Monday, August 15, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 10

இஸ்ரேலியர்களின் வரலாறு - ஜேக்கப்பின் இறுதி வாழ்க்கை மற்றும் ஜோசப்.

ஜேக்கப் இதற்கிடையில் தனது சகோதரன் இசாயுவை சந்திக்கிறார். இசாயு தனது பழைய பகைமையை மறந்து ஜேக்கப்பை தழுவிக் கொள்கிறார். ஜேக்கப்புடன் இருக்கும் பிள்ளைகளையும் பெண்களையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு இவர்களெல்லாம் யார் என்று கேட்க, ஜேக்கப் அவர்கள் அனைவரையும் சகோதரனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர்கள் எல்லோரும் ஜேக்கப்பின் மனைவி உட்பட இசாயுவிற்கு தலை வணங்குகின்றனர். அத்துடன் இசாயுவிற்காக தான் கொண்டுவந்த நூற்றுக் கணக்கான கால்நடைகளை அன்பளிப்பாக அளிக்கிறார்.

இசாயு சிறிது நாட்களில் பாலஸ்தீனுக்கு திரும்பிச் செல்ல ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கன் ஆன் தேசத்திற்குட்பட்ட ஷெச்சம் என்ற இடத்திற்கு வந்து சேருகிறார். ஷெச்சம் என்பது அங்கிருந்த ஒரு பெரிய மனிதனின் பெயராகும். அவரது பெயரில்தான் அந்த ஊர் அழைக்கப்படுகிறது. ஷெச்சனின் தந்தை ஹாமொர் என்பவரிடமிருந்து நூறு ஆடுகளை பரிவர்த்தனை செய்து கொண்டு பகரமாக கொஞ்சம் நிலத்தை பெற்றுக் கொள்கிறார் ஜேக்கப். தான் வாங்கிய இடத்தில் தங்குவதற்காக ஒரு தற்காலிக இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்கிறார். அந்த இடம்தான் ஜேக்கப் பல வருடங்களுக்கு முன்னதாக ஒரு பாறையில் அடையாளம் செய்து வைத்து சென்ற இடமாகும். அந்த இடத்தில்தான் அவர் உறங்கும் போதுதான் இந்த பூமி உனக்குச் சொந்தமானது என்று கனவில் தெரிய வந்த இறைவனால் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.(1)

எனவே, அந்த இடத்தில் தற்போது இறைவழிபாட்டிற்காக ஒரு ஆலயத்தை கட்டுகிறார் ஜேக்கப். அந்த ஆலயம்தான் பைத்துல் முக்கந்துஸ் என்று பெயர் பெருகிறது. அந்த இடத்தின் தற்போதைய பெயர் ஜெருசலம் என்பதாகும்.

ஜேக்கப் அவர்களால் எழுப்பப்பட்ட அந்த ஆலயம் பிற்காலத்தில் டேவிடுடைய மகனான சாலமன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டு இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் அங்கே தங்கியிருக்கும் போது ஜேக்கப்பின் மகளான டினாவுடன் ஷெச்சம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இந்தச் செய்தி ஜேக்கப் மற்றும் அவரது ஆண் மக்களுக்கு தெரியவருகிறது. பிறகு ஹாமொர் தனது மகனுக்காக டினவை பெண் கேட்டு ஜேக்கப்பிடம் வருகிறார். அப்போது டினாவின் சகோதரர்கள் அனைவரும் டினாவை ஹாமொரின் மகன் ஷெச்சத்திற்கு தர முடியாது, காரணம் ஷெச்சத்தில் வாழும் ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்யாதவர்கள், அவர்களுக்கு பெண் கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுகின்றனர். ஹாமொர் பிடிவாதம் செய்யவே, ஷெச்சத்தில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் விருத்த சேதனம் முதலில் செய்து கொள்ளுங்கள், பிறகு ஷெச்சதிற்கு தங்களின் சகோதரி டினாவை மணமுடித்து வைக்கிறோம் என்று சொல்ல ஹாமொர் சம்மதிக்கிறார். ஷெச்சத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்து கொள்கின்றனர்.

அவ்வாறு அவர்கள் விருத்த சேதனம் செய்த மூன்றாவது நாளில் அவர்கள் எல்லோரும் வலியால் படுக்கையில் இருக்கும்போது ஜேக்கப்பின் இரண்டு மகன்கள் அவர்கள் அனைவரையும் தனது வாளுக்கு இரையாக்கி கொன்று முடிக்கின்றனர். ஷெச்சத்தில் இருந்த அத்தனை ஆண்களையும் கொன்றதோடு நில்லாமல் அந்த ஊரை கொள்ளையடித்து ஆடு மாடுகள் இன்னும் என்னென்ன உள்ளனவோ அவையனைத்தையுன் அபகரித்துக் கொள்கின்றனர்.(2)

புனித நகரத்தில் (ஜெருசலத்தில்) வரலாற்றுப் பூர்வமான முதல் இரத்தக் களங்கள் உருவாகின. ஆண்கள் எல்லோரும் கொன்று குவிக்கப்பட்டு பெண்கள் மட்டும் உயிருடன் விட்டு வைக்கப்படுகின்றனர். நகரம் கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்திவிடப்படுகிறது.

இதற்கு பிறகு ராச்சல் பிள்ளைப் பேறு உண்டாகி ஜேக்கப்பிற்கு 12வது பிள்ளையாக பெஞ்சமின் என்பவரை பெற்றெடுக்கிறார். பிரசவத்தின் போது ராச்சல் மரணமடைகிறார். ஜேக்கப் ரச்சலை எப்ஃராத் என்னுமிடத்தில் அடக்கம் செய்து அந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வைக்கிறார். அப்படி வைக்கப்பட்ட கல் இன்றுவரை ராச்சல் அடக்கஸ்தலம் என்று அறியப்படுகிறது. எப்ஃராத் என்ற அந்த இடத்தின் தற்போதைய பெயர் பெத்லஹம் என்பதாகும்.

ஜேக்கப் பிறகு தனது குடும்பத்துடன் தனது தந்தை இஸ்ஹாக்கிடம் வந்தடைகிறார். பெரும் நோய் வாய்ப்பட்டிருந்த இஸ்ஹாக் சிறிது காலத்தில் மரணமடைந்து விடுகிறார். இஸ்ஹாக் மரணமடையும் போது அவரது வயது 180 என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன (3)

ஜேக்கப்பின் 12 மகன்களில் ஜோசப் தந்தையைப் போல் குணாதிசயம் கொண்டவராக வளர்ந்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் ஜேக்கப்பிடம் இருந்த அந்த புனிதத் தன்மை பொருந்திய மனிதராக இளைஞராக வளர்ந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மற்ற சகோதரர்களைப் பொல் அல்லாமல் தந்தை ஜேக்கப்பிடம் அதிக நேரம் இருப்பதும் அவருடைய இறைப்பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்வதுமாக வாழ்கிறார். இதனால் ஜேக்கப் மற்ற பிள்ளைகளை விட ஜோசப்பை அதிகமாக நேசிக்கிறார்.

ஏற்கனவே ஜேக்கப்பை அதிகமாக அவரது தாயார் நேசித்த போதும் இசாயுவை தந்தை இஸ்ஹாக் அதிகமாக நேசித்த காரணத்தால் எழுந்த குழப்பம் தீர்வுக்கு வந்த போது தற்போது ஜேக்கப்புடைய பிள்ளைகளின் மத்தியில் இப்போது இந்த புதிய குழப்பம் ஆரம்பமாகியது.

தந்தை ஜேக்கப் தனது சகோதரன் ஜோசப்பை மட்டும் அதிகம் நேசிக்க காரணமென்ன என்று துப்பறியத் தொடங்கினர் மற்ற சகோதரர்கள். அப்போது ஜோசப்பிற்கு உறக்கத்தில் கனவு ஒன்று தோன்றுகிறது. அக்கனவில் ஜோசப் பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும் மற்றும் சந்திரனையும் காண்கிறார். அவை அனைத்தும் ஜோசப்பின் முன்னால் மண்டியிட்டு வணங்குகின்றன. இதை ஜோசப் தனது தந்தை ஜேக்கப்பிடம் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட ஜோசப் இந்த கனவைப் பற்றியோ அல்லது தன்னிடம் இதை சொன்னதைப் பற்றியோ வேறு யாரிடமும், சொல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார். காரணம் இந்த கனவின் மூலம் ஜோசப் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட தூதராகும் அறிகுரி தோன்றுவதாக ஜேக்கப் எண்ணுகிறார்(4). ஜேக்கப் மகனுக்கு 'இறைவன் உன்னை இறைத்தூதராக தேர்ந்தெடுப்பான். உனக்கு கனவுகளின் விளக்கங்களை கற்றுக் கொடுத்து அவனது அருளை உன் மீது அதிகமாக்கி வைப்பான்' என்று அறிவிக்கின்றார். தூதாரானால் அல்லது ஜோசப் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மற்ற சகோதரர்கள் பொறாமை கொள்வார்கள், அதனால் ஜோசப்பை அவர்கள் கொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று தந்தை ஜேக்கப் பயம் கொள்கிறார்.

தூதர் என்ற அந்தஸ்தும் கௌரமும் அப்போது மிகவும் உன்னதமானது. அது தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு சகோதரரும் விரும்புவதும், அப்படி அது தனக்குக் கிடைக்காமல் போனால் கிடைக்கப் பெற்ற சகோதரனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தில் பகைமையாக உருவானது.

வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி 11 நட்சத்திரங்கள் ஜோசப்பின் சகோதரர்கள் என்றும் சூரியன் தந்தையாகவும் சந்திரன் தாயாகவும் ஜோசப்பின் முன்னல் வணங்கி நிற்கின்றனர் என்று ஜோசப்பின் கனவிற்கு விளக்கமளிக்கின்றனர். பைபிளில் இந்தக் கனவை ஜோசப் தனது தந்தை மற்றும் சகோதரர்களுக்கு தெரிவித்ததாக அறிவிப்பு உள்ளது(5).

