Thursday, December 30, 2004

கடல் கண்ணீர்

நொடியில் கிளர்த்தெழுந்த கடல்நீர் அலைகள்
கொடிபோல் என்னருகில் கிடந்த குடல்வாய் மகவை
தடிகொண்டு தாக்கினவோ, தரைமேல் இழுத்தனையோ - அய்யகோ
அடிவயிறும் அழுகையிலே கடல்நீராய் கரைந்தனையே!

நாடு பல கடந்து நல்லாரும் பொல்லாரும்
சேர்த்திழுத் தணைத்து செப்ப ஒரு மொழியின்றி
கோர்த்து மரணத்தை கொடுங்கோலாய் மாற்றினையே
நேற்றுவரை புன்சிரித்த என்கடல்நீர் காரிகையே!

காற்றும் கடல்நீரும் எம்வாழ்க்கை ஊற்றுக்கள்
போற்றியதன் புகழ்பாடி உன்வாசலிலே வாழ்ந்துணர்ந்தோம்
ஆற்றுநீர் போதாதென்றோ அழுகைநீர் கேட்டுவந்தாய்
ஆறப் பொறுக்குதிலையே எமதழுத நெஞ்சங்கள்!

உன் சீர்கொண்டு வாழ்ந்தோம் - பொல்லா
உன் சீற்றம் கொண்டு மடிந்தோம்
ஏற்றமிகு இறைவனின் விதிதான் இதுவென்றால்
போற்றிஅவன் காலடியில் பொறுமையினை தேடிடுவோம்.

Wednesday, December 22, 2004

சிந்தனைச் சிதறல்கள் 1

என்னைத் தொட்ட தென்றல்தான் உன்னையும் தொடுகிறது
என் விழிகளில் விழுந்த வெளிச்சம்தான் உன் விழிகளில் மிளிர்கிறது
எனக்கு குளிரும் தென்றல் உனக்கு ஏன் சுடுகிறது?
ஒற்றை வான் கூரைக்குள்ளே இத்தனை விரிசல் ஏன் நமக்குள்
எங்கேயோ மாறுகின்றோம் நண்பா எழுந்துவா விதையை தேடுவோம்

களி மண்ணில் படைத்தான் கடவுள்
இரத்தமும் சதையும் சேர்ந்த இம்மானிடப் பதரை
தோற்றங்கள் வெவ்வேறாயினும் தோன்றுதல் ஒன்றுதானே
எனக்காக நீ சிரித்தாய் உனக்காக நான் அழுதேன்
இருந்தும் ஏன் இத்தனை இடைவெளி
விரைந்து வா நண்பா வேர்களைத் தேடுவோம்!

பூக்கள் பலவானாலும் பச்சை கிளைதானே உயிர்நாடி
இச்சைகளின் போராட்டம் எத்தனையோ நமக்குள்ளே
இருளை போர்வையாக்கி இரவிலே மரணித்தெழுந்தோம்
பகலிலே இரவைத்தேடி பாதியை நடித்தே கழித்தோம்
மீதி என்னவென்று யாருக்கு தெரியும் நண்பா
வீதிகள் பலவாறாயினும் சேருமிடம் ஒன்றுதான்
சேர்ந்தே தேடுவோம் வா சோதனை ஒன்றுதானே!

ஒரு பொய் வாங்கினால் நூறு பொய்கள் இனாம் என்றான்
பொய்களின் (பொருளாதார) சந்தைக்குள் போலீஸ் கட்டுப்பாடு
உண்மையின் வீதியிலே ஒருவனும் அங்கில்லை
பொய்களின் புதர்களிலே உண்மை ஒளிவதில்லை
பொய்களை விற்றா உண்மையை வாங்கமுடியும்?
பொய்களின் வீதிகளில் நமக்கென்ன வேலை நண்பா
போகட்டும் பழைய கதை புதையலை தேடலாம் வா!

