, அவர்கள் இருவரைத் தவிர்த்து அவர்களுக்கு எந்த ஆதரவோ அல்லது பாதுகாப்போ இல்லாத நிலையில் இப்படிப்பட்ட கொடுமையான நிலைகளில் அவர்களுக்குப் பாதுகாப்பு என்பது படைத்த அந்த இறைவனைத் தவிர்த்து வேறு யார் இருக்க முடியும். அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் வெறும் பிரார்த்தனைகளும் இறைவன் மீது வைக்கக் கூடிய அதீதமான நம்பிக்கையுமே. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்கள் எல்லோருக்குமே இப்படிப்பட்ட துயரமான சோதனைகளும் துன்பங்களும் குறைவில்லாமலே நிகழ்ந்து வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட சோதனைகளும், துன்பங்களும் அவர்களது நம்பிக்கையை அதிகமாக்கவே செய்திருக்கின்றன என்றாலும் அதிலிருந்து அவர்கள் வாழ்க்கையை அறிபவர்களுக்கு அது ஒரு பாடமாகவும் இருக்கின்றது.

அரண்மனையில் அன்றிரவு அம்மன்னன் சாராவுடன் தவறாக நடக்க முயற்சிக்கும்போதெல்லாம் சாரா ஒலுச் செய்துகொண்டு (2) இறை வணக்கத்தில் ஈடுபட்டுவிட அப்போதெல்லாம் அம்மன்னன் அருகில் இருந்த தண்ணீர் தடத்தில் விழுந்து மூழ்கும் நிலை அடைகிறான். அப்போது அம்மன்னன் சாராவிடம் என்னைக் காப்பாற்று என்று முறையிட சாரா இறைவனிடம் பிரார்த்திக்கிறார். அம்மன்னனும் நீரிலிருந்து தப்பிக்கின்றான்.(3) இந்நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டு மூன்று முறை நடைபெறுகிறது. அவன் சாராவை நெருங்கும் பொதெல்லாம் சாரா பிரார்த்திப்பதும் அவனை யாரோ பிடித்து தண்ணீரில் எறிந்து அவன் உயிருக்காகப் போராடுவதுமான நிலை தொடர்கிறது.

இறுதியாக அம்மன்னன் தனது காவலாளை அழைத்து 'நீ இங்கே அழைத்து வந்தது அழகிய மங்கையை அல்ல.. ஒரு சாத்தனை.. இவளை இங்கிருந்து திருப்பி அனுப்பிவிடு.. அப்படியே அவளுக்கு என்னிடமிருந்து ஒரு அடிமைப் பெண்ணையும் அவளுடன் அனுப்பிவிடு' என்று ஆணையிட சாரா அங்கிருந்து வெளியேறிவிடுகிறார். அவருடன் அனுப்பிவைக்கப்பட்ட அந்த அடிமைப் பெண்தான் ஹாகர் என்கிற ஹாஜிரா.

சாராவின் பிரார்த்தனையின் போதெல்லாம் அம்மன்னனை யாரோ பிடித்து இழுப்பது போல நிகழவே அம்மன்னன் சாராவை நினைத்து மிகவும் பயந்து போயிருக்க வேண்டும். சாராவிடமிருந்து மீண்டும் அப்படி ஒரு நிலை தனக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக சாராவை சமாதானப்படுத்த வேண்டி அவருக்கு ஹாகரைப் பரிசுப் பொருளாக அனுப்பி வைத்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.

சாரா ஆப்ரஹாமுடைய இடத்தை அடையும்போது ஆப்ரஹாம் வணக்கத்திலிருந்தார். சாரா அங்கு நடந்ததைச் சொல்லி ஹாகரை அறிமுகப்படுத்துகிறார். ஹாகர் என்பவர் காப்டிக் இனத்தைச் சேர்ந்தப் பெண். பிற்காலத்தில் சாராவிற்கு மகபேறு பெருவதற்கான வாய்ப்பு இல்லை என்று சாரா ஹாகரை ஆப்ரஹாமிற்கு மனைவியாக்கிவிடுகிறார். இந்த ஹாகர் என்ற தனது இரண்டாவது மனைவி மூலமாகத்தான் ஆப்ரஹாமின் அரபு குல மக்கள் தோன்றுகின்றனர். (4)

ஆப்ரஹாம் எகிப்திலிருந்து திரும்பி சிரியாவை வந்தடைகிறார். அவருக்கு குழந்தைகள் பெறும் வாய்ப்பில்லாதவராக இருந்தார் என்று ஆதியாகாமம் அறிவிக்கிறது. அப்போது அவருக்கு இறைவனிடமிருந்து ஒரு நற்செய்தி கிடைக்கிறது.

'இறைவன் இந்த உலகை எனது பார்வைக்கு சுருக்கி வைத்தான். நான் கிழக்கிலும் மேற்கிலும் திரும்பிப் பார்த்தேன். என்னைப் பின்பற்றுபவர்கள், (எனது குலத்தினர்) இந்த உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்று சேர்வார்கள்' (5)

'வானத்தை அண்ணந்து பாரும், அங்கிருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவதற்கு உம்மால் முடியுமாயின் எண்ணிக் கொள்ளும். இவ்வாறுதான் உமது சந்ததியும் பெருகியிருக்கும்' என்ற அசரீரி ஒலித்தது (6)

இதற்கிடையில் ஆப்ரஹாமின் செல்வாக்கும் அவரது ஏக இறைவனை மட்டுமே வணங்க அழைக்கும் பிரச்சாரமும் வலுவடைந்து ஆப்ரஹாமை பின்பற்றும் மக்கள் அதிமாகின்றனர். இச்சூழ்நிலையில் ஜோர்டான் நாட்டிற்கு உட்பட்ட நிலத்தில் ஏக இறைவன் வணங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட லூத் அவர்களை அங்கிருந்த ஒருசில எதிர்ப்பாளர்கள் சிறைபிடித்து அவருடைய பொருட்களையும் அவரது கால்நடைகளையும் எடுத்துக் கொண்டதாக ஆப்ரஹாமிற்கு செய்தி கிடைக்கிறது.

ஆப்ரஹாம் தன்னுடன் 318 வீரர்களுடன் லூத்தை சிறைபிடித்தவர்களுடன் போரில் ஈடுபட்டு அவர்கள் அனைவரையும் தோற்கடித்து லூத்துடைய பொருட்களையும் கால்நடைகளையும் மீட்டு லூத்துடன் திரும்பி வருவதாக வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது (7). இந்தப் போரில் ஆப்ரஹாமிற்கு கிடைத்த வெற்றியின் மூலமாக பாலஸ்தீன் நாட்டின் மன்னன் ஆப்ரஹாமை வரவேற்பளித்து தனது நண்பராக்கிக் கொண்டதாக வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது. (8)

ஆப்ரஹாம் பாலஸ்தீன் நிலத்தில் ஏறக்குறைய இருபது வருடங்கள் வாழ்கிறார். ஆப்ரஹாமும் அவரது மனைவி சாரவும் கிட்டத்தட்ட 90 வயதை அடைகின்றனர். அவர்களுக்கு வாரிசாக குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை. எங்கே தனது கணவருக்கு சந்ததியில்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிய சாரா ஆப்ரஹாமை நிர்பந்தித்து ஹாகரை மனமுடித்துக் கொள்ளச் செய்கிறார். ஆப்ரஹாம் ஹாகரை தனது இரண்டாவது மனைவியாக்கிக் கொள்கிறார்.

ஹாகர் ஆப்ரஹாமிற்கு மனைவியானவுடன் இருவருக்கும் பிள்ளைபேறுக்கான வாய்ப்பு உருவாகிறது. இதன் மூலம் ஹாகருக்கான முக்கியத்தும் ஆப்ரஹாமிடம் அதிகரிக்கவே சாரா சஞ்சலம் அடைகிறார். சாராவிற்கும் ஹாகருக்கும் இடையில் சிறு சிறு பிரச்சனைகள் பெரிதாகி அவர்களுக்கு மத்தியில் எப்போதும் நிம்மதியில்லாத சூழல் உருவாகிறது. சாரா ஆப்ரஹாமுடன் இப்பிரச்சனைக்கான தீர்வை விவாதிக்க ஆப்ரஹாம் இறுதியாக சாராவிடம் 'ஹாகரை நீ என்ன வேண்டுமானலும் செய்துகொள்' என்று சொல்லிவிட்டு வெளியேறிவிடுகிறார். இதையறிந்த ஹாகர் சாரா தன்னை கொலை செய்யக்கூடும் என்று அஞ்சி பாலைவனத்தில் ஓடி மறைந்துக் கொள்கிறார்.

அங்கே ஹாகருக்கு ஒரு நற்செய்தி கிடைக்கிறது.

'பயப்படாதே... இறைவன் உனக்கு நல்லதை நாடியுள்ளான். அதன் மூலம் உனக்கு ஒரு ஆண்மகவு கிடைக்கும். அவன் ஒரு சக்தி நிறைந்த (காட்டு விலங்கைப் போன்ற) மனிதனாக இருப்பார். அவருடைய ஆளுமையினால் ஒவ்வொரு மனிதரையும் தனக்குக் கீழ் கொண்டு வருவார். அவரது சகோதரர்களின் பூமி அனைத்தும் அவருக்கு கீழ் வரும் ஹாகர் இறைவனுக்கு நன்றி தெரிவித்தவராக இருந்தார்'. (9)

'நீ கர்ப்பவதியாயிருக்கிறாய். ஒரு குமாரனைப் பெறுவாய். உன் குமாரனுக்கு இஸ்மாயீல் என்று பெயரிடுவாயாக (10)

இறைவனிடமிருந்த கிடைத்த இந்த நற்செய்தியின் மூலம் நம்பிக்கையும் தைரியமும் நிறைந்தவராக ஹாகர் திரும்பவும் தனது இருப்பிடத்திற்கு வந்தடைகிறார். தனக்குக் கிடைத்த அந்த நற்செய்தியை ஆப்ரஹாமிற்கும் சாராவிற்கும் ஹாகர் அறிவிக்கின்றார்.

