Sunday, August 30, 2020

உணர்வுத் தொழிற்சாலை

வெறுப்பு என்ற ஒரு குறிப்பிட்ட உணர்வின் மூலம் உருவாகும் சாதாரண உணர்ச்சி ஆற்றல்கள் எப்படி ஒரு பெரும் அரசியல் ஆற்றல்களாக (எனர்ஜியாக) மாற்றப்பட்டு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வலுவானதாக மாறுவதை நம்மில் பலர் அறிந்திக்கிறோம். மனிதர்களின் மனதில் உருவாகும் சாதாரண உணர்ச்சிகளை சரியான முறையில் ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை நோக்கி வெற்றிபெற செய்வதை நாம் உலகெங்கும் காண்கிறோம். மதம், இனம், மொழி மற்றும் அரசியல் முன்னேற்றங்களுக்காக மனித உணர்வுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது வரலாறு முழுவதும் விரவிக்கிடக்கும் உண்மைஇன்னும் சொல்லப்போனால் மனிதர்களின் உணர்வுகள்தான் இந்த உலகத்தை இழுத்துச் செல்லும் மாபெரும் உந்து சக்திகள். அறிவு, அறிவியல், ஆன்மீகம் எல்லாவற்றிர்க்கும் அடிப்படை ஆற்றல் மனிதர்களின் உணர்வுகளும் அதிலிருந்து நிகழும் உணர்ச்சி மேம்பாடுகளே.

இதை நமது தனிப்பட்ட வாழ்க்கையில் அறிந்து, உணர்ந்து ஒருங்கிணைத்து நம் வாழ்க்கையை எப்படி செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.


நம் மனதில் உருவாகும் அனைத்து உணர்வுகளும் ஆற்றல்களின் (எனர்ஜி) பிறப்பிடங்களாக, கிரியூக்கிகளாக அன்றாடம் நம்முள்ளே உருவாகும் உணர்வுத் தொழிற்சாலைஆனால், பெரும்பாலும் உணர்வுகளின் தாக்கத்தினால் எழும் காரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு அதன் மூலம் உருவாகும் ஆற்றலை (எனர்ஜி) உதாசீனப்படுத்துகிறோம். ஆனால், இந்த ஆற்றல்களை நமக்கும் பிறருக்கும் பயன்படும் முறையில் மாற்ற முடியும். நம்மில் பலர் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


பொதுவாக உலகில் எல்லா நேரத்திலும், எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு எனர்ஜி உருவாகிக் கொண்டே இருக்கிறது. இயற்கையில் விழித்திருக்கும் எல்லா உயிரினங்களும் (புல் பூண்டு புழுக்கள் முதல் கடலில் வாழும் சிறிய, பெரிய உயிரினங்கள் தொடங்கி, ஒளி ஒலி கொடுக்கும் அனைத்து கிளஸ்டிகள் பாடிவரை) உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், இவைகளின் மூலம் ஏற்படும் அனைத்து ஆற்றல்களும் ஒருமித்த ஆற்றல்களாக (composed energy) மாற்றம் பெற்று இவ்வுலகின் உள் மற்றும் வெளி இயக்கங்களுக்கு அடிப்படை காரணிகளாக அமைகின்றன


அறிவியல் ஆராட்சிகளில் இதை ஆர்கானிக் மேட்டர்களாக (உயிர்ச்சத்து பொருட்களாக) அறியப்பட்டு எது எதனுடன் சேரும், அல்லது எதிர்க்கும் அல்லது சேராமல் விலகிப் போகும் ( molecules) என்று அறியப்பட்டு இவ்வாறு அன்றாடம் நிகழும் சேர்க்கைகளை அளவிட்டு பல புதிய கண்டுபிடிப்புகள் அல்லது பொருட்கள் அறியப்படுவதையும் பார்க்கிறோம். ஆர்கானிக் மேட்டர் மூலம் உருவாகும் பல எண்ணிலடங்கா எனர்ஜிகளின் இயக்கங்கள்தான் இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றன.  