இதனால் சகோதரர்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனை உருவாகிறது. ஜோசப்பின் காரணத்தால் தங்களுக்கு தனது பெற்றோர்களிடத்தில் அதிக பாசம் இல்லை செல்வாக்கு இல்லை என்று பொறாமை கொள்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் ஜோசப்தான் அவரை கொன்றுவிடலாமா ஆலோசனை செய்கின்றனர். தூதராக தேர்ந்தெடுக்கப்படுவது இறைவனின் உரிமைக்கு உட்பட்ட செயல் என்ற நிலை மாறி, தந்தை யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரே தூதராகும் அந்தஸ்தைப் பெற்றவர் என்ற எண்ணம் சகோதரர்களுக்கு மத்தியில் உருவாகிறது. இதற்கு காரணம் ஜேக்கபிற்கு தந்தை இஸ்ஹாக்கின் மூலம் கிடைத்த ஆசீர்வாதமே காரணம் என்ற தவறான சிந்தனையே.

அதில் ஒரு சில சகோதரர்கள், கொல்ல வேண்டாம் ஜோசப் இன்னும் சிறுவனாகத்தான் இருக்கின்றார், ஆதலால் எங்காவது காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடலாம் என்று மாற்று ஆலோசனை வழங்குகின்றனர். காட்டிற்கு அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் எறிந்துவிடலாம். எதேனும் வர்த்தகக் கூட்டம் கிணற்றில் இருக்கும் ஜோசப்பை பார்த்து அழைத்து சென்றுவிடுவார்கள். வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள்ளட்டும், ஆனால் நம்மிடத்தில் திரும்ப வரக்கூடது, எதற்காக ஒரு கொலையைச் செய்ய வேண்டும், அதிலும் அவர் நமது சகோதரர், எப்படியாவது ஜோசப்பை தங்களின் வாழ்விலிருந்து தூரமாக்கிவிட வேண்டும் முடிவு செய்கின்றனர். ஆனால், அவர்களின் பிரச்சனை எப்போதும் தந்தையுடனேயே இருக்கும் ஜோசப்பை எப்படி தனியாக அழைத்துச் செல்வது.. என்ன காரணத்தைச் சொல்லி தூரமாக கூட்டி செல்வது.. அப்படி எதையாவது சொன்னாலும் தந்தை நம்மை நம்பி ஜோசப்பை அனுப்பி வைப்பாரா என்றெல்லாம் ஆலோசனை செய்யலாயினர்.

இறுதியாக சகோதரர்கள் அனைவரும் ஜோசப்பை காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடுவது என்று முடிவெடுத்து தந்தை ஜேக்கப்பிடம் அனுமதி கேட்கச் சென்றனர். தந்தையோ அனுமதி தர மறுக்கிறார். காட்டில் ஒநாய் ஏதேனும் சிறுவன் ஜோசப்பை கொன்று தின்றுவிடும் என்று மறுக்கிறார். ஆயினும் சகோதரர்கள், பயப்பட வேண்டாம் நாங்கள் என்ன அப்படி பலமில்லாதவர்களா, நிச்சயம் ஒநாயிடம் எங்களின் சகோதரனை பலி கொடுத்துவிட மாட்டோம், எங்களுடன் வரட்டும், அவர் விளையாட வாய்ப்பு கொடுங்கள் என்று வாதம் செய்து தந்தையை சம்மதிக்க வைக்கின்றனர் (6).

அவர்கள் ஜோசப்பை அழைத்துக் கொண்டு காட்டிற்கு செல்கின்றனர். அங்கே வேண்டுமென்றே அவரை பின்னால் விட்டுவிட்டு முன்னால் தூரமாகச் செல்கின்றனர். பிறகு ஜோசப்பை அங்கிருக்கும் ஒரு பெரும் கிணற்றின் அருகில் நிற்க வைத்து அவருடைய சட்டையை மட்டும் கழட்டிக் கொண்டு அவரை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். பிறகு ஆடு ஒன்றை அறுத்து அதன் இரத்தத்தில் ஜோசப்பின் சட்டையை நனைத்து எடுத்து தந்தை ஜேக்கப்பிடம் எடுத்துச் சென்று அழுகின்றனர்.

எதிர்பாராமல் ஜோசப்பை அவர்கள் தனியாக விட்டுச் சென்றபோது ஒநாய் ஒன்று அவரை கொன்று தின்றுவிட்டது என்று அழுது செய்தியைச் சொல்கின்றனர்.(7)

ஜேக்கப் அவர்களின் செய்தியை நம்ப மறுக்கிறார். அவர்கள் காட்டிய ஜோசப்பின் சட்டை கிழியாமல் இருப்பதால் இது மற்ற மகன்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று வருத்தம் கொள்கிறார். இழந்த மகனுக்காகவும் அவர் திரும்ப கிடைக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்தித்துப் பொருமையைத் தேடுகிறார்(8). இந்த சரித்திரத் திருப்பம் இஸ்ரேலிகளை ஒரு புதிய இடத்திற்கு பயணம் செய்ய வைக்க இருப்பதை இறைவனே முற்றிலும் அறிந்தவனாக இருக்கிறான்.

இஸ்ரேலிகள், எப்போதெல்லம் இறைவனின் பக்கம் இருக்கின்றார்களோ அப்போதெல்லாம் அவர்கள் இறைவனின் பாதுகாப்பு பெற்றவர்களாகவும் உலகில் சுகமாக வாழ்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் இது போன்ற பொறாமையாலும், ஏமாற்றம் செய்வதாலும் அவர்கள் இறை ஆணையை புறக்கணித்து வாழும் போது பிரச்சனைக்கு உள்ளவதும் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இடத்தைவிட்டு வெளியேற்றப்படுவதுமாக அவர்களது வாழ்க்கை உருமாறி உள்ளதை இனி வரும் வரலாறு தெளிவாக தெரிவிக்கிறது. ஜேக்கபின் மகன்களில் ஜோசப் மட்டுமே இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப் படுகிறார். மற்ற மகன்களில் பெரும்பாலோர் சத்தியத்தின் பாதையில் இருந்தார்களா அல்லது தவறிப் போனார்களா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு பின்னால் வரும் வரலாற்றைப் பார்க்கும்போது அவர்கள் நேர்வழியிலிருந்து தவறியவர்களாகத்தான் இருக்குமோ என்ற ஐயம் வருகிறது. இறைவனே போதுமானவன்.

கிணற்றில் எரியப்பட்ட ஜோசப் அவ்வழியாக வரும் வர்த்தக் கூட்டம் தண்ணீர் இறைக்க எத்தனிக்கும் போது இச்சிறுவரைப் பார்த்து அவரை காப்பற்றுகின்றனர். அத்துடன் அவரை மறைவாக எடுத்துச் சென்று சொற்ப காசுகளுக்கு வேறொருவருக்கு விற்று விடுகின்றனர். ஜோசப்பை வாங்கிய ஒரு எகிப்திய மனிதர் ஜோசப்பை தனது மனைவியிடம் அழைத்துச் சென்று இச்சிறுவனை தனது மகனாக தத்து எடுத்துக் கொள்ளலாம், இவரை நன்றாக கவனித்துக் கொள் என்று தனது குடும்பத்தில் வளர்ப்பு மகனாக எடுத்துக் கொள்கிறார்(9)

பைபிளின் கூற்றுப்படி ஜோசப்பின் சகோதரர்கள் ஜோசப்பை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். ஆனால் அவ்வழியே வரும் வர்த்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஜோசப்பை கிணற்றிலிருந்து வெளியே எடுத்து, ஜோசப்பை அந்த வர்த்தக் கூட்டத்திற்கு 20 ஷெக்கல் பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று விடுகின்றனர்(10).

ஜோசப்பை விலைக்கு வாங்கிய அந்த மனிதர், எகிப்து நாட்டின் அதிபதியான பரோனிடம் நிதி அமைச்சரக பணியாற்றும் ஒரு பெரும் மனிதர்.

(தொடரும்)


1. Genesis (33)

2. Genesis (34)

3. Stories of the Prophets (page 225) by Ibn Khathir

4. Holy Quran (12:4-6)

5. Genesis (37)

6. Holy Quran (12:11-14)

7 & 8. Holy Quran (12:15-18)

9. Holy Quran (12:19-22)

10. Genesis (37)

வரலாற்றில் சில ஏடுகள் - 9

யூத குலத்தின் தொடக்கம் - ஜேக்கப்பின் ஹரன் வாழ்க்கை, திருமணம் மற்றும் மல்யுத்தம்.

இஸ்ஹாக்கின் வாழ்க்கையிலும் சரி அதைத் தொடர்ந்து வந்த ஜேக்கப்பின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களின் ஓரிறைக் கொள்கையின் செயல்பாட்டை அறிய முடியவில்லை. திருக் குரானிலும் அவர்களது வாழ்க்கைத் தொடர்பான அதிக குறிப்புகள் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை பொதுவாகவே வெறும் குடும்ப வாழ்க்கையாகவும் சகோதரர்களுக்குள் எழும் பூசல்களை விவரிக்கக் கூடிய வரலாறாகவே அறியமுடிகிறது.

முந்தைய நபிமார்கள் வரலாற்றிலிருந்து திருக் குரான் பெரும்பாலும் தேவையான செய்திகளை மட்டுமே சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஜேக்கப் போன்ற பல இறைத்தூதர்களின் பெயரையும் அவர்கள் இறைப்பணி செய்தவர்களாக இருந்தார்கள் என்று மட்டுமே சொல்வதுடன் அவர்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லாத காரணத்தால் பைபிளுடன் சேர்ந்து திருக் குரானிலிருந்து மேற்கோள்கள் எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை.

திருக் குரான் வரலாற்றைச் சொல்லும்போது அதை தெளிவாகவும், அழகாகவும் தேவையற்றச் செய்திகள் இல்லாமல் படிப்பினைகளை மட்டுமே அரிதியிட்டு வழங்குகிறது. ஆனால் அதே செய்திகள் பைபிளிலும், தோராவிலும் (பழைய ஏற்பாட்டிலும்) சொல்லப்படும்போது அது கிட்டத்தட்ட பல இடைச் செருகல்களுக்கு உட்பட்டு, மனித கையாடல்கள் செய்யப்பட்ட ஒரு சரித்திர புத்தகம் போல் இருக்கிறதே தவிர்த்து வேத புத்தகம் போல் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

இறைவனும் திருக் குரானில் 'வரலாறுகளில் மிக அழகியதை நாம் உமக்கு கூறுகின்றோம்'(1) என்று மனித குலத்திற்கு தேவையானதை மட்டும் முந்தைய இறைத்தூதர்களின் வரலாறுகளையும் மற்றும் இன்னும் பிற பல வரலாற்றுச் செய்திகளையும் கருத்துக்களுக்கு உட்பட்டே வழங்குகிறான்.