(தொடரும்)

1, 2, 3 & 4. புகாரி நூல் (ஹ்தீஸ் அபூ ஹுரைரா)

5. திர்மிதி ஹதீஸ் நூல்

6. ஆதியாகாமம் (15:5)

7 & 8. Exgetes (Stories of the Prophet - Ibn Kathir)

9 & 10 பைபிள் - ஜெனிசிஸ் (16:10 - 11)

அப்பா பயங்கரவாதி என்றால் யார்?

மகன்: அப்பா பயங்கரவாதி என்றால் யார்?

தந்தை: மகனே! தனது அரசியல் வெற்றிக்காகவும் லாபத்திற்காவும் யார் மக்களை பமுறுத்தி, மிரட்டி, இன்னும் வன்முறையை பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்குப் பெயர்தான் பயங்கரவாதி. அப்படித்தான் ஆக்ஸ்போர்டு டிக்ஷனிரியில் சொல்லப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லடா ராஜா... இந்த பயங்கரவாதிகளெல்லாம் நம்மள மாதிரி சாதாரண மனிதர்களை கொல்வதற்குக் கூட தயங்க மாட்டாங்க, ரொம்ப கொடூரமான ஆளுங்க!

மகன்: அவங்க ஏன் அப்படிக் கொலை செய்யறாங்க?

தந்தை: ஏன்னா அவங்களுக்கு நம்மை மாதிரி ஆளுங்க மேலயும் நம்ம நாட்டு மேலயும் அப்படி ஒரு மோசமான வெறுப்பு. இத விளக்கமா சொல்றது கொஞ்சம் கஷ்டம். அவர்களுடைய சிந்தனையே அப்படித்தான். நாம வாழற இந்த உலகத்துல எத்தனையோ பல காரணங்களால இப்படி வெறுப்புன்றது நிறைய புரையோடிக் கிடக்குது.

மகன்: ஈராக்குல நடக்குறமாதிரிதானே அப்பா? அப்பாவி மனிதர்களை பிடிச்சு வைச்சுக்கிட்டு அங்கிருக்கிற எல்லா அமேரிக்கா படைகளும் வெளியேறனும் இல்லன்னா இந்த அப்பாவி மக்களை கொலை செய்வோம்னு மிரட்டறாங்களே!

தந்தை: அதான்.. சரியா புரிஞ்சுக்கிட்ட, இதுக்கு பேருதான் 'ஈவில் ஒர்க்' அப்படீங்கிறது. அது மட்டுமா கண்ணா, பிளாக்மெயில் வேற... வெளியேறனும் இல்லண்ணா எல்லா பிணைக்கைதிகளையும் கொல்லுவோம்னு தினம் தினம் பிளாக் மெயில் செய்யறாங்க!

மகன்: அப்படியா!.. அப்பா!.. ஈராக்குல இருக்கிற அந்த WMD எங்கன்னு சதாம் ஹுசைன் சொல்லலன்னா அவங்க நாட்டு மேல படையெடுப்போம் அப்பாவி மக்களை குண்டு போட்டு கொல்லுவோம்னு சொன்னமே அதுவும் பிளாக்மெயில்தான?

தந்தை: இல்ல இல்ல...அது... ஆமாம்... அப்படி இல்ல... இதுக்கு பேரு ultimatum... அதாவது... நல்ல பிளாக்மெயில்.

மகன்: நல்ல பிளாக்மெயில்?.. அது என்னப்பா பிளாக்மெயில்லயே நல்லது கெட்டதுன்னு?

தந்தை: அதாவது ராஜா.. நல்ல காரியத்துக்கு அப்படி செஞ்ச அதுக்கு பேரு நல்ல பிளாக்மெயில்...உனக்குத் தெரியுமா மகனே.. அந்த WMD இருக்கே அது ரொம்ப மோசமான ஆயுதம்.. அது இந்த உலகத்தையே அழிச்சிடும். அதை ஈரக்குல உடனே கண்டுபிடிச்சி அதை அழிச்சாதான் நாம நிம்மதியா உயிர்வாழ முடியும். அது மிக மிக முக்கியம் தெரியுமா!

மகன்: அப்பா! அப்படி ஒன்னும் அங்க இல்லயே. ஈராக்குல இதுவரைக்கும் அப்படி ஒன்னயும் நமது படைகள் கண்டுபிடிக்கலயே!

தந்தை: சரிதான்.. அது நமக்கு இப்பத்தான தெரிஞ்சது.. முன்னால நமக்குத் தெரியல..நாம நினைச்சோம் அது அங்கதான் இருக்குன்னு

மகன்: அப்படின்னா.. இவ்வளவு நாளா அங்க நமது படைகள் தாக்கி செத்துப்போன அத்தனை பேரும் அப்பாவிங்கதான? இது தப்பில்லையா அப்பா?

தந்தை: இல்ல மகனே! அது ஒரு சோகமான நிகழ்வு... இங்க பாரு.. நமது படைகள் அங்க போனதுனால நாம நிறைய அப்பாவிகளை காப்பாத்தி இருக்கோம். சதாம் ஹுசைன் ஒரு கொடூரமான ஆட்சியாளன். அவன் நிறைய அப்பாவி ஈராக்கிகளை கொலை செய்திருக்கான். அவன் ஆட்சியில இருக்கும்னுங்கறதுக்காக நிறைய பேர சித்திரவதையும் கொலையும் செஞ்சிருக்கான். அவனது கொடுமைகளுக்கு நிறைய ஆண்கள், பெண்கள் இன்னும் குழந்தைங்கக் கூட பலியாயிருக்காங்க.

மகன்: நம்மக்கூட டீவியில பாத்தமே.. ஒரு பையனோட கை கால் தனியா போய் கீழக் கிடந்தானே. அப்படித்தானே?

தந்தை: ஆமாமாம்..அந்த மாதிரித்தான்.

மகன்: ஆனா அது நம்ம படைகள்தானே ஏவுகனை வீசி அப்படிச் செஞ்சது. அப்படீன்னா.. நம்ம தலைவர்களும் பயங்கரவாதிங்களா?

தந்தை: கடவுளே... உனக்கு இப்படியெல்லாம் சொன்னது யார். உனக்கு எங்கேயிருந்து இப்படி அயிடியா கிடைச்சது. அது ஒரு விபத்து.. போர்ல இப்படித்தான் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவாங்க. ஒரு நகரத்துல வெடிகுண்டுகள் வீசும்போதும், ஏவுகனைகள் வீசும்போதும் இப்படித்தான் நடந்து போகும்.. அத எப்படி தடுக்க முடியும்.. போர்னா இப்படித்தான். யார் என்ன செய்ய முடியும்

மகன்: சரிப்பா... போர்னா.. போர் வீரர்கள் மட்டும்தனே கொல்லப்படுவாங்க?

தந்தை: ஹம்ம்ம்...வீரர்களுக்கு பயிற்சிக் கொடுக்கப்பட்டுள்ளது. அவங்கல்லாம் துணிச்சல் நிறைஞ்சவங்க.. அவங்களுக்குத் தெரியும் போர்னா கொல்லப்படுவோம்னு... எப்ப அவங்க யூனிபார்ம் போட்டு போருக்குப் போறாங்களோ அப்பவே அவங்கள எதிரிப்படைகள் குறி வைச்சுடுவாங்க.

மகன்: பயங்கரவாதிங்கல்லாம் என்ன யூனிபார்ம் போடுவாங்கப்பா?

தந்தை: அதுதாண்ட மகனே பிரச்சனையே.... அவங்க உடை சாதாரண மனிதர்கள் போடறமாதிரிதான் இருக்கு. இதுல பயங்கரவாதி யாரு.. அப்பாவி யாருன்னு கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம். அதனாலதான் நிறைய அப்பாவி மக்கள் கொல்லப்படுறாங்க... அந்த பயங்கரவாதிங்க... போருக்குன்னு இருக்கிற சட்ட திட்டங்கள பின்பற்றுவதே கிடையாது.

மகன்: போருக்கு சட்டம், விதி அப்படீல்லாம் இருக்காப்பா?

தந்தை: கண்டிப்பா... போர் வீரர்களெல்லாம் யூனிபார்ம் போடனும்.. நீயா திடீர்னு யாரையும் அட்டாக் பண்ணக் கூடாது, உன்னை யாராவது அட்டாக் பண்ணின.. நீ உன்னையும் நாட்டயும் காப்பத்தனும்.

மகன்: அப்படீன்னா.. ஈராக்தான் முதல நம்பள தாக்குனதா? நாம நம்ம நாட்டை பாதுகாக்கத்தான் சண்டை போடறமா?

தந்தை: ச்ச்ச்ச்...அப்படி இல்ல.. ஈராக் நம்பள தாக்குல.. ஆனால் அது நம்மள தாக்கக்கூடும்.. அதனாலதான் முன்னேற்பாட நாம ஈராக் மேல படையெடுத்தோம். ஏன்னா அதுக்குட்ட WMD இருக்கு.

மகன்: அதான் அவங்ககிட்ட அந்த WMD இல்லயே.. நாமதான் போருக்கான விதி முறைகளை மீறிட்டோம்.

தந்தை: சட்டப்படி பார்த்தா அப்படித்தான்.. ஆனால்

மகன்: நாம அந்த சட்டங்கள மீறினா.. ஏன் அந்த ஈராக்கிங்க... யூனிபார்ம் போடாத அவங்க மட்டும் சட்டத்தை மீறக்கூடாது?

தந்தை: ம்ம்ம்... அது சரிதான்... ஆனால் நாம நல்லதுக்குத்தானே அப்படி செய்யுறோம். அதனாலதானே சட்டதை நாம உடைச்சோம்.

மகன்: சரி அப்பா.. நாம் நல்லதுதான் செய்றோம்னு நமக்கு எப்படி தெரியும்.

தந்தை: நம்ம தலைவர்கள் சொல்றாங்கல.. புஷ், பிளயர்.. ஹோவர்டு.. அவங்களுக்குத் தெரியலன.. வேற யாருக்குத் தெரியும். அவங்கதான் சொன்னாங்க ஈராக்குல ஏதாவது செய்யலன்னா.. அது ஒரு மோசமான நாடா போயிடும்னு. அத ஒரு நல்ல நாடா மாத்தனும்னுதான் இத செஞ்சாங்க.

மகன்: ஈராக் இப்போ ஒரு நல்ல நாடா ஆயிடுச்சா?