அதே போன்று நமது உடலுக்குள் உருவாகும் எண்ணிலடங்க ஆற்றல்கள் நமது உடல் மற்றும் மன இயக்கங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. உடலின் வளர்ச்சிக்கு தேவையான எனர்ஜி ஒருபக்கமும் நமது உள்ளத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எனர்ஜி இன்னொரு பக்கமுமாக நமக்குள்ளேயே உருவாக்கப்படுகின்றன


நம்மிடம் உருவாகும் கருணை, பாசம், வெறுப்பு, விறுப்பு, மகிழ்சி, துக்கம், ஆசை, கோபம் போன்ற அனைத்து உணர்வுகளும் நம்முள்ளே சில ஆற்றல்களை (எனர்ஜிகளை) உருவாக்குகின்றன. குறிப்பாக மகிழ்வும், கோபமும் அதிகமான ஆற்றல்களை உருவாக்குகின்றன. இவ்விரண்டு நிலைகளிலும் உருவாகும் ஆற்றல்களை (எனர்ஜிகளை) நாம் முற்றிலும் புறக்கணித்து விடுகிறோம். அவைகள் நேர்மறை அல்லது எதிர்மறை எனர்ஜியாக இருந்தாலும் அதை நமக்கும், பிறருக்கும் பயன்படும் முறையில் அந்த எனர்ஜியை வழிப்படுத்த வேண்டும். இதை யோகிகளும், சித்தர்களும், கடவுள் வழிபாட்டில் உச்சநிலையைத் தொட்டவர்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளதாக நாம் புராணங்களிலும், கதைகளிலும் படித்தாலும், சாதாரண குடும்ப வாழ்க்கையில் உள்ள பலர், அதிலும் வறுமையிலும் கடினமான சூழலில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களும்கூட தனது அன்றாட வாழ்க்கையில் அதை அநாசமாக செய்திருக்கிறார்கள்.


நம்முடைய மன வளர்ச்சிக்குத் தேவைப்படும் பெரும்பாலான ஆற்றல்கள் நமது உணர்ச்சிகளின் மூலமே திரட்டப்படுகின்றன. எனவே அத்தகைய எனர்ஜி வெளிப்பாடுகளை நமது உணர்வுகளின் மூலம் நாம் அடையாளப்படுத்திக் காணலாம்உதாரணமாக மகிழ்வு. நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது வெளிப்படும் எனர்ஜி நம்மை மட்டுமல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க வைக்கிறதுஏதேனும் சோகத்தில் இருப்பவர்கள் கூட சில நிமிடங்கள் தனது சோகத்தை மறந்து நம்முடன் மகிழ்ச்சியாக இருப்பதை காணலாம். அதே போன்றுதான் கோபம். நம்முடைய கோபம் நம்மை சுற்றி இருப்பவகளையும் கோப உணர்ச்சிக்கு ஆளாக்கிவிடுகின்றது.


இவ்வாறு நம் உடலுக்குள்ளே உருவாகும் பல்வேறு ஆற்றல்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத காரணத்தினால் நம்மால் பொதுவாக விளங்கிக் கொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு நாளும் நம்மிடம் ஊற்றெடுக்கும் நமது இன்னர் எனர்ஜியை (உள்ளாற்றலை) நாம் உணர வேண்டும்.  


ஒவ்வொரு நாளும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் காலை நேர இறைவழிபாட்டிற்கு பிறகு அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தமது அன்றாட வேலைகளை தொடங்குவதற்கு முன் சிறிது நேரம் தியானத்தில் இருப்பது அவசியம். இங்கே நான் தியானம் என்று குறிப்பிடுவது நமது அகப்பார்வை என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அகப்பார்வை என்பது கடவுளை அறிவதற்கும், உணர்வதற்கு மட்டுமே என்று பொருள் கொள்ள வேண்டாம்அகப்பார்வையின் மூலம் நமது உணர்வுகள் ஒவ்வொன்றின் பிறப்பிடத்தையும், அதன் மூலம் எழும் ஆற்றல்களையும், அந்த ஆற்றல்களினால் ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களையும் (visualization) காட்சிப்படுத்திப் பார்க்க வேண்டும்


உதாரணமாக, நான் கோபப்பட்டால் அல்லது மகிழ்ச்சி அடைந்தாகல், அதை எப்படி வெளிப்படுத்துகிறேன், யாரிடம் முதலில் வெளிப்படுத்துகிறேன், ஏன் அவரிடம் வெளிப்படுத்துகிறேன், அதனால் என்ன நிகழ்கிறது, அதன் தொடர்வினை என்ன, அதன் எதிர்வினை என்ன, முடிவாக என்ன கிடைக்கிறது என்ற ஓர் காட்சிப்படுத்துதலை தியானத்தில் செய்து பார்க்கும் போது கோபத்தினாலோ அல்லது மகிழ்ச்சியினாலோ எழும் ஆற்றலை நம்மால் அளவிட முடியும். இவ்வாறு ஒவ்வொரு உணர்வுகளையும் நாம் காட்சிப்படுத்தி அளவிட்டு கொள்ள வேண்டும்.


இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முள்ளிருந்து வெளியாகும் ஆற்றலை (எனர்ஜியை) எவ்வாறு சரியாக உபயோகிப்பது என்ற தெளிவும் நமக்கு கிடைக்கும். இதைத்தான் செல்ஃப் கன்ரொல் (சுயக் கட்டுப்பாடு) என்று அறியப்படுகிறது. ஒருவர் மீது எனக்கு கோபம் இருக்கிறது என்றாலும் அதை எப்போது எந்த இடத்தில் நான் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துச் செய்யும்போது என் கோபத்தின் ஆற்றல் சரியான பயனை எனக்கும் நான் கோபப்படும் மனிதனுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது


சுயக் கட்டுப்பாட்டின் உச்ச நிலைக்கு சென்றவர்கள் அநாசயமாக தன்னை தற்காத்துக் கொள்வது மட்டுமல்லாமல் எந்த ஒரு சிக்கலான நிலையிலும் தன்னை இழக்காமல் தனது லட்சியத்தை அடையக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இதில் இன்னொரு பயன் என்னவென்றால் நாம் அதிகமான நேரம் நிகழ்காலத்தில் வாழமுடியும். அதிகமான நேரத்தை நிகழ்காலத்தில் செலவழிப்பதன் மூலம் இறந்தகால மற்றும் எதிர்கால வருத்தம் மற்றும் பயத்திலிருந்தும் நாம் விடுதலை அடைகிறோம்.


மனிதனுக்குள் இயற்கையாகவே அல்லது இறைவனால் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு உணர்விலும் நன்மை தீமைகள் என்ற இரண்டும் உள்ளது. அது நன்மையா அல்லது தீமையான விளைவா என்பது நம் கையில்தான் உள்ளது.  


Sunday, August 23, 2020

கிழக்கு வெளுக்கவில்லை

கிழக்கு வெளுத்துவிட்டதுஎல்லோரும் எழுந்திருங்கள். தெருக்களில் சத்தமிட்டபடி போய்க் கொண்டிருந்தான் அவன். கடந்த இரண்டு நாட்களாக அதிகாலையில் நேரத்தில் அவன் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறான். எனக்குப் புரியவில்லை. ஏன் இப்படி செய்கிறான் என்று அவனிடம் கேட்க வேண்டும்எதோ பயத்தில் கத்திக் கொண்டு செல்வதுபோல் தோன்றியது எனக்கு. அவனுக்கு விடியல் பிடிக்கவில்லையா? அல்லது ஏன் விடியலில் ஏதேனும் விபரீதம் வரப்போகிறதா? எதற்காக இப்படி அரண்டவன்போல் கத்திக் கொண்து போகிறான்?  


எழுந்து வெளியில் வந்தேன். மலையடிவாரத்திற்கென்றே இருக்கக் கூடிய குளிர் உடலை சில்லிட்டது. மனதும் லேசாக குளிர்ந்தது. என்னைப் போல் இன்னும் சிலரும் வெளியில் நின்றுக் கொண்டிருந்தனர்மலைகளை குடைந்து கட்டப்பட்ட வீடுகள் என்பதால் சாதாரண குளிர்கூட இங்கே அதிகமாக தெரியும். ஆனால் இது குளிர் காலம் இல்லை. சிறிது நேரத்தில் சூரியன் சுடடெரிக்க ஆரம்பித்து விடுவான்.