ஜேக்கப் தனது தாய் மாமனான லபான் வாழும் ஹரன் வந்தடைகிறார். அங்கே லபானிடமிருந்த ஆடு மாடுகளை மேய்ப்பவராகவும் அதைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுத்தப் படுகிறார். 4000ம் வருடங்களுக்கு முன்பு சிறந்த பொருளாதாரம் என்பது கால் நடைகள் மட்டுமே. விவசாயத்தைவிட கால் நடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம்.

ஜேக்கப் அங்கு வாழ்ந்து வரும்போது லபானின் இரண்டாவது மகளான ராச்சல் மீது காதல் கொள்கிறார். ராச்சல் தன் சகோதரி மூத்தவள் லியாவை விட அழகிலும் அறிவிலும் சிறந்தவாரக இருக்கவே ஜேக்கப் ராச்சலை விரும்புகிறார். ராச்சலை தனக்கு திருமணம் செய்துதர லபானிடம் வேண்டுகிறார். ராச்சலை மணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் தன்னிடம் ஏழு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று லபான் கட்டளை இட ஜேக்கப் ஏற்றுக் கொள்கிறார். ஏழு வருடங்கள் கழித்து லபான் தனது மகளை திருமணம் செய்துவிக்கிறார். முதலிரவும் நடந்து முடிகிறது. ஆனால் காலையில்தான் ஜேக்கபிற்கு புரிகிறது தன்னுடன் முதலிரவில் இருந்தது ராச்சல் அல்ல லபானின் முதல் மகள் லியாஹ் என்று. இதனால் சோகமடைந்த ஜேக்கப் லபானிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றியதை முறையிடுகிறார். மூத்தவள் இருக்க இளையவளை திருமணம் செய்து தருவது எங்கள் பரம்பரையில் வழக்கமில்லை என்று காரணம் கூறுகிறார். தன்னிடம் இன்னும் ஏழு வருடங்கள் தொடர்ந்து வேலை செய்தால் ராச்சலை திருமணம் செய்து தருவதாக லபான் வாக்களிக்க ஜேக்கப் இன்னும் ஏழு வருடங்கள் அங்கேயே தங்கி வேலை செய்கிறார்.

ஏழு வருடங்கள் கழிந்தபின் ராச்சலையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலக் கட்டங்களில் ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இருந்தது. ஆனால் மோசஸ் (மூசா நபி) இறைத்தூதர் மூலமாக இறைவன் அருளிய தோர என்று அழைக்கப்படும் (தவுரா) வேதத்தின் படி ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்வது கூடாது என்று தடுக்கப்படுகிறது. ஒருவள் மரணமடைந்து விட்டால் மற்றொருவளை திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் ஒருத்தி உயிருடன் இருக்கும்போது இன்னொருத்தியை திருமணம் செய்யக்கூடாது. திருக் குரானிலும் அதே சட்டம் சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இதன் பிறகு லபான் தனது மூத்த மகள் லியாவிற்காக ஜில்பா என்பவளையும், ராச்சலுக்காக பில்ஹா என்பவளையும் அடிமைகளாக ஜேக்கபிற்கு அன்பளிப்பாக வழங்குகிறார்.(2) நீண்ட காலமாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த முதல் மனைவி லியாவின் மூலமாக முதன்முறையாக குழந்தை பிறக்கிறது. இதனால் பொறாமை அடைந்த ராச்சல் தன் மூலமாகவும் பிள்ளை பிறக்காததால் தனது அடிமையான பில்ஹாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து பில்ஹா குழந்தை உண்டாகிறார். இதை அறிந்த லியாஹ் தன் பங்கிற்கு தனது அடிமையான ஜில்பாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து அவளும் குழந்தை பெற்றெடுக்கிறாள். பிறகு ராச்சலும் குழந்தைப் பெற்றெடுக்கிறார். இவ்வாறு ஜேக்கப் தனது நான்கு மனைவிகள் மூலமாக 12 பிள்ளைகளுக்கு தந்தையாகிறார்.(3) இந்த 12 பிள்ளைகளும் பிற்காலத்தில் 12 யூத கோத்திரங்களாக பல்கி பிரிந்து செல்கின்றனர்.

12 பிள்ளைகளில் குறிப்பிடத்தக்கவர்கள் ராச்சல் ஈன்றெடுத்த ஜொசப் (யூசுப்) மற்றும் பெஞ்சமின் இருவருமாகின்றனர்.

ஏறக்குறைய இருபது வருடங்கள் ஹரனிலேயே வாழ்ந்து வந்த ஜேக்கப் தனது தந்தையிடம் திரும்ப நினைக்கிறார். லபானிடம் தனது மனைவியரிடமும் அதைத் தெரிவித்து லபானிடமிருந்து சில குறிப்பிட்ட ஆடு மாடுகள் மற்றும் இன்னுமுள்ள கால்நடைகளைப் பெற்றுக் கொண்டு பாலஸ்தீனை நோக்கி திரும்ப ஆயத்தம் செய்கிறார்.

தான் பெற்றுக் கொண்ட கால்நடைகளை அதிகமாக்க வேண்டி ஜேக்கப் சில வழிகளை கையாள்கிறார். தனக்கு பங்காக கிடைத்த அந்த கால்நடைகளை பிரித்து அவைகளை தனித்து மூன்று நாட்கள் நடந்து செல்லக்கூடிய தொலைவிற்கு வெறு இடங்களுக்கு மேய்ச்சலுக்காக நடத்திச் செல்கிறார். அங்கே போப்லார் (Poplar), அல்மாண்ட் (Almond) மற்றும் பிளான் (Plane) மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி அவைகளின் பட்டைகளை உரித்து அக்கிளைகளை கால்நடைகள் நீரருந்தும் தண்ணீர் கிடங்குகளில் போட்டு வைக்கிறார். கால்நடைகள் வெயில் நேரங்களில் தாகத்துடன் அங்கு நீர் அருந்தியவுடன் அவைகள் உடலுறவு கொள்கின்றன. அவைகளின் மூலம் அந்த கால்நடைகள் உடனுக்குடன் கருத்தரிக்கின்றன. இதனால் ஜேக்கப்பிடமிருந்த கால்நடைகள் குறைந்த காலத்தில் அதிகமாக பெருகின என்று பைபிள் கூறுகிறது. (4)

(கால்நடை அபிவிருத்திச் செய்யக்கூடியவர்கள் இந்த முறையை கையாண்டு பார்ப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இந்த மரங்களின் தமிழ்ப் பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை).

தனது தமையன் இசாயுவை சமாளிக்க வேண்டி அதில் சில கால்நடைகளை அவருக்கு பரிசாகவும் எடுத்துச் செல்கிறார். அதில் நூற்றுக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களுமாக தனக்கு முன்னால் அனுப்பி வைக்கிறார். அத்துடன் இந்த கால்நடைகளை நடத்திச் செல்லக்கூடிய அடிமைகள் இசாயுவை சந்திக்க நேர்ந்தால் 'இவை அனைத்தும் உங்களின் (இசாயுவின்) அடிமையான ஜேக்கபிற்கு சொந்தமானது. இவை அனைத்தையும் அவர் உங்களுக்காக (இசாயுவிற்காக) அன்பளிப்பாக கொடுக்கச் சொன்னார்' என்று சொல்ல வேண்டுமென்ற கட்டளையுடன் அனுப்பி வைத்தார்.

ஜேக்கப் இரவில் பயணம் செய்வதும் பகலில் இசாயுவிற்காக பயந்து மறைந்துக் கொள்வதுமாக இரண்டு தினங்களை பயணத்தில் கழிக்கிறார். தனக்கு முன்னால் அனுப்பிய கால்நடைகளை இசாயு பெற்றுக் கொண்டார் என்று தெரிந்தால் ஒழிய தான் பகலில் பயணம் செய்வதில்லை என்று இரவில் பதுங்கி பதுங்கி பாலஸ்தீன் நோக்கி பயணம் செய்கிறார்.

அதிகாலை நேரத்தில் அவர் பயணம் செய்யும்போது ஓரிடத்தில் அவர் ஒரு மனிதருடன் மல்யுத்தம் செய்ய நேரிடுகிறது. மல்யுத்தம் காலைவரை தொடர்கிறது. அம்மனிதனால் ஜேக்கப்பை தோற்கடிக்க முடியவில்லை. முடிவில் ஜேக்கப் மல்யுத்தத்தில் வெற்றி பெருகிறார்.

மல்யுத்தம் முடிந்தவுடன் அம்மனிதர் ஜேக்கப்பைப் பார்த்து நீ ஒரு வழிப்போக்கனைப் போல் தெரிகிறாயே, உனது பெயர் என்ன என்று கேட்க, ஜேக்கப் தனது பெயரை அவரிடம் சொல்கிறார். உடனே அம்மனிதர், ஜேக்கப்பைப் பார்த்து, உனது பெயர் ஜேக்கப் அல்ல இன்றிலிருந்து உனது பெயர் இஸ்ரவேல் என்று அறிவித்து தான் ஒரு மனிதன் அல்ல, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வானவர் என்று அறிவித்து மறைந்து விடுகிறார். அன்று முதல் ஜேக்கப் இஸ்ரவேல் என்றே அறியப்படுவதுடன் அவரது 12 பிள்ளகளும் இஸ்ரவேலர்கள் என்றே அழைக்கப் படுகின்றனர். (5)

வில்லியம் நெய்ல் என்பவர் எழுதிய One Volume Bible Commentry யில் பக்கம் 59ல் ஜேக்கப் தேவதூதருடன் போரிட்டதாக சொல்லாமல் இறைவனுடனே போரிட்டதாக எழுதுகிறார். கடவுள் பூமிக்கு மனித ரூபம் எடுத்து வந்து ஜேக்கப்புடன் மல்யுத்தம் செய்ததாகச் சொல்கிறார். ஏறக்குறைய கடவுளையே தோற்கடித்ததாகவும் எழுதுகிறார். அதன் காரணமாகத்தான் ஜேக்கப்பிற்கு இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஜேக்கப் இறைவனையே மல்யுத்ததில் தோற்கடித்தாரா அல்லது இறைவனின் தேவதூதனை தோற்கடித்தாரா என்ற ஆராட்சிக்கு செல்ல விரும்பவில்லை. மல்யுத்தத்தின் மூலம் இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததுடன் நிறுத்திக் கொண்டு, இதன் பிறகு இந்த வரலாற்றுக் கட்டுரையை 'யூதர்களின் வரலாறு' என்ற தலைப்பிலிருந்து இனி 'இஸ்ரேலியர்களின் வரலாறு' என்று மாற்றித் தொடர்கின்றேன்.