தந்தை: நான் அப்படித்தான் விரும்புறேன். ஆனால்,, சரியா தெரியல. அங்க தினம் தினம் அப்பாவி மக்கள் கொல்லப்படுறாங்க.. மக்கள் பினைக்கதிகளா கடத்தப்படறாங்க..அந்த பினைக்கைதிகளோட குடும்பங்கள நினைச்சு நான் ரொம்ப வருத்தப்படுறேன். ஆனால்.. அதுக்காக அந்த பயங்கரவாதிங்களுக்கு நாம பனிஞ்சுப் போயிடக்கூடாது. அவர்களை நாம் எதுத்தாகனும்.

மகன்: சரிப்பா... என்னை ஏதாவது ஒரு பயங்கரவாதி அப்படி கடத்திக்கிட்டு போயிட்டா.. நீங்க இப்படி பேசுவீங்களா? அவங்கள சும்மா விடக்கூடாதுன்னு சொல்லுவீங்களா?

தந்தை: ஓ... காட்... என்னட இப்படியெல்லாம் பேசுறா... இல்லா... ஆமாம்... அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

மகன்: அப்படீன்னா... அந்த பயங்கரவாதிங்க.. என்ன கொலை செய்ய விட்டிடுவீங்களா.. என் மேல உங்களுக்கு அன்பு பாசமெல்லாம் கிடையாதா?

தந்தை: என்ன இப்படி சொல்றடா... உன்னை நேசிக்காம நான் யார நேசிப்பேன். அப்படி நடந்தா அது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா? இது ரொம்ப சிக்கலான கேள்விடா கண்ணா.. நான் என்ன முடிவு எடுப்பேன்னே தெரியல.

மகன்: அப்பா.. யாராவது நம்மள தாக்கி நம்ம வீட்டுமேல பாம் போட்டு உங்களயும், ஜேமியையும், அம்மாவையும் கொலை செஞ்சா நான் என்ன செய்வேன் தெரியுமா?

தந்தை: என்ன செய்வ?

மகன்: இதை செஞ்சவன் யாருன்னு கண்டுபிடிச்சி... அவன கொல்லாம விடமாட்டேன். என்ன ஆனாலும் சரி...ஒரு ஜெட்டுல ஏறி...அந்த நாட்டுமேல படையெடுத்து.. அந்த நகரத்துமேல குண்டு போட்டு எல்லாரையும் கொன்னுபுடுவேன்.

தந்தை: ஆனால்.. நீ நிறைய அப்பாவி மக்கள கொன்னுபுடுவியே

மகன்: எனக்குத் தெரியும்...ஆனால்.. போர்னா... அப்படிதாம்பா.. என்ன செய்யுறது.

Written by: David Campbell.. Melbourne. April 23, 2004
David Campbell is an Australian journalist

Monday, June 27, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 3

யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாம் - நெருப்புக் கிடங்கு

அசத்தியம் எப்போதெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறதோ அப்போதெல்லாம் சத்தியத்தை நெருப்பிலிட்டு கொளுத்த தயங்கியதில்லை. ஆனால் சத்தியம் அதிகாரத்தில் இருக்கும்போது அசத்தியத்தில் இருப்பவர்களுக்கு தங்களை அந்த தவறான கொள்கைகளிலிர்ந்து விடுவித்துக் கொள்ள எப்போதுமே சந்தர்ப்பம் கொடுக்கத் தயங்கியதில்லை. இதுதான் சத்தியத்தின் பலமும் கருணையும். அசத்தியத்தின் பலம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதுதான்.

ஆப்ரஹாம் கொண்டுவந்த அல்லது சொன்ன அந்த சத்தியம் இறை நம்பிக்கை சம்பந்தப்பட்ட ஒரு ஆழ்ந்த கருத்து. அந்தக் கருத்துக்கள், கொள்கைகள் அசத்தியத்தின் அதிகாரத் தூண்களை அகற்ற வல்லது என்பதை புரிந்த அசத்திய மேதாவிகள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆப்ரஹாமை இல்லாமல் செய்து சத்தியத்தை அழித்துவிட முயற்சித்தனர்.

இந்த மன நிலை இன்றும்கூட அதிகமாக விரவிக்கிடப்பதை எல்லா நிலையிலும் காணலாம். ஆப்ரஹாம் சொன்ன மார்க்கம் ஓரிறை மார்க்கம். இறைவன் தான் படைத்த மக்கள் நல்வழியில் சென்று மறைவதையே விரும்புகிறான். அதை தான் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு இறைத்தூதர் மூலமாகவும் உலக மக்களுக்கு வழிகாட்டியாக அனுப்பிவைத்தான். மனிதர்களுக்கு வழிகாட்டியாக அப்போதிருந்த ஆப்ரஹாம், யூதகுலத்தின் பிதா, அரேபியர்களின் தந்தை, நெருப்பிலிட்டு அழிக்க அந்நகரத்துக் கூட்டம் தயாரானது.

நகரத்தின் பொது மைதானத்தில் மரக்கட்டைகளும், பட்டைகளும், ஓலைகளுமாக கொண்டுவந்து குவிக்கப்பட்டன. ஒரு சிறிய மலைக்குன்றைப் போல் அந்தக் குவியல்கள் பெருகிவந்தது. நகரத்தில் வசிக்கும் ஆண், பெண் மற்றும் சிறுவர்கள் வரை யார் யாருக்கெல்லாம் ஆப்ரஹாமின் மீது வெறுப்பு இருந்ததோ அல்லது யார் யாரெல்லாம் நகரத்தலைவர்களின் விசுவாசிகளாக இருந்தார்களோ அவர்கள் எல்லோரும் ஆப்ரஹாமை நெருப்பிலிட்டு கொளுத்தும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள்.

சத்தியத்தை எடுத்தியம்பும் மனிதனை முதலில் தீர்த்துக் கட்டுவது. பிறகு அந்த மனிதர் கொண்டுவந்த அந்த சத்தியக் கொள்கைகளை அழிப்பது. இதுதான் காலம் காலமாக சத்தியத்தின் எதிரிகள் செயல்படுத்திவரும் கோட்பாடுகள். அப்படி அழிக்க முடியாவிட்டால் அந்தக் கொள்கைகளை சின்னபின்னப் படுத்தி சிதைத்துவிடுவது. அதுவும் இயலாத பட்சத்தில் அந்தக் கொள்கைகள் இந்தக் காலத்திற்கு ஒவ்வாது என்று தட்டிக் கழிப்பது. அதுவும் நடக்காத பட்சத்தில் அந்தக் கொள்கைகளை சொன்ன அல்லது கொண்டுவந்த மனிதரின் தனிமனித வாழ்க்கையை தேடித் துருவி அதில் ஏதேனும் தவறுகளோ அல்லது முரண்பாடுகளோ இருந்தால் அதைக் காரணமாகக் காட்டி அந்தக் கொளைகளை ஒழித்துக் கட்டுவது அல்லது எதிர்ப்பது. அதுவும் முடியவில்லை என்றால் இப்படிப்பட்ட சத்தியக் கொள்கைகளும் கருத்துக்களும் எப்படி வெளியானது என்று ஆராட்சியில் ஈடுபட்டு தானும் வழிமாறி அடுத்தவர்களையும் குழப்பி எப்பாடு பட்டாவது அந்தக் கொள்கைகளை அழித்துவிடுவது என்று பலவிதாமான வன்முறைகள் சத்தியத்திற்கு எதிராக நடத்தப்படுகின்றன. அதில் முதலாவதான சத்தியத்தைச் சொன்னவரை கொன்றுவிடுவது, அதிலும் பொது இடத்தில் நெருப்பிலிட்டு கொலை செய்தால் நாளை வேறு யாரும் 'ஓர் இறைவனை மட்டும் வணங்குங்கள், சிலைகளை வணங்காதீர்கள்' என்று சொல்ல துணிவு வராது என்ற காரணத்திற்காக ஆப்ரஹாமை நெருப்பிலிட்டு கொல்ல மைதானத்திற்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டார்.

பீரங்கி வண்டியைப் போல் மரத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு இழுவண்டி கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. மக்கள் கூட்டம் திரண்டு நின்று ரசித்துக் கொண்டிருந்தது. இழுவண்டியின் மேல் அம்புபோல் அல்லது கிட்டத்தட்ட ஒரு ஏவுகணை போல் பொருத்தப்பட்ட மரக்கட்டையை வெளியில் எடுத்து அதில் ஆப்ரஹாமை படுக்கவைத்து இரும்பு கம்பிகளால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்டார். மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்ய தேரவும் அவரது உறவினர்களும் கண்களில் கண்ணீரும் மனம் முழுக்க கலக்கமாக தனது மைந்தனின் மரணத்தைப் பார்க்க சகிக்காமல் நின்று கொண்டிருந்தனர்.

நகரத்துத் தலைவர்களின் இறுமாந்த பார்வை மக்கள் கூட்டத்தைப் பார்த்து 'இனி யாராவது இப்படிப்பட்ட பிரச்சாரம் செய்ய எத்தனித்தால் இதுதான் தண்டனை, பார்த்துக் கொள்ளுங்கள்' என்பது போல் சுற்றி வந்தது.

நெருப்புக் கிடங்கின் சுவாலைகள் வானத்தைத் தொடும் அளவிற்கு உயரமாக எரிந்துக் கொண்டிருந்தன. தீச்சுவாலைகளின் அனல் கக்கும் வெப்பம் அருகிலிருந்த மனிதக் கூட்டங்களை எல்லாம் எரித்துவிடுமோ எனும் அளவிற்கு தகித்துக் கொண்டிருந்தது.

இழுவண்டியின் மேல் மரக்கட்டையில் இணைத்ட்துக் கட்டப்பட்ட ஆப்ரஹாமின் உடல் மக்களின் பார்வைக்கு நெருப்புக் கிடங்கைச் சுற்றி இழுத்துவரப்பட்டது.

'ஓ ஆப்ரஹமே! இன்னும் உங்களுக்கு சந்தர்ப்பம் இருக்கிறது.. நகரத்து தலைவர்கள் சொல்வதைக் கேட்டு பயந்து நடந்துக் கொள்ளுங்கள், நீங்கள் உயிர் பிழைக்கலாம்' என்று மக்கள் சத்தமிட்டனர்.

