Saturday, August 20, 2011

வலிகளும் சுகமே!

எனது வலிகள் வெற்றியின் படிக்கற்களா? இல்லை

மண்ணறையில் கட்டப்படும் கருங்கற்களா?

இறைவனே என் மீது கருணை காட்டதபோது

மனிதர்களின் கருணை எனக்குத் தேவையில்லை!


அழுகைகளை விதைத்து சிரிப்புகளை அறுவடை செய்யும்

மனிதப் பித்தர்களில் நானும் ஒருவன்!

உள்ளத்தை அண்ணை மண்ணில் விட்டுவிட்டு

உடலுடன் எண்ணை மண்ணில் அலைகின்றேன்!


நோக்கம் தவறில்லை! முயற்சியும் தவறில்லை!

வழிகளில் எங்கோ தடம் புரண்டுவிட்டேன்

தூக்கி நிறுத்த இறைவனைத் தேடுகின்றேன்

தூரத்தில் ஓர் மின்மினி வெளிச்சத்தை அர்ப்பணிக்கிறது!


என்னையும் நான் சமர்ப்பிக்கின்றேன்! எழுதாத என் நிலையை!

எனக்கும் உனக்கும் மட்டும் தெரிந்த என் மனதை!

ஏற்றுக் கொள் இறைவா! வலிகளும் சுகமே!

உன் நினைவால் என் நெஞ்சு வாழும் வரை.