நீர்கள் ஓடும் வழியெல்லாம் ஆறுகள் அமைவதில்லை
ஆழக்கடல் நண்பா அங்கே அலைகளுக்கு வேலையில்லை
கடமையை மறந்துவிட்டு சுதந்திரம் கேட்கிறோம் நாம்
அட நேரமில்லை நண்பா நம் சோகம்தனை புலம்ப!
பசித்தவன் உணவைத் தேடுவதுபோல்
படைத்ததன் பலன் தேடலாம் வா!

(தொடரும்)

Sunday, December 19, 2004

மல்லிகைகள்

நார்களில் விலங்கிட்டு கூந்தலில்
சிறைபட்ட சுதந்திரப் பூக்களே!
ஆயுள் தண்டனையை
மரண தண்டனையாய் மாற்றியவள்
அருகில் வந்து அழகாய் இருக்கா!
என்று கூந்தலை காட்டினாள்

சோகத்தில் சிரித்தன
சுதந்திர மல்லிகைகள்.
மரணத்திலும் மணம் வீசும்
மல்லிகை மலர்களே!
இறப்பையே பிறப்பாய் கொண்ட
உங்களைப் பார்த்தும்
இறப்பையே மறந்துவிட்ட
நாங்கள் வெட்கப் படுகின்றோம்.

Monday, December 13, 2004

முருங்கை மரங்கள்

பாலையில் சோலை தேடும்
பாசமிகு நண்பர்களே!
இரண்டாம் வீட்டிர்க்குள்
முதலாம் வீட்டைத் தேடும்
பகல் கனவு பிரியர்களே!
பாலைவன சொந்தங்களே!

சோலைகள் கிடைத்தாலும்
பாலையை விட மனமில்லை
சோகமும் ஒரு சுகம்தானே!
உறுமீன் வருமளவும்
காத்திருந்த காலம் போய்
ஓடுமீன் ஓடட்டும் என்று
வாழுகின்றோம் நண்பர்களே!

இங்கே வெய்யிலுண்டு வியர்வை இல்லை!
வீதியுண்டு மனிதர்களில்லை!
வீரமுண்டு ஆனால் களமில்லை!
இயந்திர மனிதர்களாய்
இயங்குகின்றோம் நண்பர்களே!

ஆறுண்டு, கையில் வலை உண்டு
ஆனால் நீரில்லை
ஏடுண்டு, கையில் எழுத்தாணி உண்டு
ஆனால் வார்த்தைகளில்லை
வானுண்டு, வானில் நிலவுண்டு,
ஆனால் கண்ணில் ஒளியில்லை
ஆணுண்டு, அருகில் பெண் உண்டு,
ஆனால் காதலில்லை

தேடுகின்றோம் நண்பர்களே!
தேடிக்கொண்டே இருக்கின்றோம்
தொலைத்தது என்னவென்று
தெரியாமல் தேடுகின்றோம்!

இளமையில் கல் என்பார்,
இங்கே முதுமையிலும் கல்தான்!
அசைக்கமுடியுமா?
மாதம் இரு மொட்டை அடித்தாலும்
மயங்கமாட்டோம் நாங்கள்.
கற்களாய் வாழுகின்றோம்
கல்லுக்குள் ஈராமாய் அழுகின்றோம்

விமானத்தில் பறந்து வந்த
வெளிநாட்டுக் கைதிகளே!
வேகமாய் விலைபேசி
விழுந்தடித்து வந்து சேர்ந்தோம்
விலை போனது தெரியாமல்
வீரம் பேசி வாழுகின்றோம்.