'உங்களுக்கு விரோதமாக மக்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு பயந்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்களது அந்தக் கூற்றானது பயம் ஏற்படுத்துவதற்கு பதிலாக நம்பிக்கையைத்தான் அதிகப்படுத்தியது. மேலும் 'அல்லாஹ்வே எங்களுக்கு போதுமானவன், பாதுகாவலில் அவன் மிக்க நல்லவன்'. என்றும் கூறினார்கள். அவர்கள் இறைவனின் அருட்கொடையையும், பேரருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களை எந்தத் தீங்கும் அணுகவில்லை' (1)

இரும்புக் கம்பிகளுடன் இணைக்கப்ட்ட ஆப்ரஹாம் அவர்கள் உறுதியாக தனது பதிலை எடுத்து வைத்தார்கள்' அல்லாஹ்வைத்தவிர வேறு கடவுள் இல்லை, அவனே புகழுக்குரியவன், இவ்வுலகங்களின் அதிபதி, அவனுக்கே எல்லா புகழும் தகும், அவனிடமே அதிகாரங்கள் அனைத்தும், அல்லாஹ்விற்கு இணையாளன் யாரும் இல்லை' என்ற அவரது அழுத்தமான பிரார்த்தனை ஆரவாரங்களையும் மிஞ்சி நின்றது.

இழுவண்டி நெருப்புக் கிடங்கை சுற்றிவந்து நின்றது. ஆபரஹாமின் உறவினர்கள் விழிகளை மூடி பார்க்க சகிக்காதவர்களாக குனிந்து கண்ணீரை செறிந்துக் கொண்டிருந்தனர்.

'நெருப்பிலிட்டு கொளுத்துங்கள்' (2) என்ற நகரத்தலைவரின் சத்தம் ஆங்காரமாக ஆணையிட மக்கள் "ஓ...வென்று' சத்தமிட்டு அமைதியாயினர். இழுவண்டியின் பீரங்கி முனை நெருப்புக் கிடங்கை நோக்கி முன்னிறுத்தப்பட தீச்சுவாலைகளின் சத்தத்தைத் தவிர்த்து வேறு எந்த சத்தமும் இல்லாமல் உலகமே ஸ்தம்பித்ததுபோல் கொடூரத்தின் அமைதி எல்லோரையும் மௌனமாக்கியது.

'ஹஸ்புனல்லாஹா வநிஃமல் வக்கீல் (அந்த வல்ல இறைவனே போதுமானவன்) என்ற ஆப்ரஹாமின் குரல் மட்டும் அத்தீச்சுவாலைகளின் சத்தத்தையும் அங்கு கூடியிருந்த கூட்டத்தின் மக்களையும் கடந்து வான வெளிகளை சென்றடைந்ததுபோல் எதிரொலித்தது.

இழுவண்டியிலிருந்து எரியப்பட்ட ஏவுகணைபோல்..... சத்திய மகனின், அல்லாஹ்வின் தோழன் என்று சிறப்புப் பெற்ற அம்மகான் ஆப்ரஹாமின் உடல் வானவெளியில் பயணம் செய்து சரியாக நெருப்புக் கிடங்கின் மத்தியிலே வந்து விழுந்தது.

'(அவர்கள் இப்ராஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே), "நெருப்பே, இப்ராஹீமிற்கு குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு" என்று நாம் கூறினோம் (3) என்ற மகத்துவம் நிறைந்த மாபெரும் இறைவனின் உதவி அங்கே ஆப்ரஹாமிற்கு வந்து சேர்ந்தது.

ஆப்ரஹாமின் 'நான் நம்பும் அந்த இறைவனின் பாதுகாப்பே எனக்கு போதுமானது' என்ற உறுதி நெருப்புக் கிடங்கின் தீச்சுவாலைகளிலிருந்து அவரைக் காப்பாற்றியாது.

இனி எரிப்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலைக்கு அந்நகரத்தில் எரிபொருள்கள் எல்லாம் காலியாகிப் போயின. ஆப்ரஹாம் மட்டும் எந்தவித தீங்கும் இல்லாமல் அவரை அந்த நெருப்பு ஒன்றும் செய்ய இயலாமல் தானே எரிந்து, தானே சாம்பலாகிப்போனது.

கூடியிருந்தக் கூட்டம் வயடைத்து வார்த்தகளை இழந்ததுமல்லாமல் சத்தியத்தின் பலத்தில், உண்மையின் அழியா நிலையைப் பார்த்து தங்களையும் இழந்து நின்றது. அவமானத்தில் வெட்கித் தலைகுனிந்தது. அசத்தியம் தற்காலிகமாக அந்த இடத்தைவிட்டு எப்போதோ மறைந்து போயிருந்தது.

அவர்கள் ஆப்ரஹாமிற்கு சதி செய்ய நாடினார்கள். நாம் அவர்களையே நஷ்டமடைந்தவர்களாக செய்துவிட்டோம் (4)

அவமானத்தில் மக்கள் எல்லோரும் தலைகுனிந்து நிற்க, ஆப்ரஹாம் இறைவனின் பேரருளுடன் நெருப்புக் கிடங்கைவிட்டு எழுந்து நடந்து வெளிவந்தார். அவரின் உறுதி இன்னும் அதிகமாகியது. அவர் மூலமாக இறைவன் அந்த மக்களுக்கு இன்னுமொரு அதியசத்தை நிகழ்த்தி மக்களை நேர்வழிக்கு வருமாறு இறைவன் மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தை அளித்தான்.

ஆப்ரஹாமும் நம்ரூதும்

ஆப்ரஹாமின் இந்த அதிசயம் நிறைந்த நிகழ்ச்சி பாபிலோனா தேசமெங்கும் காட்டுத்தீப்போல் பரவ பாபிலோன தேசத்தின் அரசன் நம்ரூத் குழப்பத்தில் கொதித்தெழுந்தான்.

என்னைவிட சக்தி நிறைந்த ஒன்று இந்த உலகில் உள்ளதா என்ற அவனது சீற்றம் ஆப்ரஹாமின் தனது ஏக இறைவனின் பிரச்சாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவியாக அமைந்தது.

அரசன் நம்ரூதுடனான ஆப்ரஹாமின் சந்திப்பு தயாரானது. அரசவைக் கூட்டமும் அமைச்சர்கள் பெருமக்களும் இன்னும் அத்தேசத்தின் முக்கிய பிரமுகர்களுமாக அந்த நாள் அரசவையின் வைபோக நாளைப்போல் விவாதத்திற்கு தயாரானது.

நம்ரூதுடனான விவாதம் ஆரம்பித்தது. ஆப்ரஹாமின் கேள்விகளுக்கு நம்ரூத் பதிலளிக்கத் தொடங்கினான். விவாதம் சிலைகளில் தொடங்கி, தனி மனித சக்திகளிலிருந்து அதிகாரம் வரை சென்று முடிவாக நம்ரூத் தன்னைவிட சக்தி நிறைந்தது இந்த உலகில் கிடையாது என்று கர்ச்சித்தான். ஆட்சியும் அதிகாரமும் கொடுத்த இறைவனை புறக்கணித்து தானே சிறந்தவன், உயர்ந்தவன் என்ற நம்ரூதின் வாதம் அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருந்ததே தவிர்த்து, தான் நிலையற்றவன், மரணம் தனக்கும் உண்டு என்பதை முற்றிலும் மறந்ததாகவே இருந்தது.

'எவன் உயிர் கொடுக்கவும், மரணத்தை அளிக்கவும் செய்கிறானோ அவனே என்னுடைய இரட்சகன் (இறைவன்)' (5) என்று ஆப்ரஹாம் சொல்ல நம்ரூத் எக்காளமிட்டு சிரித்தவாறு 'நானும் உயிர்ப்பிக்கச் செய்வேன், மரணிக்கவும் வைப்பேன்' என்று சத்தமிட்டான் (6).

அத்தோடு நில்லாமல், 'யாரங்கே' என்று சத்தமிட்டு அழைக்க அரசவைக் காவலர்கள் வந்து நின்றார்கள். 'இரண்டு மனிதர்களை இங்கே அழைத்து வாருங்கள்' என்று நம்ரூத் கட்டளையிட.. இரண்டு அப்பாவி மனிதர்களை காவலர்கள் அரசவை மண்டபத்தின் நடுக்கூடத்திற்கு இழுத்து வந்தார்கள்.

'இதில் ஒரு மனிதனின் கழுத்தைச் சீவி கொல்லுங்கள்' என்ற நம்ரூதின் அகங்கார சத்தம் ஒரு அப்பாவி மனிதனின் உயிரைக் குடித்தது. 'இங்கே நிற்கும் அந்த இன்னொரு மனிதனை திருப்பி அனுப்பி விடுங்கள்' என்று கத்திய குரூரத்தின் உருவமான நம்ரூத் ஆப்ரஹாமின் பக்கம் திரும்பி, பார்தீரா.. நான் தான் உன் இறைவன், உனது இரட்சகன்.. நான் மரணத்தையும் கொடுப்பேன், உயிரையும் கொடுப்பேன்' என்று அறிவிற்கு சம்பந்தமில்லாத கொடுங்கோலனாக வாதம் செய்தான்.

அமைதியாக நம்ரூதைப் பார்த்த ஆப்ரஹாம்..'அப்படியென்றால் 'நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்கிலிருந்து (உதிக்கச் செய்து) கொண்டு வருகிறான். அதை நீ மேற்கிலிருந்து கொண்டுவா' என்றார் (7)

ஏக இறைவனை நிராகரித்த நம்ரூத் திகைப்பில் வாயடைத்துப் போய் நின்றான்.