(தொடரும்)

1. Holy Quran (12:3)

2. Genesis (29)

3. Stories of Prophets (Page 221) by Ibn Khathir

4. Genesis (30)

5. Genesis (32)

வரலாற்றில் சில ஏடுகள் - 8

யூத குலத்தின் விசித்திரமான ஆரம்பம்

யூத குலத்தின் தொடக்கமே ஒரு அமர்க்களமான தொடக்கமாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. ஆப்ரஹாமின் இரண்டாவது மகனான இஸ்ஹாக்கின் மகன் ஜேக்கப் அவர்களின் பிள்ளைகள்தான் பல கோத்திரங்களாக பிரிந்து யூதர்கள் என்று உலகிற்கு அறிமுகமாகின்றார்கள். உலகம் அறியப்படுகிற இந்த ஜேக்கப்பின் துவக்கம் அதாவது கடவுளுக்கு நெருங்கியவராக அல்லது கடவுளின் அருள் முற்றிலும் பெற்றவராக அல்லது கடவுளின் அருளிற்கு பாத்திரமானவராக அவர் மாறுவதற்கு அவரது தந்தை இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே காரணாமாயிருந்ததாக ஆதியாகாமம் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கின் பரிந்துரையின் பெயரால்தான் ஜேக்கப் கடவுளின் அருளுக்கும் இன்னும் இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார் என்பது விந்தையாக உள்ளது.

இஸ்ஹாக் தள்ளாத வயதை எட்டிய காலத்தில் தனது ஆசீர்வாதத்தை தனது மூத்த மகன் இசாயுவிற்கு தர விரும்பினார். அவ்வாறு தனது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் தான் மிகவும் நேசிக்கும் தலை மகன் இசாயுவிற்கு தருவதன் மூலம் இசாயு இறைவனின் அங்கீகாரம் பெற்ற மனிதராக, இறைத் தூதராக, தனக்கு (இஸ்ஹாக்கிற்கு) சமூகத்தில் இருந்த அதே கௌரவத்தை பெற்றவராக, தனக்குப் பிறகு தனது கொள்கைகளை சரிவர நடத்திச் செல்லவும் சமூகத்தை தலைமைத் தாங்கிச் செல்லவும் இசாயுவால் இயலும் என்று இஸ்ஹாக் விரும்பினார். ஆகவே தன்னிடம் இது நாள் வரை இருந்த அந்த புனிதத் தன்மையை தனது மூத்த மகனுக்கு அளிக்க விரும்பினார். ஆனால் அவரது கண் பார்வையோ மங்கிப் போயிருந்தது (1).

ஆகவே, இஸ்ஹாக் தனது மூத்த மகன் இசாயுவை அழைத்து 'மகனே இசாயு, நீ வேட்டையாடுவதில் வல்லவன். ஆகவே எனக்காக ஒரு காட்டு விலங்கை வேட்டையாடி நல்ல ருசியான உணவாக சமைத்து கொண்டுவா. அதை நான் உண்டு முடித்து எனது ஆசீர்வாதத்தை உனக்கு அளிக்க விரும்புகிறேன்' என்று சொல்லி இசாயுவை வேட்டையாட அனுப்பி வைத்தார் இஸ்ஹாக். இதை மறைவாக நின்று செவியுற்ற ரெபெக்கா, இஸ்ஹாக்கின் மனைவி, அதிர்ந்து போய், இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் தான் அதிகம் நேசிக்கும் இரண்டாவது மகனான ஜேக்கப்பிற்கே கிடைக்க வேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினார்.

மகன் ஜேக்கப்பை அழைத்து தாய் ரெபெக்கா, 'மகனே ஜேக்கப், உனது வயதான தகப்பனார் தனது ஆசீர்வாதத்தை இசாயுவிற்கு தர விரும்புகிறார். நீ உடனே இரண்டுவிதமான ஆடுகளை பிடித்து அறுத்துக் கொண்டுவா. நான் அவைகளை சமைத்து நல்ல உணவாக்கி உன்னிடம் தருகிறேன். நீ அதை உனது தந்தை இஸ்ஹாக்கிற்கு பரிமாறி அவரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்' என்று ஜேக்கப்பை தயார் செய்தார் (சதிகார) தாய். (இது ஆதியாகாமத்தில் பதியப்பட்டுள்ள வேத மொழிகளே. ஆனால் இந்த சதி இப்படி அரங்கேறியிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை).

ஜேக்கப் உணவுடன் தந்தையிடம் செல்ல, இஸ்ஹாக்கின் மங்கிய பார்வையின் காரணமாக வந்தவரிடம் 'யார் நீ?' என்று கேட்க, ஜேக்கப் 'உங்களின் மகன்' என்று சொல்கிறார். இஸ்ஹாக் அருகில் வந்து ஜேக்கபின் கைகளைத் தொட்டுப் பார்த்து 'குரல் ஜேக்கப்பைப் போல் இருக்கிறது, ஆனால் கைகளோ இசாயு போல் இருக்கிறது' என்று கூறிவிட்டு ஜேக்கப் பரிமாறிய உணவை இஸ்ஹாக் உண்ணுகிறார்.

உணவு உண்டு முடித்து, தனக்கு முன்னால் அமர்ந்திருப்பது இசாயு என்பதை அறியாமல் ஜேக்கப்பிற்கு தனது ஆசீர்வதத்தை அளிக்கிறார். 'நீ மற்றெவரையும் விட சிறப்பானவனாக இருப்பாய். உனது சகோதரர்களைவிட நீயே வல்லமை பெற்றவனாக இருப்பாய்' என்று ஆசீர்வதிக்கிறார்.(2)

யூத குலத்தின் பிதா தனது தந்தையை ஏமாற்றி அவரின் ஆசீர்வாதம் பெறுவதாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. என்ன ஒரு விசித்திரமான யூத குலத்தின் தொடக்கம். ஆரம்பமே பிறரை ஏமாற்றுவதில் தொடங்கும் சரித்திரமாக அமையப் பெற்றுள்ளது. இதன் மூலம் யூத குலத்தில் பிறந்தவர்களுக்கு சொல்லப்படும் படிப்பினைதான் என்ன? ஆண்டவனையே ஏமாற்றலாம் என்பதா? அல்லது ஏமாற்று வேலை செய்வதில் தவறில்லை என்பதா? ஆண்டவனையே ஏமாற்றலாம் அதில் தவறில்லை என்றால் இந்த உலகில் வேறு யாரை வேண்டுமானலும் ஏமாற்றலாம் அதில் குற்றமில்லை!

இஸ்ஹாக்கின் தகப்பனாரான ஆப்ரஹாம் தனது இளவயது முதல் மரணம் அடையும் வரை பல சிரமங்களும், வேதனைகளும் அடைந்து இன்னும் சொல்லப்போனால் தனது இளவயதில் நெருப்பிலே தூக்கி எறியப்பட்டார். இப்படி பல கொடூரமான நிலைகளிலும் அவர் மனிதர்களை தவறான பாதையில் விட்டு ஏக இறைவனின் பக்கம் அழைத்தவராகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். தியாகங்கள் பல செய்து தனது குடும்பத்தையும் தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் ஓரிறை பக்கம் கொண்டுவந்து தனது சந்ததியை உருவாக்கினார். அத்தோடு நில்லாமல் ஓரிறைவனை வணங்கும் கூட்டமாக தனது சமூகத்தையும் மாற்றி அமைத்தார். அவ்வாறு வாழ்நாள் முழுவதும் கஷ்டமடைந்த அவருக்கு இறைவனைத் தவிர்த்து வேறு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. அவ்விறைவனின் உதவி கூட பல்வேறு இறைச் சோதனைகளுக்குப் பின்னரே அவருக்குக் கிடைத்தது. ஆதியாகாமத்தில் ஜேக்க்ப் தனது தந்தை இஸ்ஹாக்கை ஏமாற்றுவதன் மூலம் அவ்விறைவனின் அருளைப் பெற்றவராகிரார் என்ற இந்த சரித்திர வேதத்தின் கூற்று ஏற்றுக் கொள்ள இயலாததாகத்தான் என்னைப் போன்றவர்களுக்கு தெரிகிறது. நிச்சயம் ஜேக்கப் என்ற இறைத்தூதர் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்பதே (இந்தக் கட்டுரையை எழுதியவன் என்ற முறையில்) எனது கருத்து.

ஆப்ரஹாம் இஸ்மாயிலையும் இஸ்ஹாக்கையும் வளர்த்தபோது இறைவனின் உதவி அவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர்களது செயல்களை இறைவனின் பக்கமே பணி செய்ததாக இருக்குமாறு அமைத்தாரே தவிர்த்து தனது ஆசீர்வாதத்தால் மட்டுமே தனது பிள்ளைகளின் வாழ்வில் இறைவனின் அருளை கொண்டுவரவில்லை. மாறாக அவர்களது செயல்களில் ஓரிறைவனின் கொள்கையை நிலைக்கச் செய்து அவர்களின் வாழ்க்கை மற்றும் நடைமுறை வழியாக இறைவனின் ஆசீர்வாத்தைதை பெற வைத்தார். இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கைவிட இறைவனின் தோழர் என்று அழைக்கப்பட்ட ஆப்ரஹாம் தனது தந்தைக்கு ஓரிறை சிந்தனை வரவேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்ய முடிந்ததே தவிர்த்து தனது தந்தை நாளை இறைவனின் முன்னால் குற்றவாளியாக நிற்பதை தடுக்கும் சக்தியற்றவராக இருந்தார். ஆனால் அவரது மகனோ தனது ஆசீர்வாதத்தின் மூலம் அவரது மகனான ஜேக்கப்பிற்கு இறைவனின் தூதர் பதவியை அடையச் செய்தார் எனும் ஆதியாகாமத்தின் வரிகள் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

ஆனால் இஸ்ஹாக்கின் மைந்தனான ஜேக்கப்பிற்கு இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் அதாவது தன் மூலமாக தனது மகனுக்கு இறைவனின் அருளை நிலைநிறுத்தச் செய்ய அவரின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானதாக இருந்ததாக பைபிளின் ஆதியாகாமம் அறிவிப்பதுதான் விந்தையாக இருக்கிறது.