முருங்கை மரங்களய்யா நாங்கள்,
ஒரு வேரில் ஒன்றாக வாழ்ந்த நாம்
காலத்தின் அறுவடையில்,
குடும்பத்தின் நலிவு நீங்க
வெட்டிய கிளைகளாய், வேரற்ற உடல்களாய்
வற்றிய மனதுடனும் வாடிய முகத்துடனும்
புதிய வேர்களைத்தேடி வந்த
முருங்கை மரங்களய்யா நாங்கள்

மழையை காணாத மண்ணில்

மழையை காணாத மண்ணில்
ஒவ்வொரு தூறலும் ஒரு உற்சாகம்

வானத்தை மேகத்தால்
வெள்ளையடித்த இறைவன்
மனித முகங்களில் மின்னல்கள் பதித்தான்

எட்டிப் பார்த்த கதிரவன் - முகில்களின்
பிடிக்குள்ளே சிக்கித் தவித்தான்

இரவென்னும் ஆடைக்குள் (பர்தாவில்)
நிலவுப்பெண் சவுதி முக்காடிட்டு
முழுதாய் மறைந்து கொண்டாள்

மழை நிலவரம் கேட்டு தொலைபேசியில்
தொல்லை தந்தான் கடைக் குட்டி

ஊரெல்லாம் ஏசியிலே குளிர்ந்திருக்க
வீட்டுக்குள் ஏசியா? - ஏசினாள் என் மனைவி

தூறல்கள் மட்டும்தானா
தூரத்தில் வெளிச்சம் கண்டு
துவழ்கிறது என் மனம்

வானத்தை வளைத்து நிற்கும்
வென்மேக முற்றுகைக்குள்
கார்முகிலின் முன்னோட்டம்

மழையே வா, மெல்ல மெல்ல வா
வேகமாய் பொழிந்துவிட்டு
வெளியேறி போய்விடாதே

உன் கவி கேட்டு எத்தனைகாலங்கள் ஆயிற்று

நன்று நீ பாட வேண்டும்
நாளையும் வர வேண்டும்

Thursday, December 09, 2004

குப்பைத்தொட்டி

போர்க் லிப்ட்டின் ஸ்டீரிங்கை இடதும் வலதுமாக தேவையில்லாமல் வளைத்து அரசு பேருந்தை ஓட்டுவதுபோல் கற்பனையில் மிதந்தவாறு ஓட்டிக்கொண்டிருந்தான் அலி. அதிகாலையில் சூப்பர் மார்க்கெட்டிற்காக வந்து இறங்கும் சாமன்களை டிரக்கிலிருந்து இறக்கி வைப்பது அலிக்கு மிகவும் குஷியான வேலை. காய்கறிகள் தொடங்கி அலங்காரப் பொருட்கள் வரை எல்லா லாரிகளும் காலையிலேயே சாமன்களை இறக்க வந்துவிடும். சாமன்களை இறக்கிய கையோடு அழுகிய காய்கறிகள், காலாவதியான உணவுப் பொருட்கள் அதிலும் குறிப்பாக பிரட் மற்றும் பால், தயிர் வகைகளை திருப்பி எடுத்து செல்ல வந்திருக்கும் லாரிகளில் அவைகளை ஏற்றி அனுப்பிவைக்க வேண்டியது அலியின் அதிகாலை வேலை. வேலை சற்று கடினம்தான் என்றாலும், போர்க் லிப்ட் ஓட்ட வாய்ப்பு கிடைப்பதால் அலி ஏற்றுக்கொண்டான்.

'பென் புதா?' (எங்கே பொருட்கள்?) என்ற குரலை கேட்ட அலி பேருந்திலிருந்து போர்க் லிப்டிற்கு மாறினான்.

'ஈஜி..ஈஜி..' (வருது வருது) என்று முழங்கியவாறு குரல் வந்த திக்கை தாண்டிப்போனான் அலி.

குரலுக்கு சொந்தக்காரியான ருக்கையா பதிநான்கு வயதே நிறைந்த சிந்தி இனத்தை சேர்ந்த இந்தியனா அல்லது பாகிஸ்தானா என்று ஒரு விபரமும் சொல்ல முடியாத பெண். அவளுடைய கொள்ளு தாத்தா காலத்தில் இந்த நாட்டிற்கு வந்ததாக சொல்வார்கள்.