(தொடரும்)

1. திருக் குரான் (3:173 -174)

2. திருக் குரான் (21:68)

3. திருக் குரான் (21:69 - 70)

4. திருக் குரான் (21:70)

5. திருக் குரான் (2:258)

6. திருக் குரான் (2:258)

7. திருக் குரான் (2:258)

Tuesday, June 21, 2005

அத்வானியின் அக்கினி பிரவேசம்

அதிகாரம் இல்லாத அரசியல்வாதிக்கு அக்கம் பக்கம் எல்லாம் இருட்டாகத்தான் தெரியும் என்பதற்கிணங்க இன்றைய எதிர்க் கட்சியான பா.ஜா.கா. வின் தலைவர்கள் எல்லாம் இருட்டில் யார் மீது கரியை பூசுகிறோம் என்று தெரியாமல் ஒருவரை மாற்றி ஒருவர் அவர்களின் மேலேயே பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

The Hawk என்று ஆங்கிலத்தில் பெருமையுடன் அழைக்கப்படும் பா.ஜா.கா.வின் தலைவர் அத்வானி தற்போது ஒரு அக்கினி பிரவேசம் செய்து கொண்டிருக்கிறார். சீதையின் மேல் பிறர் கலங்கம் சொன்ன போது ராமன் தன் மனைவியை அக்கினியில் குளித்து வர அனுமதித்ததுபோல் தற்போது அத்வானி அவர்கள் ஜின்னாவை பற்றி பேசியதற்காக அக்கினி பிரவேசம் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அத்வானி ஓர் ராம பக்தர் அல்லவா? ராம ராஜ்யத்தை நிறுவத் துடிக்கும் அவரின் வாழ்க்கையில் ராமருக்கு நேர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்.

செக்குலரிசம் என்றாலே ஒரு அருவருக்கத்தக்க வார்த்தை என்று காங்கிரசிலிருந்து கம்யூனிஸ்ட்கள் வரை செக்குலரிசம் பேசிய எல்லோரையும் திட்டித் தீர்த்து வைத்த இந்த பரிவாரக் கும்பல்கள் இப்போது திடீரென்று செக்குலரிசம் என்றால் ஏதோ ஒரு புனிதமிக்க வார்த்தையைப் போன்று அதை எப்படி அத்வானி 'ஜின்னாவை ஒரு செக்குலரிஸ்ட்' என்று அழைக்கலாம் என்று பிடி பிடி என்று அத்வானியை நிம்மதியாக தூங்கவிடாமல் செய்துவருகிறார்கள்.

உண்மையிலேயே அத்வானி ஜின்னாவைப் பற்றி சிறப்பாக பேசிய காரணத்தால் இந்த அக்கினி பிரவேசம் செய்து தன்னை ஒரு இந்துத்துவ தலைவர்தான், தான் அப்படி பேசியது தவறுதான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா அல்லது தனது அரசியல் வாழ்க்கையில் தான் 'நம்பர் இரண்டு' என்ற அந்த பிரமையை களைக்க வேண்டி பாகிஸ்தான் விஜயத்தில் ஜின்னா பற்றிய பேசி அதை ஒரு சந்தர்ப்பமாக வைத்து அக்கினி பிரவேசம் செய்தாரா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அத்வானி அவர்கள் இரண்டு அக்கினிபிரவேசங்களை செய்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

தற்போதைய அரசியல் சூழ்நிலையும் இன்னும் நான்கு வருடத்திற்கு பிறகு அமையப்போகிற அரசியல் எதிர்பார்ப்பையும் வைத்து பார்க்கும்போது அத்வானி அவர்கள் தன்னைச் சுற்றி ஒரு புதிய அரசியல் வியூகத்தை அமைக்க வேண்டியதுள்ளதை புரிந்துக் கொள்ள முடியும். சில நேரங்களில் அரசியல் விளையாட்டுக்கள் புரியாததாக தோன்றலாம் அல்லது புரியாத விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த விளையாட்டைத் தொடங்கிய அந்த அரசியல்வாதிக்கு அதிலும் அத்வானி போன்ற பழுத்த ஒரு ராஜ தந்திரிக்கு நன்றாகவே புரியும், புரிந்துதான் இந்த விளையாட்டைத் தொடங்கியுள்ளார்.

பிரதமர் அத்வானி

அத்வானியின் உழைப்பில் யார் யாரோ அரசியல் செல்வாக்கை சுவைக்கும்போது (வாஜ்பேய் அவர்களையும் சேர்த்துதான்) இன்றைய பா.ஜா.காவின் உயற்விற்கு பெரிதும் காரணமாக இருந்த அத்வானி பிரதமராக வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு? அவர் நினைத்ததில் தவறில்லை. ஆனால் தற்போதைய இந்திய அரசியல் அதவானியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம். நான்கு வருடம் கழித்து இருக்கும் இந்திய அரசியலில் ராமரை மட்டும் நம்பி ஓட்டு வாங்குவதென்பது நடக்கக் கூடிய காரியம் இல்லை. ராமர் என்றால் யார் என்று இளைஞர் பட்டாள ஓட்டர்கள் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு பாப் கலாச்சாரமும் மேலைநாட்டு 'மாடர்ன் வாழ்க்கையும் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது'. அத்வானி அவர்கள் எல்லா தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மாடரேட் அரசியல்வாதியாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார். இதை அவர் இப்போது செய்யாவிட்டால் இனி எப்போதும் செய்ய முடியாது. தனது அரசியல் பாதையில் முக்கியமான திருப்பத்தில் நின்றுக் கொண்டிருக்கும் அத்வானியின் அரசியல் வியூகம் ஆச்சர்ய தர்மேந்திரா, அசோக் சிங்கால் மற்றும் தொகாடிய போன்றவர்களுக்கு வேண்டுமானல் பிடிக்காமல் இருக்கலாம்.

சரஸ்பூர் ராமர் கோவிலின் சுவாமி அகிலேஷ்தாஸ்ஜி வாக்கு சேகரிக்கப் போனால் எத்தனை ஓட்டுகள் கிடைக்கும் என்று அத்வானிக்கு தெரியும். அதனால்தான் சுவாமி அகிலேஷ்தாஸ்ஜி அத்வானியை ஒரு 'விலைமாதை விட கேவலமானவர்' (1) என்றும் பேசினாலும் அத்வானி கண்டு கொள்ளமல் இருக்கிறார். இந்த விலைமாது உவமையை துவங்கி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் அவர்கள்தான். (பா.ஜா.கா.வின் மூக்கணாங்கயிறு கையைவிட்டு போய்விடுமோ என்ற கவலை அவருக்கு).

'அடுத்தமுறை ரத யாத்திரையை அத்வானி அவர்கள் இஸ்லாமாபத்திலிருந்து தொடங்கட்டும்' (2) என்று கூக்குரலிட்ட ஆச்சார்ய தர்மேந்திராவின் அரசியல் செல்வாக்கும் சொல்வாக்கும் அத்வானியை பிரதமராக்கிவிடமுடியுமா?

இந்துத்துவ பரிவாரத்தின் பலமே ஆளாளுக்கு ஒன்று பேசி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வதே. அதில் அவர்கள் கைவந்தவர்கள். அதைப் போன்றதொரு குழப்பத்தை இப்போது தனது பரிவாரக் குடும்பங்களில் உருவாக்கி தன்னை ஒரு தன்னிகரற்ற தலைவராக காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார் அத்வானி. வாஜ்பெய் அவர்களைப்போல் நேரத்திற்கு ஒன்று பேசிவிட்டு அதை தானே விழுங்கும் கலையும் வேண்டும், அதே நேரம் தான் சர்தார் பட்டேலைப் போல் ஒரு இரும்பு மனிதர் என்ற பெயரும் வேண்டும் என்று தான் வகுத்துள்ள இந்த அரசியல் வியூகத்தில் முதலில் தனது வீட்டை சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் அத்வானி.

அவர் அதில் வெற்றி பெறுவாரா அல்லது தான் விதைத்த விதையின் விளையே வலையாக மாறி அதில் தன் நீண்டகால அரசியல் கனவான பிரதமர் பதவியை இழக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் மக்களையும் நாட்டைப் பற்றியும் யாருக்கும் கவலையில்லை.


References:

1. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1148217,curpg-2.cms

2. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1148217,curpg-1.cms

Monday, June 20, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 2

யூத குலத்தின் தொடக்கம் - சிலை தகர்ப்பு

சூரியன் வானத்தை தழுவி வேகு நேரமாகிவிட்டது என்பதை உணர்த்தும் வண்ணமாக உச்சிவானத்தின் மேல் நின்று உலகை எரித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

நகரம் நடு இரவைப் போல் வெறிச்சோடிக் கிடந்தது. மக்கள் நேற்றிரவு நடந்து முடிந்த திருவிழாவில் ஆடிப்பாடிக் களைத்தவர்களாக இன்னும் உறக்கத்தில் இருந்தார்கள். ஆங்காங்கே சில வீட்டு மிருகங்கள் கேட்பாரற்று தெருக்களில் உலாவிக் கொண்டிருக்க திடீரென 'அய்யோ இந்த அநியாயத்தை கேட்க யாருமில்லையா' என்ற ஆங்காரமான சத்தம் நகரத்தின் அமைதியைக் குலைத்தது.

தெருக்களில் அலறியவாறு ஒடிய அந்த நடுத்தரவயது மனிதனின் சத்தம் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆண் பெண் குழந்தைகள் எல்லோரையும் ஏதோ இடி விழுந்ததுபோல் எழுப்பிவிட்டது. அந்த மனிதன் ஓடிய தெருக்களில் எல்லாம் மனிதர்கள் வெகுவேகமாக விழுந்தடித்து வெளியேறி வந்தனர். எதிரிகள் படை எடுத்து வந்து விட்டனரோ என்று மக்கள் இங்கும் அங்கும் அஞ்சிக் கொண்டிருக்க 'கோவிலில் இருந்த நமது கடவுள்கள் எல்லோரையும் அடித்து நொருக்கிவிட்டார்கள். எல்லா சிலைகளும் உடைந்து கிடக்கிறது... எல்லோரும் ஓடி வாருங்கள்' என்று அழைத்த சத்தம் நகரத்தின் எல்லா திக்கிலும் எதிரொலிக்க, மக்கள் பீதியடைந்தவர்களாக கோவிலை நோக்கி ஓடினார்கள்.

மக்கள் கலங்கியவர்களாக இது என்ன சோதனை. கடவுள்களை யார் உடைத்தது. இப்படியும் நடக்குமா? என்று ஒன்றும் புரியாமல் கோவிலை நோக்கி செல்ல மக்கள் கூட்டம் கடலலை போல் கோவிலைச் சுற்றி வட்டமிட்டது.