இறைவனின் அருளுக்கு முற்றிலும் பாத்திரமான ஒருவரின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தால் ஒரு மனிதன் இறைவனின் அருளுக்கு தகுதியானவனாக மாறலாம் என்று ஆதியாகமத்தின் மூலம் அறிய முடிகிறது?

ஜேக்கப்பின் வாழ்க்கையைப் பற்றி திருக் குரானில் அதிகமான விளக்கங்கள் இல்லாத காரணத்தால் ஆதியாகாமத்தின் இந்த கூற்றினை சரி பார்க்க இயலாமல் போகிறது. அதே நேரம் ஆதியாகாமத்தில் உள்ளதை உள்ளபடி கூறுவதன் மூலமே இந்த யூத குலத்தின் சரித்திரத்தை வேதங்களின் வழியாக கொடுக்க முடியும். அவை அறிவிற்கு ஏற்றுக் கொள்ள இயலாமல் போனாலும் இருக்கின்ற வேதங்களின் வழியாகத்தான் இந்த வரலாற்றைச் சொல்ல முடியும்.

(எனது கருத்துப்படி ஆதியாகாமத்தில் சொல்லப்படுகின்ற இந்த சரித்திரக் கதை மனிதர்களால் பிற்காலத்தில் பைபிளில் செய்யப்பட்ட இடைச்செருகலாக இருக்கலாம். கரணம் திருக் குரானில் ஜேக்கப் ஒரு இறைத்தூதராக யாகூப் என்ற பெயரில் சொல்லப்படுகிறது. அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இறைவனே போதுமானவன், அவனே முற்றிலும் அறிந்தவன். அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவரது தகப்பனாரான இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானது என்ற ஆதியாகாமத்தின் கூற்று ஏற்புடையதாகத் தெரியவில்லை. நல்லது, இப்போது சரித்திரத்திற்கு வருகிறேன்.)

ஜேக்கப் இவ்வாறு தனது தந்தையின் ஆசீர்வாததைப் பெற்று வெளியேறியவுடன் இசாயு தன் தந்தையிடம் வருகிறார். ஆனால் எல்லாம் முடிந்து போயிற்று. தனது தந்தையின் மூலம் நிகழ்ந்ததை அறிந்து வேதனைப் படுகிறார். தந்தை இஸ்ஹாக்கும் தனது மூத்த மகன், மிகவும் நேசித்த மகன் இசாயுவிற்காக கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.(3)

இதனால் கோபமடைந்த இசாயு தமையன் ஜேக்கப்பை கொலை செய்யப்போவதாக கோபத்துடன் ஜேக்கப்பைத் தேடி புறப்படுகிறார். இதை அறிந்த ரெபெக்கா மகன் ஜேக்கப்பை அழைத்து ஹரனில் வசித்துக் கொண்டிருக்கும் தனது சகோதரன் லபானிடத்தில் சென்று தஞ்சம் பெற்றுக் கொள்ளுமாறு அனுப்பி விடுகிறார்.

இசாயு தான் இழந்து போன இந்த நிலையை எண்ணி வருத்தமுற்று தனது பெரிய தந்தை இஸ்மாயிலின் இடத்திற்கு சிறிது காலம் சென்றுவிடுகிறார். அங்கே இஸ்மாயிலின் மகளை திருமணம் முடித்து வாழ்ந்ததாக(4) வரலாறு மூலம் அறியமுடிகிறது.

ஜேக்கப் ஹரன் செல்லும் வழியில் இரவில் ஓரிடத்தில் உறக்கம் கொள்ளும் போது இறைவன் கனவில் தோன்றி, 'நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் சந்ததியினருக்கும் தருவதாக' வாக்களிக்கிறார்(5). இது இறைவனால் ஜேக்கப்பிற்கு அளிக்கப்பட்ட முதலாவது வாக்குறுதி, ஆதியாகாமத்தின் படி. (இதைத் தொடர்ந்து மோசஸுக்கும் இறைவன் வாக்களிக்கிறார். அதில் அந்த இடம் கொஞ்சம் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. அதை பிறகு பார்ப்போம்.)

இந்தக் குறிப்பிட்ட வேத வசனத்தின் மூலமாகத்தான் இஸ்ரேலியர்கள் 'பாலஸ்தீனத்தை கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமி' என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த குறிப்பிட்ட வசனத்தின், வேதத்தின் வரிகளை தங்கள் இஷ்டம் போல் மாற்றி, பின் குறிப்பு இன்னும் விளக்கங்கள் என்ற பெயரில் காலம் காலமாக இடைச்செருகல்கள் செய்து வரலாற்று மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பதையும் இக்கட்டுரையின் பிரிதொரு பகுதியில் அறியத்தருகிறேன்.

உறக்கம் கலைந்து எழுந்த ஜேக்கப் மிகவும் மகிழ்ந்து தான் உறங்கிய இடத்தில் சில அடையாளங்களை ஏற்படுத்துகிறார். பிற்காலத்தில் அதே இடத்தில்தான் மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் ஆலயத்தை எழுப்புகிறார். இந்த ஆலயம்தான் தற்போது மூன்று (யூத, கிறிஸ்துவ, முஸ்லீம்) மதத்தினராலும் ஜெருசலத்தில் சொந்தம் கொண்டாடப்படுகிற ஆலயமாகா திகழ்கிறது.

(தொடரும்)

1. Genesis (27:1)

2 & 3. Gnesis (21:1-38)

4. Songs (84: 5-6)

5. Genesis (28:13)

Wednesday, August 10, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 7

யூத குலத்தின் தொடக்கம் - இஸ்ஹாக்கின் பிறப்பும் ஆப்ரஹாமின் மறைவும்
ஆப்ரஹாமின் இல்லத்திற்கு அவருக்கு அறிமுகமில்லாத ஒரு சிலர் வருகை தந்தனர். அவர்களை விருந்தினர்களாக வரவேற்று, ஒரு கொழுத்த கன்றுக் குட்டியை உணவாக்கி அவர்களை உபசரிக்கிறார் ஆப்ரஹாம். ஆனால் வந்தவர்கள் அந்த உணவை உண்ணாமல் அல்லது அவர்களது கைகள் உணவுகளை நாடிச் செல்லாமல் இருக்க ஆப்ரஹாம் அதிர்ச்சியுற்று, வந்தவர்களின் மேல் பயம் கொள்கிறார். இதை கண்ணுற்ற விருந்தினர்கள், 'பயப்பட வேண்டாம், நாங்கள் உங்களுக்கு ஓர் நற்செய்தி கொண்டு வந்துள்ளோம்' என்று அறிவித்து, ஆப்ரஹாமிற்கும் சாரவிற்கும் ஒரு ஆண்மகவு பிறக்கும் என்று அறிவித்தார்கள் (1)

இதே செய்தி பைபிளில்(2) இடம் பெற்றுள்ளது. ஆனால் அதில் விருந்தினர்கள் (தேவ தூதர்கள்) உண்ணுவதைப் போல் நடித்தார்கள். அவர்களுக்கு முன்னால் இருந்த அந்த உணவு மறைந்த்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. தேசங்களும் ராஜாக்களும் அந்த மகனிலிருந்து உருவாகுவார்கள் (3) என்றும் கூறுகின்றது.

இதைக் கேட்ட ஆப்ரஹாமும் சாரவும் திகைத்து நின்றனர். இந்த வயதான காலத்தில் அதிலும் 100 வயதைத் தாண்டிய ஆப்ரஹாமும் 90 வயதை நெருங்கிய சாராவும் எப்படி பிள்ளைப் பேறு பெறமுடியும் என்று ஆச்சர்யப்பட்டனர்.

நல்லவர்களில் வழிகாட்டியாக இஸ்ஹாக் இருப்பார் என்று இறைவன் ஆப்ரஹாமிற்கு நற்செய்தி கூறினான். ஆப்ரஹாமின் மீதும் இஸ்ஹாக்கின் மீதும் இறைவனின் அருள் நிலைத்திருக்கும். அவர்களின் சந்ததியிலிருந்து நல்லவர்களும் தீங்கிழைத்துக் கொள்வோரும் இருப்பார்கள் என்று தெரிவித்தார்கள் (4)

இறைவனின் இந்த வாக்கு ஆப்ரஹாமிற்கு மகிழ்வை தந்தது. ஆனால் அதன் இறுதியில் அமைந்த 'சில வழிகேடர்களும் இருப்பார்கள்' என்ற வார்த்தை பிற்காலத்தில் வர இருக்கும் குழப்பத்திற்கு எச்சரிக்கைச் செய்யப்பட்டதைப் போல் இருந்தது. வழிகேட்டில் இருந்தவர்கள், தங்களுக்கு தங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்கள், காலப்போக்கில் பிறரை வழி கெடுப்பவர்களாக மாறியதோரு நில்லாமல் தான் வந்த வழியை மறந்தவர்களாகவும் ஆனார்கள் என்பதை இந்த வரலாற்றின் வளர்ச்சியில் பார்க்கலாம்.

ஒரே குடும்பம், ஒரே சிந்தனை, ஒரே வணக்கம், ஒரே கடவுள் என்று ஆப்ரஹாமின் குடும்பம் இறைச்சேவையில் தங்களை முழுதாக இணைத்துக் கொண்டு தான் வசித்த மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மனிதர்களை ஓர் இறைவன் பக்கம் அழைத்தவர்களாக வாழ்ந்தார்கள். நல்லதை ஏவுவதும் தீமையைத் தடுப்பதுமாக வாழ்ந்த ஆப்ரஹாமின் குடும்பத்திலிருந்தே இறைவன் இறைத் தூதர்களை தான் வாக்களித்தவாறு உலகிற்கு அனுப்பி வைத்தான். ஒருவரைத் தொடர்ந்து இன்னொருவராக இறைவன் ஒருவனே என்ற கொள்கையைச் சுமந்து இறைப்பணி செய்தவர்களாக ஆப்ரஹாமின் வம்சம் பெருகத் தொடங்கியது.