ருக்கையாவிற்கு தன் தோழிகளின் உரையாடலில் கவனம் செல்லவில்லை. கிழிந்த புர்காக்கவை இழுத்து மார்பை மூடியவாறு அருகில் இருந்த குப்பைத்தொட்டியை ஒரு முறை திரும்பிப் பார்ததாள். சஞ்சலத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த மனதில் தம்பி இத்ரீஸ் நொண்டிக்கையுடனும், காலுடனும் வந்து நின்றது குபுக்கென கண்ணில் நீரை வரவழைக்க, வேகமாக முகத்தை புர்காவினால் மூடி சத்தமின்றி அழ ரம்பித்தாள். 'என்று இந்த நிலை மாறும் இறைவா?' என்று கதறும் மனதை கட்டுப்படுத்தி கண்களை துடைத்து முகத்துணியை அகற்ற சற்று நேரம் பிடித்தது.

சர்க்கரை நோயில் விழுந்ததிலிருந்து வலது கால் விரல்கள் அனைத்தும் அழுகிப்போக எந்த வேலையும் பார்க்க இயலாமல் வீட்டோடு விழுந்து கிடந்தான் தகப்பன் மூசா. இதில் மூன்று மனைவிமார்கள் வேறு. நான்கு வருடம் முன்னால் வரை ஒரு கான்டிரக்டிங் கம்பேணி வேர்ஹவுசில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவன் நிரந்தர மாத வருமானம் வரும் திமிரில் மூன்று திருமணங்களை முடித்து தனது சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொண்டான். ஆணும் பெண்ணுமாக சேர்த்து மொத்தம் பதினைந்து பிள்ளைகள், ஆனால் மூன்று குடும்பங்களையும் ஏறக்குறைய பிச்சை எடுக்க வைத்துவிட்டதோடு தினமும் அடி உதை என்று தெருச்சண்டைக்கு குறைவில்லை. பார்த்த வேலையையும் இழந்து, கால்களும் சரியாக நடக்க முடியாமல் பிறருக்கு சுமையாகிப் போனான்.

விடிந்ததும் நான்கு சக்கர வண்டியை தள்ளிக்கொண்டு பெப்சி கேன் பொறுக்க கிளம்பிவிடுவாள் தாய் ஜொகரா. அண்ணன்மார்கள் இருவரும் ஆளுக்கொரு சைக்கிளில் வாளியைக் கட்டிக்கொண்டு தெருத் தெருவாக கார் கழுவ போயவிடுவார்கள். எங்கு என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட்டுவிட்டு கூட்டிற்கு வந்து சேரும் பறவைகள் போல் துங்குவதற்கு மட்டும் வந்து சேர்ந்துவிடுவார்கள். யாருக்கும் குடும்பத்தைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் கிடையாது. ஒருவனும் செலவிற்கென்று எதுவும் கொடுப்பதுமில்லை அல்லது வாங்கித்தருவதுமில்லை. அவரவருக்கு பசிக்கும்போது வயிறு நிறைந்தால் போதும், அடுத்தவர் வயிரைப் பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது. கேட்டால் கல்யாணம் பண்ணிக்கொள்ள காசு சேர்க்கிறேன் என்பார்கள். நாடோடி வாழ்க்கை வாழும் இந்த நாதியற்ற கூட்டத்திற்கு கல்யாணம் ஒரு கேடு. சற்று வாய் விட்டே திட்டினாள். என்னை கல்யாணம் செய்துகொள்ள வருபவன் எனக்கு எவ்வளவு பணம் தரப்போகிறானோ.. வெறுமையுடன் சிரித்தவள் போர்க் லிப்டின் சத்தம் கேட்டு குப்பைத் தொட்டிப்பக்கம் பார்த்தாள்.