நகரத்தின் தலைவர்களும் புரோகிதர்களும் ஒன்றும் புரியாமல் கோபத்துடனும், தெய்வ குற்றம் நிகழ்ந்துவிட்டதே, இது என்ன சோதனையோ என்று கலங்கி ஒருவரோடு ஒருவர் பேச நா இல்லாமல் இங்கும் அங்கும் பார்த்தவாறு உடைந்து கிடக்கும் சிலைகளையும் அந்த கடவுள்களுக்கு இரவிலே படைக்கப்பட்ட சிதறிக் கிடக்கும் உணவுகளையும் பார்த்தாவாறு வேர்த்து விறுவிறுத்து நின்று கொண்டிருந்தார்கள்.

கண்களில் நீர் பெருக உடைந்து கிடக்கும் ஒவ்வொரு கடவுள் சிலைகளையும் பார்த்தவாறு உள்ளே நடந்து வந்து கொண்டிருந்த முதியவர், நகரத்தலைவர் உடைந்த சிலைகளுக்கு மத்தியிலே ஒரு பெரிய சிலை மட்டும் எந்தவித அப்பழுக்கும் இல்லாமல் அமைதியாக சுத்தமாக இருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்து போய் நின்றார். அவரது திகைப்புக்கு காரணம் அந்த சிலை உடையாமல் இருந்ததை நினைத்து அல்ல, மாறாக அந்த சிலையின் கை ஒன்றில் ஒரு கோடாலி தொங்கிக் கொண்டிருந்ததே.

'இது... இது ... என்ன விந்தை.. பார்த்தீர்களா' என்றவாறு மற்றவர்களை அழைக்க மற்ற தலைவர்களும் புரோகிதர்களும் கையில் கோடாலியுடன் வீற்றிருக்கும் சிலையைப் பார்த்து ஒரு நிமிடம் வாயடைத்து போய் நின்றார்கள். இந்த பெரிய கடவுள் சிறிய கடவுள்களை (சிலைகளை) உடைத்துவிட்டதோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு அந்த பெரிய சிலை வீரமான தோற்றத்துடன் புதிய அவதாரம் எடுத்து இருப்பதைப் பார்த்து பதைத்துப் போய் நின்றார்கள்.

'தலைவரே.. இது என்ன விந்தை.. இங்கே என்ன நடக்கிறது' என்றவாறு நெருங்கிய ஒருவர்.. கண்ணீர் மல்க அப்பெரிய சிலையின் காலடியில் மண்டியிட்டவாறு கைகட்டி அழ ஆரம்பித்தார்.

'இல்லை... இது ஏதோ ஒரு மனித செயல்தான்.. யாரோ இப்படி செய்திருக்கிறார்கள்.. யாரங்கே' என்று தலைவர் சத்தமிட அவரது ஏவாலள்கள் வேகமாக அவர் முன்னால் வந்து நின்றார்கள். இருநூறு வயதிற்கு மேல் இருந்த அத்தலைவரின் கர்ச்சனைக் குரல் அங்கிருந்த எல்லோரையும் அமைதியாகச் செய்தது.

'நமது கடவுள்களுக்கு இப்படி ஒரு பாதகச் செயலை யார் செய்தது? அப்படி செய்தவர் நிச்சயம் ஒரு அநியாயக்காரராகத்தான் இருக்கமுடியும் (1)' கூட்டமாக சத்தமிட்டார்கள்.

'அய்யா... இது நிச்சயமாக.. அந்த இளைஞனின் செயல்தான்.. ஆப்ரஹாமின் செயல்தான்... அவர்தான் எப்போது பார்த்தாலும் நமது கடவுள்களுக்கு எதிராக பேசிக்கொண்டு திரிந்தார். அதுமட்டுமல்ல.. இச்சிலைகளை உடைக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தார்'(2) என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல, எல்லோரும் தேரா இருக்கும் பக்கம் பார்த்தார்கள்.

'ஆம்.. அவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும்' என்று இன்னொருவரும் அதை ஆமோதித்தார்.

'ஆனாலும் நமது கடவுள்களை இப்படி பாதுகாப்பு இல்லாமல் விட்டு சென்றது நமது தவறுதான்' என்று கூட்டத்தில் இன்னொருவர் சொல்ல.. மக்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்க்கத் தொடங்கினர். கடவுளுக்குப் பாதுகாப்பா.. கடவுளிடம் நாம்தானே தினம் தினம் பாதுகாப்பு கேட்கிறோம், நேற்றிரவு நடந்த திருவிழாவில் கூட புரோகிதர்கள் எவ்வளவு நேரம் கடவுள் வாழிபாடு செய்து இந்நகரமும் மக்களும் சுகமாக வாழ வேண்டும் என்று பிரார்தித்தார்கள், இது என்ன இங்கே கடவுளே இப்படி பாதுகாப்பற்று உடைக்கப்பட்டுள்ளாரே என்று மக்கள் தங்களுக்குள்ளே தர்க்கம் செய்யத் தொடங்கினர்.

'நிறுத்துங்கள் உங்களின் பேச்சை...' தலைவரின் சத்ததில் மக்கள் எல்லோரும் அமைதியாக தலை குனிய நின்றார்கள்.

'கொண்டு வாருங்கள் அந்த ஆப்ரஹாமை. இந்த மக்கள் கூட்டத்தின் முன்னால் நாம் அவரை விசாரிப்போம். இந்த மக்கள் அனைவரும் சாட்சிகளாக இருக்கட்டும்'(3) என்று தலைவர் ஆனையிட நகரத்தின் காவலாளிகள் தலைவரின் முன்னால் மண்டியிட்டு வணங்கியவர்களாய் புறப்பட எத்தனிக்கும்போது

'அதற்கு அவசியமில்லை, நான் இங்குதான் இருக்கிறேன்' என்ற ஆப்ரஹாமின் குரல் வந்த திக்கை நோக்கி மக்களின் பார்வை சென்றது.

இந்த சூழலைத்தான் ஆப்ரஹாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மக்கள் எல்லோரும் ஒன்று கூட்டப்பட வேண்டும், அவர்களின் அறியாமையை அவர்களுக்கு உணர வைக்க வேண்டும். கடவுள் என்று நினைத்து வணங்கிக் கொண்டிருக்கும் இந்த கற்சிலைகள் இந்த மனிதர்களுக்கு நன்மையோ அல்லது தீமையோ செய்ய சக்தியற்றவை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களின் அறிவுப்பாதை திறக்கப்பட வேண்டும். அவர்களின் சிந்தனைகளில் மாற்றம் வர வேண்டும். இப்படிப்பட்ட சிலை வணக்கங்களினால் தான் மக்களின் கடவுள் சிந்தனைகள் அறியாமையில் இருக்கின்றது. இறைவணக்க வழிபாடுகளை பாழ்படுத்திவரும் அடிப்படை அம்சமே இப்படிப்பட்ட சிலை வணக்கங்களால்தான். அதை களைந்தாக வேண்டும் என்ற ஆபரஹாமின் வைராக்கியம் அவரை மக்கள் கூட்டத்தின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.

'ஆப்ரஹாமே...எங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தான? (4) கூட்டம் ஏகோபித்தக் குரலுடன் கேட்டது.

'மக்களே, அந்தப் பெரியதுதான் (கடவுள்) இவ்வாறு செய்தது. நீங்கள் அந்த பெரியதையே கேளுங்கள்' அவர்கள் பேசக்கூடியவர்களாக இருந்தால் அவர்களையே கேளுங்கள்.(5) என்று ஆப்ரஹாம் பதில் சொல்ல கூட்டத்தினரும் தலைவர்களும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மக்களின் முகங்களில் கவலையும் வெட்கமும் மாறி மாறித் தோன்ற அவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. 'நிச்சயமாக நீங்கள்தான் இவைகளை வணங்கி அக்கிரமம் செய்துவிட்டீர்கள் (6). கடவுள் என்றும், சக்தி நிறைந்தது என்றும் இத்தனை நாட்களாக நாம் இவைகளை வணங்கி வந்தது எத்தனை தவறு என்று ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தி பேசிக்கொள்ள கூட்டதில் சலசலப்பு அதிகமாக, தலைவர் சத்தமிட்டு எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி ஆனையிட்டார்.

வெட்கத்தில் தங்களின் முகத்தை தரையில் பார்த்தவர்களாய் நின்று கொண்டிருந்த மற்ற பிரமுகர்கள் சிறிது நேரத்தில் 'ஆப்ரஹாம்... இவைகள் பேசமாட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் (7) அப்படி இருக்கும் போது அவைகளிடம் எப்படி நாங்கள் கேட்கமுடியும் என்று சத்தமிட்டார்கள்

ஆப்ரஹாமுடன் செய்யப்படும் விவாதத்தில் முக்கியமான, சாதகமான ஒரு வாதம் கிடைத்ததுபோல் 'அதுதானே, இது என்ன கேள்வி, அச்சிலைகள் எப்படி பேசும்' என்று மக்களும் தலைவருக்கு அனுசரனையாக பேசி வைத்தனர்.

'(அப்படியானால்), உங்களுக்கு கொஞ்சமும் நன்மை செய்யாத, உங்களுக்கு தீமை செய்யாத இறைவன் அல்லாத ஒன்றை (இந்த சிலைகளை) வணங்குகின்றீர்களா (8) என்று ஆப்ரஹாம் திருப்பிக் கேட்டார்.

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டன சூழலில் நம்பிக்கை சம்பந்தப்பட்ட பிரச்சனையில் ஆப்ரஹாமின் வாதமும் அதில் இருக்கும் உண்மையும் கூட்டத்தை திகைக்க வைத்தது. என்ன பதில் எப்படி சொல்வதென்று தெரியாமல் மக்கள் தலைவர்களையும் புரோகிதர்களையும் பார்க்க அவர்கள் தரையில் தலையை கவிழ்த்தவர்களாக நின்று கொண்டிருந்தனர்.

'ச்சே.. உங்களுக்கும் அல்லாஹ் (இறைவன்) அல்லாத இவைகளும் நாசம்தான். நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா' (9) என்ற ஆப்ரஹாமின் கேள்வி கூடியிருந்த மக்களை திரும்பவும் வாயடைக்கச் செய்தது.