சூரியன் இன்னும் அரைத் தூக்கத்தில் இருப்பதுபோல்  தோன்றியது. மெலிதாக விழிகளை திறந்து தன்னை வரவேற்க யாரும் விழித்திருக்கிறார்களா என்பதுபோல் வானத்தில் ஒரு மெல்லிய சிவந்த கோடு. சூரியன் தினமும் குறித்த நேரத்தில் வருவதும், போவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டதால் அவன் இப்போதெல்லாம் அதிசயமாகவே தெரிவதில்லைபழகிப் போய்விட்ட பல இயற்கை செயல்பாடுகள் எல்லாம் இப்பொது அதிசயமாகத் தெரியவில்லைஎனவே சூரியனை வரவேற்க வேண்டும் அல்லது கொண்டாட வேண்டும் என்ற சிந்தனை யாருக்கும் கிடையாது.


ஒருநாள் அவன் வராமலே போய்விட்டால் எப்படியிருக்கும் நம் நிலை? இன்னும் விடியவில்லை என்று தூங்கிக் கொண்டிருப்போம். மனதின் இன்னொரு மூலையிலிருந்து பதில் வந்தது. எவ்வளவு நேரம் தூங்கினாலும் எழுந்துதானே ஆக வேண்டும். நினைக்கவே பயமாகத் தெரிந்ததுஉலகில் உள்ள எல்லாம் அழியக்கூடியதுதான். இதில் விதிவிலக்கு எதற்கும் உள்ளதா? நிச்சயமாக இல்லை என்கிறது மனது. ஒன்றிரண்டு அழியாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் சூரியன் தோன்றவில்லை என்றால்?


இருளை வெல்லும் வாய்ப்பே இல்லாமல் போகலாம்இருளில் வாழ்ந்து ஒரு வேளை இருளைக்கூட கிழித்துப் பார்க்கும் சக்தி கண்களுக்கும் வரலாம்இருள் ஒருவகையில் தீய செயல்கள் செய்வதற்கு சாதகமாகத்தான் இருக்கும் இருளின் ஆட்சியில் எல்லாம் கோரமான செயல்களாகவும் மாறிவிடலாம்.  


பட்டப் பகல் வெளிச்சத்திலேயே நமது கோவனங்கள் உருவப்படுகின்றனவிதவிதமாக ஏமாற்றப் படுகிறோம். அரசியல்வாதிகளின் மதிச்சுரண்டல்கள், மதவாதிகளின் மனச் சுரண்டல்கள், கல்விச் சாலைகளின் அறிவு சுரண்டல்கள், சினிமாவாதிகளின் உணர்ச்சி சுரண்டல்கள், அறிவாளிகளின் சிந்தனை சுரண்டல்கள், இனாவாதிகளின் உணர்வு சுரண்டல்கள், முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல்கள் என்று எல்லோரையும் எல்லோரும் சுரண்டிக் கொண்டிருக்கிறோம். நமது அன்றாட வேலையே சுரண்டல்தான். இப்படி ஒருவரை ஒருவர் சுரண்டி வாழ்வது நமக்கு இயல்பாகிவிட்டதால் நாம் தவறு செய்கிறோம் என்ற சிந்தனையோ அல்லது பயமோ இல்லாமல் போய்விட்டது.


சூரியன் மெதுவாக வெளி வந்தான். நெருப்பு பந்து போல் தோற்றமளிக்கும் சூரியன் பார்க்கும் பக்குவத்தில்தான் இருந்தது. வட்டத்தினுள் ஒரு நெருப்பு கிடங்கு கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அந்த நெருப்பு பந்துக்குள் எங்களை உள்ளுக்கிழுத்து எங்களை அழித்துவிடுவாயோ? அல்லது  நீயும் அழிந்துவிடுவாயோ


அந்த விலங்கை நீங்கள் கொன்றிருக்கக் கூடாதுதெருவில் ஒருவன் சொல்ல சிறு கூட்டம் கூடியது. ‘நாம்தானே ஒரு அதிசயத்தைக் காட்டு என்று கேட்டோம். பிறகு நாம்  ஏன் அதைக் கொன்றோம்?’