ஆப்ரஹாமும் அவரது குடும்பத்தினரும் அவர்களது சந்ததியினரும் இறைவனின் பாதையில் தங்களை வழிநடத்திச் செல்லும்வரை அவர்களுக்கு இறைவனின் பாதுகாப்பு முற்றிலும் இருந்தது. அவ்வாறு இல்லாதபோது அவர்களின் இறைவனின் பாதுகாப்பு வளையத்திற்குள் இல்லாமல் போனது மட்டுமல்லாமல் அவர்கள் உலகில் அலைக்கழிக்கப்பட்ட அவலம் யூதர்களின் வரலாற்றில் நிறைந்து கிடக்கிறது. அதனைத்தான் மேற்கூறிய திருக் குரானின் இறைவசனத்தில் அவர்களின் சந்ததியினரில் வழி கெட்டுப் போனவர்களும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

(யூதர்கள் என்று பிற்காலத்தில் அறியப்படுகிறவர்களின் தோற்றுவாயான ஆப்ரஹாமின் வரலாற்றையும், யூதர்களின் பிதா என்று அழைக்கப்படுகிற இஸ்ஹாக்கின் வரலாற்றையும் அறியாமல் யூதர்களின் வரலாற்றை முழுமையாக தெரிந்ததாகச் சொல்ல முடியாது. இவ்விருவரும் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார்கள் என்பதை முழுமையாக ஆய்ந்து நோக்கினால் இன்றைக்கு பிரிந்துக் கிடக்கிற உலகச் சமுதாயத்தின் அடிப்படை எங்கிருந்து தோன்றியது என்பதையும் உணரமுடியும். யூதர்கள் முதல் கிறிஸ்துவர்கள் வழியாக இன்னும் இன்று பெருகி இருக்கின்ற முஸ்லீம்கள் வரை எல்லா மக்களும் ஒரே பிரிவிலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதை புரிந்துக் கொள்வது அவசியமாகிறது. ஆனால் இதில் உள்ள ஒரு சில பிரிவினர் இந்த மூலத்தை உதாசீனப்படுத்துவதன் மூலம் தனித்துவம் என்று தேவையற்றை இடைச் செருகல்களையும் கொள்கைகளையும் உருவாக்கி தங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், இவ்வுலகின் அதிபதிகள் இன்னும் வாழத் தகுதியுள்ளவர்கள், மற்றவர்கள் எல்லோரும் இவர்களுக்கு அடிபணிந்தே நடக்க வேண்டும் என்ற மனித விரோதக் கொள்கைகளை செயல்படுத்த விரும்புகின்றனர். அவ்வாறு செய்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இறை பாதையை விட்டு விலகிச் சென்றவர்களே!

ஒரு ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும்தான் இந்த உலக மக்கள் பல்கிப் பெருகி பல்வேறு கோத்திரங்களாகவும், குலங்களாகவும் இன்னும் பல சமுதாயங்களாகவும், நாடுகளாகவும் வளர்ந்திருப்பதை வரலாறுகள் மூலம் தெரிந்துக் கொள்வது மனித வர்க்கத்தின் அடிப்படை அம்சமாகும். அதற்கு ஆப்ரஹாமின் வரலாற்றை முழுமையாகத் தெரிந்துக் கொள்வது மிக மிக அவசியம்).

இக்காலக்கட்டத்தில் ஆப்ரஹாம் திரும்பவும் பக்காவிற்கு வருகை தந்து தனது இரண்டாவது மனைவியான ஹாஜிராவுடன் சிறிது காலம் வாழ்கிறார். அங்கே அவரும் அவரது மூத்த புதல்வன் இஸ்மாயிலுடன் சேர்ந்து பக்காவில் இறைவனின் ஆணைக்கிணங்க கஃபா எனும் ஆலயத்தை புதுப்பித்து அதை உலகில் மனிதர்களுக்கான முதல் ஆலயமாக வணங்குமிடமாக செய்கின்றார்கள்.(5)

இந்த ஆலயம் இவ்வுலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து அதாவது இந்த பூமியும் சொர்க்கமும் படைக்கப்பட்ட தினத்திலிருந்தே உருவாக்கப்பட்டது என்றும், இந்த உலகம் உள்ளலவும் இது அவ்வாறே இருக்கும் என்றும் கூறப்படுகிறது (6)

பெரும்பாலோர், இன்னும் முஸ்லீம்கள் கூட கஃபா என்பது இறுதித் தூதர் முஹம்மது நபி (சல்) அவர்களால் கட்டப்பட்டது என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கஃபா என்பது ஆப்ரஹாம் நபியவர்களால் புதுப்பிக்கப்பட்டது என்ற செய்தி கூட ஒரு சிலருக்கு அதிசயமாக இருக்கின்றது.

கஃபா புதுப்பிக்கப்பட்டு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழிந்தபின்பு ஜெருசலத்தில் இஸ்ஹாக்கின் மகன் ஜேக்கப் (யாகூப்) இறைத்தூதரால் மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் இன்னுமொரு இறை ஆலயம் எழுப்பப்படுகிறது.(7) பைபிளிலும் இந்த அக்ஸாவின் ஆலயம் ஜேக்கப் எனும் இறைத்தூதரால் கட்டப்பட்டது என்று சொல்ல்ப்படுகிறது.

இஸ்லாம் என்பது முஹம்மது நபி (சல்) அவர்களால் இந்த உலகிற்கு கொண்டுவரப்பட்ட மார்க்கம் என்ற தவறான சிந்தனை உள்ளவர்கள் இந்த மார்க்கம் ஆப்ரஹாம் நபியவர்களால் புதுப்பிக்கப்பட்ட மார்க்கம் என்பதை அவரது வரலாற்றைப் படிப்பவர்களுக்கு புரியலாம்.

ஆப்ரஹாமின் மனைவி சாரா தனது 127வது வயதில் மரணமடைந்ததாக பைபிள் மூலம் அறியமுடிகிறது. சாராவின் மரணத்திற்கு பிறகு ஆப்ரஹாம் கண்டூர எனும் மற்றொரு பெண்ணை மணமுடித்தாகவும் அவர்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. (8) அது மட்டுமல்லாமல் ஹாஜூன் எனும் இன்னொரு மனைவி மூலம் அவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்ததாகவும் அதே வரலாற்றுக் குறிப்பு மூலம் அறிய முடிகிறது. (9)

ஆப்ரஹாம் தனது 175வது வயதில் நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார். அவரை அவரது முதல் இரண்டு புதல்வர்கள் இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக் இருவரும் சேர்ந்து ஹிப்ரோன் எனும் இடத்தில் அவரது முதல் மனைவி சாராவின் அடக்கத்தலத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்விக்கின்றனர். அதே இடத்தில்தான் இஸ்ஹாக் மற்றும் அவரது மகன் ஜேக்கப் அவர்கள் மரணடைந்தவுடன் அடக்கம் செய்யப்பட்டதாவும், அந்த அடக்கத்தலங்களை சாலமன் (சுலைமான்) நபியவர்கள் புதுப்பித்துக் கட்டியாதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது. அவர்களின் அந்த அடக்கத் தலங்கள் தற்போது 'கலீல் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.

ஆப்ரஹாமின் மறைவிற்குபின் இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப்பற்றி அதிகமான குறிப்புகள் இல்லை. இஸ்ஹாக் தனது நாற்பதாவது வயதில் பிதுயில் என்பவரின் மகளான ரெபெக்கா (Rebekah) அல்லது ரிஃப்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.(10) அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன என்றும் அல்லது இரு குழந்தைகள் பிறக்கின்றன என்றும் பைபிள் மூலம் தெரிய வருகிறது.(11)

முதல் மகனின் பெயர் இசாயு (அரபு வழக்கில் அல்-அய்ஸ்), இரண்டாவது மகனின் பெயர் ஜேக்கப் (அரபு வழக்கில் யாகூப்). இசாயுவின் சந்ததியினர் ரோமர்கள் என்றும் ஜேக்கபின் சந்ததியினர் யூதர்கள் என்றும் வரலாற்றின் மூலம் சொல்லப்படுகிறது.

இஸ்ஹாக் தனது மூத்த புதல்வனான இசாயுவை அதிகம் நேசித்ததாகவும் அவரது மனைவி ரெபக்கா இரண்டாவது மகனான ஜேக்கபை அதிகம் நேசித்ததாகவும் பைபிள் சொல்கிறது. இந்த அதீத நேசத்தின் காரணமாக பிற்காலத்தில் குறிப்பிடத்தக்க மோசடி ஒன்று நடந்ததாக பைபிள் கூறுகிறது. அது என்னவென்று அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்)

1. திருக் குரான் (11:69-73)

2. ஆதியாகாமம் (18)

3. ஆதியாகாமம் (17)

4. திருக் குரான் (37:111-112)

5. திருக் குரான் (3:96-97)

6. முஸ்லீம் ஹதீத் தொகுப்பு

7. புகாரி ஹதீத் தொகுப்பு (ஆபூ தர்)

8. Stories of the Prohpets (Ibn Kathir P. 180)

9. அத்தாரிஃப் வல் ஆலம் (அப்துல் காசிம் அல் சுஹைலி)

10. Stories of the Prohpets (Ibn Kathir P. 180)

11. Genesis 24 (Bible)

Sunday, August 07, 2005

அணு அயூதம் - பாதுகாப்பா? பிரச்சனையா?

ஹிரோஷிமாவில் அணு ஆயுதத்தால் நேர்ந்த மரணக்குவியல்களை நினைத்து உலகம் வருத்தம் தெரிவிக்கும் இந்த நேரத்தில் இன்னொரு ஹிரோஷிமா ஏற்படாமல் தடுக்க என்ன செய்கிறது?

ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அணு ஆயுத நாடுகளும் மற்றும் அணு ஆயுத தொழில் நுட்பம் கொண்ட நாடுகளும் எந்த அளவு அனுசரிக்கின்றன என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அணு ஆயுதம் என்பது ஏதோ ஒருசில தனிச் சிறப்புகளை உருவாக்கித்தரும் ஒரு ஆயுதமாக நினைத்து அமேரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீன மற்றும் ரஷ்யா நாடுகள் அதை பெருமையாக நினைத்து சேமித்து வைத்தன. இப்பொது அந்த தொழில் நுட்பத்தை தங்களது பொருளாதார முன்னேற்றங்களுக்காக பயன்படுத்த துவங்கியிருப்பது அணு ஆயூதத்தை வேகமாக பரவச் செய்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

'அணு ஆயுதம் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும், நான் மிகவும் பொறுப்பானவன், நான் அதை அநியாயத்திற்கு பயன்படுத்த மாட்டேன். நான் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றெல்லம் உலகத்திற்கு விரிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நாடுகள், அணு ஆயுதத்தை அடையத்துடிக்கும் நாடுகளைப் பார்த்து, 'உனக்கு இதை வைத்துக் கொள்ளத் தெரியாது, நீ பொறுப்பற்றவன், உன்னிடம் இதைப் பாதுகாக்கும் அறிவு இல்லை.. நீ அயோக்கியன் என்று பேசுவதே' இந்த அணு ஆயுதப் பரவலுக்கு அடிப்படைக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

அணு ஆயுதம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? எனக்கும் அதை உருவாக்கத் தெரியும்.. நீ யார் எனக்கு புத்திமதி சொல்ல என்று ஒரு சில நாடுகள் அணு ஆயுதத்தை எப்படி அடைவது என்ற முயற்சியில் இறங்கியுள்ளன.