'நீங்கள் உங்களின் கைகளால் உருவாக்கிய (செதுக்கியவைகளை) இந்த சிலைகளையா வணங்குகின்றீர்கள்?' (10) என்ற தொடர் கேள்வியினால் உந்தப்பட்டவர்கள் ஆப்ரஹாமை நோக்கி அவர் பக்கமாக நடக்க ஆரம்பித்தார்கள். கூட்டம் ஆப்ரஹாமின் பக்கம் அவரின் வாதத்தில் உண்மையிருப்பதை உணர்ந்து செல்லத் தொடங்கியது தலைவர்களுக்கும் புரோகிதர்களுக்கும் பீதியை அளித்தது.

'உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான் (11) நீங்களும் நானும் அந்த இறைவனின் படைப்புகள், அப்படியிருக்கும்போது உங்களது கைகளால் நீங்கள் உருவாக்கிய ஒன்றை எவ்வாறு நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள்' என்ற ஆப்ரஹாமின் வார்த்தகள் அங்கிருந்த மக்களின் சிந்தனைகளை தூண்டிவிட அதைப் பார்த்துக் கொண்டிருந்த அச்சமுதாயத்தின் தலைவர்களும் புரோகிதர்களும் அவசர அவசரமாக ஆப்ரஹாமின் அருகில் நெருங்கிய அந்தக் கூட்டத்தின் முன்னால் நுழைந்து கையசைத்து தடுத்தார்கள். மக்கள் கூட்டம் சற்று நிதானித்து தலைவர்களின் அவசர வருகையால் தடுக்கப்பட்டு நின்றார்கள்.

'மக்களே..ஆப்ரஹாம் உங்களிடம் குழப்பத்தை உண்டாக்க நினைக்கிறார். நாம் இத்தனை காலம் சத்தியமென்று நம்பி நமது மூதாதையர்கள் முதல் இன்றுவரை வாழ்ந்து வணங்கி வந்த வாழ்க்கையை குற்றம் என்று சொல்கிறார். இவருக்கென்ன தெரியும்?. நமது பெற்றோர்களும், மூதாதையர்களும் என்ன அறிவற்றவர்களா? நமது காலச்சாரமும், பண்பாடும் தொன்று தொட்டது. இம்மனிதரின் பேச்சைக் கேட்காதீர்கள். தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் தேவையற்ற பேச்சுக்களை பேசிக் கொண்டிருக்கிறார். புரியாத விஷயங்களைச் சொல்லி நம்மை திசை திருப்ப முயற்சிக்கிறார்' என்ற தலவரின் பேச்சு மக்களை ஆப்ரஹாமை விட்டு தள்ளிச் செல்ல வைத்தது.

'(மக்களே) நீங்கள் ஏதும் செய்பவர்களாக இருந்தால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள். (அதன் மூலம்) உங்கள் (வணக்கதிற்குரிய) தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்' (12) தலவர்களின் ஒருமித்த இந்த ஆனை வேகமாக உரைக்கப் பட்டது.

'இவரை நெருப்பிலிட்டு கொளுத்துவதின் மூலம் சிலைகளை உடைத்த தெய்வ குற்றத்திற்கு அது தண்டனையாக இருக்கட்டும்'

எப்போதெல்லாம் அதிகார வர்க்கத்தின் தவறுகள் வெளிக்கொணரப் படுகிறதோ அல்லது பொதுமக்களை சத்தியத்தின் பாதையில் அழைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகாரவர்க்கத்தின் திமிரும், தனது உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குரூரமும் தான் செய்வது தவறுதான் என்றாலும் அதை மறைத்து சூழ்நிலையை தனக்கு சாதாகமாக்க முயற்சிக்கும்.
அதிகாரச் செருக்கு தான் செய்யும் தவறுகளை புரிய வைக்காது. மாறாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உண்மையைச் சொன்னவர்களை அல்லது செய்பவர்களை சமுதாயத்திலிருந்து அப்புறப்படுத்துவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட செயல்கள் அன்றைக்கும் நிகழ்ந்தது, இன்றைக்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் சிந்தனைப் போக்கு கொண்ட தலைவர்களின் இந்த முடிவினால் ஆப்ரஹாமிற்கு வழங்கிய அந்த தீர்ப்பு அங்கே கூடியிருந்த தலைவர்களாலும், புரோகிதர்களாலும், கடைசியாக மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆப்ரஹாமுடனான வாதத்தில் தங்களிடன் நியாயமும் இல்ல, பதில்களும் இல்லை என்றாலும் விட்டுக் கொடுக்க முடியாத சுயநல மற்றும் அதிகார திமிர் சத்தியத்தைப் போதிப்பவனை, உண்மையை சொல்பவனை, பொது நலம் நாடுபவர்களை சமாதிக் கட்டும் முயற்சியில் இறங்கியது.

'இவருக்காக ஒரு கிடங்கை உருவாக்குங்கள். பின்னர் அதில் நெருப்பை உர்வாக்கி அதில் அவரை தூக்கி எறியுங்கள் (13)' என்ற அம்மக்களின் கூக்குரல் நகரின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்தது.

குறிப்பு: யூத குலத்தின் பிதவாகவும், முஸ்லீம்களின் பிதாவகவும் இரு வேறு ஆன்மீக தோற்றத்தின் அடிப்படையான ஆப்ராஹாமின் (இப்ராஹீம் (அலை) அவர்களின் ஆரம்பகால வரலாற்றையும் அதில் அவர் எவ்வாறு, எந்தக் கொள்கைகளுக்காக போராடினார் என்பதை அறிந்துக் கொள்வது அவசியமாகிறது. இதன் மூலம் இஸ்ரேலிய வரலாற்றின் அடிப்படையை சரியாக புரிந்துக் கொள்ள முடியும். இந்த அடிப்படையைப் புரிந்துக் கொள்வது பிற்காலத்தில் இஸ்ரேல் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் தாக்கத்தை சரியாக அறிந்துக் கொள்ள உதவும்.

ஆப்ரஹாமை யூத குலத்தின் பிதாவாக ஆதியாகாமம் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள போதிலும் அவருடைய ஆரம்பகால வரலாற்றைப் பற்றி அதிகமாக அதில் அறியமுடியவதில்லை. ஆனால் அவரின் ஆரம்பகால வரலாற்றை திருக் குரான் ஓரளவு விவரிக்கிறது.


(தொடரும்)

1. திருக் குரான் (21:59)

2. திருக் குரான் (21:60 & 21:57)

3. திருக் குரான் (21:61)

4. திருக் குரான் (21:62)

5. திருக் குரான் (21:63)

6. திருக் குரான் (21:64)

7. திருக் குரான் (21:65)

8. திருக் குரான் (21:66)

9. திருக் குரான் (21:67)

10. திருக் குரான் (37:95)

11. திருக் குரான் (37:96)

12. திருக் குரான் (21:68)

13. திருக் குரான் (37:97)

Monday, June 13, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 1

யூத குலத்தின் தொடக்கம்

ஊரெல்லாம் திருவிழா கோலம். ஆண்களும் பெண்களும் ஆடிப்பாடி கொண்டாட்டமாய் தெருவெங்கும் சுற்றித் திரிந்தார்கள். சிறுவர்கள், மரக்கட்டைகளில் செதுக்கிய பொம்மைகளுக்கு கருப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை என்ற வர்ணங்களை பூசி மெழுகி கைகளில் வைத்துக் கொண்டு ஆடிப்பாடி தெருக்களில் வலம் வந்துக் கொண்டிருந்தார்கள். குடில்களின் வாசலில் வைத்திருந்த பாறைக் கற்களுக்கு அவரவர் விருப்பம்போல் அதற்கு வர்ணங்கள் அடித்து தத்ததமது வழிபாட்டு கடவுள்களை காட்சியாக வைத்து மகிழ்ந்துக் கொண்டிருந்தார்கள். அதைச் சுற்றி பெரியவர்களும், முதியவர்களுமாக நின்று கொண்டு தமது புரதான கலாச்சாரப் பெருமைகளைச் சொல்லியும் அந்த பாறைகளை (கற்களை) அவர்கள் எவ்வாறு எங்கிருந்து கொண்டு வந்தார்கள், அவைகளை எவரெவர் ஆசீர்வதித்தார்கள் என்றெல்லாம் அதன் சரித்திரங்களை இளைஞர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தார்கள்.

தேரா என்ற பெயர் கொண்ட நடுத்தர வயது மனிதர் ஒருவர், மேனியில் சுற்றிய துணியை மண்ணில் விழாதவாறு இடது கையில் பிடித்தவாறு யாரையோ தேடியவராய் நடந்து வந்துக் கொண்டிருந்தார்.

'அதோ அஜர் வந்துக் கொண்டிருக்கிறாரே' என்று ஒரு முதியவர் வந்து கொண்டிருக்கும் தேராவைப் பார்த்துச் சொல்ல தெருவின் மத்தியில் ஒரு பாறையைச் சுற்றி நின்ற அனைவரும் தேராவைப் பார்த்தவாறு மண்டியிட்டு மரியாதைச் செய்தார்கள்.

தேரா அந்த மக்கள் வாழ் பகுதியில் பெரும் மரியாதைக்குரிய புரோகிதர்களில் ஒருவராக இருந்தார். அப்பகுதியில் இருக்கும் கடவுள்கள் அனைவரையும் பிரதிஷ்டை செய்வது முதல் அவ்வப்போது அந்த கடவுள்களுக்கு செய்யக்கூடிய பெரிய விசெஷங்கள் அனைத்தையும் செய்யக்கூடியவர்களில் அவரும் ஒருவர். அவரது பெயர் தேரா என்று இருந்தாலும் அவரை அவர் அதிகம் விரும்பக்கூடிய 'அஜர்' என்னும் கடவுளின் பெயர் கொண்டுதான் அப்பகுதி மக்கள் அழைப்பது வழக்கம். (1)

தேரா, மண்டியிட்டு இருந்த அவர்களின் மரியாதையை கையசைத்து ஏற்றுக் கொண்டவுடன் மண்டியிட்டவர்கள் அனைவரும் எழுந்து அவர் அருகில் சென்று அவரின் கையை ஒருவர் பின் ஒருவராக பிடித்து மணிக்கட்டில் முத்தம் பதித்தார்கள்.