கூட்டத்தில் ஓரிருவர் அவன் சொல்வதை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தனர்


ஆனால் அது ஊற்றில் உள்ள எல்லா தண்ணீரையும் குடித்து விடுகிறதே. நமக்கு நீரில்லாமல் போய் விடுகிறது’  இரண்டாமவன்


ஆமாம்நமது தேவைகளுக்குத்தான் முதல் உரிமை.’ இன்னொருவன்


அப்படியென்றால் நாம் அதற்கு கொடுத்த வாக்கை மீறுகின்றோமேமுதலாமவன்


யாருக்குத் தெரியும் அது ஊற்றின் முழு நீரையும் குடிக்குமென்றுமற்றொருவன்


எனக்கென்னவோவாக்கு வாக்குதான். முடியும் முடியாது என்று யோசித்து வாக்கு கொடுக்காதது நம் குற்றமே தவிர்த்து அந்த விலங்கின் குற்றமில்லையேமுதலாமவன்


நம்மை முட்டாள் என்று சொல்கிறாயா?’ மூன்றாமவன்


ஆம் நாம் முட்டாள்கள்தான்விலங்குக்கு சொந்தக்காரன் சொன்னதில் என்ன தவறு?’ முதலாமவன்


அவன் நம் எல்லோரையும் அவனது கொள்கைக்கு அல்லவா அழைக்கிறான்?’ இரண்டாமவன்.


அவன் கொள்கையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றால் ஏன் அவனிடம் ஒரு அதிசயத்தை செய்து காட்டு என்று கேட்க வேண்டும்?’ முதலாமவன் விடுவதாக இல்லை.


அவர்களின் வாதம் சூடுபிடிக்க ஆரம்பித்ததுசூரியனும் சூடு பிடிக்கக் ஆரம்பித்தான்அவர்களின் வாதம் முற்று பெறுவதாக இல்லைஅவ்வழியாக ஒரு சாமியார் வந்தார்.


சாமியைக் கேட்போம்எல்லோரும் சொல்ல சாமியார் ஒன்றும் புரியாமல் அவர்களைப் பார்த்தார்.


எங்களுக்குள் ஒரு பிரச்சனை. யார் சரியென்று நீங்கள் சொல்லுங்கள்அவரைப் பார்த்துக் கேட்க சாமியார் சற்று தயங்கி சரி என்று ஒத்துக் கொண்டார்.


மனிதர்களாகிய நாம் முக்கியமா அல்லது நம்மைச் சார்ந்திருக்கிற விலங்குகள் மற்றும் இயற்கைகள் முக்கியமா?’


எல்லாம் முக்கியம்தான்சாமியார் சம்யோசிதமாக சொன்னாரோ என்று எனக்குத் தோன்றியது.


ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் கேட்டான்


அரிதியிட்டு ஒன்றை மட்டும் சொல்வது கடினம். காரணம் எல்லாம் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றனஅவர் சொல்லி முடிக்குமுன்


இந்தப் பரதேசியிடம் கேட்டது தவறு’. சத்தமாக சொல்ல, சாமியார் பாவமாக அங்கிருந்து நகர்ந்தார்தூரத்தில் என் வீட்டு வாசலில் நின்ற என்னிடம் வந்தார்.


என்ன பிரச்சனை.. ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்?’ என்னைப் பார்த்துக் கேட்டார்.


சாமிஉங்கள் வேலை என்னவோ அதில் கவனம் செலுத்துங்கள்இது உலக விஷயம் இதற்கெல்லாம் நீங்கள் மருந்து போட முடியாது’. 


சாமியாருக்கு நான் சொன்னது பிடிக்கவில்லையோ என்னவோசற்று முறைத்தபடி பார்த்துவிட்டு சென்றார்.


தெருவில் வாதப் பிரதிவாதங்கள் குறையாமல் நடந்துக் கொண்டிருந்ததுகூட்டம் கூடியதே தவிர யாரும் யாருடனும் ஒத்துப் போவதாக இல்லை.


எங்கள் எல்லோரையும் எழுப்பி விட்டவன் இப்போது நிதானமாக நடந்து வந்துக் கொண்டிருந்தான்கேட்டு விட வேண்டியதுதான்.


ஏய்.. நில்.. ஏன் இப்படி இரண்டு நாட்களாக இப்படி கத்திக் கொண்டு செல்கிறாய்?’


சொன்னால் உனக்குப் புரியாது என்னை பயித்தியம் என்று சொல்வாய்சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.


புரிந்துக் கொள்ள முயற்சிக்கிறேன் சொல்


நாளை சொல்கிறேன்சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் கடந்து போனான்.