அணு ஆயுதம் இருந்தால் அதைக் காட்டி பயமுறுத்தி பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருசில நாடுகள் கிறுக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டும் செயல்படுகின்றன, உதாரணத்திற்கு வட கொரியாவைச் சொல்லலாம். உடைந்து போன சோவியத் யூனியனில் இருந்த நாடுகளிடம் அவரவர்கள் பங்கிற்கு கிடைத்த அணு ஆயுதங்களை எல்லம் விலை கொடுத்து வாங்கிய அமேரிக்கா அவைகளில் சிலவற்றை அழித்து மீதியை தனது கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்தக் கொள்கையை எப்படியாவது தனக்கு சாதகமாக்கி சில அரசியல் நலன்களை அடையத் திட்டமிடுகிறது வட கொரியா.

இன்னும் சில நாடுகள், தன்னிடம் அணு ஆயுதம் இருந்தால் அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தன்னை தாக்காது என்று அணு ஆயுதத்தை எப்படிப் பட்டாவது அடைந்துவிட வேண்டும் என்று போராடுகின்றன. உதாரணம் ஈரான். மத்தியக் கிழக்கு நாடுகளில் நாலா பக்கத்திலும் அமேரிக்கா ராணுவத் தளங்களை அமைத்து ஈரனிற்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளதை உடைக்க ஒரே வழி அணு ஆயூதம்தான் என்று ஈரான் அதை அடைந்துவிடத் துடிக்கிறது.

என்ன காரணமாக இருந்தாலும் அணு ஆயுதம் இப்போது பரவலாகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 1950களில் பிரிட்டன் யாருக்கும் தெரியாமல் அணு ஆயுதம் தயார் செய்வதற்கான 20 டன் கன நீரை இஸ்ரேலுக்கு விற்றது தற்போதுதான் தெரியவந்துள்ளது. எந்த நாடு யாருக்கு இந்த அணு ஆயுதம் தொடர்பான தகவல்களையும், சாதனங்களையும், தொழில் நுட்பத்தையும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது என்பது அமேரிக்காவிற்கு தெரிய வந்தாலும் தனது அராஜக நிலையின் காரணமாக அமேரிக்காவின் பிரசங்கத்தை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.

அமேரிக்காவைப் பொறுத்தவரை அணு ஆயுதம் என்பது தற்போது ஒரு பாதுகாப்பாகத் தெரியவில்லை. உலகில் இருக்கும் துக்கடா நாடுகள் முதல் பெரிய நாடுகள் வரை எல்லோரிடத்திலும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிற காரணத்தால் பொழுது விடிந்து பொழுது போனால் எவன் எங்கு என்னப் பிரச்சனை செய்வானோ என்று பயம். போகிற போக்கில் அமேரிக்க உலகமெங்கும் 'எமர்ஜென்சி' பிரகடனம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கேட்டால் இது 'பிரிஎம்டிவ் ஆக்ஷன் (pre-emptive action) என்ற தத்துவத்தை சொன்னாலும் கேட்பதற்கு இப்போது எந்த நாட்டிற்கும் திராணியில்லை. கூடவே இங்கிலாந்தும் சேர்ந்து ஜால்ரா அடிக்கும். அணு ஆயுதம் அமேரிக்காவிற்கு பாதுகாப்பு என்பதைவிட பிரச்சனையாகத்தான் தெரிகிறது.

ஈரானைப் பொறுத்தவரை அணு ஆயுதம் அந்த நாட்டிற்கு பாதுகாப்பாகத் தெரிகிறது. யார் கண்டது, அதுவே அந்த நாட்டிற்கு இன்னுமொரு போரை உருவாக்கி வைத்தாலும் வைக்கலாம். இந்தியாவைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதாக அமைந்துள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது ஒரு 'வேஸ்ட்' என்றுதான் தெரிகிறது. வல்லரசு நாடுகள் எதுவம் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

எது எப்படியாயினும் இந்த அணு ஆயுதம் உலகிற்கு பிரச்சனையே. இதை ஒழித்துக் கட்டி நம்மை நிம்மதியாக வாழவிடுவார்களா இந்த அரசியல் மேதாவிகள்? ஹிரோஷிமாவில் நடந்தது வேறு எங்கும் நடக்காமல் இருக்க பிரார்த்தனை செய்வதைத் தவிர்த்து நம்மால் வேறு என்ன செய்யமுடியும்?

Wednesday, August 03, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 6

யூத குலத்தின் தொடக்கம் - பக்கா (மக்கா)

இதுநாள்வரை அறிந்திராத ஒரு புதிய இடத்திற்கு ஆப்ரஹாம் தன் மனைவி ஹாஜிரா மற்றும் மகன் இஸ்மாயிலுடன் பயணம் தொடர்ந்தார். (இப்னு கதிர் எனும் சரித்திர வல்லுனர் இஸ்மாயில் பால்குடி மாறாத பாலகனாக இருந்தபோதுதான் ஹாஜிராவும் ஆப்ரஹாமும் 'பக்கா' என்று அழைக்கப்படும் வரண்ட சமவெளிக்குப் பயணம் செய்தார்கள் என்று எழுதுகிறார். இஸ்மாயிலின் வயது என்ன என்று சரியான குறிப்பு இல்லை. ஆதியகாகம் இஸ்மாயிலுக்கு 13 வயது இருக்கும்போது பக்கா சென்றார் என்று அறிவிக்கிறது).

அவர்கள் இந்த புது இடமான பக்காவிற்கு வரக்காரணம் சாராவைவிட்டு ஹாஜிரா தூரமாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் தனது மகன் இஸ்மாயிலுக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற மனக்கவலையால் உந்தப்பட்டதாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. அதாவது இஸ்மாயில் இளமைப்பருவம் அடையும்வரை அவர்கள் பாலதீன் தேசத்தைவிட்டு தள்ளி இருப்பதே நல்லதென்ற முடிவுடன் பக்காவை வந்தடைகின்றனர் ஆப்ரஹாமின் குடும்பத்தினர்.

பக்கா என்ற இந்த இடம்தான் பிற்காலத்தின் மக்காவென்று பெயர் மாற்றமடைந்து ஆன்மீகத் தேடலுக்கு ஒரு புதிய பரிமானத்தையும் பரினாமத்தையும் அளிக்கும் இடமாக மாறுகின்றது. மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக அந்த இறைவனால் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆலயமாக திகழ்கிறது. (1) அக்காலத்தில் வர்த்தகர்கள் கடந்து செல்லும் ஒரு பாதைதானே தவிர்த்து இந்த வரண்ட பூமியில் அப்போது எந்த மக்களும் வாழ்ந்திருக்கவில்லை அல்லது வாழ்வதற்கேற்ற எந்த சூழலும் இல்லை.

மலை முகடுகளின் மத்தியில், வாழ்வதற்கு தேவையான ஆதாரங்களற்ற பூமியின் உச்சத்தில் நின்ற ஒற்றை மரத்தின் நிழலை நாடி கால்நடையாக வந்து சேர்ந்தார்கள் கணவனும், மனைவியும் மற்றும் அவர்களது பால்குடி மாறாத பச்சிளம் மகனும். வாழ்க்கையில் தேடல் என்பது சில நேரங்களில் சுகமானதாகத் தெரியும். ஆனால் பல நேரங்களில் இந்த தேடல் புரியாத பல வட்டங்களில் சுழலும்போது அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் விவரிக்கமுடியாத அளவிற்கு வேதனை நிறைந்ததாக இருக்கும். அப்படி ஓர் வேதனையின் பிடிகளில் சிக்கி இருந்தனர் அந்த தம்பதியினர். நாள் கணக்கில் நடந்து வந்த பயணத்தின் இறுதியாக காட்சியளித்தது அந்த மலைமுகடுகளுக்கு மத்தியில் வரண்டு நின்ற அந்தப் பகுதி. பச்சை நிறம் என்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு புல் பூண்டுகள் இல்லாத தண்ணீருக்கான எந்தவித ஆதாரமுமற்ற வரண்ட பூமியில் சிறிது இளைப்பாறிவிட்டு ஆப்ரஹாம் புறப்படத் தயாரானார்.

அன்பு மனைவியையும், அருமை குழந்தையையும் அங்கேயே விட்டுவிட்டு வந்த வழியே திரும்ப நடந்தார் ஆப்ரஹாம்! கணவன் தன்னை விட்டு செல்வதை அறிந்த ஹாஜிரா ‘எங்களை விட்டு எங்கே செல்கிறீர்கள்?’ என்று பின்னால் தொடர்ந்தவாறு வந்து கேட்க, பதில் சொல்லாதவராக முன்னால் நடந்து கொண்டிருந்தார் ஆப்ரஹாம். பலமுறை கேட்டும் பதில் வராததால் ‘இது இறைவனின் கட்டளையா?’ கண்ணீர் மல்க கேட்டார் மனைவி. ‘ஆம்’ என்ற பதிலை கூறிவிட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் ஆப்ரஹாம். ‘அப்படியானால் அல்லாஹ் எங்களை கைவிட மாட்டான்’ என்று சொல்லிவிட்டு மரத்தடியின் கீழ் அமர்ந்திருந்த தன் மகவை நோக்கி திரும்பி நடந்தார் ஹாஜிரா.

கணவன் தன் மனைவியையும் அன்புடனும் பாசத்துடனும் தூக்கி வளர்த்துக் கொஞ்சி மகிழ்ந்த, அதிலும் இனி பிள்ளைப் பாக்கியமே இல்லை என்று தளர்ந்துப் போன வயதில் வாழ்க்கையில் மகிழ்வூட்ட வந்த இளம் மகனையும் தனியே விட்டுவிட்டு கண்ணீர் மல்க திரும்பி நடந்துக் கொண்டிருந்தார்.