காலைப் பொழுதில் பள்ளிக்குச் செல்லும் வேன்களையும் கார்களையும் தவிர்த்து ரோட்டில் வேறு எந்த ஆரவரங்களும் இல்லை. சீருடை அணிந்த சிறுவர்கள் கார்களிலும் வேன்களிலும் தூங்கிவிழுந்து செல்வதை பார்க்க பார்க்க ருக்கைக்யாவிற்கு ஒரு நாளைக்காவது பள்ளிக்கூடம் சென்று ஒரு வகுப்பறையில் உட்கார்ந்துப் பார்க்க ஆசை. நடக்கிற காரியமா? வயதிற்கு வரும் வரை ருக்கையாவிற்கு டிராபிக் சிக்னலில் தண்ணீர் பாட்டில் விற்பதுதான் வேலை. தற்போது அந்த வேலையை தங்கை சபியாவிற்கு கொடுத்துவிட்டு தோழிகளுடன் சேர்ந்து இப்படி சூப்பர் மார்க்கெட்டில் அலைய ஆரம்பித்தாள்.

'என்ன ருக்கையா? பகல் கனவா? சல்மான் கான இல்லை ஷாருக் கானா?'

கேள்வி கேட்டவள் ருக்கையாவின் தொழி, ஆப்பிரிக்கா இனத்தை சார்ந்தவள். ஹிந்திப் படங்களை விரும்பிப் பார்ப்பவள். ருக்கையாவுடன் பழகுவதற்கு அதுவும் ஒரு காரணம். ஓசியில் படம் பார்க்கலாம். அது என்ன விந்தையோ தெரியாது இந்தியப்படங்களுக்கு மட்டுமே உள்ள ஈர்ப்பு பார்ப்பவர்களை இந்த உலகத்தைவிட்டு கற்பனை உலகத்திற்கு சுலபமாக அழைத்து சென்றுவிடும். காலுக்கும் அரைக்கும் பிச்சை எடுக்கும் சமுதாயம் மொழி தெரியாவிட்டாலும் இந்திப் படங்கள் என்றால் உலகத்தை மறந்து உட்கார்ந்து பார்ப்பார்கள். இருக்கட்டும் கற்பனையிலாவது கொஞ்சம் சந்தோஷப்படுவோமே!

'ஏய் குட்டிங்களா? என்னாங்கடி.. ' சத்தமிட்டவாறு போர்க் லிப்டை விர்ரென்று ஓட்டி சென்றான் அலி. இவன் என்ன பேசுகிறான் என்று அவர்களுக்கு புரியாததால் இவன் இஷ்டத்திற்கு தமிழில் அவர்களை கிண்டலிப்பதில் அலாதியான மகிழ்ச்சி அவனுக்கு.

இந்த கேடு கெட்ட வாழ்க்கைக்கு எப்போது முடிவு வரும் என்ற நினைத்தவாறு குப்பைத் தொட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ருக்கையா? அவள் வயது வந்த காலத்திலிருந்தே இப்படி விபரீதமான சிந்தனைகள் வர ரம்பித்துவிட்டது. நியாமானவைகளை சிந்திப்பதென்பது அவளது குடும்பத்தை பொறுத்தவரை வழக்கில் இல்லாத ஒன்று. அண்ணன்களுக்கும் அம்மாவிற்கும் சில நேரங்களில் இவள் பேசுவதே புரியாது. மானம் அவமானம், குடும்பம், உறவுகள், நட்பு, நல்லது கெட்டது என்று தேவை இல்லாமல் இவள் நிறைய பேசுகின்றாள் என்று அவ்வப்போது வீட்டில் சந்தி சிரிக்கும். தம்பி இத்ரீசை பார்ததிலிருந்து ருக்கையா யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.

'அக்கா எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல .. யாருமே எங்கிட்ட நல்லாவே பேச மாட்டேங்கிறாங்க. நான் நொண்டியா இருக்கிறதுனால எனக்கு சோறு போடனுமேன்னு பயப்படறாங்க பொல இருக்கு'

'டேய் நான் இருக்கன்ல'

'எததனை நாளைக்கு'

'நான் உயிரோட இருக்கிற வரைக்கும்'

'அது சரி..' இழுத்தான் 'நேத்து அண்ணன் இழுத்துப் போட்டு உதைக்கும் போது நீயும்தான சேர்ந்து அடி வாங்குன'

'தலையெழுத்து அப்படி'

'சரி நான் என்ன பன்னினேன். ஏன் என் காலையும் கையையும் ஒடைச்சு ஈனாமாக்கி இப்படி பிச்சை எடுக்க வைச்சானுங்க' சொல்லிவிட்டு தேம்பினான் இத்ரீஸ்.