அவனைப் பயித்தியம் என்று நினைக்கத் தோன்றியது.. ஆனால் அவனுக்கு மானசீகமாக கொடுத்த வாக்குறுதியை நினைத்து எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.  


தெருவில் கூடியிருக்கும் கூட்டம்தான் எனக்கு இப்போது பயித்தியக்கார கூட்டமாக தெரிந்தது.


வீட்டிற்குள் வந்தேன்.  


அந்த விலங்கை பின்னங்காலில் வெட்டி அது கீழே சாய்ந்தவுடன் அதன் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டார்கள் இந்த பாவிகள்பாவம் அந்த விலங்கின் வயிறு, ஏதோ கருவுற்றிருப்பதுபோல் வேறு இருந்தது.


நீங்கள் கொடுத்த வாக்குறுதியிலிருந்து விலகி விட்டீர்கள். விலங்கையும் அநியாயமாகக் கொன்று விட்டீர்கள்இன்னும் மூன்று நாளில் நீங்கள் எல்லோரும் அழியப் போகிறீர்கள்.’  விலங்கிற்கு சொந்தக்காரன் இவர்களைப் பார்த்து சாபமிட்டுச் சென்ற நிகழ்வு என் மனதைவிட்டு அகல மறுத்தது.  


இந்த மக்கள் அந்த விலங்கின் சொந்தக்காரனிடம் தேவையில்லாமல் குதர்க்கம் செய்யப் போய், அவன் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால், ஏதாவது ஒரு அதிசயம் செய்து காட்டு என்று சொன்னதால் வந்த வினைதான் இந்த மாபாதகம்.


அவனும் இந்த விசித்திரமான விலங்கை திடீரென்று மலைப்பகுதியிலிருந்து வரவழைக்க ஊர் மக்கள் எல்லோரும் விக்கித்துப் போனார்கள். ஆரம்பத்தில் அந்த விலங்கை தங்களில் ஒன்றாக நினைத்து ஏற்றுக் கொண்டவர்கள், போகக் போக அது அருந்தும் நீரின் அளவைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தார்கள். விளைவு விலங்கின் சொந்தக் காரணுக்குத் தெரியாமல் அதை கொன்று விட்டார்கள்.


யோசித்தபடி படுக்கையில் தூக்கம் வராமல் பிரண்டுக் கொண்டிந்தேன்.


உண்மை என்று தெரிந்தும் சில விஷயங்களை நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்? அப்படி ஒரு பெரிய சுய கௌரவம் நமக்குதினம்தினம் மாறும் உலகத்தில் நம்மைப் பற்றிய பிறரின் கருத்துமட்டும் மாறகூடாது என்பதில் ஏன் இத்தனை பிடிவாதம். என்னமோ போ... பாழய் போன தூக்கம் ஏன் இன்று வர மறுக்கிறது. எப்படியோ தூங்கிப் போனேன்.


ஒரு பெரும் இடியின் ஓசை இதயத்தை கிழித்து பயத்தை பாய்ச்சியது. அரண்டு போய் எழுந்தேன். இரவு இன்னும் தொடந்துக் கொண்டுதான் இருந்ததுமீண்டும் ஓர் கொடூரமான இடியோசைஉயிரை யாரோ என் உடலிலிருந்து பிடுங்குவதுபோல் ஒரு பெரும் பயம். எழுந்து வேகமாக வெளிக்கதவை திறந்தேன்


எங்கு பார்த்தாலும் நிசப்தம். பயத்தின் நச்சுத்தன்மை, காற்றில் பரவியதுபோல் பெரும் அகால அமைதி.


தடுமாறியபடி தெருவில் வந்து நின்றேன்காலடியில் குருதி வழிவது போல் ஒரு பிரமைநேற்று கூட்டத்தில் வாதிட்ட அந்த முதலாமவனும் தெருவில் வந்து நின்றான். ஒருவரை ஒருவர் இருளில் பார்த்துக் கொண்டோம்.


கிழக்கு வெளுக்கவில்லைஎல்லோரும் செத்துவிட்டார்கள் சத்தமிட்டபடி அவன் வந்து கொண்டிருந்தான்இருட்டில் நடந்து போகும் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்


கிழக்கு வெளுக்கவில்லைஅவனது சத்தம் தூரத்தில் கேட்டது. நானும் செத்துக் கொண்டிருந்தேன்.