கையில் உள்ள தோல்பையில் சிறிது தண்ணீரும், கண்கள் முழுக்க கண்ணீரும், நெஞ்சம் முழுக்க இனி எப்படி வாழப்போகிறோம் என்ற கவலையுடனும் தூரத்தில் நடந்து செல்லும் கணவன் ஆப்ரஹாமைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தார் ஹாஜிரா எனும் மங்கை. தாயின் கையைப் பிடித்தவாறு வந்த வழி திரும்பிச் செல்லும் தந்தையையும் தவித்து நிற்கும் அன்னையையும் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தார் இஸ்மாயில் எனும் பாலகன்.

தியாகத்தின் முதல் கட்டம் தொடங்கியது. தந்தையைப் பிரிந்து நின்றார் தனையன். கணவனைப் பிரிந்து நின்றார் மனைவி. ஏன் இப்படி ஒர் பிரிவு... யாருக்காக... இந்த ஒரு நிலை. எல்லாம் கேள்விக் குறியாய் நிற்கும் இவ்வேளையில் யார் இவர்களுக்கு ஆதாரம்?

கணவன், மனைவி, பிள்ளைகள் இன்னும் என்னென்ன உறவுகள் உள்ளதோ அவை யாவும் இவ்வுலகில் ஏற்படும் பிணைப்புகள். வாழ்க்கையை நடத்திச் செல்ல தேவையான உறவு அம்சங்கள். எப்படி அந்த பிணைப்புகள் ஏற்பட்டதோ அப்படியே அவை யாவும் ஒரு நாளில் உதிர்த்து போகும் என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கும் இந்த சரித்திர நிகழ்ச்சி ஒன்றே ஒன்றை மட்டும் முழுமையாக சந்தேகமின்றி தாங்கி நின்றது... அதாவது இறைவன் என்ற ஓர் உன்னத மாபெரும் சக்தி ஒன்று மட்டுமே மனிதனை எந்த இக்கட்டிலும் வழிகாட்ட வல்லது. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு மட்டுமே நித்தியமானது அதுமட்டுமல்லாமல் இறைவனே போதுமானவன் என்பதை உணர்த்தி நின்றது இந்த முதல் தியாகம்.

ஆன்மீக வட்டத்தின் மையத்தை உலகிற்கு எடுத்துக் காட்டப்போகும் தியாகத்தின் ஆரம்பம் அவர்களை அறியாமலே அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி இதுநாள்வரை காத்து அருள் செய்து கொண்டிருந்த அல்லாஹ்வின் பக்கம் அவர்களை ஈர்த்தது. இறைவனே போதுமானவன், இனி வருவதை எதிர் கொள்வோம் என்று தாயும் மகனும் ஆப்ரஹாம் திரும்பிச் செல்வதை விழிகள் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நெடுதூரம் நடந்து வந்த ஆப்ரஹாம் தன் மனைவியும், குழந்தையும் பார்வையிலிருந்து மறைந்தவுடன், இருகரம் ஏந்தி கண்கள் நீர் பொழிய படைத்த இறைவனிடம் பிரார்த்தித்தார். தன் மனைவியும் மகனும் வளமற்ற இந்த இறைவனின் வீட்டின் அருகாமையில் விட்டுச் செல்கின்றேன் அவர்களுக்கு இறைவா நீயே பாதுகாப்பு.. இவ்வழியே செல்லும் மனிதர்களின் உள்ளங்களில் கருணையை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவ வழி செய் இறைவா என்று பிரார்த்தித்தார்கள்.(2)

இஸ்லாத்தின், ஏக இறைவனின் சிறப்புமிக்க ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம், மண்ணில் வாழ் மனிதர்களுக்கு மீண்டும் ஓர் வழிகாட்டுதலுக்கான ஆரம்பம் ஆதரவற்ற மண்ணில் அமைதியாக அமர்ந்திருந்தது.

பக்காவில் தாயும் மகனும் தாகத்தால் தவித்தனர். சிறுவன் இஸ்மாயிலின் தாகம் கொஞ்சம் கொஞ்சமாய் அழுகையாக மாறி பின்பு கதறலாக உருவெடுக்க ஹாஜிரா செய்வதறியாது தவித்தார். கண்ணுக் கெட்டிய தூரம் வரை தண்ணீருக்கான அறிகுரியோ அல்லது யாரவது வழிப் போக்கர்களின் வருகையோ தெரியாமல் இருக்க, இரு மலைக் குன்றுகளுக்கு மத்தியில் மகனின் தாகம் போக்க மாறி மாறி அலைந்து தேடலானர் தாய் ஹாஜிரா. இரு பக்கத்திலும் இருந்த குன்றின் மீதேறி ஏதேனும் தெரிகிறதா அல்லது யாராவது வருகிறார்களா என்று மாறி மாறி ஓடலானர். சிறுவன் இஸ்மாயிலோ உயிர்போகும் அளவிற்குக் கதறிக் கொண்டிருந்தார்.

(இவ்வாறு தான் அலைந்து ஓடியதை ஹாஜிரா பிற்காலத்தில் தனது கணவர் ஆப்ரஹமிடம் தெரிவிக்க அந்த இரு மலைகளான சபா மற்றும் மர்வா என்ற இரண்டுக்கும் இடையில் ஏழு முறை நடப்பது என்பதை ஹஜ்ஜின் ஒரு கிரியையாக ஆப்ரஹாம் அவர்கள் நிலை நிறுத்தினார்கள். ஹஜ் செய்யும் முஸ்லீம்கள் அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறு செய்துவருகின்றனர்).

அப்போது இறைவன் ஹாஜிராவை அழைத்து வானவர் மூலமாக அச்செய்தியை அறிவித்தான். 'ஹாகரே உன்னை துயருத்துவது எது? பயப்படாதே' என்று அறிவித்து இஸ்மாயில் இருக்கும் இடத்தில், அவரின் பாதம் இருந்த இடத்தில் ஒரு நீரூற்று உருவானது (3). 'இறைவன் பிள்ளையின் குரலை கேட்டான்' என்ற அறிவிப்பும் ஹாஜிராவை வந்தடைந்தது.

அந்த நீரூற்றுதான் ஜம்ஜம் என்ற பெயருடன் இன்றுவரை குறைவில்லாமல் கஃபாவின் அருகில் சுரந்துக் கொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் அதை புனித நீராக பருகுவதும் மக்காவிலிருந்து தங்கள் நாட்டிற்கு திரும்பும்போது தங்களால் முடிந்த அளவிற்கு அதை எடுத்துச் சென்று மக்கா வர இயலாதவர்களுக்கு வழங்குவதும் வழக்கத்தில் உள்ளது.

இந்த ஜம்ஜம் நீரூற்றைப் பற்றி பழைய ஏற்பாடு என்று அறியப்படும் யூதர்களின் வேதத்தில் ஆதியாகமத்திலும் சங்கீதத்திலும் (4) அறிவிப்பு செய்யப்ப்ட்டுள்ளது. அந்த நீரூற்றுதான் ஹாஜிராவிற்கும் மற்றும் இஸ்மாயிலுக்கும் வாழ்வாதாரமாகியது. இந்த நீரூற்றிலிருந்து வரும் தண்ணீரை பாதுகாத்து வழிப் போக்கர்களுக்கு விநியோகம் செய்து அதிலிருந்து தங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவைகளை பகரமாக பெற்றுக் கொண்டார்கள். இந்த நீருற்று இஸ்மாயிலின் காலத்திற்கு பிறகு அவர்களின் வழி வந்த பரம்பரையினரால் உரிமைக் கொண்டாடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நீரூற்றுக்காக பிற்காலத்தில் போர்கள் கூட நடந்திருக்கின்றன. ஒரு சில ஆண்டுகளுக்கு இந்த போரின் காரணத்தால் இந்த நீரூற்றை யாருக்கும் தெரியாமல் மூடி வைத்திருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

இதன் பிறகு இஸ்மாயிலின் நபித்துவமும், தந்தையைப் போல் மக்களை ஏக இறைவனின் பக்கம் அழைக்கும் பணி செய்வதும், அதைத் தொடர்ந்து பக்காவில் தந்தை ஆப்ரஹாமுடன் பிற்காலத்தில் ஒன்று சேர்ந்து கஃபா எனும் ஆலயத்தை கட்டி எழுப்புவதுமாக இஸ்மாயிலின் வாழ்க்கை வேறொரு பாதையில் செல்கிறது. இஸ்மாயிலின் சந்ததியினரே அரபுகள் என்று அழைக்கப்படும் கூட்டமாக பிற்காலத்தில் பிறந்து வளர்ந்து வருகிறது.

இஸ்மாயிலை தொடர்ந்து அவரது சமூகத்தில் எந்த இறைத்தூதரும் வரவில்லை என்றும் வரலாற்றில் அறியப்படுகிறது. இஸ்மாயிலின் பக்கா வாழ்க்கை இங்கே அவசியமில்லாதாதால் இதை இத்துடன் நிறுத்திவிட்டு யூதர்களின் பிதாவான இஸ்ஹாக் என்று அறியப்படும் ஆப்ரஹாமின் இரண்டாவது மகன் பிறந்த வரலாற்றையும் அதைத் தொடர்ந்து வந்த யூத குலத்தைப் பற்றி இனி பார்க்கலாம்.

திருக் குரானில் இஸ்ஹாக் மற்றும் இஸ்மாயில் தொடர்பான வேறு சரித்திரக் குறிப்புகள் காணக்கிடைக்காததால் அவர்களுக்கு மத்தியிலே என்ன தொடர்பு இருந்தது என்று திருக் குரான் வாயிலாக சொல்ல இயலவில்லை. ஆனால், ஆதியாகாமத்தில் இஸ்மாயிலின் மகளை இஸ்ஹாக்கின் (மூத்த) மகன் (இசாயு) மணந்துக் கொண்டதாக செய்தி அறியப்படுகிறது.(4)

(தொடரும்)

1. திருக் குரான் (3:96)

2. திருக் குரான் (14: 37)

3. ஆதியாகாமம் (21:17-20)

4. சங்கீதம் (84: 5-6)

5. முஹம்மத் (பக்கம் 5, ஆசிரியர் மார்டின் லிங்ஸ்)