'நான் கானப் போனவுடன.. நீங்க யாரவது என்ன ஒழுங்க தேடிப்பாத்தீங்களா' தேம்பல் அழுகையாக மாறியது. 'என்னத்தையோ திங்க கொடுத்தானுங்க.. மயக்கம் தெளிஞ்சு பார்தப்போ என் கை¨யும் காலும் பேன்டேஜ் போட்டு இருந்தது.'

'போதுன்டா, ஏன் அதையே சொல்லி சொல்லி மனசை கஷ்டப்படுத்துற'
குப்பைத்தொட்டியைப் பார்த்தவாறு நேற்று இரவு நடந்த உரையாடலை அசை போட்டாள் ருக்கையா.

ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு நாள் இத்ரீஸ் அவன் வயது சிறுவர்களுடன் வெளியே சென்றவன் திரும்பி வரவே இல்லை. சென்ற வாரம் சபியா சிக்னலில் தண்ணீர் பாட்டில் விற்கும்போது இத்ரீஸ் அங்கு நின்று பிச்சை எடுப்பதைப் பார்த்தவள், ஒரு வழியாக யாருக்கும் தெரியாமல் அவனை மறைத்து வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டாள்.

அவன் காணமல் போனதும், எங்கேயோ பக்கத்து தெருவில் ஏழைகளுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று சொல்லி இரண்டு கருப்பு மனிதர்கள் இவனை அழைத்துச் சென்றதும் எதையோ சாப்பிட கொடுத்து மயக்கமடைய வைத்து இவனது கையையும் காலையும் வெட்டி விட்டார்கள் என்று சொன்னதையும் கேட்க உடல் நடுங்கிப் போனது ருக்கையாவிற்கு. அவனைப் பார்த்து பார்த்து அன்று முழுவதும் எல்லோரும் அழுததுதான் மிச்சம்.

கடந்த நாலு மாதமாக சிக்னலில் நின்று பிச்சை எடுத்து சம்பாதித்து கொடுப்பதுதான் அவனது வேலை. தினமும் எவ்வளவு கிடைக்குமோ அத்தனையும் மணிக்கொருமுறை காரில் வந்து வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள் இந்த பிச்சைக்கார தொழில் நடத்துக் கூட்டம். மாலை எட்டு மணிக்கெல்லாம் அங்கங்கே நின்று பிச்சை எடுக்கும் இந்த கூட்டத்தை திரும்ப அழைத்து சென்றுவிடுவார்கள். தினமும் ஒரு சிக்னல், ஷாப்பிங் சென்டர், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என்று இடத்தை அவ்வப்போது மாற்றிவிடுவார்கள். ஊனமுற்ற அதிலும் குறிப்பாக சிறுவர்களாக இருக்கும் போது இரக்கம் நிறைந்த தனவான்கள் நிறையவே தருமம் செய்வார்கள். குறைந்தப் பட்சம் தினமும் நூறு ரியால்களாவது கிடைத்துவிடும். அதிர்ஷ்டம் இருந்தாள் நூறுக்கு மேலும் கிடைக்கும். அதிகம் கிடைத்தால் அன்றைக்கு இரவு நல்ல சாப்பாடும் கிடைக்கும், இல்லையென்றால் குப்சும் தயிரும்தான் தினசரி சாப்பாடு. அவ்வப்போது அடி உதைக்கும் பஞ்சமுமில்லை. தீக் காயங்களும் கூட உண்டு. காரணம் இந்த சிறார்களை எப்போதும் பயத்துடனேயே வைத்திருக்க வேண்டும் என்பது அவர்களின் தொழில் நியதி. நிறைய கண்காணிப்புகள் வேறு.