'எங்கே இந்த வழியாக.. திருவிழாக் கூடும் இடத்திற்கு மக்கள் புறப்பட்டுவிட்டார்கள். நீங்கள் யாரையோ தேடுவதைப் போல் தெரிகிறதே' என்று ஒரு பெரியவர் தயங்கி தயங்கி மரியாதையுடன் நிலத்தை நோக்கியவாறு கேட்டார்.

சற்று நேரம் அங்கிருந்தவர்களின் முகங்களை நோக்கிவிட்டு 'எனது மகன் ஆப்ரஹாம் (2) எங்கு சென்றார் என்று தெரியவில்லை அதுதான் தேடிக்கொண்டு வருகிறேன்.' என்று சொல்லிவிட்டு தான் புறப்படுகிறேன் என்று கைகளால் அவர்களுக்கு மரியாதை செய்துவிட்டு நகர்ந்தார்.

'கொஞ்ச நாட்களாகவே அஜரை கவனீத்தீர்களா, மன நிம்மதியில்லாமல் இருக்கிறார்' என்று கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் சொல்ல இன்னொரு இளைஞன் 'ஆம்.. ஆப்ரஹாம்தான் அதற்கு காரணம். நாம் செய்கின்ற கடவுள் சடங்குகள் எதையும் அவர் செய்வதுமில்லை.. அதுமட்டுமல்லாமல்.. நாம் கடவுள் என்று வணங்குகின்ற சிலைகளை அவர் வணங்கவும் மறுக்கிறார்'

இவர்களின் இந்த உரையாடல் பாபிலோனா என்ற இந்தப் பகுதியில் இப்போதெல்லாம் அடிக்கடி பேசப்படுகிற மிகப்பெரும் விஷயம். காரணம் தேராவும் அவர்களது முன்னோர்களும் பாபிலோனா பகுதியில் செல்வாக்கு வாயந்த ஒரு பெரும் குடும்பம். அதுமட்டுமல்லாமல் வழிவழியாக பாதுகாக்கப்பட்டு வருகிற கடவுட் சடங்குகள், புராதான பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் இந்த குடும்பமே பாபிலோனா மக்களுக்கு எடுத்துக்காட்டுகள், மற்றும் வழிகாட்டிகள்.

ஒரு முறை ஆப்ரஹாம் தனது தந்தையைப் பார்த்து.. 'நீங்கள் ஏன் இந்த கற்சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த சிலைகள் எதுவும் உங்களைப் பார்க்கவோ அல்லது நீங்கள் சொல்வதை கேட்கவோ சக்தியற்றவை, எனக்கு இது தொடர்பான சில ஞானம் கிடைத்துள்ளது.. நீங்கள் நான் சொல்வதை கேளுங்கள் தந்தையே' (3) என்று தேரவை அழைக்க அவர் பொல்லாத கோபம் கொண்டு மகனிடம் 'நீ என்னை விட்டு சில காலம் போய்விடு, இல்லையென்றால் நான் உன்னை கல்லால் அடித்துக் கொல்வேன்' (4) என்று சத்தமிட்டார்.

ஆப்ரஹாம் தனது தந்தையிடம் 'கடவுள் உங்களை மன்னிக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். உங்கள் மீது சாந்தியும் சமதானமும் நிலவட்டும்' (5) என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்

இந்த தந்தை மகன் உரையாடல் இப்போதெல்லாம் அதிகமாக கோபத்திலும் மன உளைச்சலிலும் சென்று முடிய இவர்களின் இந்த நிலை பாபிலோனா பகுதியில் எல்லோருக்கும் ஆச்சர்யத்தையும் ஏதோ ஒரு பெரும் பிரச்சனையில் இது சென்று முடியப்போவதாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். அத்தோடு நில்லாமல், தேராவின் பேரப் பிள்ளையான (ஹரனின் மைந்தன்) லூத் (6) ஆப்ரஹாமுடன் சேர்ந்துக் கொள்ளவே தேரவிற்கு சொல்லமுடியாத வேதனை. மகனும் லூத்தும் ஒரு பக்கம், தேராவின் சமூக அந்தஸ்தும், தான் இத்தனை காலமாக மதித்தும் வணங்கியும் வந்த இறைக் கொள்கையும் இன்னொரு பக்கமுமாக பெரும் கவலைக்குள்ளனார்.

ஆப்ரஹாம் தனது தந்தையை மட்டும் மாறச்சொல்லவில்லை. பாபிலோனாவில் வசிக்கும் அத்தனை மக்களையும் அவர்களின் கடவுட்கொள்கையிலிருந்து மாறுமாறு அழைக்கவே தேரவிற்கு தினம் தினம் பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆப்ரஹாம் மக்களிடம் தனது ஞானத்தை எடுத்து வைத்து, கற்சிலைகளை வணங்காதீர்கள் என்ற பிரச்சாரம் பாபிலோனாவில் பெரும் பூகம்பத்தை கிளப்பிவிட இந்த வேலையில்தான் இந்த வருடாந்திர திருவிழாக் காலம் வந்தது. மக்கள் எல்லோரும் ஊருக்கு வெளியில் இருக்கும் திடலில் ஒன்று கூடி பூஜைகளும், பலிகளும், மதுப்பானைகளுமாக இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் கடவுளை வணங்கமுடியுமோ அவ்வாறெல்லாம் வழிபட ஒன்று கூடலானார்கள்.

ஒருவழியாக மகனைத் தேடிப்பிடித்து ஆப்ரஹாம் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தார் தேரா.

அங்கே ஆப்ரஹாமை சூழ்ந்தவாறு மக்கள் கூட்டம் அவரிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள்.

'ஓ மக்களே நீங்கள் எதை வணங்குகிறீர்கள்' - ஆப்ரஹாம்

'நாங்கள் இந்த சிலைகளை பக்தியுடன் வணங்கி வருகிறோம்' என்றனர் மக்கள்.

'அப்படியானல், நீங்கள் அழைக்கும் போது அது உங்களின் வார்த்தைகளை கேட்க சக்தி பெற்றதா? அல்லது அது உங்களுக்கு ஏதேனும் நன்மைகளோ அல்லது தீமைகளோ செய்ய சக்தி பெற்றதா' - ஆப்ரஹாம்

'இல்லை ஆப்ரஹாம். அந்த சிலைகளுக்கு அப்படி எந்த சக்தியும் இல்லை. ஆனால் எங்களின் மூதாதையர்களும் அந்த சிலைகளைத்தானே வணங்கினார்கள்?' மக்கள் பதிலளித்தார்கள்.

'அப்படியா.. தெரிந்துக் கொள்ளுங்கள் நீங்களும் உங்களின் மூதாதையர்களும் எதை வணங்கினீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் வணங்கக் கூடிய இந்த கற்சிலைகள் எனக்கு ஒன்றுமில்லாதவைகள், எதிரிகள் (7)' என்று ஆப்ரஹாம் அம்மக்களின் அறியாமையை விளக்கிக் கொண்டிருந்தார்.

மக்கள் கூட்டம் ஆப்ரஹாமின் கூற்றில் குழப்பமடைந்தவர்களாய் சிலரும், பலர் ஆப்ரஹாமை நிந்தித்தும் கலைந்து சென்றனர்.

தேரா ஆப்ரஹாமின் அருகில் நெருங்கி வரவே. ஆப்ரஹாம் தந்தையில் அருகில் வேகமாக வந்து அவரின் வலது கையை தூக்கி முத்தமிட்டவராய் மரியாதை செலுத்தினார்.

சிறிது நேர அமைதிக்குப் பின் ஆப்ரஹாம் மகனிடம் பேச ஆரம்பித்தார். பேச்சு வழக்கம் போலவே இறை வணக்க கொள்கைக்குள் செல்லவே.. தேரா சற்று நிதானத்துடன்..

'ஆப்ரஹாம்.. வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த திருவிழாவிற்கு நீ வந்து கலந்து கொள்ள வேண்டும்' என்று அழைத்தார்.

ஆப்ரஹாம் சற்று நேரம் அமைதியாய் இருந்துவிட்டு வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்தவாறு,

'தந்தையே.. நான் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன். நீங்கள் சென்று வாருங்கள்' (8) என்று சொல்லியவாறு வேறு பக்கம் பார்வைகளை திருப்பிக் கொண்டார்.

தேரா கனத்த மனதுடன் நடக்கத் தொடங்கினார்.

நகரம் முழுவதும் வெறிச்சோடிப் போனது. அங்கங்கே ஒரு சில மிருகங்கள் மட்டும் உலாவிக் கொண்டிருக்க மக்கள் கூட்டம் முழுவதும் ஊருக்கு வெளியே திருவிழா வைபோகத்தில் இருந்தனர்.

ஆப்ரஹாம்.. கையில் ஒரு கோடலியை எடுத்துக் கொண்டு, நகரத்தின் நடுவில் இருக்கும் பெரிய கோவிலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தார். அவரின் முகத்தில் ஒருவிதமான உற்சாகமும், ஒரு தெளிவான சிந்தனையும் இருக்க அவரின் தோளில் இருந்த கோடாலி நிலவின் வெளிச்சத்தில் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது.

(தொடரும்)

1. தேரா என்பது பைபிள் மூலமாக அறியப்படுகிற பெயர். அஜர் என்பது திருக் குரான் மூலமாக அறியப்படுகிற பெயர். அஜர் எனும் புனைப்பெயர் அவர் அதிகமாக விரும்பும் கடவுளின் பெயரால் அழைக்கப்படுவதாக இப்ன் ஜரீர் எனும் வரலாற்று ஆசிரியரால் அறியப்படுகிறது (Stories of the Prophets authored by Ibn Kathir, Page 125)

2. ஆப்ரஹாம் என்று பைபிளிலும், பழைய ஏற்பாட்டிலும் அழைக்கப்படுபவர், திருக் குரானில் இப்ராஹீம் என்று அழைக்கப்படுகிறார். இவர் நபியாக அங்கீகரிப்பட்டவுடன் நடக்கும் நிகழ்ச்சிகளே இங்கு மேலே சொல்லப்படுபவைகள்.

3. திருக் குரான் (19:41-45)

4 & 5. திருக் குரான் (19:46-48)

6. இறைத்தூதர் லூத் (ஆப்ரஹாமின் சகோதரன் மகன்)

7. திருக் குரான் (26: 69-83)

8. திருக் குரான் (37: 88-89)