இத்ரீஸ் சொல்ல சொல்ல ருக்கையாவிற்கு உண்மையிலேயே பயம் உண்டாகிப் போனது. பொதுவாகவே ருக்கையா தெருவிலேதான் வளர்ந்ததும் வாழ்ந்ததும் என்றாலும் இவ்வளவு கொடூரமாகவும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைத்துப் பார்க்கும் போது குறைந்தப் பட்சம் அண்ணன்களும் அப்பனும் செய்வது ஒன்றும் அத்தனை பெரிதாக தோன்றவில்லை.

பாசமும், பரிதாபமும் இத்ரீஸ் வந்த அன்றும் மறுநாளும்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாளிலிருந்து இந்த நொண்டிப் பையனை வைத்து நாம் எப்படி சம்பாதிக்கலாம் என்று திட்டம் போட ஆரம்பித்து விட்டார்கள். அம்மாவிற்கு அடுத்த நாளே தினமும் ஒவ்வொரு மசூதியாக அழைத்துச் சென்று அவனது உடல் ஊனத்தைக் காட்டி வசூல் செய்ய விருப்பம். ஆனால் சோம்பேறி தகப்பன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டான். பொது இடங்கள் என்றால், இவனை வைத்து சம்பாதித்த கும்பலிடம் இவன் திரும்பவும் மாட்டிக் கொள்வான் என்று கொஞ்ச நாட்களுக்கு இத்ரீசின் பிச்சைத்தொழில் அண்ணன்களின் அறிவுரையால் தள்ளிப் போடப்பட்டது.

ருக்கையாவிற்கு இத்ரீசை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்கலாம் என்று ஆர்வம். ஆனால் வெளியே சொல்ல தைரியம் இல்லை. காரணம் இங்கே இலவச படிப்பு என்பது இந்த நாட்டு குடிமக்களுக்கு மட்டும்தான். ருக்கையாவிற்கோ நாம் எந்த நாட்டு குடிமக்கள் என்று ஒரு தெளிவில்லாத நிலை.

நீண்ட பெருமூச்சுடன் குப்பைத்தொட்டியை நோட்டமிட்டாள் ருக்கையா. அங்கே பத்து பதினைந்து பூனைகள் குப்பைத்தொட்டிக்குள் ஏறுவதும், குதிப்பதுமாக தனது வயிற்று ஜீவனுக்காக போராடிக் கொண்டிருந்தன. குப்பைத் தொட்டியை நோக்கி வரும் வேகமான போர்க் லிப்டின் சத்தத்தில் எல்லா பூனைகளும் விழுந்தடித்து சிதறி ஓட ருக்கையாவும் அவளது தோழிகளும் திடீரென எழுந்து குப்பைத் தொட்டியை நோக்கி விழுந்தடித்து ஓடினார்கள்.

பூனைகளைவிட வெகு வேகமாக குப்பைத்தொட்டிக்குள் பாய்ந்து குதித்து அங்கே கொட்டப்பட்ட குப்பைகளுக்கு மத்தியில் தனது வாழ்வாதரங்களை தேட ஆரம்பித்தார்கள். அழுகிய காய்கறிகள், காலவதியான பால் தயிர் மற்றும் பிரட்கள், வீணாகிப் போன மாமிசங்கள் என்று முடிந்தவரை பிளாஸ்டிக் பைகளிலும் தனது புர்காவிலும் சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.

அதுவரை போர்க் லிப்டில் குஷியாக சுற்றி வந்து கொண்டிருந்த அலி, பூனைகளுடன் சேர்ந்து போராடும் ருக்கையாவையும் அவளது தோழிகளையும் பார்த்து முகம் வாடி குப்பைத்தொட்டியை விட்டு துரமாக போய்க்கொண்டிருந்தான்.